2009

2009

சர்வதேச நாணய நிதிய கடனுதவிக்கு அமெரிக்கா நிபந்தனை

hillary_clinton.jpgஇலங்கை கோரியிருக்கும் 190 கோடி டொலர்கள் கடனுதவியை சர்வதேச நாணயநிதியம் வழங்குவதற்கு ஆதரவளிப்பதற்கு ஒபாமா நிருவாகம் நிபந்தனையொன்றை விதித்திருக்கிறது. உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை இலங்கை அரசாங்கம் சர்வதேச தராதரங்களுக்கு இசைவாக நடத்துகிறது என்று வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் உறுதிப்படுத்தாத பட்சத்தில் இலங்கைக்கான உத்தேச 190 கோடி டொலர் சர்வதேச நாணய நிதியக் கடனுதவிக்கு அமெரிக்கா ஆதரவை அமெரிக்க நிதியமைச்சர் அளிக்க முடியாது.

அமெரிக்க செனட் சபையினால் விரைவில் பரிசீலனைக்கு எடுக்கப்படவிருக்கும் இராஜாங்கத் திணைக்களத்தின் ஒதுக்கீட்டுச் சட்டமூலமொன்றில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண கல்வி திணைக்களத்தில் முஸ்லிம் பிரிவு அமைக்க நடவடிக்கை

மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தில் அப்பகுதி முஸ்லிம் பாடசாலைகளின் தேவை கருதி முஸ்லிம் பிரிவொன்றை ஆரம்பிக்க மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தில் முன்பு இயங்கி வந்த முஸ்லிம் பிரிவை மீண்டும் ஆரம்பிக்குமாறு விடுத்த கோரிக்கையின் பேரில் முதலமைச்சர் இப்பிரிவை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று அண்மையில் மாகாண கல்வித் திணைக்களத்தில் நடைபெற்றது. இம் முஸ்லிம் கல்விப் பிரிவு எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் மாகாண கல்விப் பணிமனையில் இயங்க ஆரம்பிக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை நேரங்களில் தொலைபேசி பாவனையை கட்டுப்படுத்த சுற்றுநிருபம் கொண்டுவரப்பட்டுள்ளது

images-teli.jpgபாடசாலை நேரங்களில் ஆசிரியர்களின் கையடக்கத் தொலைபேசி பாவனையை கட்டுப்படுத்தும் வகையில் சுற்று நிருபமொன்று கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய மாகாண தமிழ்க் கல்வியமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளின் அதிபர்களுக்கான கூட்டமொன்று கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; பாடசாலை நேரங்களில் ஆசிரியர்கள் கையடக்கத் தொலைபேசியைப் பாவிப்பது மாணவர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் நட வடிக்கைகளைப் பாதிக்கும். எனவே பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசி பாவனை தொடர்பாக ஓர் ஒழுங்கு முறையைக் கொண்டுவரவேண்டியுள்ளது. ஆசிரியர்களின் கையடக்கத் தொலைபேசி பாவனை எந்த வகையிலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கக் கூடாது. எனவே இது தொடர்பில் சுற்று நிருப மொன்றை வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பாடசாலைகளில் ஒழுக்கம் பேணப்பட வேண்டும். அதிபருக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் நல்லுறவுகள் இருக்க வேண்டும். பாடசாலைகளில் பௌதிக வளங்கள் அதிகரிக்கப்பட்டு கல்வி நிலை உயர்வடைவது போல் ஒழுக்க விழுமியங்களும் வளர்ச்சிகாண வேண்டும்.

இன்று பாடசாலைகளில் மாணவனால் அதிபர் தாக்கப்படுகின்றார். இதனால் ஒழுக்கம் குறித்து தீவிரமாக ஆராய வேண்டியுள்ளது. மலையக மாணவர்கள் க.பொ.த.சாதாரணப் பரீட்சையில் சித்தியடையும் சதவீதம் அதிகரிக்குமானால் மட்டுமே உயர்தர வகுப்புக்களில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டுமன்றி பல்கலைக்கழகம் நுழையும் மாணவர் எண்ணிக்கையும் அதிகரிக்கும். எனவே, இந்திய தூதரகத்தின் உதவியுடன் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வேலைத்திட்டமொன்று மேற் கொள்ளப்படவுள்ளது.

இவ்வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வருடம் கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் முதலான பாடங்கள் அமுல்படுத்தப்பட்டாலும் எதிர்காலத்தில் ஏனைய பாடங்களையும் கவனத்தில் கொள்ளப்படும். மத்திய மாகாணப் பாடசாலைகளில் ஆசிரிய இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த இடமாற்றங்கள் மூலம் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படமாட்டாது.

மலையக மாணவர்களின் கல்வியை மேம்படுத்த ஓர் கூட்டு முயற்சி அவசியமாகும். அதிபர். ஆசிரியர் மற்றும் பெற்றோர் யாவரும் பங்களிப்புச் செய்ய வேண்டும். நாம் அமைச்சு மட்டத்தில் உதவிகளை நல்குவோம் என்றார். இக்கூட்டத்தில் மாகாண தமிழ்க் கல்வி அமைச்சின் உதவிக் செயலாளர் சதீஸ். முன்னாள் மாகாண சபைத் தலைவர் துரைமதியுகராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இரு பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து இளம்தாய் தற்கொலை – அநுராதபுரம் பகுதியில் சம்பவம்

குடும்பத் தகராறு காரணமாக இளம் தாயொருவர் தனது இரு சிறு பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்த சம்பவமொன்று வியாழக்கிழமை இரவு மதவாச்சி கொக்கடியகொல்லாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கணவன்மனைவிக்கிடையிலான நீண்டநாள் தகராறையடுத்தே வியாழக்கிழமை இரவு வீட்டின் முன்பாக உள்ள கிணற்றினுள் தனது இரு சிறு பிள்ளைகளையும் தள்ளிவிட்ட தாயார் பின்னர் தானும் கிணற்றினுள் குதித்து தற்கொலை செய்துள்ளார்.

நேற்றுக்காலை இந்தக் கிணற்றில் தண்ணீர் அள்ளச் சென்றவர்கள் கிணற்றில் சடலங்கள் மிதப்பதை அவதானித்துள்ளனர்.

இதுபற்றி பொலிஸாருக்கு அறிவிக்கவே அங்கு விரைந்த பொலிஸார் சடலங்கள் மூன்றையும் கிணற்றினுள்ளிருந்து வெளியே எடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் தாயாரான அனுஷா தில்கானி ஜெயரட்ன (29 வயது), ஜெகான் சந்தீப (6 வயது), அஷான் நெத்சர (3 வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இறந்த மூவரது சடலங்கள் பின்னர் பிரேத பரிசோதனைக்காக மதவாச்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

இது தொடர்பான விசாரணைகளை மதவாச்சி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அநுர கொடித்துவக்கு தலைமையிலான பொலிஸ் குழு நடத்திவருகிறது.

முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளரை விடுவிக்க கல்வியமைச்சர் உறுதியளிப்பு

புல்மோட்டை முகாமில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் தெய்வேந்திரன் மற்றும் மடு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுகந்தி ஆகியோரை அங்கிருந்து விடுவித்து வவுனியா முகாம்களில் தங்கியுள்ள மாணவரின் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்திற்கு உறுதியளித்துள்ளார். சங்கத்தின் தூதுக்குழு சங்கத்தின் தலைவர் நா.இராஜநாதன் தலைமையில் அமைச்சரை அவரின் அலுவலகத்தில் கடந்த வியாழக்கிழமை சந்தித்துப் பேசியது. அப்போது தூதுக்குழு, புல்மோட்டை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இரண்டு வலயக் கல்வி பணிப்பாளர்களின் நிலை குறித்து அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்தது.

அதன்போதே அமைச்சர் முன்கண்டவாறு உறுதியளித்ததாக, தூதுக்குழுவில் இடம்பெற்றுவரும் சங்கத்தின் பொதுச் செயலாளருமான த.மகாசிவம் பத்திரிகை அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி பத்திரிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

மாரி காலம் தொடங்குவதற்கு முன்பு, முகாம்களிலுள்ள இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவது என்ற நோக்குடன் அரசு அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது. ஆகவே சகல ஆசிரியர்களும் தமது சொந்த இடங்களுக்கு மீளக் குடியமரச் செல்லும் வாய்ப்புக் கிடைக்கும் என்று அமைச்சர் கூறினார்.

ஜூலை 21 ஆம் திகதி வவுனியா முகாமில் கல்வி அமைச்சினால் சகல தளபாடங்களுடன் கூடிய 20 புதிய வகுப்பறைகள் திறந்து வைக்கப்படவுள்ளன. அந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத் தலைவருக்கும் பொதுச் செயலாளருக்கும் கல்வி அமைச்சர் சந்திப்பின்போது அழைப்பு விடுத்தார்.

யுத்தத்தின் போது கொல்லப்பட்ட ஊனமடைந்த, படுகாயமடைந்த ஆசிரியர்களுக்கு அவர்களின் அடுத்த உரிமையாளருக்கும் பொது நிர்வாக சுற்றறிக்கை 21/88 இன் அடிப்படையில் 55 வயது வரை சம்பளம், ஓய்வூதியம், நட்டஈடு வழங்க உடன் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று சங்கம் அமைச்சரைக் கேட்டுக் கொண்டது. இது பற்றிய விபரங்களைத் திரட்டி உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.

ஏ-9 வீதியூடாக அடுத்த வாரம் முதல் சொகுசு பஸ் சேவை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஏ-9 பாதையூடாக அடுத்த வாரத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான சொகுசு பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து தொடர்பான கஷ்டங்களை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்ததையடுத்தே இந்த சொகுசு பஸ் சேவை நடத்தப்படவுள்ளது. இதன்படி முதற்கட்டமாக 5 சொகுசு பஸ் வண்டிகள் இச்சேவையில் ஈடுபடுத்தவுள்ளதுடன் காலப்போக்கில் கூடுதலான பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படும்.

இந்த சொகுசு பஸ் சேவையின் முதல் பயணம் அடுத்த வாரம் கொழும்பில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் சமயத் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முரளிதரன் பங்கேற்பார் – இலங்கை அணியின் வைத்தியர் நம்பிக்கை

muralitharan-sri-lankas.jpg

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் பங்கேற்கவுள்ளதாக அணியின் வைத்திய அதிகாரியான டேவிட் யங் தெரிவித்துள்ளார்.

முத்தையா முரளிதரன் விளையாடுவதற்குரிய போதிய உடற்தகுதியைக் கொண்டிருப்பதால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவரால் விளையாட முடியுமாக இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் உலகில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிகூடிய விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ள முரளிதரன் தனது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.

எதிர்வரும் 20ஆம் திகதி கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இரு அணிகளுக்குமிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, இலங்கை அணியின் உதவித் தலைவராக முரளிதரன் நியமிக்கப்பட்ட பின்னர் அவர் விளையாடும் முதலாவது போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபாகரன் அமெரிக்க அரசை உறுதியாக நம்பினார்.: ஈழத் தமிழ் எழுத்தாளர் திருநாவுக்கரசு விகடனுக்கு செவ்வி

thru.jpg”புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு, நிகழப்போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே அனுமானிக்கக்கூடிய சக்தி அதிகம். அதனால் போரின் இறுதி நிலை கொடூரமானதாகவும், தாங்க இயலாததாகவும் இருக்கும் என்று அவருக்குத் தெரிந்திருக்கும் என்று ஈழத் தமிழ் எழுத்தாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

தற்போது மண்டபம் அகதிகள் முகாமுக்குக் கொண்டு வரப்பட்ட திருநாவுக்கரசை விகடன் நிறுவனத்தினார் சந்தித்துள்ளனர். திருநாவுக்கரசு விகடனுக்கு வழங்கிய செவ்வியின் முழுவடிவம் வருமாறு:-

”ஈழத்தின் கடைசிக்கட்ட நிலைமை எப்படி இருந்தது?”

”இராணுவம் அனைத்துப் புறமும் சூழ்ந்துவிட்டது. இனி தப்பிக்க முடியாது என்கிற எண்ணம் மக்களிடத்திலும் போராளிகளிடத்திலும் உருவாகி விட்டது. பங்கருக்குள் பதுங்கி இருந்த மக்கள், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கிப் போகத் தொடங்கி விட்டார்கள். சரியான தகவல் பரிமாற்றங்கள் இல்லாததால், போராளிகளும் திக்கற்று நின்றார்கள். திரும்பிய பக்கமெல்லாம் கதறல்.பிணங்கள் சிதறிக் கிடந்த பாதைகளில் மக்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள். எல்லோருடைய மனதிலுமே இதுதான் இறுதி நிமிடம் என்கிற பதைபதைப்பு. இறப்பைக் காட்டிலும் இறக்கப் போகிறோமே என்கிற பதற்றம் ரொம்பக் கொடுமையானது. வார்த்தைகளால் சொன்னால் புரியாது, அனுபவித்தால்தான் தெரியும்…”

”இறுதி நெருக்கடிகளை புலிகள் எப்படி சமாளிக்கத் திட்டமிட்டிருந்தார்கள்?”

”புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு, நிகழப்போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே அனுமானிக்கக்கூடிய சக்தி அதிகம். அதனால் போரின் இறுதி நிலை கொடூரமானதாகவும், தாங்க இயலாததாகவும் இருக்கும் என்று அவருக்குத் தெரிந்திருக்கும். புலிப்படைத் தளபதிகளுக்கும் போராளிகளுக்கும் இருந்த அசாத்திய நம்பிக்கையும் ஒரு கட்டத்தில் தகர்ந்து போனது. ஆரம்பத்தில்… கிளிநொச்சியைத் தாண்டி இராணுவத்தால் முன்னேற முடியாது என்று புலிகள் உறுதியாக நம்பி இருந்தனர்.

ஆனால், இராணுவம் அசுர பலத்தால் அடுத்தடுத்த நிலப் பகுதிகளை வீழ்த்தத் தொடங்கி விட்டது. அதன்பிறகு மக்களுக்கும் ‘இனி ஜெயிக்க முடியுமா’ என்கிற தயக்கமும் பயமும் ஏற்பட்டது. ஆனாலும், பிரபாகரன் கொஞ்சமும் தளராமல் உறுதியோடு போரை முன்னெடுத்து நடத்துவதில் தீவிரமாக இருந்தார். எத்தகைய சூழலிலும் தோல்வி குறித்த அச்சம் அவரிடத்தில் இல்லை. ஆனால், இறுதி நேரம் முழு நம்பிக்கையும் தகர்ந்து போகிற அளவுக்குக் கொடூரமானதாக மாறி விட்டது.

பிரபாகரனை குறிவைத்துத் தாக்குதல் நடப்பது தெரிந்து, 600 புலிகள் அவரை ஆனந்தபுரம் பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது நான்கு புறமும் இராணுவம் சூழ்ந்துகொண்டு தாக்குதலை நடத்தியது. அப்போது பிரபாகரனுடன் அசாத்திய திறமை படைத்த கடாபி, தீபன், விதுஷா, துர்கா உள்ளிட்ட போராளிகளும் அடுத்தநிலை தளபதிகளும் பாதுகாத்து நின்றனர். அந்த இலக்கை குறிவைத்து இராணுவம் தாக்குதல் நடத்த, அதில் புலிகளுக்கு நினைத்துப்பார்க்க முடியாத பேரிழப்பு ஏற்பட்டது. பிரபாகரனின் அதிமுக்கிய தளபதிகள் அதில் கொல்லப்பட்டார்கள். ஆனாலும், பானு உள்ளிட்ட முக்கிய தளபதிகளால் அந்தத் தாக்குதலில் இருந்து நூலிழையில் காப்பாற்றப்பட்டார் பிரபாகரன்!”

”கடைசி நேரத்தில் புலிகள் சமாதானத்துக்குத் தயாரானதாகவும், அதனை சிங்கள இராணுவம் சட்டை செய்யவில்லை என்றும் சொல்லப்படுகிறதே?”

“இராணுவத்தின் அடுத்தடுத்த கொடும் தாக்குதல்களை சமாளிக்க முடியாது என்பதை, புலிகளின் முக்கியத் தளபதிகளே தெரிந்து வைத்திருந்தார்கள். இதையடுத்து, அரசியல் பிரிவின் பொறுப்பாளரான பா.நடேசன், சமாதானப் பிரிவு பொறுப்பாளரான புலித்தேவன் உள்ளிட்டவர்கள் பிரபாகரனிடம் பேசினார்கள். ஆனால், பிரபாகரன் அமெரிக்க அரசை உறுதியாக நம்பினார். ‘ஹிலாரி கிளின்டனிடம் நம்ம ஆட்கள் பேசி விட்டார்கள். அதனால் சீக்கிரமே அமெரிக்கா நம் விவகாரத்தில் தலையிடும். நாம் இன்னும் மூன்று நாட்கள் வரை தாக்குப்பிடிப்போம்’ என பிரபாகரன் நம்பிக்கையோடு சொன்னார்.

ஆனால், அமெரிக்காவின் உதவி கைகூடுவதில் சில சிக்கல்கள் உருவாகி விட்டன. இந்தியாவைக் கடந்து அமெரிக்காவால் உதவ முடியாது என்பதை புலித் தலைவர்கள் தாமதமாக… அதாவது காலம் கடந்த பிறகே புரிந்து கொண்டனர். இதற்கிடையில், இராணுவம் முற்றாக வளைத்து விட்டது. கடைசி நேரத்தில் சரணடைவது குறித்து நடேசன், பிரபாகரனிடம் பேசினார். ‘நீங்கள் சரணடையச் செல்லுங்கள்… நான் களத்திலேயே நிற்கிறேன்!’ என உறுதியாகச் சொல்லி விட்டார் பிரபாகரன். இந்தக் கணத்தில்தான் நாங்கள் மக்களோடு மக்களாகக் கலந்து இராணுவப் பகுதிக்கு போனோம். கடந்த மே 16-ம் தேதி வரை புலித் தலைவர்கள் பற்றிய நிலவரம் இதுதான். ஆனால், அடுத்தடுத்த நாளிலேயே புலித் தலைவர்கள் வீழ்த்தப்பட்டு விட்டதாக செய்திகள் வந்தன.”

”வெள்ளைக் கொடியுடன் வந்த நடேசன் உள்ளிட்டவர்களை இராணுவம் சுட்டுக் கொன்றதாக வந்த செய்திகள் குறித்து..?”

”நடேசன் சமாதானத்துக்கு முயன்றது எனக்கு உறுதியாகத் தெரியும். ஆனால், சமாதான விஷயத்தை சிங்களத் தரப்புக்கு சொன்னவர்கள், அதனை எப்படி முன்னெடுத்தார்கள் என்பது யாருக்கும் தெரியாத விஷயமாக இருக்கிறது. சிங்கள இராணுவத்தின் கட்டமைப்புப்படி சமாதானத் தகவல் பல கட்டங்களைத் தாண்டித்தான் சம்பந்தப்பட்ட பட்டாலியன் வீரர்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும். அந்த இடைவெளிக்குள் துயரங்கள் நடந்தேறி இருக்க வாய்ப்பிருக்கிறது. அந்தக் கணத்தில் நாங்கள் முகாம் பக்கம் வந்து விட்டோம்… அதனால், என்ன நடந்தது என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை!”

”பிரபாகரனின் நிலை என்ன ஆனது?”

”சரணடைவதில் கடைசி வரை பிரபாகரனுக்கு விருப்பம் இல்லை. ‘சரணடைவதைவிட சாவதே மேல்’ என்பதுதான் அவருடைய உறுதியான எண்ணம். ஆனால், கடைசி நேரத்திலும் வல்லமை மிக்க போராளிப்படை, பிரபாகரனைச் சுற்றி நின்றது. அவர் கடைசிக் கணத்தில் என்ன முடிவெடுத்தார் என்பதெல்லாம் அவரைச் சுற்றி நின்றவர்களுக்குக்கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மற்றபடி, இந்தக் கேள்விக்கு யூகமான பதிலை சொல்வது சரியானதாக இருக்காது!”

”பிரபாகரனின் பிரேதம் என சிங்கள ராணுவம் காட்டிய படம்..?”

”அதற்கு முன்னர் நான் பிரபாகரனை பார்த்திருக்கிறேன். முக அமைப்புகள் எல்லாம் அவரைப் போலவேதான் இருந்தது. ஆனாலும், அதில் வேறேதும் ஜோடிப்பு செய்யப்பட்டிருக்கலாம் என மக்கள் மத்தியில் பேச்சிருந்தது. அடுத்தடுத்த தினங்களில் பிரபாகரன் கொல்லப்பட்ட தகவலை முக்கால்வாசி மக்கள் நம்பத் தொடங்கிவிட்டார்கள். பிரபாகரனைப் பிடிக்காதவர்கள்கூட, அவர் மரணித்ததாக வந்த செய்தியை நினைத்துக் கலங்கினார்கள். ஏனென்றால், தமிழீழப் போராட்டத்துக்கு அவரை விட்டால் வேறு ஆள் இல்லை என்பது தமிழ் மக்கள் மனதில் ஆணியாக அறையப்பட்டிருக்கும் உண்மை.”

”பிரபாகரனின் குடும்பத்தினர் தப்பி விட்டதாக சிலரும், அவர்களும் போரில் கொல்லப்பட்டு விட்டதாக சிலரும் முரணான கருத்துகளைச் சொல்கிறார்களே?”

”பிரபாகரன் தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையுமே ஈழத்து மண்ணில்தான் வைத்திருந்தார். போர் நெருக்கடியான நிலைக்கு வருவதற்கு முன்னரே, அவர்களைப் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்திருக்க முடியும். ஆனாலும், அதில் பிரபாகரனுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை. இரண்டு மகன்களையும், மகள் துவாரகாவையும் மக்கள் பார்க்கும் படியான நிலையில்தான் அவர் வைத்திருந்தார்.

தன்னுடைய குடும்பத்தினரை மட்டும் வெளியே அனுப்பினால், அது புலிகள் இயக்கத்தின் பிடிப்பை உடைத்து விடும் என்பதை அவர் உறுதியாகத் தெரிந்து வைத்திருந்தார். சார்ள்ஸ் அண்டனியை போர்க்களத்தில் நிறுத்தி இருந்தார். போர் மிகத் தீவிரமாக உருவெடுத்தபோது, பிரபாகரனின் மனைவி மதிவதனியை வெளியே அனுப்ப சிலர் முயற்சி எடுத்தார்கள். ஆனால் ‘மதிவதனி வெளியேறக் கூடாது…’ என உறுதியாக அறிவித்து விட்டார் பிரபாகரன். ‘மக்கள் வேறு… குடும்பத்தினர் வேறு…’ என்று அவர் ஒருநாளும் பிரித்துப் பார்த்ததில்லை.

உண்மையைச் சொல்வதானால், ‘போரின் முடிவு தன் குடும்பத்தினர் கூண்டோடு அழிவதாகக்கூட இருக்கும்’ என்பதையும் அவர் அனுமானித்து வைத்திருந்தார். அதற்காகவே பிரத்தியேகமாக ஒரு மருத்துவரைச் சந்தித்து தன்னுடைய மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் ஸ்பெஷலாக சயனைட்டுகளை தயாரிக்கச் சொல்லி வாங்கி வைத்திருந்தார். அதனைக் கொடுத்தனுப்பிய மருத்துவரே என்னிடம் சொன்ன விவரம் இது. சாவை பற்றிய அச்சமோ தயக்கமோ பிரபாகரனுக்கு ஒரு போதும் இருந்ததில்லை என்பதற்கு, இந்த ஒரு சம்பவமே போதும்!”

”பிரபாகரனின் குடும்பத்தினர் யாரும் தப்பித்திருக்க வாய்ப்பில்லையா?”

”போரின் இறுதி நேரம் நான் தங்கி இருந்த பங்கருக்கு அருகே ஒரு பெரிய பங்கர் இருந்தது. அங்கே நான் போன போது, அதில் பிரபாகரனின் பெற்றோர் தங்கி இருந்தார்கள். அவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்கு வந்தபிறகு, கதிர்காமர் முகாமில் வைக்கப்பட்டிருந்ததை நான் பார்த்தேன். அவர்களை இராணுவம் சித்திரவதைகள் ஏதும் செய்யவில்லை. அதன்பிறகு, பாதுகாப்பு கருதி ஒரு ஸ்பெஷல் அறையில் வைத்து, அவர்களை இராணுவத் தரப்பு மரியாதையுடன் நடத்துவதாக எனக்குத் தகவல் வந்தது. பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் அண்டனி போரில் மடிந்ததை நேரில் பார்த்தவர்களே உறுதி செய்திருக்கிறார்கள். அதே நேரம் துவாரகா, பாலச்சந்திரன், மதிவதனி ஆகியோர் என்ன ஆனார்கள் என்பது முகாமில் இருந்த எனக்கு சரிவரத் தெரியவில்லை!”

”பாலச்சந்திரன் கொல்லப்பட்டது போன்ற படம் இணைய தளங்களில் வெளியாகி இருக்கிறதே?”

”பாலச்சந்திரன் போரின் கடைசி வரை ஈழத்தில் இருந்தது உண்மை. மற்றபடி, அவர் எப்போது பிடிபட்டார் என்பது பற்றியெல்லாம் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், அவர் கொல்லப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்பதுதான் என் சிந்தைக்கு எட்டிய விஷயம்.”

”புலிகள் தரப்பில் பலரும் காடுகளுக்குள் பதுங்கி இருப்பதாக சொல்லப்படுவது உண்மையா?”

”போரின் இறுதி நேரத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் இராணுவத்திடம் சரணடைந்தார்கள்.மொத்தமாக புலிப்படையில் 24ஆயிரம் புலிகள் இருந்தார்கள். போரின்போது ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் வீரச்சாவு அடைந்தார்கள். இதுதவிர, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் இப்போது காடுகளுக்குள் பதுங்கி இருக்கிறார்கள். அவர்கள் மேற்கொண்டு தாக்குதல்கள் நடத்துவதற்கு இப்போதைக்கு சாத்தியங்கள் ஏதுமில்லை. அவர்களை ஒருங்கிணைக்க இப்போதைக்கு வழியுமில்லை!”

”பொட்டு அம்மான் பற்றி எந்தத் தகவலும் இல்லையே..?”

”பொட்டு அம்மான், சூசை உள்ளிட்ட போராளித் தலைவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்… பிரபாகரன் கொல்லப்பட்டது உண்மையெனில், அது பொட்டு அம்மானைக் கொன்ற பிறகுதான் நடந்திருக்க முடியும். பொட்டு அம்மான் குறித்து இராணுவத்துக்கே சரியான தகவல்கள் கிடைக்கவில்லை என்பதுதான் சர்ச்சைகளுக்கு விதை போட்டிருக்கிறது. அதே நேரம், பொட்டு அம்மான் இராணுவத்தின் கஸ்ரடியில் இருப்பதாக சொல்வதில் நிஜமில்லை!”

”இந்தியத் தேர்தல், ஈழத்து நிலைமையை மாற்றும் என புலிகள் எதிர்பார்த்தார்களா?”

”இந்தியாவில் காங்கிரஸ் அரசுதான் மறுபடியும் அமையும் என்பதை ஈழத்தில் இருந்த அடித்தட்டு மக்கள்கூட நன்றாக அறிந்து வைத்திருந்தார்கள். மாற்று அணி வலிமையானதாக இல்லை என்பது எல்லோருக்குமே புரிந்தது. அதனால் இந்திய ஆட்சியில் மாற்றம் வரும் என்று புலிகள் எண்ணவே இல்லை. இருந்தாலும், தமிழகத்தில் ஈழத்துக்கு ஆதரவாக எழும்பிய ஒற்றுமை, ஈழ மக்களை நெகிழ வைத்தது!”

வடக்கு மாகாண பிரதம செயலகம் மாங்குளம் நகரில் அமையும் – ஆளுநர் சந்திரசிறி

chandrasiri.jpgவடக்கு மாகாணசபையின் பிரதம செயலக வளாகம் மாங்குளம் நகரில் அமைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாகாண மக்கள் இலகுவாக தங்கள் கருமங்களை நிறைவேற்றிக் கொள்ள அவர்கள் வாழும் இடத்தில் நிர்வாகம் இருக்க வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்தார்.

திருகோணமலை, வரோதய நகரில் தற்போது அமைந்துள்ள வடக்கு மாகாண சபையின் பிரதம செயலகத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் ஆளுநர் , மாகாண அமைச்சர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் மத்தியில் ஆளுநர் உரையாற்றினார். இந்நிகழ்வு பிரதம செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

ஆளுநரின் செயலாளர் திருமதி ஆர்.விஜயலட்சுமி அறிமுகவுரையை நிகழ்த்தினார். இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணசபை இரண்டாகப் பிரிக்கப்பட்ட பின்னர் வடக்கு மாகாணசபைக்கான பிரதம செயலகம் திருகோணமலை வரோதய நகரில் அமைக்கப்பட்டு செயல்படுகிறது. வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களும் முற்றாக விடுவிக்கப்பட்டுவிட்டன. வளர்ச்சிப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதற்கு முன்னோடியாக வடக்கு மாகாணசபையின் பிரதம செயலகத்தை மாங்குளம் நகரில் அமைப்பதென அடையாளம் காணப்பட்டுள்ளது.

முக்கியமான பணியாக “வடக்கின் வசந்தம்’ செயற்றிட்டமும் ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தி, புனர்வாழ்வு அளிக்கும் பணியும் எம்முன்னே உள்ளன. யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் பணியாற்றிய நிறைய அனுபவம் பெற்ற புதிய ஆளுநரின் தலைமையில் இப்பணி முன்னெடுக்கப்படும் என்று ஆளுநரின் செயலாளர் திருமதி விஜயலட்சுமி தெரிவித்தார்.

வன்னியில் 80% பகுதிகளில் கண்ணிவெடிகள் இல்லை; மீள்குடியேற்றத்தை உடனடியாக மேற்கொள்ள முடியும்: த.தே.கூட்டமைப்பு

வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றும் தாமதமடைவது இடம்பெயர்ந்த சுமார் 3 இலட்சம் தமிழ் மக்களை அவர்களின் சொந்தக் கிராமங்களில் மீள்க்குடியேற்றுவதை தாமதிக்கச் செய்யும் என்று தமிழ் அரசியல் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மீள்குடியேற்றத்தை பிற்போடுவதற்கான சாட்டாக கண்ணிவெடி அகற்றும் விடயம் அமையுமென அண்மையில் இந்திய அரசாங்கத்துடனான தமது சந்திப்பின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.

80 வீதமான பகுதிகள் கண்ணிவெடிகளற்றவையாக உள்ளன. அதனால் வன்னி யுத்தவலயப் பகுதிகளில் அனேகமான இடம்பெயர்ந்த மக்களை அரசாங்கம் மீளக்குடியமர்த்த வேண்டும் என்று யாழ். மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பா.உ. சுரேஸ் பிரேமச்சந்திரன் த இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்திச் சேவைக்கு கூறியுள்ளார்.

இதேவேளை வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு இந்திய கண்ணிவெடி அகற்றும் குழுவை அனுப்பி வைக்குமாறு கொழும்பு விடுத்த கோரிக்கை தொடர்பாக இலங்கையும் இந்தியாவும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளன. இந்திய இராணுவத்திலிருந்து 500 பேர் கொண்ட கண்ணிவெடி அகற்றும் குழுவினரை இலங்கைக்கு இந்தியா அனுப்புமென கடந்த புதன்கிழமை கூட்டுப்படைத தலைமை அதிகாரி சரத் பொன்சேகா கூறியிருந்தார். இலங்கையில் ஏற்கனவே இந்திய கண்ணிவெடி அகற்றும் குழுவினர் உள்ளனர். சர்வார்த்தா கொரிகோன் ஆகிய இந்தக் குழுக்கள் ஓய்வுபெற்ற இராணுவத்தினரை உள்ளடக்கியதாகும். மன்னார் மாவட்டத்தமில் அவர்க்ள பணியாற்றுவதாக நம்பப்படுகிறது.