11

11

கொழும்பில் தமிழர்களை மட்டும் இலக்கு வைத்து பொலிஸ் பதிவு – பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் வழங்கியுள்ள விளக்கம் !

கிருலப்பனை, வெள்ளவத்தை, தெஹிவளை, பம்பலப்பிட்டி, நாரஹேன்பிட்டி, கொட்டாஞ்சேனை, மட்டக்குளிய மற்றும் மோதர பொலிஸ் எல்லைகளுக்குள் மீண்டும் பதிவு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக நாடாளுமன்றில் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பதிவு நடவடிக்கைள் ஏன் இடம்பெறுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியிருந்தார்.

யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னரும் கொழும்பில் வசிக்கும் தமிழர்களிடம் பொலிஸார் விபரம் கோருவது குறித்தும் மனோ கணேசன் கேள்வியெழுப்பியிருந்தார்.

மேலும் குறித்த விபரத்தில் என்ன சமயத்தவர் என்று கேட்பது தீபாவளி பொங்கலுக்கு வாழ்த்து அனுப்பவா என்றும் மனோ கணேசன் கேள்வியெழுப்பியிருந்தார்.

இதேநேரம் குறித்த பதிவு நடவடிக்கைகளுக்கான விண்ணப்பங்கள் சிங்கள மொழியில் மாத்திரமே உள்ளதாகவும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இது தொடர்பில் பேசிய பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இன்று பாராளுமன்றத்தில் , அதிகரித்து வரும் குற்றச் செயல்களை அடுத்து இலங்கையின் முழு மக்களும் பொலிஸில் பதிவு செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.

“எந்த இனத்தவர் என்பதை பொருட்படுத்தாமல் முழு மக்களையும் பதிவு செய்ய முடிவு செய்துள்ளோம். மூன்று மொழிகளிலும் அச்சிடப்பட்ட பதிவு படிவங்கள் விநியோகிக்கப்படுவதை நான் பார்க்கிறேன்,” எனவும் அவர் தெரிவித்தார்

எவரையும் எந்த நேரத்திலும் அடையாளம் காணக்கூடிய வகையில் இலங்கை மக்கள்தொகையின் இணையத் தரவுத்தளத்தை நாங்கள் உருவாக்குவோம் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ் நகரில் பாடசாலை மாணவர்களை குறிவைத்து மாவா போதைப்பொருள் விற்பனை !

யாழ் நகரில் பெருமளவான மாவா போதைப்பொருளுடன் ஒருவர் இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த 33 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 3 கிலோ 686 கிராம் நிறை கொண்ட மாவா போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழர்களுக்கு எதிராக நடக்கும் அடாவடிகளை பொறுத்து வேடிக்கை பார்ப்பதுதான் ஐநாவின், மனித உரிமை ஆணைக்குழுவின் வேலை.” – துரைராசா ரவிகரன் 

மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், முதலில் வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தீர்வை கூறுங்கள் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நேற்று(10) வடக்கு, கிழக்கில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன, இந்நிலையில் அவ்விடயம் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் குறித்து மேலதிகமாக அவர் கருத்து தெரிவிக்கையில்,

“காணாமலாக்கப்பட்ட உறவுகள் 2500 நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வீதிகளில் நின்று தம் உறவுகளுக்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் முடிவுகள் எதுவுமில்லை. இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம். மனித உரிமை ஆணையக்குழு சம்பந்தமாக அல்லது ஐ.நா சம்பந்தமாகவோ எமக்கு எந்த தீர்வும் தரவில்லை.

எங்கள் நிலங்கள் பறிக்கப்படுகின்றன, மதங்கள் அழிக்கப்படுகின்றன, கடலிலே மீன்பிடிக்க முடியவில்லை, வயலிலே பயிர்கள் , விவசாயம், தோட்டங்கள் செய்ய முடியவில்லை, காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடி கிடைக்கவில்லை, சிறையிலிருப்பவர்களை விடுவிக்கவில்லை. இவ்வாறு இலங்கை அரசாங்கம் செய்யும் போது அதனை பொறுத்து வேடிக்கை பார்ப்பதுதான் ஐநாவின், மனித உரிமை ஆணைக்குழுவின் வேலை.

இவ்வாறான சூழ்நிலையில், சர்வதேச மனித உரிமைகள் தினத்தை அனுஷ்டிப்பது பிழை என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.” என்றார்.

பாடசாலை மாணவிகள் மத்தியில் அதிகரிக்கும் போதை மாத்திரை பாவனை – இராணுவப் புலனாய்வுப் பிரிவு

அநுராதபுரம் மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பாடசாலை மாணவிகள் மத்தியில் போதை மாத்திரை பாவனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி, அனுராதபுரத்தில் உள்ள மருந்தகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

குறித்த மருந்தகத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் மத்தியில் போதை மாத்திரை பாவனை அதிகரித்துள்ளதாக இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், போதைப்பொருள் வாங்குவதற்காக பாடசாலை மாணவிகள் முறையற்ற விதத்தில் பணம் ஈட்டியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், அனுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ, களுத்துறை மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் மத்தியிலும் போதை மாத்திரை பாவனை அதிகரித்துள்ளதாக அதிபர்கள் தம்மிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

“விரைவில் ஜம்மு காஷ்மீருக்கு மத்திய அரசு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும்.” – உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 தற்காலிகமானதே என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த 5 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தனது தீர்ப்பை வழங்கி வருகிறது. தீர்ப்பை வாசிப்பதற்கு முன்பாக, இந்த வழக்கில் 3 விதமான தீர்ப்பு உள்ளதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர் தீர்ப்பை வாசித்தார்.

அதில் அவர் கூறியதாவது:

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 தற்காலிகமானதே. சட்டப்பிரிவு 1 மற்றும் 370ன் படி ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. சட்டப்பிரிவு 370 ஏற்படுத்தப்பட்டது ஒரு இடைக்கால ஏற்பாடு. சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வதற்கு இந்திய குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த பிறகு அது தனித்த இறையாண்மையைக் கொண்டிருக்கவில்லை.

ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் ஒருங்கிணைக்கவே சட்டப்பிரிவு 370 இருந்தது. இந்தியாவில் இருந்து அதனை பிரிப்பதற்காக அல்ல. சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வதற்கான அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு. இதற்காக அவர் சட்டப்பிரிவு 370(3)ஐ பயன்படுத்தியதில் தவறு இல்லை. குடியரசுத் தலைவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியது செல்லுபடியாகும். சட்டப்பிரிவு 370(1)(d)-ன்படி அரசியலமைப்பின் அனைத்து விதிகளையும் ஜம்மு காஷ்மீருக்குப் பயன்படுத்தலாம். ஜம்மு காஷ்மீர்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய மாநில அரசின் ஒப்புதலைப் பெறத் தேவையில்லை.

ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க மத்திய அரசுக்கு உரிமை உள்ளது. மாநிலம் தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் முடிவுகளை ரத்து செய்யக் கோர முடியாது. இதில் தலையிடுவது, குழப்பத்தையும் நிச்சயமற்ற நிலையையுமே ஏற்படுத்தும். மேலும், நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைக்கும். அந்த வகையில், லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்தது செல்லும். அடுத்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடத்த வேண்டும். ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு தொடர்பான மத்திய அரசின் அறிக்கையின்படி, விரைவில் ஜம்மு காஷ்மீருக்கு மத்திய அரசு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும்.

முன்னதாக தீர்ப்பு வெளியாவதை ஒட்டி ஜம்மு காஷ்மீரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதன் ஒரு பகுதியாக முன்னாள் முதல்வரும் பிடிபி கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் முக்கியத் தலைவரும், முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா ஆகியோர் தாங்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதாகக் கூறினார். ஆனால் இதனை அரசுத் தரப்பு மறுத்தது குறிப்பிடத்தக்கது.

“ஜனநாயகத்துக்கான உண்மையான ஆபத்து நேர்மையற்ற ஜோ பைடனே.” – டொனால்ட் டிரம்ப்

2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற்றால் அது ஜனநாயகத்திற்கு ஆபத்தாக மாறும் என தெரிவிக்கப்படுவதை   முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார்.

டிரம்ப் தான் ஜனாதிபதியானால் ஜனநாயகத்திற்கு ஆபத்து என  தெரிவிக்கப்படுவதை வதந்தி ஜனநாயக கட்சியினரின் தவறான பிரச்சாரம் என வர்ணித்துள்ளார்.

நியுயோர்க்கின் இளம் குடியரசுகட்சியினர் கழகத்தில் ஆற்றிய உரையில் இதனை தெரிவித்துள்ள டிரம்ப் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனே ஜனநாயகத்திற்கு உண்மையான ஆபத்து என குறிப்பிட்டுள்ளார். ஆனால் நான் அச்சுறுத்தல் இல்லை  நான் ஜனநாயகத்தை பாதுகாப்பேன் உண்மையான ஆபத்து நேர்மையற்ற ஜோ பைடனே எனவும்  டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் பதவிக்காலத்தின் முதல்நாளிற்கு பின்னர் நான் சர்வாதிகாரியாக விளங்கமாட்டேன் என  டிரம்ப் கடந்த வாரம் தெரிவித்துள்ளமை  கரிசனைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டிலுள்ள தமிழ் மக்கள் பாரிய அழுத்தங்களை எதிர்நோக்கும் நிலையில் உலக தமிழர் பேரவை அரசாங்கத்துக்கு வெள்ளையடிக்கிறது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இலங்கைக்கு பயணம் செய்துள்ள உலக தமிழர் பேரவையை சந்திக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மறுத்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை இலங்கையை வந்தடைந்த பேரவையின் உறுப்பினர்கள், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பௌத்த பீடங்களின் முக்கிய தேரர்களை சந்தித்து பேச்சுக்களை முன்னெடுத்திருந்தனர்.

பேரவையினரின் குறித்த நடவடிக்கை, இலங்கையிலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், உலக தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை சந்திக்க வேண்டுமென பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் கோரியுள்ளார்.

இதனை நிராகரித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பேரவையின் உறுப்பினர்களுடன் தமக்கு பேச எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போர் நிறைவுக்கு வந்ததிலிருந்து, நாட்டிலுள்ள தமிழ் மக்கள் பாரிய அழுத்தங்களை எதிர்நோக்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளதோடு, கடந்த 27 ஆம் முன்னெடுக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல்களின் போது தமிழ் மக்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதையும் நினைவூட்டியுள்ளார்.

இந்த பின்னணியில், குறித்த விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை அரசாங்கத்துக்கு உலக தமிழர் பேரவை அழுத்தம் கொடுக்க வேண்டுமான போதிலும், இதனை விடுத்து அவர்கள் அரசாங்கத்துக்கு வெள்ளையடிப்பதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பில் தாயகத்தில் எவருடனும் பேரவையின் உறுப்பினர்கள் கலந்தாலோசிக்கவில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா பாதுகாப்பாக இருந்தால் இலங்கையும் பாதுகாப்பாக இருக்கும் – கோபால் பாக்லே

இந்தியா பாதுகாப்பாகயிருந்தால் இலங்கையும் பாதுகாப்பாகயிருக்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்கொண்ட முன்னொருபோதும் இல்லாத நெருக்கடியின் போது வேகமாக வலுவான விதத்தில் செயற்பட்டபோது இந்தியா வேறு ஒரு நெருக்கடி விடயத்தில்; நடந்துகொள்ளவில்லை எந்த நாட்டிற்கும் உதவவில்லை என  இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

இ;ந்தியா இலங்கைக்கு உதவுவதற்காக சர்வதேச அளவிலும உள்நாட்டிலும் தனது பங்களிப்பை வழங்கியது என குறிப்பிட்டுள்ள அவர் இந்தியாவின் தலைமைத்துவம் வலுவான இந்திய இலங்கை உறவுகள் குறித்து தெளிவாகவும் அர்ப்பணிப்புடனும் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

சீனா கப்பல்கள் கொழும்பிற்கு வருவது குறித்த இந்தியாவின் கரிசனைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் இந்தியாவும் இலங்கையும் இந்து சமுத்திரத்தில் உள்ளன கடற்பயண சுதந்திரத்தை உறுதி செய்வது இரு நாடுகளினதும்கூட்டு பொறுப்பு கடப்பாடு எனவும் தெரிவித்துள்ளார்.

பல கோடி கடன் பெற்றவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு மனித உடல்களை அடக்கம் செய்வதற்கு வரி அறவிடுகிறது – சஜித் பிரேமதாச விசனம் !

அரச வங்கிகளிடமிருந்து பல கோடி ரூபா கடன் பெற்று , கடனை செலுத்தாத 150 பேருக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில் மனித உடல்களை அடக்கம் செய்வதற்கு வரி அறவிடுதல் எந்தளவுக்கு நியாயமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் உள்ள  எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பிரதான எதிர்க்கட்சி உட்பட ஏனைய எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டை தோற்கடித்துள்ளோம். வற் வரியில் புதிதாக இணைக்கப்படும் 97 பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான பட்டியலை  சபைக்கு சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தினோம்.

வற் வரி சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு அதிக அக்கறை கொண்ட அரசாங்கம்  வரி தொடர்பான தகவல்களை சபைக்கு சமர்ப்பிக்கவில்லை. 97 பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான பட்டியலையும் சமர்ப்பிக்கவில்லை.

வற் வரி அதிகரிப்பதை காட்டிலும் அதனை செயற்படுத்துவதற்கு ஏதுவாக அமைய காரணிகள் தொடர்பில் ஆராய வேண்டும். முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பொருளாதார ரீதியில் எடுத்த தவறான தீர்மானங்களினால் குறுகிய காலத்துக்குள் 600 பில்லியன் ரூபா முதல் 700 பில்லியன் ரூபா வரையிலான வரி வருமானத்தை அரசாங்கம் இழந்துள்ளது.

வரி வருமானம் இழப்பை தொடர்ந்து பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் புத்திஜீவிகள் நாட்டை விட்டு நாளாந்தம் வெளியேறுகிறார்கள். பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதாக குறிப்பிட்டுக்கொண்டு நாட்டு மக்கள் மீது சுமையையும் அரசாங்கம் திணித்துள்ளது.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளி, பொருளாதார படுகொலையாளிகள் என்று  உயர்நீதிமன்றத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள கோட்டபய ராஜபக்ஷ, கோட்டபய ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ, அஜித் நிவார்ட் கப்ரால்,டப்ள்யூ.டி லக்ஷமன்.எஸ்.ஆர்.ஆட்டிகல,பி.பி.ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் சுகபோகமாக வாழ்கிறார்கள்.

பொருளாதார படுகொலையாளிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளவர்களின் குடியுரிமையை பறித்து,அவர்கள் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட வேண்டும். இதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.

அரச வங்கிகளிடமிருந்து பல கோடி ரூபா கடன் பெற்ற 150 பேரின் பெயர் விபரங்களை பகிரங்கப்படுத்துமாறு  நிதியமைச்சரிடம்  பலமுறை கோரிக்கை விடுத்தேன். ஆனால் இதுவரை அது தொடர்பான விபரங்கள் கிடைக்கவில்லை. இவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள  மக்களை அடக்கம் செய்வதற்கும் வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது எந்தளவுக்கு நியாயமானது என்றார்.