இடம் பெயர் முஸ்லிம் மக்கள் மீளக் குடியமர்த்தப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“குறிப்பாக மன்னார் முசொலிப் பிரதேசத்தில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் நிறைவடைந்துள்ள போதிலும், முஸ்லிம்கள் தமது சொந்த கிராமங்களில் மீளக் குடியமர்த்தப்படவில்லை. யுத்த காலத்தில் வடக்கு பகுதி முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். அவர்களைத் தற்போது மீளக் குடியமர்த்த முடியும்.
ஆனால், என்ன காரணத்திற்காக முஸ்லிம் மக்களை மீளக் குடியமர்த்தும் நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றன என்பது புதிராகவே உள்ளது.
பெருந் தொகையான முஸ்லிம்கள் தங்களது சொந்த இடங்களுக்குச் செல்ல ஆர்வத்துடன் உள்ளனர். அவர்களை விரைவில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என்றார்.