2009

2009

அநகாரிக தர்மபாலவின் சிலைக்கு அலரிமாளிகையில் ஜனாதிபதி மலரஞ்சலி

ஸ்ரீமத் அநகாரிக தர்மபாலவின் 145 வது ஜனன தினத்தையொட்டி நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரிமாளிகையில் விசேட வைபவமொன்று நடைபெற்றது. இவ் வைபவத்தின் போது விசேட ரத பவனியாக எடுத்துவரப்பட்ட அநகாரிக தர்மபாலவின் உருவச் சிலைக்கு ஜனாதிபதி மலரஞ்சலி செலுத்தி கெளரவமளித்தார்.

ஸ்ரீமத் அநகாரிக தர்மபாலவின் ஜனன தினத்தையொட்டி நேற்று நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. “தம்பல் ஹண்ட” எனும் அமைப்பு இதனை ஒழுங்கு செய்திருந்ததுடன் அதன் சம காலத்தில் அலரிமாளிகை நிகழ்வு இடம் பெற்றது. மேற்படி அமைப்பின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் அமரர் அநகாரிக தர்மபாலவின் வாழ்க்கை வரலாறுகளை உள்ளடக்கிய நூல் ஒன்றை நேற்று ஜனாதிபதியிடம் கையளித்தார்.

இதேவேளை, கொழும்பு விக்டோரியா பூங்காவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அநகாரிக தர்மபாலவின் உருவச் சிலைக்கருகிலிருந்து கொழும்பு ஆனந்தாக் கல்லூரி வரை பாடசாலை மாணவர்களின் பாத யாத்திரையொன்றும் இடம் பெற்றது. அலரி மாளிகையில் நேற்று இடம் பெற்ற நிகழ்வில் அமைச்சர் திஸ்ஸ கரலியத்த, மாதுலுவாவே சோபித தேரர் உட்பட பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மத்திய பொறியியலாளர் பிரிவை ஈடுபடுத்த அனுமதி!

viswa-999.jpgசப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கட்டட நிர்மானப் பணிகளில் மத்திய பொறியியலாளர் பிரிவை ஈடுபடுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இதற்கான பிரேரணையை உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் விஷ்வ வர்ணபால முன்வைத்திருந்தார். இதன்படி 240 மாணவர்களுக்கு 175.68 மில்லியன் ரூபா செலவில் விடுதி அமைக்கப்படும். மேலும் 296 மில்லியன் ரூபா செலவில் பிரயோக விஞ்ஞான பீடத்துக்கான கட்டடம் அமைக்கப்படும். 121 மில்லியன் ரூபா செலவில் விளையாட்டு மைதானம் ஒன்றும் அமைக்கப்படும்.

பஸ் கட்டண உயர்வு திருப்தியற்றதென தெரிவிப்பு

bus-2222.jpgதேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ள புதிய பஸ் கட்டண உயர்வை ஏற்க முடியாது எனவும் அது தொடர்பில் தாம் திருப்தி அடையவில்லை எனவும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆரம்ப கட்டணத்தையும் 9 ரூபா கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். ஆரம்ப கட்டணங்களை அதிகரிக்குமாறு போக்குவரத்து அமைச்சை கோரிய போதும் தமது கோரிக்கையை அமைச்சு நிராகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இருந்த போதும் 22 ஆம் திகதி முதல் தேசிய போக்குவரத்து ஆணைக் குழு அறிவித்துள்ள படி கட்டண உயர்வை அமுல்படுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

மிஸ்டர் பீனின் கடன் அட்டை மோசடி : கொழும்பில் இலங்கையர் கைது

been.jpgபிரித்தானிய நகைச்சுவை நடிகர் மிஸ்டர் பீன் உட்பட பல வெளிநாட்டவர்களின் கடன் அட்டை இலக்கங்களைப் பயன்படுத்தி மோசடி செய்ய முயன்ற இலங்கையர் ஒருவரைப் பொலிஸார் கொழும்பில் கைது செய்துள்ளனர்.  இவர் இணையத் தளத்தைப் பயன்படுத்தித் திருடிய கடன் அட்டை இலக்கங்களில், மிஸ்டர் பீன் என்ற பிரபல பிரிட்டிஷ் நடிகர் ரொவன் அட்கின்ஸனின் கடன் அட்டையும் உள்ளடக்கப்பட்டிருந்ததாகப் பொலிஸ் ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எச்.எஸ்.பி.சி. வங்கியின் சர்வதேச பணக் கொடுப்பனவு பிரிவின் அதிகாரி ஒருவர் கொடுத்த தகவலையடுத்தே பொலிஸார் இந்த நபரைக் கைது செய்தனர்.  அத்துடன் பிரித்தானியாவில் உள்ள தனது நண்பர்கள் மூலமாகவே இவர் மிஸ்டர் பீனின் கடன்அட்டைக்குரிய இலக்கங்களைப் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலுள்ள ஒரு ஹோட்டலில் வைத்து மேற்படி இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார். எத்தனையோ கிரடிட் கார்ட் இலக்கங்களைத் திருடியுள்ள இவர், வெளிநாட்டு இயக்குநர்களின் உதவியுடன் கோடிக்கணக்கான பணத்தைப் பரிமாற்றம் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

ஓர் அமைச்சரைவிட 12 மடங்கு பாதுகாப்பு சந்திரிகாவுக்கு! அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தகவல்

chandrika.jpgஒரு அமைச்சருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விட 12 மடங்கு அதிகப் பாதுகாப்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் தனது கட்சி ஆட்சி நடத்தும் இலங்கையில் தனது உயிருக்கே பாதுகாப்பில்லை என அவர் கேரளாவில் தெரிவித்துள்ள கருத்து அடிப்படை ஆதாரமற்றதெனவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் 80 க்கும் அதிகமான பாதுகாப்பு அதிகாரிகள் 12 வாகனங்கள் 08 சாரதிகள் என பலத்த பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளபோதும் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் அவர்  கேரளாவில் இலங்கை அரசுக்கு எதிராக கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது ஏதோ ஒரு அரசியல் பின்னணியைக் கொண்டதாகவே நான் கருதுகிறேன். அவர் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்வதால் தமக்கு வழங்கப்பட்டுள்ள பாதகாப்பை அவர் முறையாகப் பயன்படுத்துவதில்லை. தேவைக்கும் அதிகமாகவே அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையிலும் அவர் பொறுப்பற்ற விதத்தில் வெளிநாடுகளில் கருத்து தெரிவிப்பது மிகவும் கவலைக்குரியதெனவும் அமைச்சர் கூறினார்.

மேற்குலகின் காடுகள் – இணையத்தளம் – பாதுகாப்பற்றது. : த சோதிலிங்கம்

புதிதாக அண்மையில் IMF-X-Force வெளியிட்ட அறிக்கையில் மேற்குலகின் காடுகள் என வர்ணிக்கப்பட்டுள்ள இணையத்தளத்தில் யாருடைய கட்டுப்பாட்டிற்கும் உள்ளாகாமல் 20 000 வைரஸ்கள் உலாவி வருவதாகவும், இவை எந்நேரமும் தாக்கும்திறன் கொண்டவைகளாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இணையத்தளங்கள் யாரும் நம்ப முடியாத ஒரு பாரிய காடு போன்றும் மிகவும் ஆழமான ஆழ்கடல் போன்ற ஆபத்துக்களும் நிறைந்தனவாக இருப்பதாயும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இணையத்தளங்கள், தளங்களின் மூலங்கள், இணையத்தள சேவைகள் அளிப்போர், சேவைகளை பராமரிப்போர் இவைகள் யாவுமே சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இல்லை என்பது இங்கு மிக முக்கியமான விடயம். காரணம் இவைகள் இன்னோர் software அறிவாளியால் தாக்கப்படும் தன்மை கொண்டதாக இருக்கிறது.

IBM-X force வெளியிட்ட ஆய்வின்படி களவாக பாவிக்கப்படும் software மட்டுமல்ல பல உரிமைமீறல்களும் இந்த உலகு என்றுமே கண்டிராத அளவிலும், இந்த உலகின் மிகப் பெரும்பான்மையினரின் சாதாரண அறிவிற்கு புரியாமலும் நடைபெறுவதாகவும் தெரிவிக்கிறது.

இணையத்தளத்தில் பாதுகாப்பு என்று ஒன்று இல்லை. இணையத்தளம் பாவிப்போர் எப்போதும் இணையத்தள சேவைகள் தருவோர் பராமரிப்போர் மீது சந்தேகத்துடனேயே இருக்க வேண்டியுள்ளது.

இணையத்தளங்களில் பாதுகாப்பிற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் தினமும் 20 000 தடவைகளுக்கு மேல் உடைக்கப்படும் ஆபத்துக்களை எதிர்நோக்குகின்றது என்றும் இதில் adults only இணையத்தளங்கள் தமது இணையத்தளங்களை பார்வையிடுவோர், பாவிப்போர்களது கணணிகளை உளவு பார்ப்பதாகவும் அதிலிருந்து தரவுகளை திருடுவதாகவும் தெரிவிக்கிறது.

adults only இணையத்தளங்களில் 75 சதவிகிதமானவைகள் சமூகத்திற்கு உதவாத சேவைகளை வழங்குவதுடன் அதேநேரத்தில் வைரஸ் பரப்பும் தளங்களாக இருப்பதாகவும் இவ்வருடத்தின் கடந்து 6 மாத காலப்பகுதிகளில் இணையத்தளங்கள் அளவுமீறிய வரையறைகளை மீறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

“சனல் 4” காணொளி விவகாரம்: இலங்கையின் சட்டமா அதிபர் பிரித்தானியா பயணம்

170909mohan_peris.jpgஇலங்கை சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ், சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்ட்ட தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கில் பிரித்தானியாவிற்கான விஜயத்தை இன்று மேற்கொண்டுள்ளார்.
 
கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை, இலங்கை இராணுவம் துன்புறுத்தி படுகொலை செய்கின்ற காட்சி தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அவர் அங்கு செல்வதாக அனர்த்த முகாமை மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய செல்லவுள்ள சட்டமா அதிபர், ஐக்கிய இராச்சியத்தின் பத்திரிகை முறையீட்டு ஆணைக்குழுவையும் சந்தித்து, இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. விசேட பிரதிநிதி இன்று வவுனியா நலன்புரி முகாம்களுக்குச் செல்கிறார்

170909-pascoe.jpgஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான துணைத் தலைமைச் செயலர் லின் பாஸ்கோ கொழும்பு வந்தடைந்துள்ளார். இங்கு அவர் இரண்டு நாட்கள் தங்கியிருந்து போருக்கு பின்னரான சூழல் குறித்து அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இன்று வியாழக்கிழமை அவர் வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களுக்கு செல்லவுள்ளார். அரசுடனான பேச்சுவார்த்தைகளின் போது இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களின் மீள்குடியேற்றம் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது. அது தொடர்பில் விரைவான ஒரு நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபை எதிர்பார்க்கிறது.

அமெரிக்க உளவுத்துறையால் தனது வாழ்க்கைக்கு ஆபத்தென்கிறார் ஈராக் ஊடகவியலாளர்

170909.jpgசிறையி லடைக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் கடும் சித்திரவதைக்குள்ளானதாக விடுதலையான ஈராக் ஊடகவியலாளர் முன்நடார் அல் செய்தி தெரிவித்தார். விடுதலையான பின்னர் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடொன்றை முன்நடார் அல் செய்தி நடத்தினார்.

இதன் போது தான் சிறையில் எதிர்கொண்ட இன்னல்கள் கொடுமைகள் பற்றி விளக்கினார். குளிர்ந்த நீரில் அமிழ்த்து வைக்கப்பட்டதுடன் மின்சாரத் தாக்குதலுக்குள்ளானதாகவும் சவுக்கையால் மிகப் பலமாக அடிக்கப்பட்டதாகவும் ஈராக் ஊடகவியலாளர் விளக்கினார். விடுதலையான பின்னரும் கூட தனக்கு அச்சுறுத்தல்கள் தொடரும் அபாயமுள்ளது.

அமெரிக்காவின் உளவுத்துறை அரசுக்கெதிரான நடவடிக்கையில் இறங்கியதாக என்மீது போலிக் குற்றங்களைச் சுமத்த வாய்ப்புள்ளது.  எனவே எந்த நேரமும் நான் கொலை செய்யப்படலாம். இதனால் எனது விடுதலை எனக்கு சுதந்திரத்தையளித்துள்ளதாக நினைக்க முடியாது சிறையில் என்னைக் கொடுமைப்படுத்திய ஈராக் இராணுவ அதிகாரிகளை எனக்குத் தெரியும்.

தேவையேற்படும்போது அவர்களின் பெயர்களை வெளியிடுவேன். ஈராக்கில் அவர்கள் (அமெரிக்க இராணுவம்) பொதுமக்களைக் கொலை செய்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். இதனால் எனது மன உணர்வை வெளிப்படுத்தியதாகத் தெரிவித்தார். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மீது செருப்பை வீசிய முன்நடார் அல் செய்தி மூன்று வருட சிறைத் தண்டனைக்குள்ளானார் பின்னர் ஒருவருடமாக இத்தண்டனை குறைக்கப்பட்டது. நன்னடத்தை காரணமாக ஒன்பது மாதங்களின் பின் நேற்று இவர் விடுதலையானமை குறிப்பிடத்தக்கது.
 

“இலங்கைக்கு எதிராக போர் குற்ற விசாரணை வந்தால் சாட்சியம் கூற தயார்”: தமிழ்வாணி

170909damilvany-gnanakumar.jpgஇலங் கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிகட்ட போரின் போது பலர் உயிரிழந்தது தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்று மனித உரிமை அமைப்புகள் கோரி வருகின்றன.  அப்படியாக போர் குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெறுமாயின் அது தொடர்பில் சாட்சியம் அளிக்க தான் தயாராகவுள்ளதாக போரின் இறுதிகாலத்தின் வன்னிப் பகுதியில் தங்கியிருந்த லண்டனில் இருக்கும் புலம் பெயர்ந்த இலங்கை தமிழ் பெண்மணி தமிழ்வாணி ஞானகுமார் BBC தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்

2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் போர் முடியும் வரை வன்னிப் பகுதியிலும், அதன் பின்னர் இம்மாதத்தின் முதல் வாரம் வரை வடக்கே வவுனியாவில் இடைத்தங்கல் முகாம் ஒன்றில் தங்கியிருந்தாகக் கூறும் அவர் அப்போது இடம் பெற்ற நிகழ்வுகள் குறித்து தனது கருத்தினை தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்

தனது உறவினர் ஒருவரை சந்திக்க விஸ்வமடு பகுதிக்கு விடுமுறைக்காக சென்றதாக் கூறும் அவர், 2008 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் விசாக் காலம் முடிந்த பிறகும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக தொடர்ந்து அங்கு தங்கியிருந்து பணியாற்றியதாகக் கூறியுள்ளார் 

போர் இடம் பெற்ற காலகட்டத்தில் வன்னிப் பகுதியில் இடம் பெற்ற கடுமையான மோதல்களில் பல மக்கள் உயிரிழக்க நேரிட்டதை தான் நேரில் கண்டதாகவும், காயப்பட்ட மக்களுக்கு உதவ முடியாமல் மருத்துவமனைகள் மிகவும் சிரமப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்

மருத்துவ துறையில் ஓரளவு பயிற்சி உள்ளதாக கூறும் அவர், போர் காலத்தில் அங்கு இருக்க நேரிட்ட சமயத்தில் அங்கு காயப்பட்டு மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு முடிந்த உதவிகளை செய்ததாகவும் கூறியுள்ளார்