தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் சடுதியான அழிவு தமிழ் மக்களுடைய அரசியல் தளத்தில் ஆதிக்கம் செலுத்திய புலிகளின் ஒற்றைப் பரிமாண அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இது பன்மைத்துவ அரசியலுக்கு வித்திட்ட போதிலும் மூன்று சகாப்தங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருந்த புலிகள் மே 18ல் ஒரு சில மணிநேரத்திலேயே முடிவுக்கு கொண்டு வரப்பட்டது சர்வதேசத்திற்குமே அதிர்ச்சியாக அமைந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்கு வலிந்து நிறுவிய ஏகதலைமைத்துவமும் இத்தலைமைத்துவத்தின் துதிபாடிகளும் தமிழ் மக்கள் மத்தியில் காத்திரமான அரசியல் உரையாடலைத் தொடர்ச்சியாக நிராகரித்து வந்தன. காத்திரமான அரசியல் தலைமைகள் உருவாகிவிடக் கூடாது என்பதிலும் இவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தனர். இதன் விளைவு தற்போது தமிழ் மக்களுடைய அரசியலை முன்னெடுப்பதற்கான அரசியல் தலைமைத்துவம் வெற்றிடமாக்கப்பட்டு உள்ளது. இவ்வெற்றிடத்தை நிரப்புவதற்கான மரதன் ஓட்டங்களில் பல்வேறு அரசியல் சக்திகளும் ஈடுபட்டு உள்ளன. இவை பெரும்பாலும் இலங்கை அரசு வரைந்துள்ள எல்லைக் கோட்டுக்கு உள்ளேயே தங்கள் ஓட்டங்களை ஓடக் கூடியனவாக உள்ளன.
மே 18ல் இலங்கை அரச படைகள் வெற்றி கொண்டது தமிழீழ விடுதலைப் புலிகளையே அன்றி தமிழ் மக்களையல்ல. தமிழீழ விடுதலைப் புலிகளோ அதன் காலம்சென்ற தலைவர் வே பிரபாகரனோ தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் எப்போதும் பிரதிநிதித்துவப்படுத்தியதில்லை. தங்கள் இருப்பை உறுதிப்படுத்துவதற்கு தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை பயன்படுத்திக் கொண்டனர். தங்கள் இருப்புக்கு தமிழ் மக்களை பணயம் வைக்க வேண்டும் என்ற நிலை வந்தபோது அவர்கள் அதற்கும் தயங்கவில்லை. எல்லாவற்றினதும் உச்சகட்டமாக ஒட்டு மொத்த வன்னி மக்களையும் இலங்கை அரசபடைகளின் போர் இயந்திரங்களுக்கு முன் நிறுத்தி அம்மக்கள் பல்லாயிரக் கணக்கில் கொல்லப்படுவதற்கும் பல்லாயிரக் கணக்கானோர் ஊனமாவதற்கும் இரண்டு லட்சத்து எண்பதிணாயிரம் மக்கள் முகாம்களில் அடைக்கப்படுவதற்கும் வழிவகுத்து உள்ளனர்.
இதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏகதலைமை மட்டுமல்ல அதற்கு துதிபாடிய பிரித்தானிய தமிழர் பேரவை, அமெரிக்காவில் இயங்கும் பேர்ள் அமைப்பு, பிரான்ஸில் உள்ள புலிகளின் மனித உரிமை அமைப்பு, கனடாவில் உள்ள உலகத் தமிழர் இயக்கம் இப்படி புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள பல்வேறு அமைப்புகளும் ஐபிசி, ஒரு பேப்பர், ஈழமுரசு, ஜிரிவி, தீபம் போன்ற ஊடகங்களும் அவற்றில் அரசியல் அவியல் படையல் செய்தவர்களும் பொறுப்பானவர்கள்.
அரசியல் தந்திரோபாயம் என்ற பெயரில் அல்லது மக்களை விடுவிக்கும்படி புலிகளைக் கோருவது தத்துவார்த்த ரீதியில் பொருத்தமற்றது அது இலங்கை அரசுக்கே உதவும் என்று மௌனமாக சில அரசியல் ஆர்வலர்கள் அமைப்புகள் இருந்துள்ளன. குறிப்பாக கனடாவில் உள்ள தேடகம் போன்ற தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இனம்காணப்படாத அமைப்புகளின் அரசியல் பலவீனமும் குறிப்பிடத்தக்கது. அதே போன்று புலி எதிர்ப்பு என்ற ஒரே காரணத்திற்காக வன்னியில் நிகழ்ந்த அவலத்தில் இலங்கை அரசின் பாத்திரம் பற்றி புலம்பெயர்ந்த நாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவில் உள்ள பல குழுக்கள் மௌனம் சாதித்தன. இவர்களது மௌனமும் ஆபத்தானதே.
தற்போது தமிழ் சூழலில் அரசியல் மரதன் ஓடுபவர்களுக்கு குறைவில்லை. புலிகளின் புதிய தலைவர் கே பி ஓரடி வைக்கு முன்னரேயே கவிழ்ந்துவிட்டார். தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி, அவரோடு கூட்டுச் சேர்ந்த ஈபிஆர்எல்எப் தலைவர் சுகு, புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் முதல் சுற்றிலேயே தடக்கி வீழ்ந்துவிட்டனர். இவர்கள் மீண்டும் தங்களைச் சுதாகரித்துக் கொண்டு ஓடுவார்களா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அரசியலில் ‘பழம் தின்று கொட்டை போட்டவர்கள்’இன் நிலையே இப்படி இருக்க சிறிரெலோ, ஈரோஸ் என்று தத்தித் தத்தி மரதன் ஓடத் தொடங்கியவர்கள் பற்றி என்ன சொல்ல. கிழக்கு முதலமைச்சர் சந்திரகாந்தன், அமைச்சர் கருணா, அமைச்சர் டக்ளஸ் இவர்களும் தமிழ் மக்களுக்காகவே ஓடுவதாகக் கூறினாலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்காக ஓடுகிறார்களா என்ற சந்தேகம் வலுவாகவே உள்ளது. இவர்களைவிடவும் இத்தலைவர்களுக்கப் பின்னால் பெரும் கூட்டம் ஒன்று புலம்பெயர்நாடுகளிலும் ஓடுகின்றனர். அதைவிட புலிகளின் தலைமையைப் பிடிப்பதற்கு புலிகளுக்குள்ளும் சில இடையோட்டங்கள் நடக்கின்றது.
இவ்வாறான பல்வேறு ஓட்டங்களுக்கு இடையே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கையிலெடுத்து ஓடுவதற்கான அவசியமும் அவசரமும் தற்போது ஏற்பட்டு உள்ளது. தனித்து சுயநலன்களுடன் ஓடும் மரதனோட்டக்காரர்களை பின்னடித்து இவர்கள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முன்னெடுத்துச் செல்லவேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழ் சமூகமும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கையிலெடுத்து ஓடுபவர்களை அடையாளம் கண்டு அவர்களை பலப்படுத்துவதே இன்றைய தேவையாக உள்ளது.