December

December

“அப்பாவி தமிழ் மக்களை ஏமாற்றி உசுப்பேத்துகின்ற சுத்துமாத்து அரசியலைத் தமிழ்க் கட்சிகள் முன்னெடுக்கின்றன.” – அமைச்சர் டக்ளஸ்

“அப்பாவி தமிழ் மக்களை ஏமாற்றி உசுப்பேத்துகின்ற சுத்துமாத்து அரசியலைத் தமிழ்க் கட்சிகள் முன்னெடுக்கின்றன.” என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

 

“நாங்கள் முப்பது வருடங்களுக்கு மேலாகச் கூறி வருகின்ற எமது அரசியல் நிலைப்பாட்டுக்கு ஏனைய தமிழ்க் கட்சிகளும் தற்போது வந்திருக்கின்றன. குறிப்பாக இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலமாகக் கொண்டு வரப்பட்ட 13 ஆவது திருத்தத்தை நாம் ஏற்றுக்கொண்டபோது அதனைத் ஏற்க மாட்டோம் என்று கூறியவர்கள் இன்றைக்கு அது வேண்டும் என கலந்துரையாடல் நடத்துகின்றனர்.

 

இதனூடாக அன்று முதல் இன்று வரை உண்மையையும் சாத்தியமானதையுமே நாம் கூறி வருகின்றோம் என்பதை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும். அதாவது அன்று நாம் சொன்னதை நிராகரித்தவர்கள் இன்று அதுவே சரியானது என ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அதனையே வழங்கக் கோருகின்றமை காலம் கடந்த ஞானம்.

 

எமது மக்களின் பிரச்சினைகளை மேதாவித்தனத்தோடு அணுக முற்பட்டால் இழப்புத்தான் ஏற்படும். ஆகையால் அதிலிருந்து விடுபட்டு நடைமுறைச் சாத்தியமான வழியில் எடுதுரைத்தால் வெற்றி பெறலாம் என்பது எனது அனுபவம்.

 

குறிப்பாக 13 ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொண்டு மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையும் வேலைத்திட்டமும் எம்மிடம் உள்ளது. ஆனால், மற்றக் கட்சிகளிடம் அப்படியான ஒரே கொள்கையோ அல்லது வேலைத்திட்டங்களோ இல்லை.

 

உண்மையில் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதை விட அந்தப் பிரச்சினைகள் தீர்ந்து விடக் கூடாது என்பதற்காகவே அப்பாவி மக்களை ஏமாற்றி உசுப்பேத்துகின்ற சுத்துமாத்து அரசியலைத் தமிழ்க் கட்சிகள் முன்னெடுக்கின்றன.

 

இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் பங்குபற்றியிருந்தபோது நான் பல உண்மைகளை வெளிப்படுத்தியிருந்தேன்.

 

 

குறிப்பாக அவர் சார்ந்த கட்சியின் கொள்கை மற்றும் நிலைப்பாடுகள் தொடர்பிலும், அந்தக் கட்சியின் முன்னைய தலைவர்கள் செய்த விடங்கள் குறித்தும் கூறியிருந்தேன்.

 

 

அன்று அவ்வாறு எல்லாம் செயற்பட்டவர்கள்தான் இன்றைக்கு வீர வசனங்களைப் பேசி அரசியலைச் செய்கின்றனர் என்றார்.

 

 

மாசுபடுத்தப்பட்டுள்ள கிளிநொச்சி குளத்திலிருந்து நீர் பெற முடியாது – கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

மாசுபடுத்தப்பட்டுள்ள கிளிநொச்சி குளத்திலிருந்து நீர் பெறுவதை தவிர்த்து மாற்று ஏற்பாட்டு முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில், குடிநீர் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. இதன் போதே அமைச்சர் இவ்வாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

 

கிளிநொச்சி குளத்திலிருந்து பழைய முறையைப் பயன்படுத்தி நீர் சுத்திகரிக்கப்பட்டு சுமார் 7000 இணைப்புகள் மூலம் மக்களிற்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.

 

ஆனால், குளத்தில் மனிதக் கழிவுகள், மலசலகூடக் கழிவுகள், வாகன கழிவு ஒயில்கள், நகரக் கழிவுகள், விவசாயக் கழிவுகள் என பலதும் கிளிநொச்சி குளத்தில் கலக்கப்படுவதால் நீர் மாசுபட்டுள்ளது.

 

எனினும், தற்பொழுது மிக பெரிய திட்டம் ஒன்றின் ஊடாக நவீன சுத்திகரிப்பு முறை மூலம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. அடுத்த வருடம் முதல் பகுதியில் அதன் மூலம் சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை பொறியியலாளர் தெரிவித்தார்.

 

இந்நிலையில்,இரணைமடுக் குளத்தில் இருந்து நீரை நேரடியாக பெறுவது தொடர்பிலும் ஆலோசனை முன்வைக்கப்பட்ட போதிலும், அதில் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் எழும் என பொறியியலாளர் தெரிவித்தார்.

 

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் விஜயத்தின் போது தான் பேசுவதாகவும், அதற்கான மாற்று மும்மொழிவுகளை தருமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.

மகளின் தொலைபேசியை உடைத்த தந்தை – தற்கொலை செய்து கொண்ட 16வயது மகள் !

மாத்தறை,வெலிகம பிரதேசத்தில் கைத்தொலைபேசி தொடர்பாக தந்தையுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக 16 வயது சிறுமி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுமியாவார்.

கடந்த 25 ஆம் திகதி இவரது தந்தை வேலை முடித்து வீடு திரும்பிய பின்னர் கைத்தொலைபேசி தொடர்பில் மகளிடம் விசாரித்துள்ளார். இதன் போது தாய் கைத்தொலைபேசியை எடுத்துச் சென்றுள்ளதாக சிறுமி தந்தையிடம் கூறியுள்ளார்.

இது தொடர்பில் விசாரிக்க தாயின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்து சோதனையிட்ட போது கைத்தொலைபேசி மகளின் அறையில் இருப்பதை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து தந்தை கைத்தொலைபேசியை தரையில் வீசி உடைத்துள்ளார்.

இதனால் தந்தையுடன் மகளுக்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் மகள் அறைக்குள் சென்று கதவை மூடி அறைக்குள் தற்கொலை செய்துள்ளாதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் உயிரிழந்த சிறுமியின் தாயிடம் பொலிஸார் விசாரணை நடத்திய போது;

எனது மகள் மிகவும் அறிவானவள், அழகானவள் இந்த சம்பவம் இடம்பெறும் போது நான் வீட்டில் இருக்கவில்லை இருந்திருந்தால் இவ்வாறு இடம்பெற்றிருக்க விட்டிருக்க மாட்டேன்.

எனது கணவர் மிகவும் கோபமுடையவர் என்னையும் தினமும் அடித்து கொடுமை செய்வார். இருப்பினும் எனது மூன்று பிள்ளைகளுக்காக தான் நான் பொறுத்துக்கொண்டேன்.

அவர் எனது மகளை வகுப்புகளுக்கு கூட அனுப்புவது இல்ல வீட்டிலேயே அடைத்து வைத்துக்கொண்டிருப்பார். இந்த சம்பவத்தின் போதும் அவர் மகளை அடித்து திட்டியுள்ளார். இத்தகைய மன உளைச்சலுக்கு உள்ளானதால் தான் எனது மகள் தற்கொலை செய்துள்ளார் என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

“பேரரசு இறையியலும் காசா இனப்படுகொலையும் – மேற்குலகின் மனிதத்துவத்தில் ஏதோ தவறு இருக்கிறது?” பெத்தலகேம் பாதிரியார் முன்தார் ஐசாக்

பெத்தலகேம் தேவாலயத்தின் பாதிரியார் முன்தர் ஐசாக் டிசம்பர் 22 அன்று வழங்கிய பிரசங்கத்தில், மேற்குலக நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து இன அழிப்புக்கு ஆதரவளிப்பதை வன்மையாகச் சாடினார். மேற்குலக கிறிஸ்தவ நாடுகள் தார்மீகப் பண்பை இழந்துவிட்டதாகத் தெரிவித்த அவர், பாலஸ்தீனம் அழிவுகளில் இருந்து மீண்டெழும் ஆனால் இன்று இன அழிப்புக்கு ஆதரவு வழங்கியவர்கள் என்றைக்கும் தங்கள் கறையைக் கழுவிக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தார். டிசம்பர் 10 சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று தேசம்நெற் நடத்திய கூட்டத்தில் பேசிய ஒவ்வொரு பேச்சாளர்களினதும் உரைகளை எதிரொலிப்பது போல் பாதிரியார் முன்தார் ஐசாக்கின் பேச்சு அமைந்தது.

குழந்தை யேசு பிறந்த மாட்டுத்தொழுவம் அமைந்த பெத்தலகேமில் கட்டப்பட்ட மிகப் பழமையான தேவாலயம். வழமையாக இத்தேவாலயத்தில் கிறிஸ்மஸ் பண்டிகை மிகச் சிறப்பாக நடைபெறுவது வழமை. ஆனால் இம்முறை காசாவில் இடம்பெற்ற இனவெறித் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அத்தேவாலயம் சோடித்து அழகு படுத்தப்படவில்லை. இஸ்ரேல் இராணுவம் காஸா மீது நடத்தும் கண்மூடித்தனமான தாக்குதலையும் யுத்தத்தில் 10,000 சிறார்கள் வரை படுகொலை செய்யப்பட்டதையும் குறிக்கும் வகையில் குழந்தை யேசு இடிபாடுகளுக்கு மத்தியில் படுத்திருக்கும் வகையில் யேசுவின் பிறப்பு உருவகப்படுத்தப்பட்டது.

பிறக்க இருக்கும் குழந்தை யேசுவைக் கொலை செய்ய ஆட்சியாளர்கள் கொலைத்திட்டம் தீட்ட நாஸரத்தில் இருந்து மரியாள் ஜோசப்புடன் அகதியாக பெத்தலகேம் வந்து குழந்தையைப் பிரசவித்தார். இதுவே தற்போது காஸாவில் நடைபெறுகின்றது. பாலஸ்தீனப் பெண்கள் பயங்கரவாதிகளை ஹமாஸைப் பிரசவிப்பதாகக் கூறி இஸ்ரேல் இராணுவம் காஸாவில் உள்ள பெண்களையும் குழந்தைகளையும் படுகொலை செய்கின்றது. கடந்த இரு மாதங்களிற்கு மேலாக கிறிஸ்மஸ் தினம் அன்றும் கூட இஸ்ரேல் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் இருபதினாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 80 வீதமானவர்கள் பெண்களும் குழந்தைகளுமே. இதனை உருவகப்படுத்தும் வகையிலேயே பெத்தலகேம் தேவாலயம் குழந்தை யேசுவை இடுபாடுகளுக்கு இடையே படுக்க வைத்திருந்தது.

பாதிரியார் முன்தர் ஐசாக், தனது பிரசங்கத்தில், மேற்கத்திய உலகின் போலித்தனம் மற்றும் அவர்களின் இனவெறியை கடுமையாக விமர்சித்துள்ளார், காசா உலகின் தார்மீக திசைகாட்டியாக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார். பெத்லகேமில் உள்ள எவாஞ்சலிக்கல் லூத்தரன் தேவாலயத்தில் டிசம்பர் 22 அன்று தனது கிறிஸ்துமஸ் செய்தியை வழங்கிய பாதிரியார் ஐசக், “மகிழ்ச்சியின் நேரமாக இருந்திருக்க வேண்டிய இத்தருணம் மரண துக்கம் ஆகி பயப்படுகின்றோம்” என்று கூறினார்.

“காசா, எங்களுக்குத் தெரியும் அன்று இருந்தது போல் இனி இல்லை என்று, இது ஒரு அழிவு. இது இனப்படுகொலை” என்று முன்தார் ஐசாக் கூறினார். “இதனை இந்த உலகம் மௌனமாக இருப்பதைப் பார்த்து நாங்கள் வேதனைப்படுகிறோம். சுதந்திர நாடுகள் என்று அழைக்கப்படுபவர்களின் தலைவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து, சிறைபிடிக்கப்பட்ட மக்களுக்கு எதிரான இந்த இனப்படுகொலைக்கு பச்சை விளக்கு காட்டுகிறார்கள்” என்றும் முன்தர் ஐசாக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் தன் பிரசங்கத்தில் சேனனின் மொழியில் சொல்வதானால் ‘கொலை மறைக்கும் அரசியல்’ செய்வதாகக் குற்றஞ்சாட்டினார். “மேற்கு நாடுகள் உண்மைச் சூழலை மறைக்கும் அரசியல் மறைப்பை இனப்படுகொலைகளுக்கு வழங்குகின்றனர்” என்று அவர் குற்றம்;சாட்டினார். “இவர்கள் இனப்படுகொலைகளுக்கு “இறையியல் சாயம் பூசுகின்றனர்” என்றும் காட்டமாகக் கடிந்து கொண்டார். முன்தார் ஐசாக் ‘மேற்கத்திய தேவாலயங்கள்’ இந்த சாயம் பூசுவதற்கு பயன்படுத்தப்படுகின்றது” என்றும் சுட்டிக்காட்டினார். பாலஸ்தீன மக்களுடன் ஒற்றுமையுடன் பெத்லகேமில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் கிறிஸ்தவ தலைவர்களின் சர்வதேச பிரதிநிதிகள் சபையில் இருந்தனர்.

அரசு – பேரரசு இறையியல்:

தென்னாப்பிரிக்கர்கள், “அரசு இறையியல் பற்றிய கருத்தை எங்களுக்குச் சுட்டிக்காட்டினார்கள். “அரச இறையியல் இனவாதம், முதலாளித்துவம் மற்றும் சர்வாதிகாரம் ஆகியவற்றை நியாயப்படுத்த பயன்படுத்துகின்றது” என்றும் மேலும் விளக்கினர்.

“அரசுகள் அதன் சொந்த அரசியல் நோக்கங்களுக்காக இறையியல் கருத்துகளையும் விவிலிய நூல்களையும் தவறாகப் பயன்படுத்துகின்றது” என்றும் முன்தார் ஐசாக் தெரிவித்தார். “இங்கே பாலஸ்தீனத்தில் பைபிள் – நமது சொந்த புனித நூல். நமக்கு எதிரான ஆயதமாகப் பயன்படுத்தப்படுகின்றது”, என்று மேலும் கூறினார், “இங்கு நாம் பேரரசின் இறையியலை எதிர்கொள்கிறோம், இது மேன்மை, மேலாதிக்கம், தேர்ந்தெடுக்கப்பட்ட தன்மை மற்றும் உரிமைக்கான மாறுவேடமாகும்” என்றும் பாதிரியார் முன்தார் ஐசாக் குற்றம்சாட்டினார். “பேரரசின் இறையியல் தெய்வீக அனுமதியின் கீழ் அடக்குமுறையை மறைக்க ஒரு சக்திவாய்ந்த கருவியாக மாறுகிறது” என்று முன்தார் ஐசாக் குற்றம்சாட்டினார்.

“பேரரசு இறையியல் மக்களையும் நிலத்தையும் பிரிக்கின்றது. இது மக்கள் இல்லாத நிலத்தைப் பற்றி பேசுகின்றது. அது மக்களை நமக்கும் அவர்களுக்கும் என்று பிரிக்கின்றது. இது ஒடுக்கப்படுபவர்களை மனிதாபிமானமற்ற மற்றும் கொடூரமானவர்களாக பிரித்துக் காட்டுகின்றது. நிலத்தில் ஆட்கள் இருப்பதை நன்கு அறிந்திருந்தும் மீண்டும் மக்கள் இல்லாத நிலம் என்ற கருத்தாக்கத்தை உருவாக்குகின்றது. அவர்கள் எந்த மக்களுமல்ல, மிகவும் சிறப்பு வாய்ந்த மக்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“பேரரசின் இறையியல் காசாவை இல்லாமல் செய்ய அழைக்கிறது. 1948 இல் இனச் சுத்திகரிப்புக்கு அழைப்பு விடுத்தது போல், ஒரு அதிசயம் அல்லது தெய்வீக அதிசயம் என்று இதனை அழைக்கின்றனர். பாலஸ்தீனியர்களான எங்களை ஏன் எகிப்து, ஒருவேளை ஜோர்டானுக்கு செல்லக் கூடாது என்று கேட்கின்றனர். இனி, ஏன் கடலுக்குச் செல்லக்கூடாது?” என்றும் கேட்பார்கள் என்றார் பாதிரியார் முன்தார் ஐசாக்.

மத வரலாற்றுப் பின்னணி:

பாதிரியார் முன்தார் ஐசாக்கின் மிகுந்த முற்போக்கான இப்பேச்சின் பின்னால் ஒரு பலமான அரசியல் நியாயம் தெளிவாகப் புலப்பட்டது. பிதா, சுதன், பரிசுத்த ஆவி, இறை தூதர் என்பதைச் சுற்றியே யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்கள் கட்டப்பட்டது. பிதா என்பதை முழுமுதற் கடவுளாக யூதம் கருதுகின்றது. அவர்கள் மேசியா – இறைதூதுர் இன்னும் வரவில்லை இனிமேல் தான் வருவார் என்று நம்புகின்றது. அவர்கள் யேசுவின் கதையை நம்பவில்லை. கிறிஸ்தவம் மக்களை பாவங்களில் இருந்து மீட்க பிதாவின் மகன் யேசு பிறந்து அவர்களின் பாவங்களைத் தானே சுமந்து அதற்காக சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்தெழுந்து அவர் பிதாவிடம் செல்ல மக்களை ரட்சிக்க பூமிக்கு பரிசுத்த ஆவி அனுப்பப்ப என்று கிறிஸ்தவம் நம்புகின்றது. இஸ்லாம் யேசுவை ஈசா என்ற இறை தூதர் என்று நம்புகின்றது. அவ்வாறான பல இறைதூதர்கள் வந்து கடைசியாக வந்த இறைதூதர் மொகமட் என்கிறது. இந்த மூன்று மதங்களினதும் உருவாக்கம் தோற்றம் பாலஸ்தீனத்திலும் அதனையொட்டிய பகுதிகளிலுமே நடைபெற்றது.

அதன் பின் கிறிஸ்தவம் பல பிரிவுகளாக உடைந்து பரவிய போதும் தற்போது அமெரிக்காவினால் உலகெங்கும் பரப்பப்படும் ஆவிக்குரிய சபைகளே இஸ்ரேலை பாதுகாக்கும் கைங்கரியத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இஸ்ரேலை நாற்பது நாடுகள் தாக்கி அழிக்கப் போகின்றது என்றும் இஸ்ரேல் என்ற நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அமெரிகாவில் இருந்து கிளைவிட்டுப் பரவியுள்ள ஆவிக்குரிய சபைகள் தங்கள் பிரார்த்தனைகளில் செபிக்கின்றனர்.

கருக்கலைப்புக்கு எதிராக பெண்களது உரிமைகளை மறுக்கும் தீவிர கிறிஸ்தவ மத நாடான அமெரிக்காவின் நவீன காலனித்துவத்தை விரிவுபடுத்துவதற்கு பரிசுத்த ஆவிகளின் சபையை பேரரசு இறையியலாகப் பயன்படுத்துகின்றது. அமெரிக்கா தற்போது இஸ்ரேலுடைய இன அழிப்புக்கு முழமையான ஒத்துழைப்பை வழங்குவதற்குக் காரணம் அவர்களுடைய பொருளாதாரநலன்களே. அதனைக் காப்பதற்கும் நியாயப்படுத்துவதற்கும் ஆவிக்குரிய சபைகளுடாக காரணம் கற்பிக்கின்றது. தற்போது நடைபெறுவதும் ஒரு சிலுவை யுத்தமே. அதனையே பாதிரியார் முன்தார் ஐசாக் தனது பிரசங்கத்தில் தெளிவுபடுத்தி யுள்ளார்.

மேற்கத்திய உலகின் போலித்தனம்

“மேற்கத்திய உலகின் போலித்தனமும் இனவெறியும் பயங்கரமானது” என்று தனது பிரசங்கத்தில் குற்றம்சாட்டிய பாதிரியார் முன்தார் ஐசாக், “எங்கள் ஐரோப்பிய நண்பர்கள், எங்களுக்கு மனித உரிமைகள் அல்லது சர்வதேச சட்டம் பற்றி விரிவுரை செய்வதை நான் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை. நாங்கள் வெள்ளையர்கள் அல்ல, அதனால் உங்கள் சொந்த தர்க்கத்தின்படி அது எங்களுக்குப் பொருந்தாது” என்று அவர் அதிரடியாகத் தெரிவித்தார்.

“மேற்கத்திய உலகில் உள்ள பல கிறிஸ்தவர்களை” அவர் விமர்சித்தார், “மேற்கத்திய உலகம் இந்த போரில், பேரரசுக்கு தேவையான இறையியல் இருப்பதை உறுதிசெய்தனர். இது அவர்களின் தற்காப்பு என்று எங்களிடம் கூறப்பட்டது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“9,000 குழந்தைகளைக் கொன்றது எப்படி தற்காப்பு ஆகும்? 1.9 மில்லியன் பாலஸ்தீனியர்களின் இடப்பெயர்வு எவ்வாறு தற்காப்பு ஆகும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அவர் தொடர்ந்தார்: “பேரரசின் நிழலில் அவர்கள் காலனித்துவவாதிகளான ஆக்கிரமிப்பாளர்களைப் பாவிகளாகவும், ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனியர்களை ஆக்கிரமிப்பாளராகவும் மாற்றினர். அவர்கள் பேசும் நகரங்கள் மற்றும் கிராமங்கள் பாலஸ்தீனியர்களின் இடிபாடுகளில் கட்டப்பட்டது என்பதை நாம் மறந்துவிட்டோமா?”

பாதிரியார் முன்தார் ஐசாக் மேலும் தனது விசனத்தை வெளிப்படுத்துகையில், “இந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு தேவாலயங்களின் சம்மதம் இருப்பதால் நாங்கள் கோபமடைந்துள்ளோம். தெளிவாக இருக்கட்டும் நண்பர்களே, மௌனம் சம்மதம். மேலும் போர் நிறுத்தம் இல்லாமல் அமைதிக்கான வெற்று அழைப்புகள் மற்றும் ஆக்கிரமிப்பிற்கு முடிவு கட்டுதல், மற்றும் நேரடி நடவடிக்கை இல்லாமல் பச்சாதாபத்தின் ஆழமற்ற வார்த்தைகள் அனைத்தும் சம்மதம் என்றே அர்த்தம்” என்று சொல்லி தேவாலயங்களின் மௌனத்தை, அவர்கள் யுத்த நிறுத்தத்தைக் கோரி அழுத்தம் கொடுக்காததை காத்திரமான நடவடிக்கைகள் எடுக்காததை கடுமையாகச் சாடினார் அவர்.

காசா: உலகின் தார்மீக திசைகாட்டி

“எனவே எனது செய்தி இதோ, காசா இன்று உலகின் தார்மீக திசைகாட்டியாக மாறியுள்ளது. அக்டோபர் 7ஆம் தேதிக்கு முன் காசா ஒரு நரகமாகவே இருந்தது. ஆனால் உலகம் அமைதியாக இருந்தது. இப்போது அந்த உலகின் அமைதியைக் கண்டு நாம் ஆச்சரியப்பட வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார் பாதிரியார் முன்தார் ஐசாக். அவர் மேலும் தொடர்கையில், “காஸாவில் என்ன நடக்கிறது என்று நீங்கள் திகைக்கவில்லை என்றால். உங்கள் உணர்வுகளை அது தொட்டுவிடவில்லை என்றால், உங்கள் மனிதத்துவத்தில் ஏதோ தவறு இருக்கிறது”, என்று தன் ஆதங்கத்தை மிகத் தெளிவாக வைத்தார் முன்தார் ஐசாக்.

“கிறிஸ்தவர்களாகிய நாம் இனப்படுகொலையால் கோபப்படாவிட்டால், அதை நியாயப்படுத்த பைபிளை ஆயுதமாக்கினால், எங்கள் கிறிஸ்தவ சாட்சியில் ஏதோ தவறு உள்ளது, மேலும் எங்கள் நற்செய்தியின் நம்பகத்தன்மையை நாங்கள் சமரசம் செய்கிறோம்” என்றும் அவர் எச்சரித்தார். “இதை நீங்கள் ஒரு இனப்படுகொலை என்று அழைக்கத் தவறினால், அது ஒரு பாவம். இந்தப் பாவத்தை நீங்கள் விரும்பி ஏற்றுக்கொள்கிறீர்கள். காசா இடிபாடுகளுக்கு அடியில் இயேசு பிறப்பார்.

அவர் கூறினார், “சிலர் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை, சில தேவாலயங்கள் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை. நான் உனக்காக வருத்தப்படுகிறேன். இருப்பினும், பாலஸ்தீனியர்கள் மீது வீழ்ந்த பெரும் அடியையும் மீறி, நாங்கள் மீண்டு வருவோம், எழுவோம், நாங்கள் பாலஸ்தீனியர்களாக எப்பொழுதும் செய்தது போல் அழிவின் மத்தியில் இருந்து மீண்டும் எழுந்து நிற்போம்” என்று கூறி பாலஸ்தீனியர்களை சாம்பல் மேடுகளில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவைகளுக்கு ஒப்பாகக் கருதினார் பாதிரியார் முன்தார் ஐசாக்.

ஆனால் இந்த இன அழிப்புக்கு ‘சம்மதம்’ தெரிவித்தவர்களுக்காக, நான் வருத்தப்படுகிறேன். நீங்கள் எப்போதாவது மீண்டு வருவீர்களா? இனப்படுகொலைக்குப் பிறகு உங்கள் நீலிக் கண்ணீர்கள் முதலைக் கண்ணீர்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் உங்கள் ஆறதல் வார்த்தைகள் உங்களுக்கே போதுமானதாக இருக்காது” என்று எச்சரித்த பாதிரியார் முன்தார் ஐசாக் “இனப்படுகொலைக்குப் பிறகு உங்கள் மன்னிப்பை நாங்கள் ஏற்க மாட்டோம்” என்று உறுதியுடன் தெரிவித்தார். “காசா: உலகின் தார்மீக திசைகாட்டி எனவே எனது செய்தி இதோ, அவர் கூறினார்: “காசா இன்று தார்மீக திசைகாட்டியாக மாறிவிட்டது” என்று கூறி நீங்கள் யாருடன் நிற்கின்றீர்கள் இனப்படுகொலை செய்பவர்களுடனா அல்லது இனப்படுகொலைகளை நிறுத்தச் சொல்பவர்களுடனான என கருப்பு வெள்ளையாக தன் கேள்வியை முன் வைத்தார் பாதிரியார் முன்தார் ஐசாக்.

 

பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் முதல் இந்துப்பெண்ணாக வரலாறு படைத்துள்ள சவீரா பர்காஷ் !

பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த சவீரா பர்காஷ் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

 

இதனூடாக பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்துப் பெண் என்ற பெருமையை சவீரா பர்காஷ் பெற்றுள்ளார். பாகிஸ்தான் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

 

பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் வரும் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் திகதி நடைபெறவிருக்கிறது.

 

பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கு இடையே நாடு சிக்குண்டு கிடக்கும் நிலையில், இன்னும் ஒரு மாதத்தில் அந்நாடு பொதுத் தேர்தலை சந்திக்கவிருக்கிறது.

 

அதேவேளை 2022ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றிருக்கும் சவீரா, பனெரிலிருந்து பொதுத் தொகுதியில் போட்டியிடும் முதல் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாட்டின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களை சிங்கள மக்களிடமிருந்து பறிக்கும் சதிச் செயற்பாடுகள் இடம்பெறுகிறது – சரத் வீரசேகர

நாட்டின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களை சிங்கள மக்களிடமிருந்து பறிக்கும் சதிச் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

 

அகில இலங்கை பௌத்த பேரவையின் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

 

கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுமார் இருபத்தைந்தாயிரம் சிங்களக் குடும்பங்கள் வாழ்ந்ததாகவும், இன்று அந்த மாகாணங்களில் ஒரு குடும்பம் கூட இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐம்பத்திரண்டு வீதமான தமிழ் மக்களில் வடக்கு, கிழக்கு வாழ்கின்றனர் எனத் தெரிவித்த அவர், சிங்கள மக்கள் பெரும் தேசமாக இருந்தும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உரிமைகளை இழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

 

அந்த மாகாணங்களில் மூன்று மாவட்டங்களில் சிங்களப்பாடசாலைகள் இல்லை எனவும், இது ஒரு துரதிஷ்டமான நிலை என தெரிவித்த அவர், இந்த நிலைமையை எதிர்கொள்ள சிங்கள பௌத்த மக்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் மக்கள் தங்களுக்கான தலைமைத்துவத்தை தெரிவுசெய்ய அறிவுடன் சிந்தித்து தீர்மானத்தை எடுக்க வேண்டும். – நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ

நாட்டைக் கட்டியெழுப்பக் கூடிய தலைமைத்துவத்தை தெரிவு செய்யும் முக்கிய பொறுப்பு அடுத்த வருடம் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

ஆகவே குடும்ப ஆட்சியை மீண்டும் தோற்றுவிக்காமல் மக்கள் தமது பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் ஊடகங்களுக்குக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

தவறான ஆட்சியாளர்களிடம் நாட்டை ஒப்படைத்ததன் காரணமாகவே அனைத்து மக்களும் அந்த பாவத்தை அனுபவிக்க வேண்டியேற்பட்டது.

 

அடுத்த வருடம் நிச்சயம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும். அதனைக் காலம் தாழ்த்தவோ, மாற்றவோ எவருக்கும் அதிகாரம் இல்லை.

 

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக் கூடிய அறிவுள்ள, சர்வதேசத்துடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளக் கூடிய சிறந்த தலைவரை தெரிவு செய்ய வேண்டியது மக்களுக்கு வழங்கப்படும் பொறுப்பாகும்.

 

எனவே மக்கள் அறிவுடன் சிந்தித்து தீர்மானத்தை எடுக்க வேண்டும். மக்களால் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் நாம் ஏற்றுக் கொள்வோம்.

 

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதா இல்லையா என்பதைக் கூற முடியாது. அது ஜனாதிபதியின் முடிவுக்கமையவே இடம்பெறும்.

 

எந்த தேர்தலானாலும் நாட்டுக்கு பொருத்தமான ஆட்சியும், தலைமைத்துவமும் தெரிவு செய்யப்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காணிப் பிரச்சினை தொடர்பில் யாழ்ப்பாணம் வரும் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பச்சைக்கொடி காட்டுவார் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தின்போது வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் முக்கியமான முடிவுகள் எட்டப்படும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார்.

யாழில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி வரும் வேளை காணி விடுவிப்புக்கள் தொடர்பில் பச்சைக்கொடி காட்டப்படும்.

 

வனவள பாதுகாப்பு, வன ஜீவராசி திணைக்களம் என்பவற்றின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் 11 கட்டம் இருந்தது.

 

அதில் 4 கட்டமே பூர்த்தியாகியுள்ளது. ஏனைய கட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அவைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் 100 வீதம் சரிவரும் என்ற நம்பிக்கை உண்டு.

 

உயர்பாதுகாப்பு வலயமாக படைத்தரப்புக்களின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்க தொடர்ந்து முயற்சிக்கிறேன். முடிந்த வரையில் காணி விடுவிக்க நடவடிக்கைகளை எடுப்பேன்.

 

ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரும் வேளையில் காணிகளை விடுவிக்கவோ, அல்லது அது தொடர்பில் பச்சைக் கொடியை ஜனாதிபதி காட்டுவார்” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சிறைச்சாலைகளின் சுகாதார வசதிகள் மிகவும் மோசமான தரத்தில் உள்ளது – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர்

சிறைச்சாலைகளின் சுகாதார வசதிகள் மிகவும் மோசமான தரத்தில் இருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் விசனம் வெளியிட்டுள்ளார்.

மாத்தறை சிறைச்சாலையில் மூளைக்காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்ட 8 கைதிகள் ஏற்கனவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு மேலும் 8 கைதிகள் மத்தியில் மூளைக்காய்ச்சல் அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

 

இது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள அம்பிகா சற்குணநாதன், சிறைச்சாலைகளின் சுகாதார வசதிகள் மிகவும் மோசமான தரத்திலேயே இருப்பதாகவும், எனவே ஏதேனும் நோய்த்தொற்றுப்பரவல் ஏற்படும்போது கைதிகள் பெரும் ஆபத்துக்கு உள்ளாவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அதுமாத்திரமன்றி பெரும் எண்ணிக்கையான கைதுகள் மற்றும் தடுத்து வைப்புக்களின் ஊடாக சிறைச்சாலைகளில் சாதாரணமாகத் தடுத்து வைக்கப்படக்கூடிய கைதிகளின் எண்ணிக்கைக்கு அப்பால் சென்று இடநெருக்கடி ஏற்படுத்தப்படுவதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

 

அத்தோடு கொரோனா தொற்றுப்பரவல் ஏற்பட்ட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளின் சுகாதார நலன்கள் உரியவாறு பேணப்படாமை மற்றும் அங்கு நிலவும் குறைபாடுகள் என்பன பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்தவ மக்கள் மறக்க முடியாத செயலை செய்து விட்டு அவர்களுக்கு வாழ்த்து வேறு சொல்கிறார் பிள்ளையான் –

கிறிஸ்தவ மக்களுக்கு அவர்களுடைய முக்கிய நாட்களில் மறக்க முடியாத செயலை செய்து விட்டு நல்லவர் போல் நேற்று (25) கிறிஸ்துமஸ் மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

 

மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் கிறிஸ்மஸ் ஆராதனையின் போது சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் படுகொலைக்கு நீதிகோரிய போராட்டமும் நினைவேந்தல் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

 

நத்தார் திருப்பலி பூஜையின்போது ஆயுதக்குழுவினால் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான மாமனிதர் அமரர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 18 ஆவது நினைவு தினம் நேற்று மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.

 

25-12-2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியால் தேவாலயத்தில் நள்ளிரவு நத்தார் ஆராதனையின்போது இவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் அவரது மனைவி படுகாயமடைந்திருந்தார்.

 

அமரர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 18வது நினைவு தினம் நேற்று மாலை மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபமுன்னணியின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டது.

 

இதன்போது புனித மரியால் பேராலயத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதிவேண்டும்,படுகொலையாளிகளை சட்டத்தின் முன்பாக நிறுத்து,கொலையாளிகள் சொகுசுவாழ்க்கை வாழ அனுமதித்தது யார் போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு ஊர்வலமாக வருகைதந்தனர்.

 

மட்டக்களப்பு,சார்ள்ஸ் மண்டபத்தில் தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.சோபனன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

 

இதன்போது அமரர் ஜோசப்பரராஜசிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.மலர் மாலையினை பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ,மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சோபனன் ஆகியோர் அணிவித்தனர்.

 

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய அரசியலும் பெண்களும் என்னும் தலைப்பில் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி புளோரிடா சிமியோன் சிறப்புரையாற்றினார்.

 

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,கட்சியின் முக்கியஸ்தர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,மதத்தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.