தமிழக அரசு நான்காவது கட்டமாக வழங்கியுள்ள 15 கோடி ரூபா மதிப்புள்ள நிவாரண பொருட்கள் ஏற்றப்பட்ட “”எம்.சி.பி. அம்ஸ்டர்டாம்’ கப்பல் நேற்று முன்தினம் இலங்கைக்கு புறப்பட்டது. இக்கப்பல் இன்று இலங்கைக்கு வருகைதரும்.
போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தமிழக அரசு சார்பாக மூன்று கட்டமாக நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. முதல் கட்டமாக கடந்த நவம்பர் 13 ஆம் திகதி 10 கோடி, ஏப்ரல் 22 ஆம் திகதி 6.62 கோடி, மூன்றாம் கட்டமாக மே 6 ஆம் திகதி 6.90 கோடி ரூபாய் மதிப்பில் உணவுப் பொருட்கள், துணிகள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டன. தற்போது, நான்காவது கட்டமாக தமிழக அரசு சார்பில், இலங்கை தமிழர்களுக்காக நிவாரணப் பொருட்களை அனுப்புகிறது.
சமையல் பாத்திரங்கள், சமையல் பொருட்கள், துணி வகைகள், பிளாஸ்டிக் பாய், செருப்புகள் உள்ளிட்ட 15 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. இப்பொருட்கள் அனைத்தும், நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் இருந்து லொறிகள் மூலம் சென்னை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டன.
அவையனைத்தும், 100 கொள்கலன்களில் ஏற்றும் பணி புதன்கிழமை முழுவதும் நடந்தது. பின்னர் நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்ட கொள்கலன்கள் அனைத்தும் “எம்.சி.பி. அம்ஸ்டர்டாம்’ கப்பலில் கிரேன் உதவியுடன் ஏற்றப்பட்டன. இக்கப்பல் நேற்று முன்தினம் காலை இலங்கை நோக்கி புறப்பட்டது. இன்று 8 ஆம் திகதி கொழும்பு நகரைச் சென்றடையும். பின்னர் இந்த நிவாரணப் பொருட்களை இந்திய தூதரகம் பெற்று, ஐக்கிய நாடுகள் சபை மூலம் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.