நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதான சுழலை அடுத்து கிழக்கு மாகாணத்தின் நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது. கிழக்கின் நெல் உற்பத்தி 37.4 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சனத்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவிக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திலேயே கூடுதலான நெல் உற்பத்தி கிட்டியுள்ளதாக அந்தத் தகவல்களில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குப் புரம்பாக குருணாகல், பொலன்னறுவை, அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் நெல் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
2009
2009
உலக ஏழை மக்களின் பட்டினியை போக்க ஐ. நா. சபையின் உலக உணவுத் திட்டம் உதவி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஆபிரிக்க கண்டத்தில் உள்ள ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு நடப்பாண்டு 33 ஆயிரத்து 500 கோடி ரூபாய நிதிக்கு பட்ஜெட் போடப்பட்டது.
ஆனால் இந்த திட்டத்துக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே கிடைத்து உள்ளது. பொருளாதார பின்னடைவு காரணமாக எதிர்பார்க்கப்பட்ட நிதி உதவி கிடைக்கவில்லை. இதனால் இந்த ஆண்டு 100 கோடி பேர் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டு இருப்பதாக ஐ. நா. சபை வேதனை அடைந்து உள்ளது.
இது தொடர்பாக ஐ. நா. உலக உணவு திட்ட அலுவலகம் கூறி இருப்பதாவது, நாள் ஒன்றுக்கு ரூ. 50 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக வருமானம் உள்ளவர்கள் அதிகமாக இருப்பதால் மக்கள் வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கிறார்கள். பொருளாதார பின்னடைவு காரணமாக நிலைமை மோசமாகி உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து இருப்பது மக்களை மேலும் அதிக அளவில் பாதித்து உள்ளது.
இதற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் கூட விதிவிலக்கு அல்ல. வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா 25வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் இந்த பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது. இவ்வாறு ஐ. நா. சபையின் உலக உணவுத் திட்ட அலுவலகம் அறிவித்து உள்ளது.
எதிர்கால சந்ததியினருக்கு சுபிட்சமான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கின்ற பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு மேலும் வலுவூட்டுவது தாய்நாட்டின் மீது பற்றுள்ள அனைவரினதும் கடமையாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தான் பிறந்து வளர்ந்து மரணிக்கின்ற தாய்நாட்டிற்கு எதிராக காட்டிக் கொடுப்புகளையும், சூழ்ச்சிகளையும் செய்வதையும் விடுத்து உலகின் பெருமையுடன் எழுந்து நிற்கக்கூடிய இலக்கை நோக்கி வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கும் எமது பயணத்தில் இணைந்து கொள்ளுமாறும் ஜனாதிபதி அனைத்து எதிர்க் கட்சியினருக்கும் அழைப்பு விடுத்தார்.
காலி மாவட்ட மகா சங்கத்தினர், மற்றும் இளைஞர் அமைப்புகளையும் அலரி மாளிகையில் சந்தித்து பேசிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். நேற்று முன்தினம் 17ஆம் திகதி இச்சந்திப்பு நடைபெற்றது.
எமது நாட்டைப் பற்றி தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்தி வெளிநாட்டினருடன் இணைந்து சூழ்ச்சிகளை செய்ய முற்படும் சகல தலைவர்களையும் அடையாளம் கண்டு தக்க பாடத்தை மக்கள் புகட்டுவார்கள். பயங்கரவாதிகளை காப்பாற்றுவதற்காக அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்துகொண்டு செயற்பட்ட சில தலைவர்கள் இன்று நாட்டில் சுதந்திரம் இல்லை எனக் கூறிக்கொண்டு ஆங்கில பத்திரிகைகளுக்கு பணம் செலுத்தி விளம்பரங்கள் செய்வது நாட்டின் மீதுள்ளபற்றுடன்தானா? எனவும் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.
தென்பகுதியில் மட்டுமல்ல வட பகுதியிலுமுள்ள சிறுவர் சிறுமியர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் நோக்குடனேயே அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறேன். 30 வருடங்களின் பின்னர் வடபகுதி சிறுவர், சிறுமியர் ஆயுதங்களைக் கைவிட்டு பாட புத்தகங்களை கையில் எடுத்துள்ளனர். முகாம்களில் தங்கியுள்ள பிள்ளைகளின் கல்விக்காகவும் தேவையான அனைத்து கல்வி வசதிகளையும் செய்து கொடுத்துள்ளோம்.
நாட்டுக்காக எந்த சவால்களையும் எந்தவிதமான சேறு பூசுதல்களுக்கும் முகம்கொடுக்க நான் ஆயத்தமாக இருக்கிறேன். ஊடக நிறுவனத்தின் உரிமையாளரான எதிர்க்கட்சித் தலைவரின் மூத்த சகோதரர் கூட எமக்கு ஊடக சுதந்திரம் இங்கு நன்கு பேணப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் என்னிடம் தெரிவித்திருக்கிறார்.
வட மாகாண விளையாட்டுப் போட்டிகள் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று கோலாகலமாக ஆரம்பமாகியது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாணவர்களும் போட்டிகளில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யும் வகையில் வவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்தும் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். அரச அதிபர் கே. கணேஸ், வடமாகாண பிரதம செயலர் இளங்கோ உட்பட பிரமுகர்கள் துரையப்பா விளையாட்டரங்கு நுழைவாயிலிருந்து மேள தாளங்களுடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
தேசியக் கொடியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், மாகாண கொடியை ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறியும் ஏற்றி வைத்தனர். இதனைத் தொடர்ந்து அனைவரும் வெள்ளைப் புறாக்களை பறக்கவிட்டனர். இதனைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின. முதலாவதாக 1500 மீற்றர் ஓட்டப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர் ஒலிம்பிக் தீபத்தை வவுனியா, யாழ். மாணவர்கள் ஏந்திச் சென்றமை குறிப்பிடத் தக்கது.
வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ். மாவட்டங்களை உள்ளடக்கியதாக நடைபெறும் இவ்விளையாட்டுப் போட்டிகள், நாளை ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்படுகிறது.
தொப்பிகலை பிரதேசத்திலுள்ள நாரக்கமுல்லையில் விடுதலைப் புலிகளின் மாவீரர் குடும்ப விபரங்கள் மற்றும் பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய முக்கிய ஆவணங்கள் விசேட பொலிஸ் குழுவொன்றினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. வவுனியா இடைத் தங்கல் முகாம் ஒன்றில் கைதாகிப் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி உறுப்பினரிடமிருந்து கிடைத்த தகவலையடுத்தே இவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
நேற்று அந்தப் பகுதிக்கு சென்றிருந்த பயங்கரவாத தடுப்புப் புலனாய்வுப் பிரிவினர் மறைவிடம் ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த பெருந் தொகையான இந்த ஆவணங்களில், விடுதலைப் புலிகளின் மாவீரர் குடும்ப விபரங்கள், சுமார் 10 ஆயிரம் பயிற்சி பெற்ற அங்கத்தவர் விபரம், வங்கி மற்றும் நிதி தொடர்பான ஆவணங்களுடன் தகவல் கருவிகளும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட லண்டனிலிருந்து வெளியாகும் ‘ ஜேன்ஸ் டிபென்ஸ்’ பிரதியும் காணப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.
தமிழக சிறைகளில் ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகளைக் கழித்துவிட்ட அனைவரையும் விடுதலை செய்வதே அறவழிப்பட்ட, நேர்மையான பொது மன்னிப்பாகும் என்று தமிழ்த் தேச பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலர் பெ. மணியரசன் கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 18 ஆண்டுகளாக வேலூர் சிறையில் இருந்துவரும் ராபர்ட் பயஸ், ஜெயக் குமார், இரவிச்சந்திரன், நளினி ஆகியோர் உட்பட தமிழக சிறைகளில் 14 ஆண்டுகளைக் (ஆயுள் தண்டனையைக்) கழித்த பலர் இன்னும் சிறையில் இருப்பதை கண்டித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள மணியரசன், இவர்களை விடுவிப்பது தொடர்பாக தகுதி ஆய்வு மன்றம் அமைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டே உத்தரவிட்ட பின்னரும் அதனை செயல்படுத்தாமல் காலம் தாழ்த்திவரும் தமிழக அரசைக் கண்டித்துள்ளார்.
தங்களை விடுவிக்க தகுதி ஆய்வு மன்றம் அமைக்குமாறு கோரி வேலூர் சிறையில் உள்ள ஆயுள் கைதிகளில் ஒருவரான இராபர்ட் பயஸ் காலவரம்பற்ற பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் அளித்த உறுதிமொழிக்கேற்ப, 10 ஆண்டுகளைக் கடந்த சிறைக் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யாமல், கோவை குண்டு வெடிப்பில் தண்டனையளிக்கப்பட்ட 10 பேரை மட்டும் தமிழக அரசு விடுவித்துள்ளது ஏமாற்று வேலை என்று சாடியுள்ள பெ.மணியரசன், சிறப்பு நாட்களுக்காகப் பொது மன்னிப்பு வழங்கும்போது, எத்தகைய குற்றச்சாட்டுகளின் கீழ் தண்டனை பெற்றிருந்தாலும் அவர்களிடையே வேறுபாடு காட்டாமல் பத்தாண்டுகள் தண்டனைக் கழித்த அனைவரையும் விடுதலை செய்வதே ஞாயம் என்று கூறியுள்ளார்.
“இராஜீவ்காந்தி கொலை வழக்கில் வாழ்நாள் சிறைத் தண்டனை பெற்ற இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் 18 ஆண்டுகளாகச் சிறையில் உள்ளனர். கடந்த ஆண்டு விடுதலை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்குத் தொடுத்தார். அப்போது, புதிதாகத் தகுதி ஆய்வு மன்றம் அமைத்து அவரது விடுதலை குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி ஆணையிட்டார். ஆனால் இதுவரை தமிழக அரசு அம்மன்றத்தை அமைக்கவில்லை.
இப்பொழுது அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் கழித்த சிறையாளிகளை விடுதலை செய்யப் போவதாகத் தமிழக முதல்வர் அறிவித்து, தமிழகம் முழுவதற்கும் பத்துப் பேரை மட்டுமே விடுவித்தார். இது ஒரு கண்துடைப்பு நாடகமாகவே முடிந்தது. பத்தாண்டுகள் சிறையில் கழித்த அனைத்துச் சிறையாளிகளையும் விடுதலை செய்வதே அறவழிப்பட்ட, நேர்மையான பொது மன்னிப்பாகும். அவ்வாறு செய்யாமல் சுமை தாங்காமல் திணறும் ஒட்டகத்தின் முதுகிலிருந்து ஒரு துரும்பை எடுத்துக் கீழே போட்டு ஒட்டகத்தை ஏமாற்றுவது போல் பத்துப் பேரை மட்டும் விடுதலை செய்த நிகழ்வு அமைந்துள்ளது.
சிறப்பு நாட்களல்லாத போதும், வழக்கமாக 14 ஆண்டுகள் தண்டனை கழித்த அனைவர்க்கும் விடுதலை குறித்து முடிவு செய்ய ஆய்வுமன்றம் நிறுவுவதே மனித உரிமையை மதிக்கும் செயலாகும். ராபர்ட் பயாஸ் தொடங்கியுள்ள காலம் வரம்பற்ற உண்ணாப் போராட்டம் அவர்களுக்கு மட்டுமின்றித் தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் 14 ஆண்டுகள் தண்டனை கழித்த அனைவர்க்கும் நீதி கோரும் போராட்டமாகும். எனவே மனித உரிமை அமைப்புகளும், ஆர்வலர்களும், மனித உரிமையில் அக்கறை உள்ள கட்சிகளும் இப்போராட்டக் கோரிக்கையை ஆதரித்துத் தமிழக முதல்வர் கவனத்தை இதன்பால் ஈர்க்க வேண்டும்.
தமிழகச் சிறைகளில் 14 ஆண்டுகள் கழித்த அனைத்துச் சிறையாளிகளையும், குற்றப்பிரிவு விதிவிலக்கு எதுவுமின்றி, விடுதலை செய்ய வேண்டும் என்றும், குறைந்த அளவாக அவர்கள் விடுதலை குறித்து ஆய்வு செய்ய உடனடியாக மன்றம் அமைக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழக முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று அந்த அறிக்கையில் மணியரசன் கூறியுள்ளார்.
இந்திய கடற் பிரதேசத்தில் அந்நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை மீட்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. இந்திய கடற்படையினரால் 9 மீனவப்படகுகளும் 51 மீனவர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை மீட்பதற்கு வெளி விவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் ஆலோக் பிசாதுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.
ஏ-9 வீதியில் ஆனையிறவு ரயில் நிலையத்தை நவீன மயப்படுத்துவதற்காக ஆசிரியர்கள் மாணவர்களினூடாக சேகரிக்கப்பட்ட நிதியின் தொகை ஒரு கோடி ரூபாவை விஞ்சிவிட்டதாக கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.
‘வடக்கிற்கான நட்புப்பாதையில் பாசத்தின் உறைவிடத்தை ஒற்றுமையாகக் கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளில் கலவி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் பணிப்பிற்கமைய ஆனையிறவு ரயில் நிலைய புனரமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தைத் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள மாணவர்களின் உதவியுடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இலங்கை வங்கியின் இல. 9393439 என்ற கணக்கு இலக்கத்திற்கு நிதியுதவிகளை வைப்பிலிடுமாறு வேண்டப்படுகின்றனர். மாணவர்கள் பங்களிப்புச் செய்ய வேண்டிய ஆகக்குறைந்த தொகை 2 ரூபாவாகும். மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட அனைவரும் இதற்கு பங்களிப்புச் செய்வதற்கு ஆர்வமாக உள்ளனர். ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை இத்திட்டத்திற்கு நிதி வழங்க பாடசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை நடத்தும் தாக்குதலை தடுக்க வேண்டும், இலங்கை சிறையில் உள்ள 21 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் 2வது நாளாக இன்றும் தொடர்கிறது.
ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 16ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்தனர்.மேலும் 5 படகையும், அதில் இருந்த 21 மீனவர்களையும் பிடித்து தாக்கினர். பின்னர் மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அனுராதாபுரம் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சிறையில் உள்ள 21 மீனவர்களையும் விடுதலை செய்ய கோரியும், இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் விரைவில் நடவடிக்கை எடுக்கக் கோரியும் நேற்று முதல் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் இன்று 2வது நாளாக நீடித்து வருகிறது.
இது குறித்து தமிழக -பாண்டிச்சேரி மீனவர் கூட்டமைப்பை சேர்ந்த போஸ் கூறுகையில், ”இலங்கை கடற்படை வேண்டுமென்ற இந்திய கடல்பகுதிக்கு வந்து மீனவர்களை தாக்குகிறது. இதனால் கடலையே நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களது உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். மீனவர்களின் வாழ்க்கைக்கும், உயிருக்கும் உத்தரவாதம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்” என்றார்.
துன்ஹிந்த நீர் வீழ்ச்சிக்கு மேல் காட்டுப் பகுதியில் மரமொன்றில் தொங்கிக் கொண்டிருந்த இரண்டு எலும்புக் கூடுகளை பொலிஸார் நேற்று மீட்டுள்ளனர்.
இவை கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இருவரது சடலங்கள் என பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். துன்கிந்த காட்டிற்குச் சென்ற இளைஞர் ஒருவரினால் பதுளை பொலிஸாருக்கு வழங்கிய தகவலொன்றின் அடிப்படையிலேயே பொலிஸார் விரைந்து இவ்விரு எலும்புக்கூடுகளையும் மீட்டுள்ளனர்.
பதுளை-சிரிமல்கொட கிராமத்தில் வசித்து வந்த இருபத்தொன்பது வயது நிரம்பிய டி. எம். சமந்த கெலும் என்ற இராணுவ சிப்பாயினதும் ஆலி-எலைப் பகுதியில் ரோக்கத்தன்னை தோட்டத்தில் வசித்து வந்த இருபத்தி நாலு வயதினையுடைய முத்துக்குமார் கீதா என்ற தமிழ் யுவதியுமே கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர்களென இனம் காணப்பட்டுள்ளது. இத் தற்கொலைகள் ஒரு மாதத்திற்கு முன் இடம்பெற்றிருக்கலாமென்று பொலிஸார் தெரிவித்தனர்.
நைலோன் நூலினால் கழுத்துக்கள் சுருக்கிடப்பட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆரம்ப பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. சடலங்கள் அருகே இருந்த உடைப்பைகள் இரண்டையும் பொலிஸார் மீட்டுள்ளனர். இவ்விருவரின் தற்கொலைகள் என்ன காரணத்தினால் ஏற்பட்டதென்பது குறித்து பதுளைப் பொலிஸார் தீவிரப் புலன் விசா ரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.