22

22

இலங்கையின் பொருளாதாரக் குறியீடுகள் என்பிபி அரசுக்கு சாதகமாக உள்ளது!

இலங்கையின் பொருளாதாரக் குறியீடுகள் என்பிபி அரசுக்கு சாதகமாக உள்ளது!

நிதித் தரநிர்ணய நிறுவனமான பிச் ரேற்றிங் (Fitch Rating) இலங்கையினுடைய கடன்பெறு தகுதியை அதிகரித்துள்ளது. 2022இல் நாட்டினுடைய கடன்களை திருப்பிச் செலுத்த முடியாததால் நெருக்கடிக்கு உள்ளான இலங்கை அதனுடைய அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான டொலர் கையிருப்பு இல்லாமல் ஸ்தம்பித்த நிலையிலிருந்தது.

இலங்கையைக் காப்பாற்றுகின்றோம் என்ற பெயரில் சர்வதேச நாணயநிதியம் கடனின் வட்டியையும் முதலையும் தங்களுக்கு சேதமில்லாமல் பெறுவதற்கான, கடன் மீள்செலுத்துகையை மீள்வரைபு செய்து அப்போது ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்கிரமசிங்கவுடன் உடன்பாடும் எட்டப்பட்டது. அதன் பின் ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு பாதகமில்லாமல் அல்லது மக்களுக்கு வரக்கூடிய நெருக்கடிகளை கூடியவரை குறைத்து இந்த கடன் மீள்செலுத்துகையை மேற்கொள்ள பல ஆடம்பரச் செலவீனக் குறைப்புகளையும், வருமானத்தை அதிகரிக்கும் திட்டங்களையும் முன்னெடுத்தமைக்கு தற்போது ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி கிட்டியுள்ளது. இதுவரை Issuer Default Rating (IDR), ‘RD’ (Restricted Default) இல் இருந்து ற்கு ‘CCC+’ ற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இலங்கை பெரும்பாலான நாடுள் நிறுவனங்களோடு கடன் மீள்வரைபை மேற்கொண்டுவிட்டது. அதனால் கடன் மீள்செலுத்துகையில் இலங்கைக்கு அதற்கான கால அவகாசம் கிடைத்துள்ளது. 2026இல் இலங்கையின் அந்நியச்செலாவணிக் கையிருப்பு 8.7 பில்லியன் அமெரிக்க டொலராக இருக்கும் என பிச் ரெற்றிங் மதிப்பிடுகின்றது. அத்தோடு அரசின் கடனுக்கும் மொத்த தேசிய உற்பத்திக்கும் உள்ள விகிதம் 90மூ 2028இல் குறையும் என்றும் இதற்கான வட்டிக்கும் மொத்த தேசிய உற்பத்திக்கும் உள்ள விகிதம் 2021 இல் 67மூ இல் இருந்தது 42மூ ற்கு குறையும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் சிசிசி ரேற்றிங்கில் உள்ள நாடுகளில் இவ்விகிதாசரம் 16மூ ஆக இருக்க வேண்டும். இன்னமும் இலங்கையின் இந்த விகிதம் மிக உயர்வாகவே உள்ளது.

அதேசமயம் அரசாங்கத்தின் வருமானத்திற்கும் மொத்த தேசிய உற்பத்திக்குமான விகிதாசாரம் 2023இல் 11மூ ஆக இருந்து 2026இல் 15மூ ஆக உயரும் எனவும் பிச் ரேற்றிங் மதிப்பிட்டுள்ளது. இலங்கையுடைய பொருளாதார வளர்ச்சி 2022இல் 7.4 வீதமாக இருந்து 2023 இல் 2.2 வீதமாகச் சுருங்கியது. 2025 – 26 இல் இது 3.6 முதல் 4.2 வீதமாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. விலைவீக்கம் 2022இல் 67 வீதமாக இருந்து 2025 – 26 இல் 5 வீதத்திற்குள் கட்டுப்படுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தரவுகளின் அடிப்படையில் புதிய அரசாங்கம் பொருளாதார நிலையில் சரியான பாதையில் இருந்தாலும் அபாயங்கள் முழுமையாகக் கடக்கப்படவில்லை. அதற்கான கால அவகாசமும் புதிய அரசுக்கு இல்லை.

கல்விக்கு ஒரு பிள்ளைக்கு மாதம் 15,000 ரூபாய்; செலவு! தனியார் கல்வி நிறுவனங்களின் முடிவின் ஆரம்பம்!

கல்விக்கு ஒரு பிள்ளைக்கு மாதம் 15,000 ரூபாய் செலவு! தனியார் கல்வி நிறுவனங்களின் முடிவின் ஆரம்பம்!

 

பாடசாலை ஆசிரியர்கள் தனியார் கல்வி நிறுவனங்களில் வகுப்புகளை நடாத்துவதற்கு தடைவிதித்து மேல் மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர்கள் பாடசாலை நேரம் முடிந்த பிறகும், வார விடுமுறை நாட்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் கூடுதல் வகுப்புகளை பல்வேறு வெளி இடங்களில் நடத்தி வருமானம் ஈட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அறிவுறுத்தல்களை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் கல்வி அமைச்சுக்களால் சுற்றறிக்கைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.

இந்நடைமுறையை யாழ் மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்பள்ளி கல்விச் செயற்பாட்டாளர் என் சச்சிதானந்தன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். வடக்கில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா பயிற்சி நெறிகளை யாழ் மற்றும் வவுனியா பல்கலைக்கழகங்களில் ஆரம்பிப்பதில் முன்நின்ற இவர், இலவசக் கல்வி பெயரளவில் உள்ளதேயல்லாமல் உண்மையில் மூன்று பிள்ளைகளையுடைய குடும்பம் மாதம் 50,000 ரூபாய்களை தனியார் கல்விக்குச் செலவிடவேண்டியுள்ளதாக தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இதே கருத்தை வெளியிட்ட வறணி ஆரம்பப் பாடசாலையின் அதிபர் நாகப்பர் கண்ணதாசன், 9ம் தரம் வரை மாணவர்கள் தனியார் கல்வியை நாட வேண்டிய அவசியம் இல்லை எனத் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்வது கற்பதற்காக என்பதிலும் பார்க்க அதுவொரு கலாச்சாரமாகிவிட்டது.

நேர்காணலை மேற்கொண்ட த ஜெயபாலன், “தமிழ் மாணவர்கள் தனியார் கல்விக்கு இப்பெரும்தொகையைச் செலவழிக்க, இவர்களின் பெற்றோர்கள் செல்வந்தர்களாக வந்துவிட்டார்களா? அல்லது மாணவர்கள் சோம்பேறிகளாக ஆகிவிட்டார்களா?” எனக் கேள்வி எழுப்பினார். தன்னூக்கக் கல்வி முக்கியத்துவம் பெற்றுள்ள இன்றைய காலகட்டத்தில், தெரியாத ஒரு விடயத்தை கற்றுக்கொள்வது என்பது ஒரு பட்டனை அழுத்தும் தொலைவில் இருக்கும் இன்றைய காலத்தில் தனியார் கல்வி ஏன் அவசியம் என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. கல்வியில் முன்னணி வகிக்கும் நாடுகளில் தனியார் கல்வி நிறுவனங்கள் இல்லை என்பதைக் கவனிக்க.

இதேவேளை, தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் இறுக்கமான தீர்மானங்களை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கடந்த வாரம் நடைபெற்ற மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மேற்கொண்டிருந்தார். இதன்படி, தரம் 9 மற்றும் தரம் 9 இற்கு கீழப்பட்ட வகுப்புக்களுக்கான தனியார் கல்வி செயற்பாடுகள் மற்றும் குழு வகுப்புக்களை வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் வேளைகளிலும் ஞாயிற்றுக்கிழமை முழு நேரமாகவும் நிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

தனியார் கல்வி நிலைய வாசலில் பெற்றோர்கள் காத்திருப்பதனால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிகளை உரிய முறையில் நிர்வாகிகள் கட்டுப்படுத்த வேண்டும். தவறினால் பொலிஸாரின் உதவி பெற்றுக்கொள்ளப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக கடந்த காலங்களிலும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆயினும் அவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தபடவில்லை. புதிய அரசாங்கத்தின் கீழ் இவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

கூகிளும் ஆட்குறைப்புச் செய்கின்றது! இலங்கை அரசும் ஆட்குறைப்புச் செய்ய வேண்டியுள்ளது!

கூகிளும் ஆட்குறைப்புச் செய்கின்றது! இலங்கை அரசும் ஆட்குறைப்புச் செய்ய வேண்டியுள்ளது!

கூகுளின் நிர்வாகப்பிரிவில் பணியாற்றும் 10 சதவீதம் ஊழியர்களை பணி விலக்கு செய்யப் போவதாக கூகுள் அறிவித்துள்ளது. கூகுளின் செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி “நிர்வாகப் பிரிவில் ஆட்குறைப்பு செய்யப்படும் அதேநேரம் சிலரது பணிநிலை வேறு பிரிவுகளுக்கு மாற்றப்படும். இதன் மூலம் கூகுளின் செயல்திறனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்கின்றது கூகுள்.

“கூகுளே உலகமயம்“ என்று சொல்லுமளவுக்கு எந்த விடயமாக இருந்தாலும் கூகுளில் பதில் கிடைத்துவிடும். இந்த நிறுவனத்தில் உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்காண ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். தமிழ்நாட்டில் பிறந்த தமிழரான சுந்தர் பிச்சை கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பில் உள்ளார். கடந்த வருடம் 2023 இல் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஆல்பபெட் நிறுவனம் 12 ஆயிரம் ஊழியர்களை நீக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையை பொறுத்தவரை கூகுகளை முன்மாதிரியாக கொண்டு அரச துறைகளில் தேவைக்கு அதிகமாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அரச ஊழியர்களை பணிநீக்க வேண்டும் எனபது சர்வதேச நாணய நிதியக் கடன் மீள்வரைவு உடன்பாட்டின் நிபந்தனைகளில் ஒன்று. குறிப்பாக 14 இலட்சம் அரச ஊழியர்களை 7 இலட்சமாக படிப்படியாக குறைப்பதன் மூலம் அரச இயந்திரத்தை வினைத்திறனாக செயற்பட வைக்கப்பட வேண்டும் என்பதே இலக்கு. அதுதவிர சிலரது பணிநிலைகளை வேறு பிரிவுகளுக்கு மாற்றலாம். இனிவரும் காலங்களில் இலங்கை டிஜிற்ரைலைசேனை நோக்கி நகரும்போது அரசதுறையில் பணிபுரியும் ஊழியர்களை அதற்கு தயார்படுத்தலாம்.

அவர்களினுடைய கல்வித்திறனை புதிய துறைகளில் உருவாகப்போகும் வேலைகளுக்கு மேம்படுத்தலாம் (upskill). தேவைக்கதிகமாக அரச துறைகளில் ஊழியர்களை பணிக்கமர்த்தி அவர்களுக்கு செய்வதற்கு கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் இல்லாமல் வைத்திருப்பதன் மூலம் மக்களின் வரிப்பணம் விரையமாக்கப்படுவதை தவிர்க்கலாம். அதற்காக இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டின்படி 1500 அரச பணியாளர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. அரச பணியாளர்கள் வேகமான மாற்றம் ஒன்றிற்குள் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஜனாதிபதியின் பல்வேறு தகவல்களிலும் இது வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

 

எளிமையாக இருப்பது வைரலாகும் அளவுக்கு அரசியல்வாதிகளும் மக்களும் கெட்டுப்போனார்களா?

எளிமையாக இருப்பது வைரலாகும் அளவுக்கு அரசியல்வாதிகளும் மக்களும் கெட்டுப்போனார்களா?

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு அநுரகுமார திசநாயக்க ஜனாதிபதியானதிலிருந்து அவரது எளிமையும் ஆடம்பரமற்ற நடவடிக்கைகளும் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஜனாதிபதி ஒருவர் இவ்வாறு மக்களோடு மக்களாக கலந்து வாழ்வது, நடமாடுவது என பொதுமக்கள் எளிதில் அணுகக் கூடிய நபராக இருப்பது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வாதப்பிரதிவாதங்களையும் தோற்றுவித்துள்ளது.

இலங்கை அரசியலைப் பொறுத்தவரை பெரும்பாலும் பிரபுத்துவ, நிலவுடமையாளர்களும் மற்றும் மேல்தட்டு வர்கத்தினரும் அவர்களின் வாரிசுகளுமே மாறி, மாறி அதிகாரத்தில் இருந்திருக்கின்றார்கள். இந்தப்போக்கை இலங்கையில் மட்டுமல்ல தெற்காசியாவிலும் பெரும்பாலான நாடுகளில் காணலாம்.

அநுரகுமார தான் முதல் தடவையாக தரைப் பாதையினூடாக யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதியாவர். சமீபத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுரகுமார நாடு திரும்பும் போது அவர் பயணித்த விமானத்தில் எக்கொனமிக்ஸ் வகுப்பில் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்த பயணிகளுடன் நலம் விசாரித்து அளவளாவியது சுற்றுலாப் பயணிகள் உட்பட பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்து. இந்த சம்பத்தை நேரில் பார்த்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உறவினர்கள் அநுரகுமாரவின் நடத்தையை பாராட்டி சமூகவலைத்தளத்தில் பகிர்ந்திருந்தனர்.

நேற்றைய தினம் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாயாரை பார்க்க சென்ற ஜனாதிபதி அநுர மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து தாயாரை பார்வையிட்ட செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் வைரலாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தாயாரைப் பார்ப்பதற்காக, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். இதன்போது பிடிக்கப்பட்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இவ்வாறு அதிகாரத்தின் உச்சத்திலிருக்கும் ஆட்சித் தலைவர்கள் மேற்கு நாடுகளில் தமது அன்றாட வாழ்க்கையில் தமக்கான வேலைகளை அவர்களே செய்வது சர்வ சாதாரணம். குறிப்பாக தமது தனிப்பட்ட குடும்ப தேவைகளுக்காக பொருட்கள் வாங்க செல்லும் அவர்கள், மக்களோடு மக்களாக வரிசையில் காத்து நின்று பணம் செலுத்தும், தமது அலுவல்களை முடிப்பதும் பேசு பொருளாவது இல்லை. ஜேர்மனியின் முன்னாள் கன்சலரின் அங்கேலா மார்க்கல் பேர்லினில் பல்பொருள் அங்காடியில் தானே சென்று பொருட்கள் வாங்குவது தான் வழமை. அதேமாதிரி நெதர்லாந்து ஆட்சியாளர் தானே சென்று வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவது வழமை. ஆட்சியாளர்கள் மக்களோடு மக்களாக வாழும் போது தான் அவர்கள் மக்களுக்கு என்ன தேவை என்பதையும் அறியக் கூடியதாக இருக்கும்.

இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்களும், அரசியல்வாதிகளும் பெரும்பாலும் அரச மருத்துவமனைகளை நாடுவது இல்லை. மாறாக இவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனைகளையே நாடும் போக்கு காணப்படுகிறது. நாட்டின் – மக்களின் தலைவர்களான பிரதிநிதிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசு மருத்துவமனைகளை நாடாத காரணத்தால் அரச மருத்துவமனைகள் இயங்கும் நிலை பற்றிய அடிப்படை அறிவு இதுவரை ஆட்சியில் இருந்த எந்த அரசியல் தலைவர்களுக்கும் தெரிந்ததில்லை. இது மருத்துவ மாபியாக்கள் இலகுவாக தம் இஷ்டத்துக்கு செயல்படவும் , மருத்துவர்களின் அசட்டையீனங்களுக்கும், மருத்துவசாலை அதிகாரிகளின் அடாவடிகளுக்கும் காரணமாக உள்ளது.

வடக்கில் இடம்பெறும் மருத்துவ மாஃபியாக்களை பற்றி தமிழ்தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் யாருமே மறந்தும் வாய் திறந்தது கிடையாது. ஆர்வக்கோளாறு பாராளுமன்ற உறுப்பினர் ஊசி அர்ச்சுனா மருத்துவ மாபியாக்களை சாடி பாராளுமன்ற ஆசனம் ஒன்றை பெற்றிருந்தாலும் கூட ஆக்கப்பூர்வமான வகையில் மருத்துவமாபியாக்களை அவரால் அம்பலப்படுத்த முடியவில்லை. இதேவேளை தமிழர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து செல்லக்கூடாது, நாட்டில் அதனால் தமிழர் உரிமைகளை பெறுவது சிக்கலாகும் என கூவும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னுடைய மருத்துவ சிகிச்சைக்காக பாராளுமன்ற அமர்வுகளுக்கு விடுப்பு எடுத்து அண்மையில் வெளிநாடு சென்றிருந்ததமையும் இங்கு கவனிக்கத்தக்கது. அவர் மட்டுமல்ல சமீபத்தில் திடீர் நோய் வாய்ப்பட்ட சிவாஜிலிங்கம் கொழும்பில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

எப்படியாயினும் ஜனாதிபதி அநுரகுமாரவின் எளிமையான நடவடிக்கைகள் ஒரு பக்கம் விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது. ஜனாதிபதி தானாகவே கார் கதவை திறந்து கொண்டு இறங்குவது. மக்களை மிக நெருங்கி போய் உரையாடுதல் போன்ற செயற்பாடுகளின் போது ஜனாதிபதியினுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சிக்கலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.