ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என 300 000 பேரை முகாம்களில் தடுத்து வைத்திருப்பது மனிதத்துவமற்ற செயல்” பிரித்தானிய தொழிற்கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஒக்ரோபர் 1ல் நிறைவுபெற்ற தொழிற்கட்சியின் வருடாந்த மாநாட்டில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் உள்ள பிரதான கட்சிகளின் வருடாந்த மாநாடு நடைபெற்று வருகின்றது. அடுத்த தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் இம்மாநாடுகள் மிகவும் முக்கியத்துவமானவையாக உள்ளது. குறிப்பாக தொழிற்கட்சி கடந்த மூன்று தேர்தல்களிலும் ஆட்சியைத் தக்க வைத்துள்ள நிலையில் இத்தேர்தலில் கடுமையான போட்டியைச் சந்திக்க வேண்டியுள்ளது. பிரித்தானிய பொருளாதாரம் மட்டுமல்ல சர்வதேசப் பொருளாதாரமே வீழ்ச்சி கண்டுள்ளதுடன் ஏற்கனவே 12 ஆண்டுகள் தொடர்ச்சியான ஆட்சியினால் மக்களுக்கு ஏற்பட்ட சலிப்பும் மாற்றம் அவசியம் என்ற சிந்தனையை பிரித்தானிய மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
”இலங்கை போன்ற ஜனநாயக நாடுகளில் சிவில் யுத்தம் உயிர்களையும் உரிமைகளையும் பறித்துள்ளது” எனத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் ”அரசாங்கங்கள் பிரஜைகளின் சிவில் சமூக அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.
பிறைற்றனில் இடம்பெற்ற இம்மாநாட்டில் குரொய்டன் மிச்சம் பகுதி பா உ சியொபெய்ன் மக்டொனா பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட சட்டத்திற்குப் புறம்பான கொலைகளைச் சுட்டிக்காட்டி இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை வன்மையாகக் கண்டித்து இருந்தார்.
இந்த விவாதங்களின் இறுதியில் இலங்கை அரசுக்கு எதிரான கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை அரசு வழங்கிய 180 நாள் காலக்கெடுவிற்கு இன்னும் இரு மாதங்களுக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் இக்கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளமை இலங்கை அரசு முகாம்களில் உள்ள மக்களை விடுவிப்பதற்கான அழுத்தத்தை மேலும் வலியுறுத்தி உள்ளதாகவே கணிக்கப்படுகிறது.
இலங்கை அரசு முட்கம்பி வேலிக்குள் வன்னி மக்களை அடைத்து வைத்து மீண்டும் மீண்டும் தன் முகத்திரையைக் கிழித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றிய அமெரிக்க உள்துறை அமைச்சுச் செயலர் கிலரி கிளின்டன் இலங்கை பர்மா பல்கன் நாடுகள் பாலியல் பலாத்காரத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி வருவதாகக் குற்றம்சாட்டி உள்ளார். சர்வதேச அரங்கில் இலங்கை தனது மனிதவுரிமை விடயங்கள் தொடர்பில் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்து வருகின்றது. கிலரி கிளின்டனின் குற்றச்சாட்டு தொழிற்கட்சியின் தீர்மானம் என்பன சர்வதேச அரங்கில் இலங்கையை மதிப்பிழக்கச் செய்து வருகின்றது.
தொழிற்கட்சியின் மாநாட்டுக்கு முன்னதாக லிபிரல் கட்சியின் வருடாந்த மாநாடு நடைபெற்றது. அங்கு இலங்கை தொடர்பான குறிப்பான கருத்துக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் இன்னும் சில தினங்களில் ஆரம்பமாக உள்ள பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான கன்சவேடிவ்கட்சியின் மாநாட்டில் இலங்கை தொடர்பான குறிப்பான விவாதங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிற்கட்சியுடன் ஒப்பிடுகையில் கொன்சவேடிவ் கட்சி அரசு சார்பான நிலைப்பாட்டைடேயே எடுத்து வருகின்றது. தமிழ் மக்கள் செறிவாக உள்ள பகுதிகளில் உள்ள ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிர கொன்சவேடிவ் கட்சி அரசு சார்பான போக்கையே கொண்டுள்ளது.
குறிப்பாக தலைநகர் லண்டனில் தமிழர்களின் வாக்குகள் வெற்றியை நிர்ணயிக்கும் வல்லமையைக் கொண்டிருந்த போதும் அவ்வாக்குகள் முழுமையாக ஒரு குறிப்பிட்ட கட்சியை நோக்கிச் செல்லும் நிலையில்லை. இத்தேர்தலில் தொழிற்கட்சியின் கோர்டன் பிரவுணா? கொன்சவேடிவ் கட்சியின் டேவிட் கமரூனா? “நந்திக் கடலில்” கரையொதுங்குவார்கள் என்பதனை பிரித்தானிய மக்கள் இன்னும் சில மாதங்களில் தீர்மானிப்பார்கள்.