26

26

கிளி. பிரபல சூழலியல், புலனாய்வு ஊடகவியலாளர் தமிழ் கடத்தப்பட்டு தாக்கப்பட்டார் ! வேடிக்கை பார்த்த மக்கள் !

கிளிநொச்சியில் நன்கு அறியப்பட்ட சூழலியல் மற்றும் புலனாய்வு ஊடகவியலாளர் மு தமிழ்ச்செல்வன் கறுப்பு நிற பிக்கப் வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தமிழ்செல்வனோடு தொடர்பு கொண்ட போது, தான் நீர்திணைக்களத்திலிருந்து மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இச்சம்பவம் ஏ9 வீதியில் உள்ள கிளிநொச்சி ரெலிக்கொம்மிற்கு அருகில் இடம்பெற்றதாகத் தெரிவித்தார்.

இச்சம்பவம் பற்றி விபரித்த தமிழ்செல்வன், “நான் வந்த மோட்டர் சைக்கிளுக்கு குறுக்காக கறுப்பு நிற பிக்கப்பில் வந்தவர்கள் வாகனத்தை நிறுத்தினர். என்னை நோக்கி வந்து என்னை தங்களுடைய பிக்கப்புக்குள் பலவந்தமாக இழுத்துப் போட்டனர். ஆனாலும் என்னுயை கால்கள் வெளியே நீட்டிக்கொண்டிருந்ததால், கடத்த வந்தவர்களுக்கு பிக்அப் கதவை மூடமுடியவில்லை. மீண்டும் என்னை நோக்கி வந்து காலை உள்ளுக்கு விட்டு கதவை மூட முற்பட்டனர். அப்போது அவர்களை உதைத்து உதறித் தப்பிக்க முயன்றேன்” எனத் தெரிவித்தார் தமிழ்ச்செல்வன்.

தேசம்நெற்க்கு தமிழ்ச்செல்வன் மேலும் தெரிவிக்கையில், “உதறித் தள்ளிவிட்டு தப்பி ஓட முயன்றபோது அவர்கள் என்னைக் கலைத்துப் பிடித்து செமையாகத் தாக்கினர். அதனாலேயே மருத்துவமனைக்கு வரும்நிலையேற்பட்டது. ஆனாலும் அவர்களால் என்னை திருப்பி வானுக்குள் தள்ளமுடியவில்லை. அவர்களிடம் இருந்து தப்பிக்க முடிந்தது” எனத் தெரிவித்தார். “இந்த நிலையிலும் எனக்கு ஏற்பட்ட மிகுந்த மனவருத்தம் என்னவென்றால், என்னை வானுக்குள் போட்டு கடத்த முற்பட்ட போதும், என்னைத் தாக்கிய போதும் மக்கள் அதனைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். இச்சம்பவத்தை மக்கள் கடந்து போய்க்கொண்டே இருந்தனர். யாரும் உதவிக்கு வரவில்லை. யாருக்காக நான் எழுதிக்கொண்டு இருக்கிறேனோ, அவர்கள் வேடிக்கை பார்ப்பவர்களாக இருந்தனர்” எனக் கவலையோடு தெரிவித்தார்.

சூழலியல், மற்றும் புலனாய்வு ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் தாக்கப்பட்டதை தேசம்நெற் வன்மையாகக் கண்டிக்கின்றது. “கிளிநொச்சியில் சட்டம், ஒழுங்குகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும், கிளிநொச்சியின் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும், கசிப்பு காய்ச்சுவது, கள்ள மண் கடத்துவது, கள்ள மரம் வெட்டுவது என்பனவற்றுக்;கு எதிராக கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வருபவர் மு தமிழ்ச்செல்வன். அவர் கிளிநொச்சி மாவட்டத்தின் ஒரு சமூகக் காவல்காரன். இவரைத் தாக்கியது ஒட்டுமொத்த ஊடக சமூத்தின் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்” என லண்டனைத் தளமாகக் கொண்டு செயற்படும் தேசம்நெற் ஊடகக் குழுமத்தின் ஆசிரியர் த ஜெயபாலன் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “வடமாகாணத்தில் வன்முறைச் சம்பவங்கள் தலைவிரித்தாடுகின்றது. ஊடகவியலாளர்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தாக்குதல், மக்களின் குரல்களை மழுங்கடிப்பதற்கான ஒரு முயற்சியே” என்றும் வடக்கு ஆளுநர் வேதநாயகன் பொலிஸாருடன் பேசி வடக்கில் இவ்வாறான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் தமிழ்ச்செல்வனைத் தாக்கிய குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை வடக்கு ஆளுநர் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

யாழில் மற்றுமொரு வாள் வெட்டு: காடையர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் ஏன் ?

யாழில் மற்றுமொரு வாள் வெட்டு: காடையர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் ஏன் ?

யாழ் . மத்திய பேருந்து நிலையத்தில் சாரதி மற்றும் நடத்துனர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் டிசம்பர் 24  இரவு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள சிற்றுண்டிச்சாலைக்குள் இச்சம்பவம் அரங்கேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் யாழ். காரைநகர் சாலைகளை சேர்ந்த சாரதியும், நடத்துனருமே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹெல்மெட் அணிந்து முகத்தை மூடிக்கொண்டு வந்த மூன்று பேரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை வவுனியா, சேமமடு, இளமருதங்குளம் பகுதியில் டிசம்பர்  முதலாம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் நாவற்குளம் பகுதியை சேர்ந்த செல்வநிரோயன் (வயது 46) என்ற குடும்பஸ்தர் மரணமடைந்திருந்தார். குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடந்த 8 ஆம் திகதி வவுனியா பொலிசார் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் அப்பலோ என அறியப்பட்ட சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ரிக்ரொக்கில் பெண்களை இழிவுபடுத்திய பேர்வழி ஓகஸ்டில் வவுனியாவில் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருந்தார். மற்றுமொரு ரிக்ரொக் பிரபல்யம் பிரான்ஸைச் சேர்ந்த ராசன் என்பவர் சுயேட்சையாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர் வடக்கில் வன்முறைச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. வடக்கில் நடைபெறும் சில வன்முறைச் செயற்பாடுகளில் புலம்பெயர் தமிழர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுவருவதாகக் குற்றம் சாட்டப்படுகின்றது.

வன்முறைக் குழக்களின் வாள் வெட்டுக்கள் இதுவரை நின்றபாடாக இல்லை. வடக்கு ஆளுநர் பொலீஸ் பிரிவினருடன் இதுபற்றி உரையாடி அழுத்தங்களை வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். தேசிய மக்கள் சக்தியுடைய அரசில் பாதாளக் குழுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அரசு சூளுரைத்திருந்தது. அந்த வகையில் வடக்கில் உள்ள ஆவா குழு போன்ற வன்முறைக்கும்பல்களுக்கும் முடிவு கட்டப்பட வேண்டும். இக்குழுவின் தலைவர்களில் ஒருவரான சன்னா என்று அறியப்பட்ட நல்லநாதன் பிரசன்னா கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளமை தெரிந்ததே.

நாட்டின் அரிசி மாபியாக்களுக்கு வடக்கிலும் சவால்: நெல் அறுவடைக்கு முன் விலை நிர்ணயம்! கூட்டுறவுச் சங்கங்கள் விவசாயிகளிடமிருந்து நெல்கொள்வனவுத் திட்டம்!

நாட்டின் அரிசி மாபியாக்களுக்கு வடக்கிலும் சவால்: நெல் அறுவடைக்கு முன் விலை நிர்ணயம்! கூட்டுறவுச் சங்கங்கள் விவசாயிகளிடமிருந்து நெல்கொள்வனவுத் திட்டம்!

நெல் அறுவடைக்கு முன்னதாக நெல் மற்றும் அரிசிக்கான நிர்ணய விலையை அறிவிக்குமாறு அரசாங்கத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகக் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார். ஜனாதிபதி அனுரா நெல், அரிசி மாபியாக்களுக்கு எதிராக ஒரு அரிசிப் போரை ஆரம்பித்து உள்ளார். இந்நிலையில் ஆளுநரின் தலைமையில் நெல் சந்தைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை டிசம்பர் 24 இல் இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அதேபோன்று அரிசி ஆலை உரிமையாளர்கள், வடக்கில் விளையும் நெல்லில் பெரும் பகுதியைக் கொள்வனவு செய்வதற்கு ஏதுவாக அதிகரித்த கடன் வழங்கலுக்கு வங்கிகளுடன் கலந்துரையாடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

May be an image of 2 people, dais and textவடக்கில் 3 லட்சம் மெட்ரிக் தொன் நெல் விளையும் என எதிர்பார்க்கப்படுவதால், அதில்; ஆகக் குறைந்தது 30 ஆயிரம் மெட்ரிக் தொன்னையாவது நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் வடக்கிலுள்ள கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாகக் கொள்வனவு செய்வது தொடர்பான யோசனையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொருளியல் பேராசிரியர் கலாநிதி அகிலன் கதிர்காமர் முன்வைத்தார். வடமாகாணம் நெல் விளையும் பூமியாக இருந்தாலும் இதுவரை நெல் காயவிடுதல், களஞ்சியப்படுத்தல் வசதிகள் இங்கு இல்லை என்பதும் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது. இதன் காரணமாக விவசாயிகள் அறுவடை செய்தவுடனேயே குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளதையும் விவசாய அமைப்புகள் சுட்டிக்காட்டி இருந்தன.

வடக்கின் 5 மாவட்டங்களையும் சேர்ந்த விவசாய அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட அதன் பிரதிநிதிகள், விவசாயிகள் நெல் அறுவடை முடிந்தவுடனேயே கொடுப்பனவை எதிர்பார்ப்பார்கள் என்பதைக் குறிப்பிட்டார்கள். அத்துடன் இடைத்தரகர்கள் மூலமே பிரச்சினைகள் உருவாகுவதாகவும் நெல் சந்தைப்படுத்தல் சபையோ, கூட்டுறவு சங்கங்களோ ஈர நெல்லை கொள்வனவு செய்ய முன்வரவேண்டும் எனவும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கோரிக்கை முன்வைத்தனர்.  நெல் கொள்வனவுக்கான அறிவுறுத்தல் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், கூட்டுறவுச் சங்கங்கள் வசம் உள்ள நெல் உலர விடும் தளங்களை தயார்படுத்த பணித்துள்ளதாகவும் வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் தெரிவித்தார். அத்துடன் நெல்கொள்வனவுக்கு சங்கங்களுக்கு முற்கொடுப்பனவு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண பிரதம செயலர் தெரிவித்தார்.

அரசாங்கம் உள்ளூர் நெல் உற்பத்தி விவசாயிகளை பாதுகாப்பதற்காக அரிசி இறக்குமதியின் போது ஒரு கிலோ அரிசிக்கு 65 ரூபாய் இறக்குமதி வரி விதித்துள்ளது. இதன் மூலம் இறக்குமதி செய்யும் அரிசியின் விலையை கிலோவுக்கு 220 ரூபாய்க்கு விற்கப் பணித்துள்ளது. இதன் மூலம் உள்;ர் உற்பத்தியாளர்களையும் காப்பாற்றி அரிசியின் விலையை ரொக்கற் வேகத்தில் அதிகரிக்காமல் தடுத்து மக்களையும் காப்பாற்றியுள்ளது.

தோட்டங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்படுவதை தடுங்கள் – ஜனாதிபதி அனுரவுக்கு மனோ அவசர கடிதம்!

தோட்டங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்படுவதை தடுங்கள் – ஜனாதிபதி அனுரவுக்கு மனோ அவசர கடிதம்!

தோட்டங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் முயற்சியை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக்கோரி தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இரத்தினபுரி, எகலியகொடை மற்றும் சன்டர்லேன்ட் தோட்டத்தில் வசிக்கும் ஏழை மக்களை வெளியேற்ற தோட்ட நிர்வாகம் முயற்சிக்கின்றது. தோட்டங்களில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்த மக்கள் வெளியேற்றப்படக் கூடாது. புதிய காணி உரிமை வழங்கும் முன் அங்கு வசிப்பவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் தடை உத்தரவை அறிவிக்க வேண்டும். “மொடர்ன் ஸ்லேவரி (modern slavery)” என்று அடையாளம் காணப்பட்டுள்ள தற்போதைய அமைப்பை முற்றிலும் மாற்ற வேண்டும் என அவர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இம்முறை முதற் தடவையாக இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து மலையகத் தமிழரான சுந்தரலிங்கம் பிரதீப் பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் தோட்ட மற்றும் சமூகக் கட்டுமான பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மலையகத் தமிழர்களுக்கு காணிகளை வழங்கி வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கான தீவிர முயற்சிகளை அரசு எடுத்து வருவதை பிரதி அமைச்சர் பிரதீப் சுட்டிக்காட்டியிருந்தார்.

இலங்கையின் கடன்தரம் உயர்வுக்கு ரணிலின் அரசாங்கமே காரணம் – ஹர்ஷ டி சில்வா புகழாரம்

இலங்கையின் கடன்தரம் உயர்வுக்கு ரணிலின் அரசாங்கமே காரணம் – ஹர்ஷ டி சில்வா புகழாரம்

கடந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களே இலங்கையின் கடன் தரம் முன்னேற்றம் அடைந்துள்ளமைக்குக் காரணம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். கடனை மீள செலுத்த முடியாத நாடுகள் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டு உள்ளமை மகிழ்ச்சிக்குரியது. மற்றும் மூடீஸ் (ஆழழனல’ள) ரேட்டிங் நிறுவனத்தின் தரப்படுத்தலில் இலங்கை முன்னேற்றமடைந்து உள்ளமை ஆகியவை முன்னைய அரசாங்கத்துக்கு கிடைத்த வெற்றியென ஹர்ஷ் டி சில்வா தெரிவித்தார். அரசாங்கத்துக்கு கடனை மீள செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டமையானது தனியார் துறையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தமை தெரிந்ததே.

“எவ்வாறிருப்பினும் சர்வதேச சந்தையில் கடன் பெறக் கூடிய தரப்படுத்தலை நாம் இன்னும் அண்மிக்கவில்லை. அதற்கு மூடீஸ் ரேட்டிங் தரப்படுத்தலில் டீடீடீ நிலைக்கு வர வேண்டும். அந்த நிலைமையை அடைவதற்கு பொருளாதாரம் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும். கடந்த அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் மற்றும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களாலேயே இந்த பிரதி பலன் கிடைத்துள்ளது. தேர்தல் காலங்களில் தேசிய மக்கள் சக்தி குறிப்பிட்டதைப் போன்று கடந்த அரசாங்கத்தால் எட்டப்பட்ட இணக்கப்பாட்டை இரத்து செய்து, கடன் மறுசீரமைப்பில் திருத்தங்களை மேற்கொண்டிருந்தால் இந்தப் பலனைப் பெற்றிருக்க முடியாது” எனவும் ஹர்ஷ் டி சில்வா தெரிவித்தார்.

யேசு பிறந்த நாளில் கிளிநொச்சியில் குடிபோதையில் டிப்பரையோட்டி சிறுமியை பலியெடுத்த விபத்து !

யேசு பிறந்த நாளில் குடிபோதையில் டிப்பரையோட்டி சிறுமியை பலியெடுத்த விபத்து !

May be an image of 2 people and people smilingகிளிநொச்சியில் நேற்று டிப்பர் மோதி 2வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளார். தாய், தந்தை மற்றும் 7 வயது மகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாய் ஆபத்தான நிலையில் யாழ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். கிளிநொச்சி வலயக் கல்விப்பணிமனை முன்பாக நேற்று புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. மதுபோதையிலிருந்த டிப்பர் வாகன சாரதி மோட்டார் சைக்கிளில் குடும்பமாக வந்தவர்களை மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என தெரிய வருகின்றது. சராசரியாக நாளொன்றுக்கு 7 பேர் இலங்கையின் வீதிகளில் கொல்லப்படுகின்றார்கள். தென்னாசியாவில் இலங்கையின் வீதிகள் உயிராபத்தானவையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 24ஆம் திகதி காலை 6 மணி தொடக்கம் 25ஆம் திகதி காலை 6மணி வரையான 24 மணி நேர காலப் பகுதியில் நாட்டின் எப்பாகத்திலும் பாரிய விபத்து சம்பவங்களோ, உயிரிழப்புகளோ பதிவாகவில்லை என பொலிஸ் திணைக்களம் அறிவித்திருந்தது. இவ்வாறு அறிவிக்கப்பட்டு அடுத்த 90 நிமிடத்தில் இவ்விபத்து ஒரு குழந்தையின் உயிரைப் பறித்தது. பண்டிகை காலத்தை முன்னிட்டு வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் பொலிஸாரினால் விசேட  போக்குவரத்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த 24 மணி நேரத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 சாரதிகள் உட்பட, வீதி சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 8,747 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இனிவரும் காலங்களில் இவ்வாறு விதிமீறல்களுக்கு உட்படும் வேளையில் சாரதிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்  எனவும் பொலிஸ் திணைக்களம் தெரிவித்திருந்தது.

வறிய போராளிக் குடும்பங்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுப்பனவு அதிகரிப்பு !

வறிய போராளிக் குடும்பங்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுப்பனவு அதிகரிப்பு !

பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் 2025ஆம் ஆண்டுக்கான அஸ்வெசும கொடுப்பனவுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 2025 ஜனவரி முதல் மார்ச் வரை ‘நிலையற்றவர்கள்’ என்ற சமூகப்பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள 4,80, 000 நபர்களுக்கு தலா 5,000 ரூபாவும் ‘பாதிப்புக்குட்பட்டவர்கள்’ என்ற சமூக பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள 4,80, 000 நபர்களுக்கு 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரை தலா 5,000 ரூபாவும்  அஸ்வெசும கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பால் வடக்கு, கிழக்கு, மலையகத்தில் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள குடும்பங்கள் பெரிதும் பயனடைவர். குறிப்பாக தமிழ்ப் பகுதிகளிலுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்கள் போரில் அங்கவீனமடைந்துள்ளவர்கள், முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு இது நன்மை கொடுக்கும். ‘வறியவர்கள்’ என்ற சமூக பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள 9,60,000 நபர்களுக்கு 2025 ஜனவரி முதல் 2026 ஜூன் வரை தலா 10, 000 ரூபாவும் ‘மிகவும் வறியவர்கள்’ என்ற சமூகப்பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள 4,80, 000 நபர்களுக்கு 2025 ஜனவரி முதல் 2026 ஜூன் வரை 17, 500 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 அல்லது 2க்கு குறைவாகக் காணப்பட்டால் பயனாளிகளுக்கு உரிய கொடுப்பனவில் அரைவாசி மாத்திரமே வழங்கப்படும் என்றும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 4,10, 000 மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி பெறுபவர்களுக்கு தலா 7,500 ரூபாவும், சிறுநீரக நோய்க்கான உதவி பெறும் 50, 000 பேருக்கு தலா 7,500 ரூபாவும் மற்றும் முதியோருக்கான உதவி பெறும் 8,20, 000 பேருக்கு தலா 3,000 ரூபாவும் 2025 ஜனவரி முதல் ஜூன் வரை வழங்கப்படவுள்ளன.

இது பற்றிக் கருத்து வெளியிட்ட போராளிகளான மாற்றுத் திறனாளிகளைக் கொண்ட ஒளிரும் வாழ்வு அமைப்பின் முக்கியஸ்தர் அனஸ்லி, “தேசிய மக்கள் சக்தி அரசு சரியான திசையில் அடி எடுத்து வைத்துள்ளது. ஆனால் குறிப்பாக மாற்றுத் திறனாளிகள் விடயத்தில் இந்த அதிகரிப்பு மிகச் சொற்பம்” எனத் தெரிவித்தார். “மாற்றுத் திறனாளிகளுடைய நிலை வானவில் போன்று பல நிலைப்பட்டது. இவர்களுடைய நிலையை ஆராய்ந்து அதற்கமைவாக விசேட திட்டங்களின் கீழ் அவர்களுக்கு விசேட கொடுப்பனவுகள், அவர்களுக்கு உதவியாளர்கள், மற்றும் தேவயான உபகரணங்கள் வழங்க புலம்பெயர்ந்த தமிழர்களும் அரசும் முன்வரவேண்டும்” என்றும் அனஸ்லி தெரிவித்தார்.

மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் வடக்கு தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும் !

மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் வடக்கு தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும் !

வடமாகாணத்தில் உள்ள 50,000 மீனவக் குடும்பங்களின் பிரச்சினையில், வடக்கில் உள்ள தமிழ் தேசியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனத்தைக் கலைக்க வேண்டும், என மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் பகீரங்க அழைப்பு விடுத்துள்ளனர். கடல்தொழில் அமைச்சர் மீனவர்களுடைய பிரச்சினைகளை அணுகி, அதனை ஜனாதிபதிக்கும் கொண்டு சென்று, ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் இப்பிரச்சினை பேசப்பட்டது. ஆனாலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இப்பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகும்படி கோரியிருந்தார். அதற்கு மறுப்புச் சொல்லும் வகையில் 17 இந்திய மீனவர்களும் அவர்களுடைய மீன்பிடி படகும்; கைப்பற்றப்பட்டு, ஜனவரி ஏழவரை தடுத்தவைக்கப்பட்டு உள்ளனர். தண்டனைக்கூடாகவே இவ்விடயத்தை கையாளமுடியும் என வடக்கு மீனவர்களைப் போன்று இலங்கை அரசும் நம்புகின்றது.

ஆனால் வடக்கில் உள்ள தமிழ் தேசியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்விடயம் பற்றி பேச மறுக்கின்றனர். அதனாலேயே மீனவர்கள் வடக்கு தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களை நோக்கி இக்கோரிக்கையை வைத்தள்ளனர். வடக்கில் உள்ள தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவின் முகவர்கள் போல் செயல்படுவதால் மீனவர் பிரச்சினைகளில் இவர்கள் தலையீடு செய்வதில்லை. மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தியாவில் சொத்துக்களும் உண்டு. அதுமட்டுமல்ல மாகாணசபை, 13வது திருத்தம் என்ற விடயங்களில் தமிழ் மக்களுக்கு கதையளப்பதற்கு இந்தியா இவர்களுக்கு அவசியமாகின்றது.

போர்க்குற்றம் சாட்டப்பட்ட ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவிக் காலத்தை நீடிக்கும் திட்டம் என்பிபி யிடம் இல்லை!

போர்க்குற்றம் சாட்டப்பட்ட ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவிக் காலத்தை நீடிக்கும் திட்டம் என்பிபி யிடம் இல்லை!

போர்க்குற்றம் சாட்டப்பட்ட பாதுகாப்புப் படைகளின் தளபதியாக இருந்த சவேந்திர சில்வாவின் பதவிக்காலத்தை நீடிக்கும் திட்டம் என்பிபி அரசு இல்லை எனத் தெரியவருகின்றது. தமிழ் தேசியத் தலைமைகளின் நண்பனாக எப்போதும் அறியப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவிக்காலத்தை டிசம்பர் 31 வரை நீடித்திருந்தார். ஆனால் தற்போதைய அரசு இவருடைய பதவியை நீடிக்க மாட்டாது எனத் தெரியவருகின்றது. அதனால் ஜெனரல் சர்வேந்திர சில்வா டிசம்பர் 31 உடன் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேசமயம் கனடா சென்றுள்ள பா உ எஸ் சிறிதரன், கனடிய அரசு, இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு தொடர்ந்து நீதி கோரி வருவதற்கு நன்றி தெரிவித்துள்ளார். மேற்குலகம் காஸாவில் தொடர்ந்தும் இனப்படுகொலை செய்வதை ஆதரித்துவரும் கனடா, தமிழ் மக்கள் விடயத்தில் முதலைக் கண்ணீர் வடிக்கின்றது. கனடாவில் உள்ள 3,00,000 தமிழ் வாக்காளர்களுக்காக கனடா நீலிக் கண்ணீர் வடிக்கின்றதேயல்லாமல் அவர்களுக்கு மனித உரிமை பற்றி எவ்வித அக்கறை கிடையாது என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

வினைத்திறனற்ற அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் – பூர்த்தி செய்யப்படாத இருதயசிகிச்சைப் பிரிவும் – வவுனியாவில் 54 இருதய நோயாளர் மரணங்கள் !

வினைத்திறனற்ற அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் – பூர்த்தி செய்யப்படாத இருதயசிகிச்சைப் பிரிவும் – வவுனியாவில் 54 இருதய நோயாளர் மரணங்கள் !

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இருதய மற்றும் சிறுநீரக நோய் பிரிவு  திறந்துவைப்பு – Northern Provincial Council, Sri Lankaநடப்பு வருடத்தில் மட்டும் வவுனியா பொது வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சை செய்ய முடியாத காரணத்தினால் இவ்வருடம் 54 இருதய நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் 46 நோயாளிகள் 45 வயதுக்கு உட்பட்டவர்களாகும். நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியுடன் 3,329 மில்லியன் ரூபா செலவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிதாக இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் நடுப்பகுதியிலிருந்து அப்பிரிவு இயங்கி வருகின்றது.

இவ் இருதய சிகிச்சை பிரிவானது ஆய்வு கூடம் (Cath Lab), கார்டியோ டோராசிக் ஆய்வுகூடம் (Cardio-thoracic theatre), இருதய அவசர சிகிச்சைப் பிரிவு (Cardiac ICU), எக்கோ கார்டியோகிராபி (Echo Cardiography), உடற்பயிற்சி ECG, நடமாடும் இரத்த அழுத்த கண்காணிப்பு பிரிவு (Ambulatory BP Monitoring), நடமாடும் ECG கண்காணிப்பு பிரிவு (Ambulatory ECG monitoring) போன்ற நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் இப்பிரிவு பல குறைபாடுகளுடன் ஒழுங்காக இயங்கவில்லை எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது. ஒரேயொரு இருதய நோயியல் நிபுணருடன் இயங்கும் இப்பிரிவில் போதிய பயிற்சி பெற்ற வைத்தியர்கள், தாதியர்கள், பணியாளர்கள் மற்றும் உபகரணங்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இருதய நோய் சிகிச்சைப் பிரிவில் அதனைக் கண்டறியும் ஆஞ்சியோகிராம் பரிசோதனைக்கு தேவையான உபகரணங்கள் இல்லை. இதேமாதிரியானவொரு நிலமையே சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும் காணப்படுகிறது. இதனால் இருதய நோய் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

வடமாகாண சபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் அதிதீவிர சிகிச்சைப்பிரிவு அமைப்பதற்கு என 430 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் பாதி நிதிக்கு கட்டிடமும், பாதி நிதிக்கு உபகரணங்களும் என தீர்மானிக்கப்பட்டு கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது. உபகரணக் கொள்வனவுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அன்றைய மாகாண சபை சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கத்தினாலும் அன்றைய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர் கேதீஸ்வரனாலும் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.

பல கோடி ரூபா செலவில் விபத்து அறுவை சிகிச்சைக் கூடம் அமைக்கப்பட்டும், இறுதியில் ஜெனரேற்ரர் வசதியில்லாததால்,  சிகிச்சைகள் நடைபெறாது வருடக்கணக்காக பூட்டிக் கிடக்கிறது.  சாவகச்சேரியிலும் விபத்திற்குள்ளாகி வரும் நோயாளிகள் யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

தென்னாசியர்கள் இருதய நோயினால் பாதிக்கப்படுவதும் உயிரிழப்பதும் ஒப்பீட்டளவில் அதிகம். இந்தச் சூழலில் வவுனியா பொது வைத்தியசாலையில் பல கோடி ரூபா செலவில் இருதய நோய் பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டாலும் இருதய நோயைக் கண்டறியும் ஆஞ்சியோகிராம் பரிசோதனைக்கு தேவையான உபகரணங்கள் வவுனியா பொது வைத்தியசாலைக்கு வழங்கப்படவில்லை.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்றதத்துக்கு தெரிவாகியுள்ள கால்நடை வைத்தியர் திலகநாதன், தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியலில் தெரிவாகியுள்ள சத்தியலிங்கம் ஆகிய இருவரும்  வைத்தியத்துறையை சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்களோடு யாழில் இருந்து என்பிபி சார்பில் பாராளுமன்றம் சென்றுள்ள வைத்தியர் சிறிபவானந்தராஜா, சுயேட்சையாக பாராளுமன்றம் சென்றுள்ள வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா ஆகியோரும் இணைந்து, வவுனியா பொது வைத்தியசாலையின் இருதயநோய் பிரிவை முறைப்படி இயங்க வைப்பதற்கான அழுத்தத்தை சுகாதார அமைச்சுக்கு வழங்க முன்வர வேண்டும். இல்லையேல் பரோபகாரிகளை தொடர்பு கொண்டு சுகாதார அமைச்சின் அனுவரணையோடு அதனை வாங்குவதற்கு வழியேற்படுத்த வேண்டும்.

可能是 4 個人、講臺和文字的圖像

அரச அதிகாரிகளின் மற்றும் அரசியல்வாதிகளின் தூரநோக்கற்ற செயற்திட்டங்களாலும் மற்றும் வினைத்திறனற்ற செயல்களாலும் பாதிக்கப்படுவது பொதுமக்களே. அவ்வாறான பொறுப்பற்று செயற்படும் அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகளை சட்டத்தின் முன்நிறுத்தி விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தி தண்டனைகள் வாங்கிக் கொடுக்கப்பட வேண்டும். அது தான் அநியாமாக பலியாகிக்கிக் கொண்டிருக்கின்ற உயிர்களுக்கு நிவாரணமாகவும் ஏனையவர்களுக்கு எச்சரிக்கையாகவும் இருக்கும் என்கிறார்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள்.