2009

2009

“குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டுமானால் அவற்றை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும்’

உள்ளூராட்சி மன்றங்களினால் பல செயற்திட்டங்கள் நடைபெறுகின்றது. ஆனால், குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டுமானால் அவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டிய பாரிய பொறுப்பு ஊடகவியலாளர்களுக்கே இருக்கின்றது என்று அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.ஏ.எம்.இர்ஷாத் தெரிவித்தார்.

ஆசிய நிலையமும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையமும் இணைந்து மாகாண உள்ளூராட்சி சபைகளின் மக்கள் பிரதிநிதிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு “உள்ளூராட்சியில் ஊடகங்களின் வகிபங்கு’ எனும் தலைப்பிலான செயலமர்வு அம்பாறை மொன்டி ஹோட்டலில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலைய நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் லயனல் குருகே தலைமையில் நடைபெற்றது.

இதில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.ஏ.எம்.இர்ஷாத் தொடர்ந்து பேசுகையில்; உள்ளூராட்சி மன்றங்கள் மக்களின் தேவைகளை இனங்கண்டு பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். அச் செயற்பாடுகள் ஏனைய பிரதேச மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும்.

இன்று இந்த மாவட்டத்தில் மட்டுமல்ல, நாட்டிலுள்ள மக்களுக்கு இருக்கின்ற பாரியதும் முக்கியமானதுமான பிரச்சினை குப்பை அகற்றல். அந்தப் பணியை திண்மக்கழிவு முகாமைத்துவம் எனும் திட்டத்தினூடாக முன்னெடுக்கப்படுகின்றது.

அதேபோன்று அம்பாறை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய மகாஓயா,தெய்யத்தைகண்டி பிரதேசத்தில் 30 கிராமங்களுக்கு மிகவும் சிறந்த நீர்விநியோகத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால், இந்த செயற்திட்டங்கள் இந்த மாவட்ட மக்களுக்கே தெரியாத நிலையுள்ளது. எனவே, இச் செயற்திட்டங்களை மக்களின் முன் வெளிக்கொண்டு வரப்பட வேண்டுமானால் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு அவசியமாகும்.

உள்ளூராட்சி மன்றங்களின் சகல செயற்பாடுகளும் மக்களுக்கு தெளிவுபடுத்தப்படுகின்றது. ஆனால், அது கிராமிய மட்ட மக்களுக்கோ ஏனைய பிரதேச மக்களுக்கோ தெளிவுபடுத்தப்படுவதில்லை. இந்த மன்றங்கள் பலதரப்பட்ட செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது. ஆனால், குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டுமாயின் அவைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டிய பாரிய பொறுப்பு ஊடகவியலாளர்களுக்கே இருக்கின்றது.

அந்த வகையில் இந்த மாவட்டத்தில் நூலகங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றது. நாங்கள் நூலகங்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு பல முயற்சி செய்தும் அது பயனளிக்கவில்லை.

இன்று எமது நாட்டை மட்டுமல்ல, சர்வதேச ரீதியாகப் பார்த்தால் தொழில்நுட்ப அறிவும் தொடர்பாடல் நிலை மிகவும் விசாலமான முறையில் பரந்துபட்டுள்ளது. ஆனால், கிராமிய மட்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. எனவே, கிராமிய மட்டத்திலுள்ள மக்களுக்குத் தொடர்பாடலை ஏற்படுத்துவதற்கும் செய்திகளைப் பரிமாற்றம் செய்வதற்கும் ஊடகவியலாளர்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இடம்பெயர் முஸ்லிம் மக்கள் மீளக் குடியமர்த்தப்படவில்லை – ரவூப் ஹக்கீம்

akime-2.jpgஇடம் பெயர் முஸ்லிம் மக்கள் மீளக் குடியமர்த்தப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“குறிப்பாக மன்னார் முசொலிப் பிரதேசத்தில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் நிறைவடைந்துள்ள போதிலும், முஸ்லிம்கள் தமது சொந்த கிராமங்களில் மீளக் குடியமர்த்தப்படவில்லை. யுத்த காலத்தில் வடக்கு பகுதி முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். அவர்களைத் தற்போது மீளக் குடியமர்த்த முடியும்.

ஆனால், என்ன காரணத்திற்காக முஸ்லிம் மக்களை மீளக் குடியமர்த்தும் நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றன என்பது புதிராகவே உள்ளது.

பெருந் தொகையான முஸ்லிம்கள் தங்களது சொந்த இடங்களுக்குச் செல்ல ஆர்வத்துடன் உள்ளனர். அவர்களை விரைவில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என்றார். 

தேசிய அடையாள அட்டையில் தவறுகள் இருப்பின் அதனைத் திருத்துவது அவசியம்

ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் தேசிய அடையாள அட்டையில் தவறுகள் இருப்பின் அதனைத் திருத்த வேண்டியது அவசியமெனவும் அடையாள அட்டை வழங்கப்பட்ட திகதியிலிருந்து இரு மாதத்திற்குள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் திருத்தங்கள் செய்ய முடியுமெனவும் ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஏ.ஜி.தர்மதாச தெரிவித்துள்ளார். தேசிய அடையாள அட்டை பற்றி விளக்கமளிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

ஒரு நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான அடிப்படை ஆவணமாக எமது நாட்டில் தேசிய அடையாள அட்டை குறிப்பிடப்படுகிறது. தேசிய அடையாள அட்டையிலுள்ள தகவல்கள் சரியானவையா என்பதை ஒவ்வொருவரும் அறிந்திருத்தல் அவசியமானதெனக் கருதப்படுகிறது.

இந்த அடையாள அட்டையில் உள்ள அடையாள அட்டை இலக்கம், வழங்கப்பட்ட திகதி, வைத்திருப்பவரின் பெயர், பிறந்த திகதி, பிறந்த இடம், முகவரி ஆகிய தகவல்கள் சரியானவையா எனப் பகுப்பாய்வு செய்துகொள்ள முடியும்.

அடையாள அட்டை வைத்திருப்பவரின் பிறந்த திகதியை அடிப்படையாகக் கொண்டே அவருடைய அடையாள அட்டை இலக்கமானது உருவாக்கப்படுகின்றது. இவ் இலக்கமானது புகைப்படத்திற்கு மேலே இட்டுக்காட்டப்பட்டிருக்கும் அடையாள அட்டை இலக்கத்தில் முதல் இரண்டு இலக்கமும் பிறந்த ஆண்டைக் குறிப்பிடுவதுடன், அடுத்து வரும் மூன்று இலக்கமும் பிறந்த மாதத்தினையும் திகதியையும் குறிப்பிடுகிறது. ஆண்களுக்கு வழங்கப்படும் இலக்கமானது 001 இல் இருந்து 366 வரையான 03 இலக்கத்தைக் கொண்டிருக்கும். அதேவேளை, பெண்களுக்கு வழங்கப்படும் இலக்கமானது 501 இல் இருந்து 866 வரையான இலக்கத்திற்கு உட்பட்டதாக இருக்கும். உதாரணமாக ஒருநபர் 06.06.1988 இல் பிறந்த ஆணாக இருப்பின் அவருடைய அடையாள அட்டையில் முதல் 05 இலக்கமும் 88/58 என இருக்கும். அதேவேளை, அந்நபர் பெண்ணாக இருப்பின் அடையாள அட்டை இலக்கமானது 88658 என இருக்கும். இறுதி நான்கு இலக்கங்களும் திணைக்களத்தினால் வழங்கப்படுவதாகும்.

அடையாள அட்டை வழங்கப்பட்ட திகதியானது புகைப்படத்துக்குக் கீழே இடதுபக்க மூலையில் குறித்துக்காட்டப்பட்டிருக்கும். அடையாள அட்டையின் மறுபக்கத்தில் பிறப்புச் சான்றிதழில் குறிப்பிட்டதன் பிரகாரம் அடையாள அட்டைக்குரியவரின் பெயர், பிறந்த திகதி மற்றும் பிறந்த இடம் என்பன சுட்டிக்காட்டப்பட்டிருகும். அடையாள அட்டை வைத்திருப்பவரின் முகவரியானது அதைப் பெற்றுக்கொண்ட தினத்திலுள்ள வசிப்பிடமாக கணிக்கப்படும்.

மேலும், குறிப்பிட்ட நபருடைய நிழல் படத்தில் இடதுகாது மட்டும் தெளிவாகத் தெரியக்கூடியவாறு இருக்கும். இத் தகவல்களுடன் உங்களுடைய அடையாள அட்டை பொருந்தாதுவிடின் அவை திருத்தம் செய்யப்பட வேண்டும். அடையாள அட்டையில் இலக்கம், பெயர் என்பன சரியான முறையில் குறிக்கப்பட்டிருக்காவிடினும் அவை திருத்தம் செய்யப்பட வேண்டியது அத்தியாவசியமானது. ஏதாவது பிழைகள் இருப்பின் எமது திணைக்களத்தால் அடையாள அட்டை வழங்கப்பட்ட திகதியிலிருந்து இரு மாதத்திற்குள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் திருத்தங்கள் செய்யப்பட முடியும். இதற்கென வேறு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டியதில்லை.

அடையாள அட்டை வழங்கப்பட்ட திகதியிலிருந்து இரு மாதங்களின் பின்னர் ஏதாவது திருத்தம் செய்யப்பட வேண்டுமாயின், புதிய விண்ணப்பப்படிவமானது கிராமசேவகரினூடாகவோ அல்லது தோட்ட மேற்பார்வையாளரினூடாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டியது அவசியமானது. அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டவுடன் அவற்றைச் சரிபார்த்துக் கொள்வதானது அவற்றில் ஏதாவது பிழைகள் இருப்பின் அவற்றினைத் திருத்திக் கொள்வதனை இலகுபடுத்தும்.

முரளிதரன் தனது 100 ஆவது விக்கெட்டை கைப்பற்றினார்

murali.jpgநியூசி லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் காலி மைதானத்தில் நடைபெறுவரும் டெஸ்ட் போட்டியில் முத்தையா முரளிதரன் காலி டெஸ்ட் மைதானத்தில் 100 விக்கெட்டுக்களைப் பெற்று மற்றுமொரு சாதனையையும் நிலைநாட்டியுள்ளார்.

கே.பியின் உதவியாளர் கைது? : சிங்கள ஊடகம் தகவல்

pathmanathan.jpgபுலிகளின் முக்கியஸ்தரான கே.பியின் உதவியாளரான ஆனந்தன் என்பவர் பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது பாதுகாப்புக் காரணங்களை முன் னிட்டு ஆனந்தன் கைது செய்யப்பட்ட நாட்டின் பெயரை வெளியிட முடியாதென அதிகாரிகள் தெரிவித்தனர்.

கே.பியிடமும் ஆனந்தனிடமும் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை பற்றியும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்தபோது புலிகளுக்கு முகவர்களாகச் செயற்பட்ட சார்ள்ஸ் ஞானக்கோன், ஜயந்த ஞானக்கோன் ஆகிய இரு சகோதரர்கள் பற்றியும் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. தற்சமயம் சார்ள்ஸ் ஞானக்கோன் ஆஸ்திரேலியாவிலும், ஜயந்த ஞானக்கோன் கலிபோர்னியாவிலும் இருக்கின்றனர் என்று தெரிகிறது. இப்படி அந்த சிங்கள நாளிதழ் தனது செய்தியில் மேலும் தெரிவித்திருந்தது

தென் மாகாண சபை தேர்தல் – வேட்பு மனுத் தாக்கல் இன்று முதல் 28 வரை

election000.jpgதென் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று முதல் 28 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை ஏற்றுகொள்ளப்பட உள்ளன. தென் மாகாண சபைத் தேர்தலில் 53 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். காலி மாவட்டத்தில் இருந்து 23 பேரும் மாத்தறை மாவட்டத்தில் இருந்து 18 பேரும் அம்பாந்தோட்டையில் இருந்து 12 பேருமாகத் தெரிவு செய்யப்பட  உள்ளனர்.

2008ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் பிரகாரமே இம்முறை தென் மாகாண சபைத் தேர்தல நடத்தப்பட உள்ளதாகவும் தேர்தல் திணைக்களம் கூறியது.

சட்டசபை இடைத் தேர்தல் : தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி

karunanidhi-333.jpgசட்டசபை இடைத் தேர்தலில் ஐந்து தொகுதிகளிலும் அமோகமாக வென்றுள்ளதன் மூலம் திமுக கூட்டணியின் எம்.எல்.ஏக்கள் பலம் 136 ஆக அதிகரித்துள்ளது. திமுகவின் பலம் 99 ஆக உயர்ந்துள்ளது.

இடைத்தேர்தலுக்கு முன் சட்டசபையில் திமுகவுக்கு 96 உறுப்பினர்கள் இருந்தனர். கம்பம், பர்கூர், இளையான்குடி தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் திமுகவின் பலம் 99 ஆக உயர்ந்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு 34 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூரில் வென்றதன் மூலம் காங்கிரஸ் பலம் 36 ஆக அதிகரித்துள்ளது.

61 எம்எல்ஏக்களைக் கொண்டிருந்த அதிமுகவின் பலம் 58 ஆகக் குறைந்துள்ளது. மதிமுகவின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை இரண்டு குறைந்து 3 ஆகிவிட்டது.

திமுக கூட்டணியின் பலம் 131 என்பதிலிருந்து 136 ஆக உயர்ந்துள்ளது.

புலிகள் பணம்?-கருத்து தெரிவிக்க ரஜினி மறுப்பு

rajanikanth.jpgசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் படங்களுக்கு விடுதலைப் புலிகள் பணம் கொடுத்ததாக இலங்கை அமைச்சர் கூறுவது சுத்த அபத்தமானது. அப்படிப்பட்ட நிலையில் ரஜினிகாந்த்தும் இல்லை, தமிழ் சினிமாவும் இல்லை என்று தமிழ்த் திரையுலக முக்கியஸ்தர்கள் ஒரே குரலில் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் அமைச்சர் அப்துல் ரிஷாத் பதியுதீன் அளித்த ஒரு பேட்டியில், ரஜினிகாந்த் நடித்த படங்களுக்கு லண்டனைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் ஒருவர் மூலம் புலிகள் நிதியுதவி செய்தனர். அந்த லண்டன் தமிழர் தமிழ் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். அவர் புலிகள் கொடுக்கும் பணத்தை வைத்துத்தான் படத் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தார் என்று கூறியிருந்தார்.

ஆனால் இதை திரையுலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. பதியுதீனின் பேச்சை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ரஜினி படத்தை தயாரிக்க விடுதலைப் புலிகள்  பணத்தைப் பெற வேண்டிய அவசியம் இங்கு யாருக்கும் இல்லை. இப்படிப்பட்ட வழியில் படத்தில் நடித்துக் கொடுக்க வேண்டிய நிலையில் ரஜினியும் இல்லை.

அவரை வைத்துப் படம் எடுக்க எத்தனையோ தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது ரஜினி விடுதலைப் புலிகளின் பணத்தைப் பெற்றார் என்று கூறுவது அபத்தமானது, மலிவான விளம்பரமே தவிர வேறு ஒன்றும் இல்லை என்றார்.

இயக்குநர் அமீர் கூறுகையில், விடுதலைப் புலிகளின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தி்ல இவ்வாறு பேசியுள்ளார் இலங்கை அமைச்சர். எந்தவித ஆதாரமும் இல்லாமல் பேசியுள்ளார். விடுதலைப் புலிகளை மோசமான முறையில் சித்தரிக்கும் செயல் இது.

முன்பு பங்குச் சந்தை மோசடிப் பேர்வழியான ஹர்ஷத் மேத்தா, முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு லஞ்சம் கொடுத்தேன என்று கூறியதைப் போல உள்ளது இலங்கை அமைச்சரின் பேச்சு. இப்படிக் கூறுவதன் மூலம் மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள் என்றார்.

கருத்து தெரிவிக்க ரஜினி மறுப்பு…

இதற்கிடையே, இலங்கை  அமைச்சரின் பேச்சுக்கு பதிலோ, விளக்கமோ அளிப்பதில்லை என்று ரஜினிகாந்த் முடிவெடுத்துள்ளார். இதை அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

உலகத் தமிழர் பிரகடனம் – ஈழ விடுதலைப் போராட்டம் மீண்டும் முன்னெடுக்கப் படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும் முழுமையாக உதவுவோம்

tamil-nadu.jpgஈழ விடுதலைப் போராட்டம் மீண்டும் முன்னெடுக்கப் படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும் அவர்கள் விரும்பும் அரசியல் தீர்வு உருவாவதற்கு முழுமையாக உதவுவோம் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வெளியிட்ட ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் பிரகடனம் கூறுகிறது.
 
சென்னை அமைந்தகரை புல்லாரெட்டி நிழற்சாலையில், நடந்த மாநாட்டில், உலகத் தமிழர் பிரகடனத்தை மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலர் வைகோ படித்து வெளியிட்டார்.

உலகத் தமிழர் பிரகடனம் வருமாறு

1.  ஈழத் தமிழ் மக்களின் மரபு வழி தாயகத்தில் அவர்களுக்கு முழுமையான மனித, ஜனநாயக உரிமைகள் வழங்கிடவும், அதற்கேற்ற அரசியல் அமைப்பிற்கு உத்தரவாதம் தரக்கூடிய அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காக உலக மக்களின், அரசுகளின் ஆதரவைத் திரட்டிடவும், ஈழத் தமிழ் மக்கள் ஒப்புக்கொள்ளக் கூடியத் தீர்வு ஒன்றை அவர்களின் பிரச்சனையைத் தீர்க்கும் ஒரே வழி என்பதிலும் நாங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

2.  தங்கள் தாயகத்திலும், உலக நாடுகளிலும் புலம் பெயர்ந்திருக்கக்கூடிய ஈழத் தமிழர்கள் அனைவரும் அவரவர்களின் ஊர்களிலும், வீடுகளிலும் மீண்டும் குடியேறவும், அமைதியான, இயல்பான, சுதந்திரமான வாழ்க்கையை நடத்தவும் துணை நிற்க நாங்கள் உறுதி பூணு‌கிறோ‌ம்.

3.  தமிழர் தாயக மண்ணில் அத்துமீறி உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களையும், சிங்கள இராணுவ முகாம்களையும் மற்றும் இராணுவ ரீதியான அமைப்புகளையும் வெளியேற்ற வேண்டும் என ஐ.நா.வை வற்புறுத்த நாங்கள் உறுதி பூணுகிறோம்.

4.  இலங்கையில் மனித நேய உணர்வை மீறித் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளையும், கொலைகளையும் செய்த சிங்கள இராணுவ அதிகாரிகளும், அவர்களை ஏவிவிட்ட சிங்கள அரசியல் வாதிகளும் சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவதற்கு உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள நாங்கள் உறுதி பூணுகிறோம்.

5.  உலகில் உள்ள மற்ற தேசிய இன மக்களைப் போல முழுமையான, இறைமை உள்ள மக்களாக வாழும் உரிமையில் தங்களின் எதிர்காலத்தை தாங்களே முடிவு செய்துகொள்ளும் உரிமையும் ஈழத் தமிழர்களுக்கு இயற்கையாக உண்டு என்பதையும் அந்த வாழ்வுரிமையை அவர்கள் நிலைநிறுத்திக்கொள்ள அவர்களுக்கு தோள் கொடுத்து துணை நிற்க உலகத் தமிழர்களாகிய நாங்கள் உறுதி பூணுகிறோம்.

6.  அளப்ப‌ரிய தியாங்களைச் செய்த ஈழத் தமிழ் மக்களும், அவர்களுக்காக இறுதிவரை போராடிய போராளிகளும், வீறுகொண்டு நடத்திய விடுதலைப் போராட்டம் பல நாடுகளின் கூட்டுச் சதியின் விளைவாக பின்னடைவைச் சந்திக்க நேர்ந்திருப்பது தற்காலிகமானது. மீண்டும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும் அந்த மக்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வு உருவாவதற்கும் நாங்கள் முழுமையாக உதவுவோம். அதற்காக எங்களை முற்றிலுமாக ஒப்படைத்துக்கொண்டு எத்தகைய தியாகத்திற்கும் தயாராக இருப்போம் என உலகளாவிய தமிழர்களாகிய நாங்கள் உறுதி பூணுகிறோம்.

பிரகடனம் படித்து முடிக்கப்பட்ட பிறகு ஈழத் தமிழர்களுக்கு உதவ சர்வபறி தியாகத்திற்கும் தயார் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.

ஏராளமான கருஞ்சட்டை தரித்த இளைஞர்கள் தீப்பந்தம் ஏந்தி அந்த உறுதிமொழியை ஏற்றனர். அவர்கள் அனைவருடைய சட்டையிலும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் படம் அச்சிடப்பட்டிருந்தது. பின்புறத்தில் தமிழீழத்தின் வரைபடம் அச்சிடப்பட்டிருந்தது.

இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க, புலம்பெயர் தமிழர்கள் ஒன்று திரண்டு, தமிழீழம் மலரச் செய்வார்கள்: வைகோ

முன்பு யூதர்கள் கொல்லப்பட்டபோது உலகெங்கும் உள்ள யூதர்கள் ஒன்று திரண்டு போராடி வென்றனர். அதைப்போலவே இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஒன்று திரண்டு, தமிழ் ஈழத்தை மலரச் செய்வார்கள்.இவ்வாறு நேற்று சென்னையில் நடைபெற்ற ஈழத் தமிழர் பிரகடனம் வெளியிடும் பொதுக்கூட்டத்தில் வைகோ பேசினார். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான பிரகடனம் வெளியிடும் பொதுக்கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அக்கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது: 

விடுதலைப் புலிகளை ஒழித்து விட்டோம் என இலங்கை அரசு கூறுகிறது. ஆனால் அதன் பிறகும் 3 லட்சம் தமிழர்களை முள்வேலி முகாம்களில் அடைத்து வைத்து வதைப்பது ஏன்?  முகாம்களில் உள்ள தமிழ் இளைஞர்கள் கடத்தப்படுகிறார்கள். 15 வயதைக் கடந்த தமிழ் ஆண்கள் உயிரோடு இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்ப் பெண்களின் கற்பு சூறையாடப்படுகிறது.

இந்த அவலங்களை காண மனித உரிமை ஆர்வலர்களால் அங்கு செல்ல முடியவில்லை.  ஆனால் முதல்வர் கருணாநிதி இலங்கையில் சுமுகத் தீர்வு ஏற்பட்டுவிட்டதாக கூறுகிறார். இப்போது அங்கு சுமுக நிலை நிலவுகிறதா என்பதை அவர் தனது மனசாட்சிப்படி கூறட்டும். 

1985-ம் ஆண்டு டெசோ மாநாட்டில் பேசிய கருணாநிதி, தமிழ் ஈழம்தான் இறுதித் தீர்வு; தமிழ் ஈழத்தை ஆதரிப்பதற்காக எந்த அடக்குமுறையை ஏவிவிட்டாலும் தாங்கிக் கொள்ளத் தயார் என்றார். அன்று கருணாநிதி கூறியதைத்தான் இன்று நாங்கள் கூறுகிறோம். ஆனால் எங்கள் மீது அவர் அடக்குமுறையை ஏவுகிறார் என்றார் ராமதாஸ்.                                                                                                

கூட்டத்துக்கு தலைமை வகித்த, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் பேசியதாவது: 

தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசுவது குற்றமாகாது; அந்த இயக்கத்துக்கு ஆயுத உதவி உள்ளிட்ட உதவிகளை செய்தால் மட்டுமே குற்றம் என உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. அத்தீர்ப்பின் படியே, பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த நாங்கள் விடுதலை செய்யப்பட்டோம். 

எனவே விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசுவதில் தவறில்லை. அவ்வாறு பேசக் கூடாது என தமிழக அரசு கூறுவது அடக்குமுறை நடவடிக்கை ஆகும் என்றார். 

கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் த. ஸ்டாலின் குணசேகரன், புதிய பார்வை ஆசிரியர் எம். நடராஜன், மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் நிர்வாகி ஹென்றி திபேன் உள்ளிட்டோர் பேசினர்.  கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, இலங்கைத் தமிழ் எம்.பி. சிவாஜி லிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விதிமுறைகளை மீறி பொதுக்கூட்டம் நடத்தியதாக பழ.நெடுமாறன் மீது வழக்கு

தமிழக அரசின் உத்தரவுகளை மீறி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று சென்னையில் பொதுக்கூட்டம் நடத்தியமைக்காக இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அமைந்தகரை புல்லா ரெட்டி அவென்யூவில் நேற்று 20ஆம் தேதி வியாழக்கிழமை பொதுக்கூட்டம் நடந்தது. இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் விதிமுறைகளை மீறி பொதுக்கூட்டம் நடத்தியதாக பழ.நெடுமாறன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பொதுக்கூட்டத்தில் அரசு உத்தரவுகளை மீறி அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கும் மேலாக கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட இயக்கத்தலைவர் பிரபாகரன் படம் பொதுக்கூட்டம் மேடையில் வைக்கப்பட்டிருந்தது. இது போன்ற காரணங்களுக்காக 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என  கூறப்படுகிறது.

பிரதமரிடம் கேட்ட கேள்வியை மீண்டும் கேட்டதால் சபையில் சர்ச்சை – 30 நிமிட நேரம் இருதரப்பும் வாத பிரதி வாதம்

26parliament.jpgபிரதமரால் ஏற்கனவே சபையில் பதில் அளிக்கப்பட்ட விடயம் தொடர்பில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா நேற்று (20) மீண்டும் கேள்வி எழுப்ப முற்பட்டதால் ஆளுந்தரப்பு எதிர்த் தரப்பு உறுப்பினர்களுக்கிடையில் சுமார் 30 நிமிட நேரம் சர்ச்சை நிலவியது.

எதிர்க் கட்சியின் பிரதம கொறடாவான ஜோசப் மைக்கல் பெரேரா சமர்ப்பித்திருந்த ஒரு கேள்வி ஏற்கனவே பிரதமரால் பதில் அளிக்கப்பட்டது எனவும். அதேநேரம் அந்தக் கேள்வி இரண்டு பக்கங்களுக்கு மேற்பட்டிருந்ததுடன் ஜோசப் மைக்கல் பெரேராவின் கையொப்பத்தைக் கொண்டதாக இருக்கவில்லை என்றும் கூறி அதனை மீண்டும் எழுப்புவதற்கு சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை.

கடந்த செவ்வாய்க்கிழமை (18) எழுப்பிய கேள்வியை மீண்டும் கேட்பதற்கு அனுமதிக்க முடியாதென ஆளுந்தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும் மறுத்துவிட்டார். ஜோசப் மைக்கல் பெரேரா, கட்சித் தலைவரின் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதாகவும் அமைச்சர் குணவர்த்தன குற்றஞ்சாட்டினார்.

‘கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடிக்கடி சபைக்கு வருகை தராததால் அவர் சார்பில் கேள்வி எழுப்ப உங்களை நியமிப்பதாகக் கூறியதால் நாம் ஏற்றுக்கொண்டோம். ஆனால் நீங்கள் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி தினமும் சபையில் கேள்வி கேட்டு நாடகம் ஆடுகிர்கள்.

நாட்டைத் தவறாக வழிநடத்தி குழப்பப் பார்க்கிர்கள். இப்படித் தொடர்ந்தால் கட்சித் தலைவர் மாத்திரம் கேள்வி கேட்கலாம் என்ற விதியை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டிய நிலைக்குத் நாம் தள்ளப்படலாம் என்றார் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன.

எனினும் இதனை மறுத்த ஜோசப் மைக்கல் பெரேரா இல்லை நான் எழுப்பிய கேள்விக்குப் பிரதமர் முழுமையான பதிலை அளிக்கவில்லை என்றார்.

அப்படியாயின் ஏன் நேருக்கு நேர் பிரதமரிடம் மறுத்துக் கேட்கவில்லை? என்று திருப்பிக் கேட்டார் சபாநாயகர்.

விவாதம் நடத்தக்கூடாது என்று கட்டுப்பாடு உள்ளதே.

சரி மீண்டும் எஎனக்கு எழுத்து மூலம் தாருங்கள். நான் அனுமதி தருகிறேன்.’

என்ற சபாநாயகர் டபிள்யூ ஜே. எம். லொக்குபண்டார, 17வது திருத்தச் சட்டத்தைத் தவிர்த்து வேறு விடயங்கள் குறித்தும் கேள்வி கேளுங்கள். அதற்குப் பிரதமர் அன்றே பதில் அளித்துவிட்டார். அன்று (18) எழுப்பிய கேள்விகளை மீண்டும் கேட்காதீர்கள் என்று அறிவுறுத்தினார். கேள்வி கேட்கப்படாமல் இந்தச் சர்ச்சையே சுமார் 30 நிமிடம் நீடித்தது.

மாலபே மாணவன் கடத்தப்பட்டுத் தாக்கப்பட்டமை, அங்குலானவில் இரு இளைஞர்கள் கொலையுண்டமை இவற்றுக்கு காரணம் 17வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தாமை என்ற கருத்துப்பட கடந்த செவ்வாய்க்கிழமை எழுப்பிய கேள்விகளையே ஜோசப் மைக்கல் பெரேரா மீண்டும் கேட்கவிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.