2009

2009

கனடிய அமைச்சர் இலங்கை வருகை

கனடாவின் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைச்சர் பிவேர்லே ஜே.ஒடா இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

கனடாவின் அபிவிருத்தித் திட்ட பங்காளிகளை சந்திப்பதற்காகவும் தற்போது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மீளாய்வு செய்யவுமே அவர் வருகைதந்திருப்பதாகக் கனடிய ஊடகங்கள் தெரிவித்தன.

கனடிய ஊடகவியலாளர்களையும் ஒடா நேற்று வெள்ளிக்கிழமை சந்திக்கவிருந்தார்

“பிரபாகரனின் தொலைபேசியே பத்மநாதன் பிடிபட உதவியது’

pathmanathan.jpgவிடு தலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட செய்மதி தொலைபேசியே புலிகளின் புதிய தலைவர் செல்வராஜா பத்மநாதனை இலங்கை வெற்றிகரமான முறையில் கைது செய்வதற்கு வழிவகுத்ததாக ராய்ட்டர் செய்திச்சேவை தெரிவித்தது. மே 18 இல் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பிரபாகரன் மரணமடைந்த பின் அவரது சடலத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட செய்மதி தொலைபேசியை இலங்கையின் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பயன்படுத்தியுள்ளனர்.

பிரிவினைவாதப் புலிகளையும் அவர்களில் மீதமாக இருப்போரையும் அழிப்பதற்கான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் போராட்டத்திற்கு புலிகளின் புதிய தலைவரான செல்வராஜா பத்மநாதன் கைது செய்யப்பட்டுள்ளமை அண்மையகால பரிசு என்று ராய்ட்டர் செய்திச்சேவை நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தது. கொழும்பில் பத்மநாதனிடம் விசாரணை நடத்தப்படுவதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மூன்று குழுக்கள் மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு பத்மநாதனை தேடிச் செல்வதற்காக அனுப்பப்பட்டதாகவும் அவரைக் கைது செய்வதற்காக அல்ல என்றும் தம்மை இனங்காட்டிக்கொள்ள விரும்பாத சிரேஷ்ட இராணுவ வட்டாரங்கள் மூன்று தெரிவித்ததாக ராய்ட்டர் செய்திச் சேவை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கு அவரைக் கொண்டு வரவேண்டுமென நாம் விரும்பியிருக்கவில்லை. ஆனால், அவ்வாறு செய்வதற்கு சூழ்நிலைகள் எமக்கு இடமளிக்கவில்லை என்று தம்மை அடையாளம் காட்ட விரும்பாத இராணுவப் புலனாய்வு அதிகாரியொருவர் ராய்ட்டருக்குத் தெரிவித்துள்ளார். உள்ளூர் புலனாய்வுத்துறை மற்றும் ஒத்துழைப்பாக செயல்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் பிரசன்னம் ஆகியவை அந்தத் திட்டத்தை நடைமுறைச்சாத்தியமற்றதாக்கியதாக அவர்கள் கூறியுள்ளனர்.

தாய்லாந்தில் வைத்து பத்மநாதன் கைது செய்யப்பட்டதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் எந்த நாட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறித்து அதிகாரிகள் கூற மறுத்துள்ளனர். அதேசமயம், தமது நாடுகளில் வைத்து பத்மநாதன் கைது செய்யப்பட்டமை தொடர்பாக தாய்லாந்து, மலேசிய அதிகாரிகளும் மறுத்துள்ளனர். பத்மநாதன் தொடர்ந்து இடங்களையும் தமது கையடக்கத் தொலைபேசி இலக்கங்களையும் மாற்றியிருந்ததாகவும் இது தாய்லாந்து, மலேசியா , இந்தோனேசியா , சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கண்காணிப்பை மேற்கொள்வதற்கு வழிவகுத்ததாகவும் இராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குறுகிய நிலப்பரப்புக்குள் புலிகள் முடக்கப்பட்டிருந்த தருணத்தில் பத்மநாதன் தொடர்ந்து பிரபாகரனுடன் தொலைபேசித் தொடர்பைக் கொண்டிருந்தார். “நாங்கள் இப்போது காஸ்ட்ரோ போன்ற விடுதலைப் புலிகளின் ஏனைய தலைவர்களையும் மற்றைய முக்கியமான ஆட்களையும் ஏனைய நாடுகளில் தேடி வருகிறோம்’ என்று அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

புனைபெயரில் வெளிநாடுகளில் இயங்கும் சிரேஷ்ட புலி உறுப்பினர் காஸ்ட்ரோவாகும். அவர் ஆயுதக் கொள்வனவு, புலனாய்வு விடயங்களை சேகரித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்ததாக ராய்ட்டர் செய்திச் சேவை கூறியுள்ளது. பத்மநாதன் மீது இன்ரர்போலின் இரு பிடியாணைகள் இருந்தன. அவர் பல கடவுச்சீட்டுகள் வைத்திருந்தார். அத்துடன், அதிகளவு பணமும் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. கடத்தல் மற்றும் நடவடிக்கைகள் மூலம் வருடாந்தம் 200300 மில்லியன் டொலர்களை புலிகள் சம்பாதித்ததாக நம்பப்படுவதாக ராய்ட்டர் மேலும் கூறியுள்ளது.

வடக்கில் கண்ணி வெடிகளை அகற்ற பிரிட்டன் நிதியூதவி

british_flag.jpgஇலங் கையின் வடக்கே யுத்தத்தின் போது அரசு மற்றும் புலிகளினால் புதைக்கப்பட்ட பெரும் தொகையான கண்ணி வெடிகளை அகற்றுவதற்கென பிரித்தானிய அரசு 5 லட்சம் பவுண்களை வழங்க முன்வந்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டே இந்த நிதியுதவியினை தாம் வழங்குவதாக பிரித்தானியா தெரிவித்து உள்ளது.

ஆனால்,  உலக வங்கி இலங்கைக்கு கடன் உதவியாக 2 பில்லியன் டொலர்களை வழங்குவதற்கு பிரித்தானியா எதிர்ப்பு தெரிவித்ததுடன் அமெரிக்கா இதற்கு ஆதரவு வழங்க கூடாது எனவும் கேட்டுக் கொண்டிருந்தது. மேலும் இலங்கையில் யுத்தம் இடம் பெறுகையில் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் டேவிட் விலிபாண்ட் உடனடியாக யுத்த நிறுத்ததினை ஏற்படுத்துமாறு இலங்கை அரசினை வலியுறுத்தி இருந்தார்.

இலங்கை அதற்கு மறுப்பு தெரிவித்து இருந்ததுடன் இலங்கை பிரித்தானிய காலனித்துவத்தில் தற்போது இல்லை என்பதினை உணரவேண்டும் எனக் கூறியும் இருந்தது.  மேலும் இலங்கைக்கென ஒரு விஷேட சமாதான தூதுவரை பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுண் நியமித்த பொழுது அதனையும் இலங்கை நிராகரித்தது.

எனினும்  பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டே இந்த நிதியுதவியினை தாம் வழங்குவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. இந்திய படையினர் இலங்கையில் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடதக்கது. 

வவுனியாவில் அமைதியான வாக்களிப்பு

election000.jpgவவுனியா நகரசபைக்கான வாக்களிப்பு மிகவும் அமைதியான முறையில் நடைபெறுவதாகவும், நண்பகல் வரையில் 35 வீதம் வாக்குப்பதிவு இடம்பெற்றதாகவும் வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ.எஸ்.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

காலை முதல் வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு சீராக நடைபெற்றதாகவும் அசம்பாவிதங்கள் எதுவும் வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 எனினும், பட்டாணிச்சூர், புளியங்குளம், தாண்டிக்குளம், கற்குழி உட்பட்ட சில பகுதிகளில் மாற்றுக் கட்சிகளின் ஆதரவாளர்கள், கட்சி உறுப்பினர்களிடையே சிறுசிறு வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன், சில கைகலப்பு சம்பவங்களும் இடம்பெற்றதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறான சம்பவம் ஒன்றில் தமது அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் சிறு காயத்திற்கு உள்ளாகியதாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தலைவர் ரீ.சித்தார்த்தன் தெரிவித்தார்.

இலங்கையுடனான 4வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி இலகு வெற்றி

cricket1.jpgஇலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 4வது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 321 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதிய 4 வது போட்டி நேற்று கொழும்பு ஆர். பிரேமதாஸ விளையாட்டு மைதானத்தில் பகல் – இரவுப் போட்டியாக ஆரம்பமானது.

இப்போட்டியில் பாகிஸ்தான் அணித் தலைவர் யூனுஸ்கான் நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டி தனது அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதாக அறிவித்தார்.

அதன் அடிப்படையில் பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய விக்கெட் காப்பாளர் கம்ரன் அக்மல் மற்றும் இந்தியன் கிரிக்கெட் லீக்கில் விளையாடி விலக்கப்பட்டிருந்த இம்ரான் நமர் மீண்டும் பாகிஸ்தான் அணிக்காக அழைக்கப்பட்டு விளையாடினார். இம்ரான் நமர் 29 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரி உட்பட 23 ஓட்டங்கள் பெற்றிருந்த போது துஷாரவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து சென்றார்.

மற்றொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கம்ரான் அக்மல் 64 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரி உட்பட 57 ஓட்டங்கள் பெற்றிருந்த போது மாலிங்க பண்டாரவின் பந்து வீச்சுக்கு ஆட்டமிழந்து சென்றார். பின்னர் வந்த முகம்மது யூசுப் 12 பந்துகளை எதிர்கொண்டு 6 ஓட்டங்களைப் பெற்று இருந்தபோது மென்டிஸின் பந்து வீச்சில் ஜயவர்த்தனவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்து சென்றார். இப்போட்டியில் உமர் அக்மால் ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் தனது கன்னி சதத்தைப் பெற்றமை விசேட அம்சமாகும்.

322 வெற்றி இழக்கை நோக்கி தனது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி  36.1 ஓவரில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 175 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. தரங்க 80 ஓட்டங்களையும், சங்கக்கார  39 ஓட்டங்களையும் பெற்றனர்.

PAKISTAN
Kamran Akmal b Bandara     57
Imran Nazir b Thushara    23
Younus Khan c Kapugedera b Thushara                  89
Mohammad Yousuf c Jayawardene b Mendis   6
Misbah-ul Haq lbw b Bandara                    9
Umar Akmal not out                  102
Shahid Afridi not out                     2
Extras: (b4, w29)                    33
Total (for 5 wkts, 50 overs)                  321

Did not bat: Rana Naved, Mohammad Aamer, Rao Iftikhar, Saeed Ajmal.
Fall of wickets: 1-61 (Nazir), 2-106 (Kamran Akmal), 3-115 (Yousuf),
4-130 (Misbah), 5-306 (Younus).

Bowling: Malinga 10-0-79-0 (w22), Thushara 10-0-74-2 (w7), Mathews 8-0-48-0,
Bandara 10-0-44-2, Mendis 10-0-56-1, Kandamby 2-0-16-0.

SRI LANKA
U. Tharanga c Kamran b Iftikhar                  80
M. Jayawardene c Aamer b Naved     19
K. Sangakkara c Nazir b Iftikhar                 39
T. Kandamby c Younus b Ajmal     15
C. Kapugedera c Naved b Ajmal     8
T. Samaraweera c Kamran b Iftikhar    2
A. Mathews st Kamran b Afrid   8
M. Bandara c Misbah b Afridi    0
T. Thushara b Iftikhar    0
L. Malinga c Misbah b Iftikhar   0
A. Mendis not out     0
Extras: (lb1, w3)    4
Total(all out, 36.1 overs)  175

Fall of wickets: 1-36 (Jayawardene), 2-101 (Sangakkara), 3-130 (Kandamby),
4-157 (Kapugedera), 5-159 (Samaraweera), 6-166 (Tharanga),
7-167 (Bandara), 8-171 (Thushara), 9-175 (Mathews), 10-175 (Malinga).

Bowling: Aamer 5-0-34-0 (w1), Naved 7-0-46-1, Iftikhar 8.1-0-30-5,
Afridi 9-0-40-2 (w1), Ajmal 7-0-24-2 (w1).

ஊவா, யாழ்., வவுனியாவில் இன்று தேர்தல்

election000.jpgஊவா மாகாண சபை, யாழ்ப்பாணம் மாநகர சபை, வவுனியா நகர சபை ஆகியவற்றுக்கான தேர்தல்கள் இன்று (08) நடைபெறுகின்றன.

வாக்கெடுப்பு இன்று காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணிவரை நடைபெறும். முதலாவது முடிவு நள்ளிரவுக்குப் பின்னர் வெளிவரும் எனத் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது.

ஊவா மாகாண சபைத் தேர்தலில் இம்முறை வாக்களிப்பதற்கு எட்டு இலட்சத்து 75 ஆயிரத்து 456 பேர் தகுதிபெற்றுள்ளனர். 23 கட்சிகளிலும், ஏழு சுயாதீனக் குழுக்களிலுமாக 600 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

இவர்களுள் 30 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இங்கு 814 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டத்தில் 5 இலட்சத்து 74 ஆயிரத்து 814 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளார்கள். 14 கட்சிகளிலும் நான்கு சுயேச்சைக் குழுக்களிலுமாகப் போட்டியிடும் 432 வேட்பாளர்களுள் 21 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். மொனறாகலை மாவட்டத்தில் 3 இலட்சத்து 642 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். நான்கு கட்சிகளிலும், இரண்டு சுயேச்சைக் குழுக்களிலுமாகப் போட்டியிடும் 168 வேட்பாளர்களில் 11 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.

யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தல் கடந்த 12 வருடங்களுக்குப் பின்னர் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் வாக்களிக்க ஒரு இலட்சத்து 412 பேர் தகுதிபெற்றுள்ளனர். நான்கு கட்சிகளிலும் இரண்டு சுயேச்சைக் குழுக்களிலுமாக 174 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களுள் 23 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவர்.

யாழ். மாநகர சபைத் தேர்தல் இறுதியாகக் கடந்த 1997 ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் திகதி நடைபெற்றது. இதில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட சரோஜினி யோகேஸ்வரன் மாநகர முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவர் 1997 மே மாதம் 17ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார். அதற்குப் பின்னர் இப்போதுதான் முதன் முறையாகத் தேர்தல் நடைபெறுகிறது.

யாழ். மாநகர சபைத் தேர்தலில் இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கென 16 வாக்குச் சாவடிகள் அடங்கலாக மொத்தம் 86 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்துக்கு வெளியில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், புத்தளம், அநுராதபுரம் ஆகிய இடங்களில் 15 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

யாழ். நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள 75 பேர் வாக்களிக்க அரியாலை பார்வதி வித்தியாலயத்திலும் வாக்குச்சாவடியொன்று அமைக்கப்பட்டுள்ளது. மாநகர சபைக்கு வெளியில் இடம்பெயர்ந்த ஆறாயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக யாழ். உதவித் தேர்தல் ஆணையாளர் பீ. குகநாதன் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்தவர்களுள் கொழும்பில் 285 பேரும், கம்பஹாவில் 871 பேரும், களுத்துறையில் 249 பேரும், புத்தளம் 4418 பேரும், அநுராதபுரத்தில் 132 பேரும் யாழ்ப்பாணத்தில் 75 பேருமாக 6030 வாக்காளர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 4978 பேர் மட்டுமே வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

வவுனியா நகர சபைக்கான தேர்தல் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறுகிறது. இந்தத் தடவை இங்கு வாக்களிக்கவென 24 ஆயிரத்து 624 பேர் தகுதிபெற்றுள்ளதாக வவுனியா உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ. எஸ். கருணாநிதி தெரிவித்தார். 6 அரசியல் கட்சிகளிலும், 3 சுயேச்சைக் குழுக்களிலுமாக 135 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதில் 11 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். தேர்தல் பணிகளுக்கென 638 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைதியான தேர்தலை நடத்துவதற்காக தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஊவா, யாழ்ப்பாணம், வவுனியாவில் எவ்வித பதற்றமும் இன்றி மிகவும் சுமுகமான நிலைமை காணப்படுவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மூன்று இடங்களிலும் சுமுகமான நிலை இருப்பதால் நீதி, நேர்மையான தேர்தல் நடைபெறுமென தான் நம்புவதாக அவர் கூறினார்.

கடந்த கால தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இம்முறை வன்முறைகள் மிகவும் குறைவாக இருக்கிறதெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் கடமைகளில் ஈடுபடுவதற்கென 638 அதிகாரிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

கே.பிக்கு எதிராக சட்ட நடவடிக்கை

pathmanathan.jpgஆசிய நாடொன்றிலிருந்து கைது செய்யப்பட்ட புலிகளின் தற்போதைய தலைவர் என தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் நேற்றுக் காலை கொழும்புக்கு கொண்டுவரப்பட்டதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்றுத் தெரிவித்தார்.

பாதுகாப்புப் பிரிவினரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கே.பி, இலங்கை சட்டத்தின் பிரகாரம் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் அமைச்சர் கெஹலிய கூறினார். கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஊடக மத்திய நிலையத்தில் நேற்று செய்தியாளர் மாநாடொன்று நடந்தது. இந்த மாநாட்டிலேயே அமைச்சர் கெஹலிய மேற்கண்டவாறு கூறினார்.

தன்னைத்தானே தலைவரென உரிமை கோரியிருந்த கே.பி.யின் கைது ஊடாக உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டு பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டாலோ, புலிகளின் தலைவர்தான் தானென கூறிக்கொண்டிருந்தாலோ அவர்களை கைதுசெய்யும் ஆற்றல் இலங்கை பாதுகாப்புப் பிரிவினருக்கு உண்டு என்பதை கே.பி.யின் கைது மூலம் சர்வதேசத்துக்கு உணர்த்தியிருக்கிறோம் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

பிரபாகரன் கொல்லப்பட்டதையடுத்து புலிகளின் அடுத்த தலைவர் நான்தான் என கூறிக் கொண்டு அறிக்கைகளை வெளியிட்டு வந்த கே.பி, சர்வதேச பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த நபர் மட்டுமன்றி, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையுடன் நேரடி தொடர்பு கொண்டவராகவும் தேடப்பட்டு வந்துள்ளார்.

இவரைக் கைது செய்வதற்காக இலங்கைப் புலனாய்வுப் பிரிவும் ஆசிய நாடுகளின் புலனாய்வுப் பிரிவொன்றும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுத்திருந்ததாக அமைச்சர் கெஹலிய தெரிவித்தார்.

கே.பி. எந்த நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்? என செய்தியாளர் ஒருவர் கேட்ட போது:

பலராலும் தேடப்பட்டுவந்த கே.பி, இப் போது கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டும் விட்டார். அவர் ஆசிய பிராந்திய நாடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டார் என்று மட்டுமே கூறமுடியும் என்றார்.

ஆசிய பிராந்தியத்திலுள்ள எமது நட்பு நாடுகளின் புலனாய்வுப் பிரிவும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் கெஹலிய தெரிவித்தார்.

குமரன் பத்மநாதன் அல்லது கே.பி. பல நாடுகளினாலும் தேடப்பட்டு வந்தவர். இந்தியாவும் அவரை கைது செய்யவிருந்தது. இந்த நிலையில் இவ்வாறான நாடுகள் அவரை தம்மிடம் ஒப்படைக்கும் படி கேட்டால் ஒப்படைப்பீர்களா? ஏதாவது ஒரு நாடு இவ்வாறான கோரிக்கையை முன்வைத்திருக்கிறதா? என செய்தியாளர் ஒருவர் கேட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல:

எந்தவொரு நாடும் தனிப்பட்ட விதத்தில் இவ்வாறான கோரிக்கையை இதுவரை விடுக்கவில்லை. எனினும் பொது நலவாய நாடுகளுக்கிடையே இவ்வாறான கைதுகள் பரிமாற்றம் தொடர்பான ஒவ்வொரு விதமான உடன்படிக்கைகள் அமுலில் உள்ளன. இவ்வாறான உடன்படிக்கைகளை நாம் மதிக்கின்றோம். அவற்றின் பிரகாரம் செயற்படவும் நாம் ஆயத்தமாகவும் உள்ளோம் எனவும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கெஹலியவுடன் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, கடற்படை பேச்சாளர் கப்டன் டி.கே.பி. ரத்நாயக்க, விமானப்படை பேச்சாளர் விங்கமாண்டர் ஜனக நாணயக்கார, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேக்கர, ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல ஆகியோர் கலந்து கொண்டனர்.

1955 ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி காங்கேசன்துறையில் பிறந்த கே.பி.யின் இயற்பெயர் சன்முகம் குமரன் தர்மலிங்கம் ஆகும்.

தமிழ், ஆங்கிலம், பிரெஞ் மற்றும் சிங்கள மொழிகளில் இவர் நல்ல பரிச்சயமிக்கவர். 1983 ஆம் ஆண்டு இவர் இலங்கையை விட்டு வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆபாச இறுவட்டுகள் விற்றவர் கைது

சீதுவையில் ஆபாச இறுவட்டுகளை விற்பனை செய்து வந்த வியாபாரி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  சினிமா படங்களின் பெயரில் இவற்றை இவர் பாடசாலை பிள்ளைகளுக்கு விற்பனை செய்து வந்தார் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. வீட்டில் வைத்து கணினியில் ஆபாசப்படங்களை இறுவட்டுகளில் பதிவு செய்து வந்தார் எனவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இவரிடமிருந்து 500 ஆபாச இறுவட்டுகள், கணினி என்பனவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.  சீதுவை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இவரின் விற்பனை நிலையத்தில் மாணவன் ஒருவன் மூலம் ஒரு இறுவட்டை வாங்கி அதனை கணினியின் மூலம் பார்த்த போது இவரது வியாபார நடவடிக்கை தெரியவந்தது.

தமிழ்நாட்டின் நிவாரணப் பொருட்களுடன் அம்ஸ்டர்டாம் கப்பல் இன்று கொழும்பு வரும்

06-cargo-ship.jpgதமிழக அரசு நான்காவது கட்டமாக வழங்கியுள்ள 15 கோடி ரூபா மதிப்புள்ள நிவாரண பொருட்கள் ஏற்றப்பட்ட “”எம்.சி.பி. அம்ஸ்டர்டாம்’ கப்பல் நேற்று முன்தினம் இலங்கைக்கு புறப்பட்டது. இக்கப்பல் இன்று இலங்கைக்கு வருகைதரும்.

போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தமிழக அரசு சார்பாக மூன்று கட்டமாக நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. முதல் கட்டமாக கடந்த நவம்பர் 13 ஆம் திகதி 10 கோடி, ஏப்ரல் 22 ஆம் திகதி 6.62 கோடி, மூன்றாம் கட்டமாக மே 6 ஆம் திகதி 6.90 கோடி ரூபாய் மதிப்பில் உணவுப் பொருட்கள், துணிகள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டன. தற்போது, நான்காவது கட்டமாக தமிழக அரசு சார்பில், இலங்கை தமிழர்களுக்காக நிவாரணப் பொருட்களை அனுப்புகிறது.

சமையல் பாத்திரங்கள், சமையல் பொருட்கள், துணி வகைகள், பிளாஸ்டிக் பாய், செருப்புகள் உள்ளிட்ட 15 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. இப்பொருட்கள் அனைத்தும், நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் இருந்து லொறிகள் மூலம் சென்னை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டன.

அவையனைத்தும், 100 கொள்கலன்களில் ஏற்றும் பணி புதன்கிழமை முழுவதும் நடந்தது. பின்னர் நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்ட கொள்கலன்கள் அனைத்தும் “எம்.சி.பி. அம்ஸ்டர்டாம்’ கப்பலில் கிரேன் உதவியுடன் ஏற்றப்பட்டன. இக்கப்பல் நேற்று முன்தினம்  காலை இலங்கை நோக்கி புறப்பட்டது. இன்று 8 ஆம் திகதி கொழும்பு நகரைச் சென்றடையும். பின்னர் இந்த நிவாரணப் பொருட்களை இந்திய தூதரகம் பெற்று, ஐக்கிய நாடுகள் சபை மூலம் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.

மடு உற்சவத்தையிட்டு விசேட ரயில் சேவைகள் – 12ம் திகதி முதல் 15ம் திகதி வரை நடத்த ஏற்பாடு

train0000.jpgமடு தேவாலய உற்சவத்தை முன்னிட்டு எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிவரை விசேட ரயில் சேவைகளை கொழும்பு கோட்டை, மொரட்டுவை, மாத்தறை, நீர்கொழும்பு ரயில் நிலையங்களிலிருந்து நடத்த ரயில்வே திணைக்களம் முடிவு செய்துள்ளது.

12 ஆம் திகதி காலை 7.45 க்கு முதலாவது ரயில் நீர்கொழும்பு ரயில் நிலையத்திலிருந்து புறப்படவுள்ளதாக விமான சேவைகள் அமைச்சர் சரத்குமார குணரட்ண தெரிவித்தார்.

போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும, லசந்த அழகியவன்ன, மில்ரோய் பர்னாண்டோ, கொழும்பு மேற்றாணியார் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் சரத்குமார குணரட்ண தெரிவித்தார்.

12 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை தினமும் மதவாச்சி வரையில் செல்லும் ரயில்கள் புறப்படும் நேரங்கள் வருமாறு:- கொழும்பு கோட்டையிலிருந்து காலை 5.45, 6.05, 8.45, பகல் 1.45, மாலை 4.20, இரவு 10.00 மணிக்கு புறப்படும். மாத்தறையிலிருந்து காலை 9.45 க்கு மதவாச்சி நோக்கி மேற்படி 12, 13, 14, 15 ஆம் திகதிகளில் ரயில் புறப்படும்.

13 ஆம் திகதி மொரட்டுவையிலிருந்து தினமும் 7.50 க்கு புறப்படும் ரயில் பகல் 1.43 க்கு மதவாச்சியை சென்றடையும். 12 ஆம் 14 ஆம் திகதிகளில் நீர்கொழும்பிலிருந்து காலை 7.45 க்கு புறப்படும் ரயில் பகல் 1.45 க்கு மதவாச்சியை சென்றடையும். 12, 13, 14, 15 ஆம் திகதிகளிலும் மதவாச்சியிலிருந்து தினமும் காலை 3,52, 7.32, பகல் 12.25, மாலை 4.15, இரவு 10.35 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நோக்கி புறப்படும்.

விசேடமாக 15 ஆம் திகதி மாலை 3.15 க்கு மதவாச்சியிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி மற்றுமொரு ரயிலும் புறப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவிக்கிறது. மதவாச்சி ரயில் நிலையத்திலிருந்து மடு தேவாலயப் பகுதிக்குள் செல்வதற்கு மதவாச்சி ரயில் நிலையத்திலிருந்து மடு தேவாலயம் வரை 50 பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அடியார்கள் குழுக்களாக தமது சொந்த வாகனத்திலும், வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனங்களிலும், தனியார் பஸ் வண்டிகளிலும் செல்ல முடியும். இதற்கென பிரதேச பாதுகாப்பு அனுமதி பெற வேண்டும்.

தனிப்பட்ட தமது சொந்த வாகனத்தில் செல்வோர் தாம் மடு தேவாலய வளவில் கூடாரமிட்டுள்ள பகுதியிலேயே நிறுத்தி வைப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அடியார்கள் மடு தேவாலயப் பகுதியில் 17 ஆம் திகதி வரை தங்கியிருப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சரத்குமார குணரட்ண தெரிவித்தார்.