December

December

இலங்கையின் தொழில் முயற்சியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 30 பில்லியன் ரூபா நிதி !

தற்கால தலைமுறையை புதிய உலகிற்கு பொருத்தமான தொழில் முயற்சியாளர்களாக உருவாக்குவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும் என சிறு மற்றும் மத்திய தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்தார்.

வரலாற்றில் முதன் முறையாக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து தொழில் முயற்சியாளர்களுக்காக 30 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்திருப்பதாகவும், தொழில் முயற்சியாளர்களுக்கு அவசியமான மூலதனத்தை 2% சலுகை வட்டியின் கீழ் பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சிறு மற்றும் மத்திய தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நாட்டின் 2.8% தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் பொறுப்பு எம்மைச் சார்ந்துள்ளது. 2024 – 2028 வரையான காலப்பகுதியில் தொழில் முயற்சியாளர்களின் அளவை 10% ஆக உயர்த்துவதே எமது இலக்காகும். ஒவ்வொரு துறைகளின் கீழும் காணப்படும் சிறு மற்றும் மத்திய தரத்திலான துறைகளைப் பலப்படுத்தும் பணிகளை ஆரம்பித்துள்ளோம். அதற்காக அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்ளை ஒன்றிணைத்து பல வேலைத்திட்டங்களையும் ஆரம்பித்துள்ளோம்.

அதேபோல் சாதாரண தர பரீட்சையின் பின்னர் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் தொழில் சந்தைக்குள் நுழைகிறார்கள். இருப்பின் அவர்களுக்கான வாய்ப்பு தொழில் சந்தையில் கிடைப்பதில்லை. அதனால் அவர்களையும் தொழில் முயற்சியாளர்களாக மாற்றுவதே எமது நோக்கமாகும். முச்சக்கர வண்டியுடன் வீதியிலிறங்கும் சமுதாயத்தை அதிலிருந்து மீட்டெடுத்து உரிய தெரிவையும் பயிற்சிகளையும் வழங்குவதே எமது நோக்கமாகும்.

வரலாற்றில் முதன் முறையாக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து சிறிய கடன் முன்மொழிவுகளின் கீழ் 30 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் கீழ் தொழில் முயற்சியாளர்களுக்கு அவசியமான மூலதனத்தை 2% சலுகை வட்டியின் கீழ் பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதோடு, அவர்களை புதிய உலகிற்கு பொருத்தமான தலைமுறையாக மாற்றுவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினதும் எம்முடையதும் நோக்கமாகும்.

அதேபோல், உலகச் சந்தையில் 2024-2025 ஆண்டுக்காக விடுவிக்கப்படவுள்ள 789 பில்லியனிலிருந்து 1% பெற்றுக்கொள்ள முடியும் என்றாலும் அது நாட்டுக்கு கிடைக்கும் மிகப்பெரிய வெற்றியாகும்” என்று தெரிவித்தார்.

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் மொத்தமாக 1206 மரண தண்டனை கைதிகள் – அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் மொத்தமாக 1206 மரண தண்டனை கைதிகள் உள்ளார்கள். இவர்களில் 744 பேருக்கான மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுகளுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது, மரண தண்டனை, ஆயுள் தண்டனை கைதிகள் தொடர்பில் அமைச்சர் சுட்டிக்காட்டியதாவது;

தங்களுடைய மரண தண்டனை தொடர்பில் 454 பேர் மேன்முறையீடு செய்துள்ளார்கள். அதில் 07 பேர் வெளிநாட்டுப் பிரஜைகள் ஆவர்.

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் 1206 மரண தண்டனை கைதிகள் உள்ளார்கள். இவர்களில் 744 பேருக்கான மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

454 பேர் மேன்முறையீடு செய்துள்ளார்கள். 07 வெளிநாட்டு பிரஜைகள் மரண தண்டனை கைதிகளாக உள்ளனர். சிறைச்சாலைகளில் 346 ஆயுள் தண்டனை கைதிகள் உள்ளனர். இவர்களில் 100 பேர் மேன்முறையீடு செய்துள்ளார்கள்.

அத்துடன், சிறைச்சாலைகளில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 10784 கைதிகளில் 61.3 சதவீதமானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

பாலஸ்தீன மக்களை கைது செய்யும் இஸ்ரேலிய படைகள் !

இஸ்ரேலிய படைகள் இன்றையதினம் 12 பாலஸ்தீன மக்களை அவர்களது வீடுகளிலும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளதாக காசா தகவல்கள் தெரவிக்கின்றன.

ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ள மொத்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 3415 ஆக உயர்வடைந்துள்ளதாக பாலஸ்தீனிய சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜோர்டானுக்கு சுற்றுப்பயணம் செய்து திரும்பிய ஒரு யுவதியையும் சோதனைச் சாவடியில் படைகள் தடுத்து வைத்ததாக அவர்கள் கூறினர்.

Nablus, Tubas, Jenin, Hebron மற்றும் Qalqilya ஆகிய பகுதிகளிலும் கைது நடவடிக்கை தொடர்ந்ததாக இரு அமைப்புகளும் தெரிவித்துள்ளன. அத்துடன் சோதனையிட்ட வீடுகளையும் படைகள் சூறையாடியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 வயதுடைய சிறுவனை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய விகாராதிபதி கைது !

12 வயதுடைய சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் தேரர் ஒருவர் யட்டபாத, தினியாவல பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (01) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தில் வசிக்கும் 12 வயது சிறுவனே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கைதானவர் அந்தப் பகுதியில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதி என தினியாவல பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தினியாவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

09 மாத காலப்பகுதியில் இலங்கையில் 2403 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவு – அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ

நிறைவடைந்த 09 மாத காலப்பகுதிகளில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 2403 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலைமை கவலைக்குரியது என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை (02) இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுகளுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது, நீதிமன்ற வழக்குகள் பற்றிய தரவுகள் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் நீதிக் கட்டமைப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் ஒருசில விடயங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. இதனால்தான் முதற்கட்ட நிதி கிடைக்கப்பெற்றது. ஜி.எஸ்.பி. வரிச்சலுகையினை பெற்றுக்கொள்வதற்கும் கடந்த காலங்களில் நீதிக் கட்டமைப்பில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.

நீதியமைச்சின் கீழ் 21 நிறுவனங்கள் உள்ளன. நீதிமன்ற கட்டமைப்பில் உயர் நீதிமன்றம் முதல் தொழில் நீதிமன்றம் வரையிலான நீதிமன்ற நடவடிக்கைகளில் 11,4458 வழக்குகள் நிலுவையில் உள்ளன.  உயர்நீதிமன்றத்தில் 17 நீதியரசர்கள் உள்ளார்கள். ஒரு நீதியரசருக்கு 334 வழக்குகள் என்ற அடிப்படையில் வழக்கு விசாரணைகள் வழங்கப்படுகின்றன. அதே போல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 20 நீதியரசர்கள் உள்ளார்கள். அவர்களில் ஒருவருக்கு 202 என்ற வழக்குகள் என்ற அடிப்படையில் வழக்குகள் வழங்கப்படுகின்றன.

2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதமளவில் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் பெருமளவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மனித மற்றும் பௌதீக வள பற்றாக்குறைக்கு மத்தியில் தான் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. நிலுவையில் உள்ள வழக்குகளை நிறைவு செய்வதற்கு தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

நிறைவடைந்த 09 மாத காலப்பகுதிகளில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 2403 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலைமை கவலைக்குரியது. இந்த வழக்குகளில் 1167 வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

காணாமல் போனார் தொடர்பான அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள அனைத்து விசாரணைகளும் அடுத்த ஆண்டுக்குள் நிறைவு செய்யப்படும்.” – அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ 

காணாமல் போனார் தொடர்பான அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளில் 4795 முறைப்பாடுகள் தொடர்பில் பூர்வாங்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. முறைப்பாடுகள் தொடர்பான சகல விசாரணைகளையும் அடுத்த ஆண்டுக்குள் நிறைவு செய்து உறுதியான தீர்மானத்தை எடுத்த எதிர்பார்த்துள்ளோம் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (02) இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில்  நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுகளுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டின் நீதிக் கட்டமைப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் ஒருசில விடயங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. இதனால்தான் முதற்கட்ட நிதி கிடைக்கப்பெற்றது. ஜி.எஸ்.பி. வரிச்சலுகையினை பெற்றுக்கொள்வதற்கும் கடந்த காலங்களில் நீதிக் கட்டமைப்பில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.

நீதியமைச்சின் கீழ் 21 நிறுவனங்கள் உள்ளன. நீதிமன்ற கட்டமைப்பில் உயர் நீதிமன்றம் முதல் தொழில் நீதிமன்றம் வரையிலான நீதிமன்ற நடவடிக்கைகளில் 11,4458 வழக்குகள் நிலுவையில் உள்ளன. உயர்நீதிமன்றத்தில் 17 நீதியரசர்கள் உள்ளார்கள். ஒரு நீதியரசருக்கு 334 வழக்குகள் என்ற அடிப்படையில் வழக்கு விசாரணைகள் வழங்கப்படுகின்றன. அதே போல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 20 நீதியரசர்கள் உள்ளார்கள். அவர்களில் ஒருவருக்கு 202 என்ற வழக்குகள் என்ற அடிப்படையில் வழக்குகள் வழங்கப்படுகின்றன.

2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதமளவில் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் பெருமளவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மனித மற்றும் பௌதீக வள பற்றாக்குறைக்கு மத்தியில் தான்  நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. நிலுவையில் உள்ள வழக்குகளை நிறைவு செய்வதற்கு தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

நிறைவடைந்த 09 மாத காலப்பகுதிகளில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 2403 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலைமை கவலைக்குரியது. இந்த வழக்குகளில் 1167 வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒருசில பொலிஸாரின் செயற்பாடுகளினால் ஒட்டுமொத்த பொலிஸ் சேவை மீதும் மக்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள். நிறைவடைந்த 09 மாத காலப்பகுதிகளில் மாத்திரம் 10491 போதைப்பொருள் மாதிரிகள் நீதிமன்றங்களின் அனுமதியுடன் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரிகளில் 1471 மாதிரிகள் போதைப்பொருள் அல்ல என்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலைமை முற்றிலும் பாரதூரமானது.

வெல்லம்பிட்டி, கடுவலை, மருதானை, பேலியகொட, முகத்துவாரம் ஆகிய பொலிஸ் நிலையங்கள் ஊடாக  சமர்ப்பிக்கப்பட்ட பெருமளவிலான போதைப்பொருள் மாதிரிகள் போதைப்பொருட்கள் அல்ல என்று பகுப்பாய்வின் போது குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே போதைப்பொருள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த பொலிஸ் நிலையங்களின் செயற்பாடுகள் அதிருப்தியளிக்கின்றன. இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன்.

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் 1206 மரண தண்டனை கைதிகள் உள்ளார்கள். இவர்களில் 744 பேருக்கான மரண் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 454 பேர் மேன்முறையீடு செய்துள்ளார்கள். 07 வெளிநாட்டு பிரஜைகள் மரண தண்டனை கைதிகளாக உள்ளனர்.

சிறைச்சாலைகளில் 346 ஆயுள் தண்டனை கைதிகள் உள்ளனர். இவர்களில் 100 பேர் மேன்முறையீடு செய்துள்ளார்கள். அத்துடன் சிறைச்சாலைகளில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 10784 கைதிகளில் 61.3 சதவீதமானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள்.

புனர்வாழ்பளித்தல் தொடர்பான சட்டம் அண்மையில் இயற்றப்பட்டுள்ளது. கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 520 பேரும், சேனபுர மத்திய நிலையத்தில் 471 பேரும், வவுனியா மத்திய நிலையத்தில் 93 பேரும் சிகிச்சை பெறுகிறார்கள்.

காணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகள் தற்போது வினைத்திறனாக்கப்பட்டுள்ளன. அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 62 முறைப்பாடுகள் தொடர்பில் மாத்திரமே கடந்த காலங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் புதிய நிர்வாக கட்டமைப்புடன் 4795 முறைப்பாடுகள் தொடர்பில் பூர்வாங்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டுக்குள் அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்து ஒரு தீர்மானத்தை எடுக்க எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

முழுமையாக நீக்கப்படுகிறது இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை !

சர்வதேச கிரிக்கட் சபையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை எதிர்வரும் வாரத்திற்குள் முழுமையாக நீக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தற்போது சர்வதேச கிரிக்கெட் சபையுடன் தடையை நீக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

சபையுடனான பேச்சுவார்த்தைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் சர்வதேச கிரிக்கட் பேரவையின் நிறைவேற்று சபைக்கும் இலங்கைக்கு வருமாறு புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்யூஸ் மற்றும் ஹசரங்க ஆகியோர் ஐ.பி.எல் ஏலத்தில் !

இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) போட்டி தொடர்பிலான வீரர்கள் ஏலத்தில், இலங்கை அணியின் சகலதுறை வீரர் ஏஞ்சலோ மத்யூஸ் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க இருவரும் பெயரிடப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் இந்திய மதிப்பில் ரூபா இரண்டு கோடிக்கு ஏஞ்சலோ மத்யூஸ் பெயரிடப்பட்டுள்ளார்.

அதேபோன்று இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் வனிது ஹசரங்க, ஒன்றரை கோடி இந்திய ரூபா அடிப்படை ஏலத்துடன் இரண்டாவது பிரிவில் இடம்பிடித்துள்ளார்.

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மக்கள் கைது – ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கவலை !

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மக்கள் கைது செய்யப்படுவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியன கவலை வெளியிட்டுள்ளன.

இந்த வாரம் மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 10 பேர் கைது செய்யப்பட்டனர். யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தலை நடத்தியமைக்காக அல்லது அதில் கலந்து கொண்டமைக்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற சமீபத்திய கைதுகள் குறித்து தமது தரப்பு கவலையடைவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இது, மனித உரிமைகளை மீறும் செயற்பாடு எனவும், குறித்த சட்டம் ரத்து செய்யப்படும் என குறிப்பிட்ட அரசாங்கத்தின் வாக்குறுதிக்கு முரணானது எனவும் ஐக்கிய நாடுகள் சபை தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இதேவேளை, அரசாங்கம் உறுதியளித்த வகையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் இடம்பெறும் கைது நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச தரநிலை மற்றும் மனித உரிமை விதிகளுக்கு அமைய குறித்த சட்டம் மாற்றப்பட வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் கருத்துச் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடை சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவது கவலையளிப்பதாகவும் அவர் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முடிவுக்கு வந்த போர் நிறுத்தம் – இஸ்ரேலிய தாக்குதலால் காசா பகுதியில் 178 பேர் பலி !

ஒருவார கால தற்காலிக போர் நிறுத்தம் முடிந்த நிலையில் இஸ்ரேலிய தாக்குதலில் காசா பகுதியில் 178 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேல் ராணுவமோ ஹமாஸ் பதுங்கிடம் என அடையாளம் காணப்பட்ட 200 இடங்களை மட்டுமே குறிவைத்து தாங்கள் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளது.

தெற்கு காசாவின் கான் யூனிஸ் பகுதியை ஒட்டிய இடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், போர் நிறுத்தம் நீட்டிப்பு சாத்தியப்படாமல் போனதற்கு இஸ்ரேல் தான் காரணம் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது. பிணைக் கைதிகளில் மேலும் சிலரை விடுவிப்பதாகவும், காசாவில் இறந்துபோன இஸ்ரேலியர்களின் உடல்களை ஒப்படைக்கவும் தாங்கள் முன்வந்தும் இஸ்ரேல் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

வயதானவர்களையும், போரில் இறந்த பிணைக் கைதிகளின் உடல்களையும் விடுவிக்கிறோம் என்றோம். இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய பிணைக்கைதி யார்டன் பிபாஸின் மனைவி, இரு சிறு குழந்தைகளின் சடலங்களையும், பிபாஸையும் விடுவிக்கிறோம் என்றும் கூறினோம். ஆனால் அவர்கள் திடீரென தாக்குதலைத் தொடங்கிவிட்டனர் என்று ஹமாஸ் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

ஆனால் ஹமாஸ் தாக்குதல்களால்தான் போர் நிறுத்த நீட்டிப்பு தடைபட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. துபாயில் COP28 மாநாட்டுக்கு வந்திருந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன் கூறுகையில், ”வியாழக்கிழமை ஜெருசலேமில் ஒரு பேருந்து நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டால் தான் போர் நிறுத்த நீட்டிப்பு தடைபட்டுள்ளது. அந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். 8 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஹமாஸ் பொறுப்பேற்றது. வெள்ளிக்கிழமை இஸ்ரேல் எல்லையோர பகுதிகளைக் குறிவைத்து ஹமாஸ் 50 ராக்கெட்டுகளை ஏவியது. இதனால் தான் போர் நிறுத்த நீட்டிப்பு தடைபட்டது” என்று தெரிவித்தார்.

 

கடந்த மாதம் 7-ம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை அடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இஸ்ரேல் தரப்பில் 1,200 பேர் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக காசாவில் இருந்தனர். இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் 15,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நடந்து வந்த போர், கடந்த மாதம் 24-ம் தேதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தொடர் முயற்சி காரணமாக ஒரு வார காலத்துக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. இந்த ஒரு வார காலத்தில், இஸ்ரேல் தரப்பில் இருந்து கைதிகள் சிலர் விடுவிக்கப்பட, பதிலுக்கு ஹமாஸ் தன்னிடம் இருந்த பிணையக் கைதிகளில் சிலரை விடுவித்தது. இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் தாக்குதல் தொடங்கியது.