தமிழக மீனவர்கள் மீது இலங்கை நடத்தும் தாக்குதலை தடுக்க வேண்டும், இலங்கை சிறையில் உள்ள 21 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் 2வது நாளாக இன்றும் தொடர்கிறது.
ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 16ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்தனர்.மேலும் 5 படகையும், அதில் இருந்த 21 மீனவர்களையும் பிடித்து தாக்கினர். பின்னர் மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அனுராதாபுரம் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சிறையில் உள்ள 21 மீனவர்களையும் விடுதலை செய்ய கோரியும், இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் விரைவில் நடவடிக்கை எடுக்கக் கோரியும் நேற்று முதல் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் இன்று 2வது நாளாக நீடித்து வருகிறது.
இது குறித்து தமிழக -பாண்டிச்சேரி மீனவர் கூட்டமைப்பை சேர்ந்த போஸ் கூறுகையில், ”இலங்கை கடற்படை வேண்டுமென்ற இந்திய கடல்பகுதிக்கு வந்து மீனவர்களை தாக்குகிறது. இதனால் கடலையே நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களது உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். மீனவர்களின் வாழ்க்கைக்கும், உயிருக்கும் உத்தரவாதம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்” என்றார்.