சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (PTA) பதிலாக உண்மையைக் கண்டறியும் பொறிமுறையையும் புதிய பாதுகாப்புச் சட்டத்தையும் உருவாக்குவது இறுதிக்கட்டத்தில் உள்ளதாக வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி உறுதியளித்துள்ளார்.
இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்றும், ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதுவதை நீக்க வேண்டும் என்றும் பிரித்தானியா மற்றும் அமெரிக்கா செய்த வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையில் சப்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் நடைபெற்ற 42வது அமர்வின் போது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய கால ஆய்வு (UPR) செயற்குழுவில் பிரித்தானியா மற்றும் அமெரிக்காவின் பிரதிநிதிகளால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
அதன்படி, உலகளாவிய கால ஆய்வு செயல்முறையின் கீழ் அடுத்த கட்ட கடப்பாடுகளை மேற்கொள்ள இலங்கை தயாராகி வரும் நிலையில், PTA ஐ மாற்றுவது உட்பட பல கொள்கை நடவடிக்கைகள் கவனிக்கப்பட உள்ளதாக சப்ரி உறுதியளித்தார்.
13 ஆவது திருத்தத்திற்கு எதிராக தனித்தேனும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவேன் என பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
30 வருட கால யுத்தத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியாதவற்றை பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பெற்றுக்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முயற்சிக்கிறார்கள். நாட்டு மீது உண்மையான பற்று காணப்படுமாயின் கூட்டமைப்பினர் புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளை தாராளமாக பெற்றுக்கொடுக்கலாம். புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளுக்காக நாட்டை காட்டிக் கொடுக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பினரும்,புலம்பெயர் தமிழ் அமைப்பினரும் ஜனாதிபதிக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கின்றனர்.
எக்காரணிகளுக்காகவும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இடமளிக்க முடியாது என ஜனாதிபதி தலைமையில் அண்மையில் இடம்பெற்ற சர்வக்கட்சி கூட்டத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை கிடையாது.காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தவிர ஏனைய அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மாகாண சபை தேர்தல் உரிமையை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாதுகாக்கவில்லை.மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமது அரசியல் இலாபத்திற்காக மாகாண சபை தேர்தலை பிற்போட நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டார்கள்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமை தொடர்பில் கருத்துரைக்கும் கூட்டமைப்பினர் உண்மை நோக்கத்துடன் செயற்பட வேண்டும்.அரசியல் தீர்வு என்று குறிப்பிட்டுக் கொண்டு இவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழ் மக்களின் வாழ்க்கை தரத்தை இல்லாதொழித்துள்ளார்கள். அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால்; அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தை வலுவற்றதாகி விடும் என குறிப்பிடும் கூட்டமைப்பினர் கொழும்பில் இருந்துக் கொண்டு அரச வரபிரசாதங்களை முழுமையாக அனுபவிக்கிறார்கள்.தமிழ் மக்கள் உண்மையை விளங்கிக்கொள்ள வேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கு தடையாக இருக்கபோவதில்லை. ஆனால் நாட்டின் ஒருமைப்பாட்டையும்,இன நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில் 13 ஆவது திருத்தத்ததை முழுமையாக நடைமுறைப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது.நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் போது அரசியல் காரணிகளுக்கு முன்னுரிமை வழங்க முடியாது,13 ஆவது திருத்தத்திற்கு எதிராக தனித்தேனும் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றார்.
இலங்கையில் ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்புள்ள சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் வெற்றிவேலு ஜெயந்திரன் ஒரு பெரும் ஆள்மாறாட்டம் செய்துள்ளதுடன் இளம்பெண்களை ஆசைகாட்டி மோசம் செய்யும் மோசடியாளார் என்பதும் பிரான்ஸில் குற்றவாளியாகத் தண்டனை அனுபவித்துள்ளார் என்பதும் தேசம்நெற் க்கு ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளது. ஒரு தேசியக் கட்சி, தேசிய சிறுபான்மை இனத்தின் பிரதான அமைப்பாளரை நியமிக்கின்ற போது, அந்நபர் பற்றி எவ்விதமான விசாரணைகளும் ஆய்வுகளும் இல்லாமல் அச்சமூகத்தில் உள்ள ஒரு அயோக்கியரை கலாச்சாரத் தலைநகர் என்று சொல்லப்படுகின்ற யாழ் மாவட்டத்தின் அமைப்பாளராக நியமித்திருப்பது யாழ் மாவட்டத் தமிழர்களை அவமானப்படுத்துகின்ற செயல் என யாழ் கல்வியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வெற்றிவேலு ஜயந்திரனை யாழ் மாவட்ட அமைப்பாளராக நியமித்து சஜித் பிரேமதாஸ, அயோக்கியர் ஒருவரை தங்கள் மாவட்டத்திற்கு பிரதிநிதியாக நியமித்தால் எவ்வாறு தமிழ் மக்களின் வாக்குகளை வெற்றி பெறமுடியும் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
ஆள்மாறாட்ட மோசடி:
கொழும்பில் அரச உத்தியோகஸ்தர்கள் வெற்றிவேலு ஜெயந்திஜரன் ஆள்மாறாட்டம் செய்வதற்கு உடந்தையாக இருந்து அவருக்கு போலிப்பெயரில் அடையாள அட்டையைப் பெற்றுக்கொடுத்துள்ளனர். ஜெயந்திரன் வெற்றிவேலு என்பதே இவருடைய இயற்பெயர். இவர் பிறந்தது 1958 .07. 29. பிறந்த இடம் யாழ்ப்பாணம். அவருடைய முதல் அடையாள அட்டையில் இவ்விபரங்களைக் காணலாம். இவரது கடவுச் சீட்டிலும் இதே விபரங்களே உள்ளது.
ஆனால் பிரான்ஸில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு களவாக தப்பி 2003இல் இலங்கைக்குச் சென்ற வெற்றிவேலு ஜெயந்திரன் அதன்பின்; ஆள்மாறாட்டம் செய்து தன் பிறந்த திகதியை பத்து ஆண்டுகள் குறைத்துள்ளார். எழுத்துக்களை மாற்றி பெயரையும் மாற்றி அமைத்துள்ளார். கொழும்பில் பெற்ற புதிய அடையாள அட்டையில் பிறந்தது 1969 .07. 29 என்றும் பிறந்த இடம் நல்லூர் என்றும் பெயர் ‘வெற்றிவேலு யஜந்திரன்’ என்றும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தேசம்நெற் இதுதொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளில் இவர் தன்னுடைய சொந்தப் பெயரில் ஐரோப்பிய நாட்டு விமானநிலையங்களுடாக பயணிக்க முடியாது என்பதாலும் இளம்பெண்களைக் கவர்ந்திழுப்பதற்காகவும் பத்துவயதைக் குறைத்து களவாக தனக்கு இன்னுமொரு அடையாளத்தை உருவாக்கி உள்ளார் எனத் தெரியவருகின்றது.
அன்பே சிவம் எல்லாம் குடுமி மயம்:
எண்பதுக்களின் நடுப்பகுதியில் பாரிஸின் புறநகர்ப் பகுதியில் வாழ்ந்த வெற்றிவேலு ஜெயந்திரன் அங்கு அலுவலகத் துப்பரவு (பியூரோ க்ளீனிங் கொன்ராக்) ஒப்பந்தம் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்தார். அந்நிறுவனத்தைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டவர். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, இவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனையும் அனுபவித்தார்.
இதற்கிடையே லாகுர்னே யில் சிவன் கோவில் ஒன்றை அமைத்தார். தமிழர்கள் ஜரோப்பிய நாடுகள் எங்கும் தாங்கள் வாழ்கின்ற பகுதிகளில் கடைகள் அமைத்துக்கொள்வார்கள். கோயில்கள் பெரும்பாலும் பொதுக் கோயில்களாகவோ தனியார் கோயில்களாகவோ இருக்கும். ஜெயந்திரன் கோயிலை கடை நடத்துவது போல் தனியார் கோயிலாகவே நடத்தி வருகின்றார். அதன் வருமானத்தை அவரே பெற்றுக்கொள்கின்றார். இதனை தற்போது ஆலயத்தின் பரிபாலனத்தை மேற்கொள்ளும் ஒருவர் ஜனவரி 26 அன்று தேசம்நெற்க்கு உறுதிப்படுத்தினார். ஆலயத்தின் தொலைபேசி இலக்கத்தோடு தேசம்நெற் தொடர்புகொண்ட போது ‘குடுமி ஜெயா’வுக்கே ஆலயத்தின் வருமானம் அனுப்பப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். பிரான்ஸில் ரவுடிக் கும்பலை வைத்திருந்த ஜெயந்திரனை, ‘குடுமி ஜெயா’ என்றாலேயே ஆட்களுக்கு தெரியும் என்கிறார், தனது குடும்பத்தினருக்காக அவ்வாலயத்திற்குச் சென்று வரும் குமார் என்று அழைக்கப்படும் நவரத்தினம் தவக்குமார்.
இந்தக் கோயிலின் வருமானத்தில் இருந்தே நல்லூர் ‘காம’ விடுதி லக்ஸ் ஹொட்டவாங்கப்பட்டு கட்டப்பட்டது. இதன் உரிமையாளர் என்ற பந்தாவிலேயே இவர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளராக நியமிக்க்பட்டார். இவ்வாறான சமூகவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக கனடாவில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் முத்து பொன்னம்பலம் இது பற்றி தேசம்நெற்குக்குத் தெரிவிக்கையில், வெளிநாடுகளில் சட்டவிரோதமாக மக்களை ஏமாற்றி உழைக்கும் பணம் தாயகத்தில் இது போன்ற சீரழிவை ஏற்படுத்தவே பயன்படுத்தப்படுகின்றது எனத் தெரிவித்தார். பணத்தை வைத்து யாரையும் வாங்லாம் எதனையும் செய்யலாம் என்ற மனநிலை பணத்தை எந்தவழியிலும் பிரட்டலாம் என்று நம்பும் மோசடியாளர்களிடம் மிக அதிகமாகவே காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
முத்து பொன்னம்பலம் குறிப்பிட்டது போல் ‘அன்பே சிவம்’ என்பதை ‘எல்லாம் குடுமி மயம்’ ஆக்கிவிட்டார் குடுமி ஜெயா. பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணம் வரை அடியாட்களை வைத்திருக்கும் குடுமி ஜெயா சிவன் கோவில் வருமானத்தில் போதைவஸ்து, மது, மாது என்று தன் கூலிப்படைக்கு இறைத்துக்கொண்டுள்ளார்.
யார் இந்தக் குடுமி ஜெயா:
பிரபல சட்டத்தரணி பொன்னையா வெற்றிவேலுவின் முதல் மனைவியுடைய மூன்றாவது மகன் தான் வெற்றிவேலு ஜெயந்திரன். காலம்சென்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் மதிப்புக்குரிய பாராளுமன்ற உறுப்பினராக இருந்த யோகேஸ்வரன் ஜெயந்திரனுக்கு ஒருவகையில் மாமா முறையானவர். ஜெயந்திரனின் தாயார் விவாகரத்துப் பெற்றதைத் தொடர்ந்து பொன்னையா வெற்றிவேலுவுக்கு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இன்னொரு பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டு அவரது சந்தேகம் காரணமாக அப்பெண் தன்னை எரித்துக்கொண்டு உயிரிழந்தார். அதன் பின்னர் பொன்னையா வெற்றிவேலு இன்னுமொரு பெண்ணைத் திருமணம் செய்திருந்தார்.
இப்பொன்னையா வெற்றிவேலுவே ஈபிடிபியின் அற்புதன் கொலை வழக்கில் ஈபிடிபிக்காக வாதிட்டு வழக்கை வென்றவர். ஆனாலும் சாதிமானான ஜெயந்திரன், ஈபிடிபியோடு இணையவில்லை. அதற்கு காரணம் ஈபிடிபி என்பது ‘கீழ்ச்சாதி’ கட்சி என்ற ஜெயந்திரனின் எண்ணத்தினால் தான்.
அண்மையில் ஒரு விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட ஜெயந்திரன் தனது தந்தையின் அந்தக்கால கழியாட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டுப் பெருமைப்பட்டுக்கொண்டார். அந்தக் காலத்தில் தங்களிடம் வேலைக்கு வரும் ‘கீழ்சாதி’யைச் சேர்ந்த முத்தையா, கந்தன் எல்லாரையும் அங்க போய் காணியை துப்பரவாக்குங்கோ என்று அவர்களை கிளிநொச்சிக்கு அனுப்பிவிட்டு, அவர்களின் வீடுகளுக்கு சென்று, அங்குள்ள பெண்களை அனுபவித்துவிட்டு வருவது தன் தந்தையின் பொழுதுபோக்கு என்று ஜெயந்திரன் அங்கு பெருமைபடக் கூறியுள்ளார்.
அப்போது அருகில் இருந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் “எழும்பி அறைந்துவிட வேண்டும் என்ற கொதி வந்தது. ஆனாலும் எதுவும் செய்ய முடியவில்லை” என்று தன் இயலாமையையிட்டு மனம் வருந்தினார். இவ்வாறான இழிசெயல்களை பெருமையாகக் கூறவும் அதனைக் கேட்டு ரசிக்கவும் எம் சமூகம் தயாராக இருப்பது என்பது மிகவும் அருவருப்பாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இளம்பெண்களுக்கு வலைவிரிக்கும் குடுமி ஜெயா:
‘தன் தந்தைக்கு தப்பாமல் பிறந்த தனயன்’ என்பது போல் ஜெயந்திரன் பல விளிம்புநிலையில் உள்ள இளம்பெண்களை தன் பணத்தைக்காட்டி போதையூட்டி அவர்களது வாழ்க்கையைச் சீரழித்து வருகின்றார். தற்போது தனது எழுபதாவது வயதையெட்டும் ஜெயந்திரன் தன்னுடைய பேரப்பிள்ளையின் வயதையொத்த இன்னும் சில தினங்களில் 23 வயதையெட்டும் இளம்பெண்ணை வசீகரித்து வைத்துள்ளார். 2021 இல் தந்தையை விபத்தில் இழந்து வறுமையில் வாடிய குடும்பத்தை அரவணைக்கும் பாணியில் அக்குடும்பத்தில் நுழைந்த ஜெயந்திரன். ஒரு வகையில் இறந்தவருக்கு தமையன். ‘பெரியப்பா’ என்ற பெயரில் நுழைந்து, அந்த இளம்பெண்ணை தன்பக்கம் வசீகரித்துக்கொண்டார்.
அதற்கு முன் அவர் அப்பெண்ணின் தாயையும் முயற்சித்துள்ளார். அதன் ஓடியோ பதிவு தேசம்நெற்றிடம் சிக்கியுள்ளது. “நான் உங்களை அன்பாக வைத்திருப்பேன். நீங்கள் சின்ன வயதில் வாழ்க்கையை இழந்துவிட்டீங்கள். நீங்கள் வாழவேண்டும். நான் காசுகளையெல்லாம் மாத்திவிடுகிறன்” என்று குழைந்துள்ளார். அதன் பின் அத்தாய் ஜெயந்திரனின் தொடர்புகளைத் துண்டிக்க ஜெயந்திரன் தாயில் கரிசனை கொள்வது போல் பாசாங்கு பண்ணி மகளை சுவீகரித்துக்கொண்டார். தன் மகளை விடுவிக்க தாயார் ஜெயந்திரனோடு தொடர்பு கொண்டால் “நீர் ஒருக்கால் ஹொட்டலுக்கு வந்துவிட்டு போம். எல்லாம் சரியாகிவிடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து குடும்பத்தார் தங்கள் பிள்ளையை மறைத்து வைத்திருக்கும் வீட்டை திருமணமாகாமல் அவரோடு பத்து வருடமாக வாழும் குடும்பத்தாரோடு சென்று வீட்டை உடைத்தனர். அப்பெண் தங்கியிருந்த வீடு முழவதும் 8 சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்துள்ளது. பெருமளவு வாசணைக் குப்பிகள் (சென்ற்), மதுபானப் போத்தல்கள், ஆணுறைகள் என்பன காணப்பட்டது. அவ்வீட்டில் இருந்த பொருட்களை படத்தில் பார்க்கலாம்.
அதனைத் தொடர்ந்து இப்பிரச்சினை பொலீஸ்வரை சென்றது. ஆனால் சட்டப்படி அப்பெண் மேஜர் என்பதாலும் அப்பெண்ணே தான் ஜெயந்திரனோடு செல்ல முடிவெடுத்ததாலும் சட்டத்தால் இது விடயத்தில் அப்பெண்ணின் பெற்றோருக்கு எதுவும் செய்ய முடியவில்லை. சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் இரண்டு வாகனங்களில் 20க்கும் மேற்பட்ட அடியாட்களோடு ஜெயந்திரன் அப்பெண்ணை அழைத்து வந்து மீண்டும் கூட்டிச் சென்றார். இச்சம்பவம் சில தினங்களுக்கு முன் ஜனவரி 22இல் நடந்தது. தற்போது கவர்ந்து சென்ற பெண்ணுக்கு பதினாறு வயதில் ஒரு தங்கையுண்டு. அதுபற்றி ஜெயந்திரன் குறிப்பிடுகையில், ‘அந்தக் குட்டியும் நல்லாத்தான் இருக்கிறாள்’ என்று அக்குழந்தையின் தாய்க்கு ஜெயந்திரன் நளினமாகத் தெரிவித்து இருக்கின்றார். தன்னுடைய மற்றைய பிள்ளைகளை எப்படிக் காப்பாற்றுவது என்று கணவனை விபத்தில் பலிகொடுத்த அத்தாய் பரிதவிக்கின்றார்.
குடுமி ஜெயாவின் அந்தப்புரம்: மூன்று குடும்பம் நான்கு குழந்தை எண்ணற்ற உறவுகள்
பிரான்ஸில் ஒரு மொரிஸியஸ் பெண்ணை திருமணம் செய்திருந்த ஜெயந்திரன் அவரை விவாகரத்துச் செய்திருந்தார். அப்பெண்ணுக்கு ஜெயந்தின் மூலமாக ஒரு குழந்தையுண்டு. அதன் பின் இருபது வயதுடைய ஒரு இளம்பெண்ணைத் திருமணம் செய்து அவருக்கு இரு குழந்தைகள் உள்ளது.
அப்பண்ணுடைய விவாகரத்து வழக்கு வரும் மார்ச் மாதம் யாழ் மாவட்ட நீதிமன்றுக்கு வருகின்றது. அவ்வழக்கில் அப்பெண் சார்பில் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன் வாதிடுகிறார்.
இந்த விவாகரத்து விடயங்களுக்கு முன்னதாகவே கடந்த பத்து வருடங்களுக்கு மோலாக தனது இருபதுக்களில் இருந்த ஒரு இளம் பெண்ணோடு ஜெயந்திரன் வாழ்ந்து வருகின்றார். இப்போது முப்பதுக்களின் நடுப்பகுதியில் உள்ள அப்பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தையும் உண்டு. ஆனால் ஜெயந்திரன் அவரை சட்டப்படி திருமணம் செய்யவில்லை. மற்றைய பெண்ணின் விவாகரத்து முடிந்ததும் இவரைத் திருமணம் செய்வதாகத் தெரிவித்து இருந்தார். ஆனால் அதற்குள் தன் பெறாமகளான பேர்த்தியின் வயதுடைய பெண்ணை கவர்ந்துகொண்டு அது பொலிஸ்நிலையம் வரை வந்துள்ளது.
இந்த நான்கு பெண்கள், நான்கு குழந்தைகள் மட்டுமல்ல இதைவிடவும் இன்னும் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உடுவில் தேவலயத்தோடு நெருக்கமாக இருந்த இளம் பெண்ணொருவரையும் ஜெயந்திரன் நம்ப வைத்து துரோகம் இழைத்திருந்தார். அவர் இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்கின்றார். இப்பெண்ணுடைய இளைய சகோதரியோடும் ஜெயந்திரன் உறவுகொள்ள முற்பட்டுள்ளார். இதனால் கோபமடைந்த ஜெயந்திரனின் சகோதரி (வெற்றிவேலுவின் இரண்டாவது மனைவியின் மகள்) தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அந்நேரம் ஆதரவாகச் செயற்ப்பட்டவர், தன்னுடைய சகோதரனின் காம லீலைகள் பற்றி புலிகளிடம் முறையிட்டுள்ளார். ஜெயந்திரனை அழைத்து விசாரித்த புலிகள், ஜெயந்திரன் புலிகளுக்கு நிதிப்பங்களிப்புச் செய்ய உடன்பட்டதை அடுத்து அவரை விட்டுவிட்டனர். அன்று ஜெயந்திரனை அழைத்து விசாரித்த புலிகளின் உறுப்பினர் தென்னவன் தற்போது பாரிஸில் வாழ்கின்றார். தாங்கள் ஜெயந்திரனை விசாரித்து தண்டனை வழங்காமல் விட்டது உண்மைதான் ஆனால் இயக்கம் அவரிடம் பணம் வாங்கவில்லை எனத் தெரிவித்தார்.
மேற்குறிப்பிடப்பட்ட பெண்கள் எல்லோரிடமுமே ஜெயந்திரன் ஒரே விதமான கதை சொல்லியே அவர்களை வசீகரித்துள்ளார். “தன்னிடம் பணம் இருந்க்கின்றது. ஆனால் அன்பு காட்ட யாரும் இல்லை. வருபவர்கள் பணத்துக்காகவே வருகின்றார்கள். நான் அன்புக்காக ஏங்குகிறேன்” எற்றெல்லாம் கதைசொல்லியே இவ்விளம் பெண்களை ஜெயந்திரன் கவர்ந்துள்ளார். பின் நாட்கள் கடந்து செல்ல குடித்துவிட்டு தன் சுயரூபத்தை காட்டியுள்ளார். அப்பெண்களை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி உள்ளார். அவர்களது முகத்திலும் உடலிலும் காயங்களை ஏற்படுத்தியதுடன் உள்ளத்திலும் என்றும் ஆறாத ரணத்தை ஏற்படுத்தி உள்ளார். தற்போது ஜெயந்திரனின் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் இன்னொமொரு பெண்ணும் இணைந்துள்ளார்.
இப்பெண்கள் பெரும்பாலும் அனைவருமே, ஜெயந்திரனின் மொழியில் ‘கீழ்சாதி’யைச் சேர்ந்தவர்கள். சாதி விட்டு சாதி மாறி திருமணம் செய்ததால் ஓரங்கட்டப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அல்லது ஜெயந்திரனின் தந்தையான பொன்னையா வெற்றிவேலு போன்ற சாதிமான்களால் தாய்மையடைந்தவர்களின் பெண் பிள்ளைகள். அக்குடும்பங்களில் உறுதியான ஆண் ஆளுமைகள் இல்லை. இந்தக் குடும்பங்களின் விழிம்புநிலை, அவர்களின் வறுமை, தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற தைரியம் இவற்றை முதலீடாக்கி தன் காமப் பசிக்கு இளம் பெண்களை சூறையாடி வருகின்றார். இது தமிழ் சமூகத்தின் மிகப்பெரும் அவலம்.
குடுமி ஜெயா பற்றிய ஆதாரங்கள்:
ஜெயந்திரனினால் பாதிக்கப்பட்ட மேற்குறிப்பிடப்பட்ட பெண்களின் படங்கள் மற்றும் ஆவணங்களை தேசம்நெற் பல்வேறு மூலங்களில் இருந்தும் பெற்றுக்கொண்டது. ஆனால் அப்பெண்களுடைய படங்களையோ ஜெயந்திரனின் பிள்ளைகளின் படங்களையோ வெளியிடப்போவதில்லை. ஜெயந்திரனின் தாய் இருசகோதரிகள் கனடாவில் வாழ்கின்றனர். ஒரு சகோதரன் பிரான்ஸில் வாழ்கின்றார். அவர்களை வெளிநாட்டுக்கு அழைத்தது மற்றும் உதவிகளையும் ஜெயந்திரன் மேற்கொண்டதால் அவர்கள் ஜெயந்திரனுக்கு விசுவாசமாகவும் ஜெயந்திரனுடைய நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும் இருப்பதாக தெரியவருகின்றது. ஆனால் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை. அவர்களுடைய படங்களையும் வெளியிடுவது தவிர்க்கப்பட்டுள்ளது.
குடுமி ஜெயாவின் அரசியல் பிரவேசம்
“ஆம், தமிழ் ஒரு பொது உடமை, உலகத்தில் முதல் முதலாக தோன்றிய மொழி தமிழ்” என்ற வாக்கியத்தோடு முகநூலில் வரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்செயலாளரான உமாசந்திரா பிரகாஷ் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளராகவும் உள்ளார். ஜெயந்திரனை அரசியலுக்குள் கொண்டு வந்ததில் இவருக்குள்ள பங்கை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் தான் ஜெயந்திரனை அரசியலுக்குள் கொண்டுவரவில்லை என்றும் ஆனால் ஜெயந்திரனுடைய உறவுகள் பற்றித் தனக்குத் தெரியும் என்றும் அவருடைய சினேகிதிக்குத் தெரிவித்துள்ளார். ஜெயந்திரனுடைய தனிப்பட்ட வாழ்க்கை வேறு அரசியல் வேறு அதனால் தான் அவருடன் சேர்ந்து அரசியலில் பயணிக்க தான் முன்வந்தாக இவர் தன்னுடைய சினேகிதிக்கு விளக்கமளித்துள்ளார். தன்னை பெண்ணியவாதியாகவும் காட்டிக்கொள்ளும் உமாசந்திர பிரகாஷ் ஜெயந்திரனின் தாய்வழி உறவுக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.
உமாசந்திர பிரகாஷ் தற்போது பாதிக்கப்பட்டுள்ள மூன்று பெண்களின்: ஜெயந்திரனின் கொடுமை தாங்காமல் விவாகரத்துக்குக் கோரி நிற்கும் இரு பிள்ளைகளின் தாய், திருமணமாகாமலேயே குழந்தையுடன் தற்போது ஜெயந்திரனின் கீழ் அடி உதை வாங்கி வாழும் ஒரு பெண் குழந்தையின் தாய், குழந்தை முகம் கலையாத தற்போது வசீகரிக்கப்பட்ட பெண் – என அனைவரின் அவலத்தையும் நன்கு அறிந்தவர். ஆனாலும் ஜெயந்திரனின் பணத்துக்காக லக்ஸ் ஹொட்டலுக்காக இவற்றை சகித்துக்கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அலுவலகம் லக்ஸ் ஹொட்டலிலியே இயங்குகிறது.
ஆன்மீகம் – அரசியல் – அதிகாரம்
ஜெயந்திரன் ஒரு பொறுக்கியாகவோ ரவுடியாகவோ மட்டும் இருந்திருந்தால் அது இவ்வளவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்காது. ஆனால் ஜெயந்திரன் ஒரு சிவன் ஆலயத்தின் தர்மகர்த்தா, ஒரு தேசியக் கட்சியின் பிரதான மாவட்ட அமைப்பாளர். இந்த லட்சணத்தில் தான் ஆலயங்களும் அரசியல் கட்சிகளும் மக்களை வழிநடத்துகின்றன? எதிர்கால சந்ததிக்கு பாடம் சொல்லிக் கொடுக்கின்றன?
அன்று புலிகளில் இருந்து இன்று சிங்கங்கள் வரை ஜெயந்திரன் போன்றவர்களின் அயோக்கியத்தனத்தை யாரும் கண்டுகொள்வில்லை. இதனால் இவ்வாறான இளம்பெண்கள் ஜெயந்திரன் போன்ற பணமும் செல்வாக்கும் கொண்ட ஆசாமிகளின் முன் விட்டில் பூச்சிகளாக மடிந்து வீழ்கின்றனர். பாரிஸில் இளைத்த குற்றங்களுக்காக சிறைசென்ற ‘செம்மல்’ ‘கம்பிகள் ஊடாக’ என்று தன்னுடைய திருகு தாளங்களை எழுதி வெளியிட்டார். அதில் தன்னுடைய அழகையும் கவர்ச்சியையும் கண்டு இளம்பெண்கள் வீழ்வதாகவும் தன்னுடைய நண்பர்களின் மனைவியருக்கே தன்னில் நட்புப்பொங்கியதாகவும் அந்நூலில் அளந்துள்ளார் ஜெயந்திரன். இனி ‘அந்தப்புரக் கம்பிகள் ஊடாக’ என்று ஒரு புத்தகம் எழுதினாலும் ஆச்சரியம் இல்லை.
மீற்றர் வட்டி கட்டாத அப்பாவிகளை அடித்து அதை விடியோ எடுத்து போடும் துணிவு யாழில் உள்ள பொறுக்கிகளுக்கும் அயோக்கியர்களுக்கும் வந்திருக்கின்றது. அதைக் தட்டிக் கேட்க அதிகாரம் உள்ளவர்களும், தமிழ் அரசியல் தலைவர்களும் தயாரில்லை. இன்னும் பல பத்து ஜெயந்திரன்கள், இந்த விளிம்புநிலை தமிழ் பெண்குழந்தைகளை வேட்டையாட தொடர்ந்தும் அனுமதிக்கப்படுகின்றார்கள்.
இதில் பெண்ணியம் பேசும் பெண்ணிய புலிகள் சிங்கங்கள் தங்களுக்கு தாங்களே முதுகுசொறிவதோடு நிறுத்திக்கொண்டு விடுகின்றன. இல்லாவிட்டால் தங்களோடு ஒத்தூதா ஒருவரை முகநூலில் இழுத்து கையெழுத்துவேட்டை நடத்துவதோடு சரி.
பணம் அரசியல் செய்வதற்கு அவசியமாகிறது. அதனால் ஜெயந்திரன் போன்ற அயோக்கியர்கள் அரசியலுக்குள் உள்வாங்கப்படுகின்றனர். ஜெயந்திரன் போன்றவர்களுக்கு அரசியல் அந்தஸ்தும் கிடைத்த பின் அவர்கள் தங்களிடம் உள்ள பணம், அரசியல், அதிகாரத்தை பயன்படுத்தி இன்னும் இன்னும் அவற்றைப் பெருக்கிக் கொண்டு அதிகார மையங்களாக மாறுகின்றனர். இவர்கள் முன் விட்டில் பூச்சிகளாக வீழும்; இளம்பெண்களைக் காப்பாற்ற வேண்டுமானால் பிரான்ஸ் லாகுர்னே சிவன் கோவிலில் உண்டியலுக்குள்ளும் அரிச்சினை என்ற பெயரிலும் விழும் ஈரோக்கள் நிறுத்தப்பட வேண்டும், மக்கள் லக்ஸ் ஹொட்டலைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி அயோக்கியர்களை பொறுப்பான பதவிகளுக்கு பணத்துக்காக மதுவுக்காக மாதுவுக்காக நியமிப்பதை நிறுத்த வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமல்ல ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சிகளில் இருக்கும் அயோக்கியர்களைக் களை எடுக்க வேண்டும். இதற்கு இவர்கள் தயாரா?
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பலத்த பாதுகாப்பு மிக்க பகுதியில் உள்ள மசூதியில் இன்று வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
பிற்பகல் தொழுகையின்போது தற்கொலைப்படை தீவிரவாதி இந்த தாக்குதலை நிகழ்த்தி உள்ளான். இதில் பலர் தூக்கி வீசப்பட்டனர். மசூதியின் ஒரு பகுதி கடுமையாக சேதமடைந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
முதற்கட்டமாக 17 பேர் உயிரிழந்த நிலையில், நேரம் செல்லச் செல்ல உயிரிழப்பு அதிகரித்தது. இரவு நிலவரப்படி பலி எண்ணிக்கை 46 ஆக உயர்ந்தது. சுமார் 150 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் போலீஸ்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் அந்த அமைப்பின் முக்கிய கமாண்டர் உமர் காலித் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அவனது சகோதரன் கூறியிருக்கிறான்.
வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே காணக்கூடிய அரிய பச்சை வால் நட்சத்திரம் நாளை மறுதினம் (01) பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது.
C2022E3, அல்லது ZTF என்ற இந்த வால் நட்சத்திரம் இறுதியாக 50,000 ஆண்டுகளுக்கு முன்பு நியண்டதால் மனிதனின் இறுதி காலத்தில் அவதானிக்கப்பட்டது.
இந்த பிரகாசமான பச்சை நிற வால் நட்சத்திரம் நாளைமறுதினம் மற்றும் பெப்ரவரி 2 ஆம் திகதி பூமியில் இருந்து 45 மில்லியன் கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் என்றும், தென் திசையாக தொலைநோக்கியின் உதவியுடன் இதை பார்க்க முடியும் என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வால் நட்சத்திரம் தற்போது நமது சூரிய மண்டலத்தின் வழியாக வேகமாக நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த பச்சை நிற வால் நட்சத்திரம் 50,000 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தோன்றாது என்று பிரிட்டனின் கிரீன்விச் ரோயல் ஒப்சர்வேட்டரியின் வானியலாளர் கலாநிதி கிரெக் பிரவுன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கலிபோர்னியாவின் செண்டியோனில் உள்ள ஆய்வகத்தில் வைட் ஃபீல்ட் சர்வே கெமராக்களைப் பயன்படுத்தி இந்த வால் நட்சத்திரம் கண்டறியப்பட்டது.
தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது.
2020-ம் ஆண்டில் அந்த நாடு 5 நாளில் 3 ஜனாதிபதிகளைக் கண்டது. இந்தநிலையில் பெரு ஜனாதிபதி டீனா பொலுவார்டே பதவி விலகக் கோரி தலைநகர் லிமாவில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி காஸ்டில்லோ பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போதே போராட்டங்கள் துவங்கின.
போலீசாரின் அடக்குமுறையால் ஏராளமான போராட்டக்காரர்களால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், போலீசார் நடத்திய தாக்குதலில் லிமாவில் போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து இருதரப்பு மோதலில் பலியானோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. இதில் காவல்துறை அதிகாரி ஒருவரும் அடங்குவார். லிமாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது போராட்டக்காரர்கள், போலீசார் இடையே பெரும் மோதல் வெடித்தது. காவல் துறையினர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க முற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.
ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி தோல்வியை ஏற்க மறுத்தார். இதனால் டிரம்பின் ஆதரவாளர்கள் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து வன்முறையை தூண்டும் விதமாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக கூறி டிரம்பின் டுவிட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு டிரம்ப் டுவிட்டர் கணக்கு மீதான தடையை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது.
இந்த நிலையில் டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மீதான தடையை நீக்குவதாக மெட்டா நிறுவனம் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக மெட்டாவின் உலகளாவிய விவகாரங்களின் தலைவர் நிக் திளெக் கூறும் போது, வரும் வாரங்களில் டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை நாங்கள் மீட்டெடுப்போம்.
குற்றங்களை தடுக்க புதிய பாதுகாப்பு தடுப்புகளுடன் மீண்டும் நிலை நிறுத்தப்படும். நிறுவனத்தின் கொள்கைகளின் ஒவ்வொரு மீறலுக்கும் 2 ஆண்டுகள் வரை இடைநீக்கம் செய்யப்படலாம் என்றார். 2 ஆண்டுகளுக்கு பிறகு டிரம்பின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
நாட்டில் இன்று (புதன்கிழமை) முதல் க.பொ.த உயர்தர பரீட்சை நிறைவடையும் வரையில் மின் வெட்டினை மேற்கொள்ளாமல் இருக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று பிற்பகல் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நடத்திய விசேட கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று முதல் க.பொ.த உயர்தரப்பரீட்சைகள் நிறைவடையும் பெப்ரவரி 17ஆம் திகதி வரையில் நாட்டில் மின்வெட்டு முன்னெடுக்கப்படாது என மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் புதிய பீடாதிபதியாக ஊடகத்துறைப் பேராசிரியர் கலாநிதி சிவசுப்ரமணியம் ரகுராம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 20 ஆம் திகதி முதல் மூன்று வருட காலத்துக்குச் செயற்படும் வகையில் இவர் பீடாதிபதியாகப் பணியாற்றவுள்ளார்.
கலாநிதி சி. ரகுராம், 2016 தொடக்கம் ஊடகக் கற்கைகள் துறையின் தலைவராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார். இதற்கு முன்னர் கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் தொடர்பாடல் மற்றும் வணிக கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியாகவும், வளாகத்தின் பதில் முதல்வராகவும் அவர் கடமையாற்றியிருக்கிறார்.
இவர் தனது கலாநிதிப் பட்டத்தை கொமன்வெல்த் புலமைப்பரிசிலுடன் அபிவிருத்தித் தொடர்பாடல் துறையில் காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் – இந்தியாவிலும், முதுகலைமாணிப் பட்ட மேற்படிப்பை இதழியியல் மற்றும் வெகுசனத் தொடர்பாடலிலும், காட்சித் தொடர்பாடலில் இளவிஞ்ஞானமாணிப் பட்டத்தைச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் லொயாலோ கல்லூரியிலும் நிறைவுசெய்துள்ளார்.
கல்விசார் வாழ்விற்குள் பிரவேசிக்கும் முன்னர், ஒரு பல்துறைசார் ஊடகவியலாளராகவும் அவர் முக்கிய பல பொறுப்புக்களை அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகத்துறைகளில் பத்து வருடங்களுக்கும் அதிகமாக வகித்திருக்கிறார்.
யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடமானது ஏனைய பீடங்களைக் காட்டிலும் எண்ணிக்கையில் மிக அதிகமான துறைகளையும் பட்டப்படிப்பு மாணவர்களையும் கொண்டது. இக்கலைப்பீட கற்கை நெறிகள் மானிடவியல் பாடநெறிகளாகும். மானிடவியல் பாட நெறிகள் அந்தந்த சமூகங்களின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார விழுமியங்களின் அடிப்படையில் சமூக மேம்பாடு, முன்னேற்றம், எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வளர்த்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் இந்த 21ம் நூற்றாண்டை இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அளவுக்கு, அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார ஆய்வுகளையும் மேற்கொண்டு தமிழ் சமூகத்திற்கு வழிகாட்டியாக இருக்கவில்லை. கைலாசபதி, சிவத்தம்பி போன்ற ஆளமைகளுக்குப் பின் அங்கு கலைத்துறையில் பாரிய வெற்றிடம் நிலவுகின்றது.
பல்கலைக்கழகம் என்பதற்கு மாறாக ஒரு பெரிய பள்ளிக்கூடம் போன்ற பாணியிலேயே கலைப்பீடம் இயங்கி வருகின்றது. இங்குள்ள விரிவுரையாளர்களுடைய ஆய்வுகள் பட்டப்படிப்புக்கு வரும் பெண்களின் இயல்புகளை ஆய்வதிலேயே இருந்தது. இவ்விளம் பெண்களுடைய பலவீனங்களை அடையாளம் கண்டு யாரெல்லாம் தங்களுடைய இச்சைகளுக்கு மசிய வைக்கலாம் என்று பார்த்து அவர்களை வேட்டையாடுவதிலேயே கவனம் குவிந்து இருந்தது. அதனால் திறமையான மாணவிகள், மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டு பழிவாங்கப்பட்டு விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டனர். சில பத்து ஆண்டுகளாக இந்தக் கலைப்பீடம் இதே பாணியில் இயங்கியதாலும், அங்கு ஒரு சீரான தலைமைத்துவம் இல்லாததாலும் கலைப்பீடத்தில் இருந்து பட்டம்பெற்று வெளியேறும் பட்டதாரிகள் செல்லாக் காசாக ஆக்கப்படுகின்றனர்.
கலைப்பீடத்தின் சீரழிவான கலாச்சாரத்தில் வளர்க்கப்பட்டவர்கள் தான் வடக்கு கிழக்கில் உள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக, அதிபர்களாகச் செல்கின்றனர். இப்பட்டதாரி ஆசிரியர்களும் அதிபர்களும் தங்களுடைய தொழில் பண்புகளில் பின்னிலையிலேயே உள்ளனர். அதனால் வடக்கு கிழக்கின் கல்வியில் கடந்த சில பத்து ஆண்டுகளாகவே பாரிய பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. இந்தச் சீரழிவுக் கலாச்சாரம் முன்னாள் யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொன் பாலசுந்தரம்பிள்ளையின் காலத்தில் நிறுவனமயப்படுத்தப்பட்டு இன்று கலைப்பீடம் சில விரிவுரையாளர்களினால் அந்தப்புரம் ஆக்கப்பட்டு உள்ளது.
முன்னாள் துணைவேந்தர் பொன் பாலசுந்தரம்பிள்ளையுடைய ஆசீர்வாதத்தினால் மாவிட்டபுரம் துர்க்கை அம்மன் ஆலயத்தின் மலரில் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டு துணைவேந்தரான பேராசிரியர் சண்முகலிங்கன், குருவை மீறாத சிஷ்யனாக தானும் அந்தப்புர சிற்றின்பங்களில் திளைத்து வந்தார். அன்றைய காலகட்டத்தில் இவற்றை அம்பலப்படுத்திய தேசம்நெற் இணையத் தளம் சண்முகலிங்கன் மீளவும் துணைவேந்தராக தெரிவு செய்யப்படக்கூடாது என்றும் கண்ணியத்துக்கும் நிர்வாகத்திறனுக்கும் திறமைக்கும் எடுத்துக்காட்டான பேராசிரியர் இரத்தின ஜீவன் ஹூல் தெரிவு செய்யப்பட வேண்டும் என்றும் தீவிரமான அழுத்தங்களை வழங்கியது. அதனைத் தொடர்ந்து அன்றும் அமைச்சராக இருந்த தோழர் டக்ளஸ் தேவானந்தா ஹூல் உடன் இருந்த முரண்பாடுகள் காரணமாக வசந்தி அரசரட்ணத்தை துணைவேந்தராக்கினார். வசந்தி அரசரட்ணத்தின் தெரிவு பெண்களுக்கு யாழ் பல்கலையில் இழைக்கப்பட்ட அநீதிகள் தீவிரமாகாமல் தடுத்தது. ஆனால் அதனை முற்றாக தடுக்வோ குறைக்கவோ முடியவில்லை.
இப்போது கலைப்பீடத்திற்கு புதிய பீடாதிபதியாக பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டுள்ளார். உண்மையிலேயே அவருக்கு எதிராக கிறிஸ்தவத் துறைசார்ந்த வண பிதா ஒருவர் போட்டியிட விண்ணப்பித்து இருந்ததாகவும் அவர் இறுதி நேரத்தில் அவர் தனது விண்ணப்பத்தை மீளப்பெற்றுவிட்டதாகவும் அல்லது மீளப்பெறவைக்கப்பட்டதாகவும் பல்கலைக்கழக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருபது ஆண்டுகள் கடமையில் இருந்த காலத்தில் 24 பாலியல் வன்புணர்வு உட்பட 49 பாலியல் குற்றங்கள் இழைத்ததை ஜனவரி 16 2023 அன்று ஒருவர் ஒத்துக்கொண்டுள்ளார். இவர் சட்டங்கள் எதுவும் செய்ய முடியாத பாலியல் துஸ்பிரயோகம் மலிந்த யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தைச் சேர்ந்தவரல்ல. அவ்வாறு ஒருவரை சட்டத்தின் முன் கொண்டுவர யாழ் பல்கலைக்கழகத்திற்கு இன்னும் பல பத்து ஆண்டுகள் ஆகலாம். ஆனால் சட்டம் ஒழுங்கு பற்றியும் நீதி பற்றியும் தம்பட்டம் அடிக்கும் பிரித்தானியாவிலேயே அதுவும் பிரித்தானிய பாராளுமன்றம் அமைந்துள்ள லண்டன் வெஸ்ற் மினிஸ்ரரில் கடமையாற்றிய துப்பாக்கிப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி டேவிட் கிரெக் என்பவரே 20 ஆண்டுகள் கடமையில் இருந்த கொண்டு இந்தப் பாலியல் கொடுமைகளைச் செய்துள்ளார்.
இவன் பெண்களை நிர்வாணமாக தன்னுடைய வீட்டில் உள்ள அலுமாரியிலும் பூட்டி மணித்தியாலங்கள் அடைத்தும் வைத்துள்ளார். அவர்களை நிர்வாணமாகவே தனது வீட்டைத் துப்பரவு செய்யவும் வைத்துள்ளார். இக்காமுகனைப் பற்றிய விபரங்கள் பொலிஸாருக்கு தெரிந்திருந்தும் அவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட போதும் பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றி கரிசனை கொள்ளவோ அவர்களை நம்பவோ யாரும் முயலவில்லை. அதனால் அக்காமுகன் 20 ஆண்டுகள் தன்னிடம் அகப்பட்ட பெண்களை பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்தி உள்ளான். இக்குற்றங்கள் இழைக்கப்படுவதற்கு கூட இருந்தவர்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாக இருந்துள்ளனர்.
பாலியல் கொடுமுகன் டேவிட் கிரெக்குக்கும் யாழ் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதிக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள். பாலியல் கொடுமைகளைப் புரிவது எவ்வளவு கொடுமையானதோ அதேயளவு கொடுமையானது பொறுப்பான பதவிகளில் இருந்து கொண்டு அவற்றுக்கு உடந்தையாக இருப்பது. ரஷ்யாவைப் புரட்சிகரப் பாதையில் வழிநடத்திய விளாடிமீர் லெனினின் கூற்று இவ்விடத்தில் பொருத்தமானது, லெனின் சொல்கின்றார் “உன் நண்பர்களை எனக்குக் காட்டு நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்” என்று.
பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராமின் தலைமையில் யாழ் பல்கலைக்கழகக் கலைப்பீட மாணவிகளுக்கு பாதுகாப்பு கிடைக்குமா என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் நிலவுகின்றது. ஒரு பக்கத்தில் சிவசுப்பிரமணியம் ரகுமான் தன்னையொரு மிகத் தீவிர புலித் தேசியவாதியாக கட்டமைத்துள்ளார். மேலும் மாணவ மாணவியரிடையேயும் மிகுந்த மதிப்பையும் நல்லெண்ணதையும் வளர்த்துள்ளார். ஆனால் அதே சமயம் அவருக்கு வெளியே தெரியாத இன்னொரு பக்கம் இருப்பதை சிலர் ஆணித்தரமாக சுட்டிக்காட்டியும் வருகின்றனர். இதுதொடர்பில் சில குற்றச்சாட்டுக்கள் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தேசம்நெற்க்குத் தெரியவந்துள்ளது.
இங்கு தான் “உன் நண்பர்களை எனக்குக் காட்டு, நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்” என்ற லெனினின் கூற்று நோக்கத்தக்கது. பேராசிரியர் ரகுராம் கலைப்பீடாதிபதியானதற்கு பின்னணியில் நின்று பணியாற்றியவர்கள் பேராசிரியர்கள்: க விசாகரூபனும் த கணேசலிங்கமுமே. இவர்கள் இருவருமே யாழ் கலைப்பீடத்தின் காமுகர் பட்டியலில் தங்களுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர்கள். மற்றும் சிலர் புள்ளிவிபரவியல் பேராசிரியர் இளங்குமரன், தமிழ் துறை விரிவுரையாளர் அருந்தாகரன், … என்று ஒரு பட்டியல் உள்ளது. இவர்கள் தான் பல்கலைக்கழகத்தினை சீரழித்து வடக்கின் கல்வியைச் சீரழிக்கவும் காரணமாக இருப்பவர்கள். இவர்களை விடவும் என்னும் வெளித்தெரியாத பாலியல் குற்றவாளிகள் பலர் கலைப்பீடத்தில் உள்ளனர். விரைவில் அந்த விடயங்கள் வெளிச்சத்துக்கு வரும்.
க விசாகரூபன், இளங்குமரன், அருந்தாகரன் போன்றவர்களுக்கு எதிராக 2010இல் பல்கலைக்கழக மாணவர்களே எச்சரிக்கை விடுத்து இருந்தனர். அதில் ‘மாணவிகளை தமது காம இச்சைகளுக்கு வற்புறுத்தி வருகின்றனர்’ என்று குற்றம்சாட்டி இருந்தனர். இந்த நிலை கடந்த பத்து ஆண்டுகளின் பின் இன்றும் மாறவில்லை. க விசாகரூபனை இன்றும் பெண் விரிவுரையாளர்களோ அல்லது மாணவிகளோ தனியாக சந்திப்பதற்கு தயங்குகின்ற நிலையே நிலவுகின்றது.
மலையகத்தைச் சேர்ந்த யோகேஸ்வரி முத்தையா என்ற 13 வயதே நிரம்பிய வேலைக்கு அமர்த்தப்பட்ட பெண் பிள்ளையை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்திய ‘பொங்கு தமிழ்’ பேராசிரியர் தங்கராசா கணேசலிங்கம் தற்போதும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக உள்ளார். யோகேஸ்வரி முத்தையாவை பத்துக்கும் மேற்பட்ட தடவைகள் இவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக இவர் மீது நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்த போது இளம் பெண் முத்தையா யோகேஸ்வரி காணாமல் ஆக்கப்பட்டார்.
கம்பவாருதி ஜெயராஜின் பொன்விழா மலர் – ‘ஜெயராஜ்ஜியம்’ நூலில் யாழ் பல்கலைக்கழகத்தின் செயற்திறனற்ற வினைத்திறனற்ற பாலியல் துஸ்பிரயோகச் செயற்பாடுகள் பற்றி நிறையவே எழுதப்பட்டுள்ளது.
இவர்களெல்லோரும் இப்போது தாங்கள் செய்யும் அநீதிகளையெல்லாம் புலித்தேசியத்தைக் காட்டி மறைத்து, காலத்தை ஓட்டிவருகின்றனர். சிறைக் கம்பிகளுக்குள் மரணம் வரை அடைக்கப்பட வேண்டியவர்கள் இன்னமும் தமிழ் பல்கலைக்கழகத்தின் அதிகார மையமாக உள்ளனர். தற்போது புலித்தேசியத்தை தூக்கிப் பிடிப்பவர்கள் எல்லோருமே ஏதோவொரு வகையில் தங்கள் சொந்த நலனுக்காகவே அதனை தூக்கி நிறுத்துகின்றனர்.
அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட அறிமுக நிகழ்வில் கலந்துகொண்ட யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எஸ் சிறிசற்குணராஜா மாணவிகளுக்கு ஒரு எச்சரிக்கையை வழங்கி இருந்தார். அதாவது “விரிவுரையாளர்கள், உங்களுக்கு சொக்லேட், பிஸ்கட் தந்தெல்லாம் உங்களை தங்களிடம் அழைப்பார்கள். எச்சரிக்கையாக இருங்கள்” என்று. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரே குறிப்பிடுமளவிற்கு கலைப்பீடத்தில் பெண்களின் நிலைமை மிக மோசமானதாகவே உள்ளது.
இவ்வாறான ஒரு அவலமான சூழலில் கலைப்பீடத்திற்கான பீடாதிபதிக்கான தெரிவு தவறானதாக அமையுமாயின் அதன் விளைவு மேலும் மோசமான நிலைக்கு பல்கலைக்கழகத்தை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் தள்ளும் என்பது நிச்சயமான உண்மை.
ஒரு சமூகத்தினுடைய நாட்டினுடைய வளர்ச்சியில் ஊடகத்தின் பங்கு அளப்பெரியது. இலங்கையில் ஜனநாயகம் சீரழிந்து செல்வதற்கும் அரசியல் வாதிகள் ஊழல் மிக்கவர்களாக மாறுவதற்கும் பொறுப்புள்ள ஊடகக் கலாச்சாரம் அங்கில்லாததும் முக்கிய காரணம். பேராசிரியர் ரகுராம் யாழ் பல்கலைக்கழத்திற்குள் உள்வாங்கப்பட்டு மிகக் குறுகிய காலத்தில் துறைத்தலைவர், பேராசிரியர் தற்போது பீடாதிபதி என தன்சார்ந்த ஒரு வளர்சியை அடைந்துள்ளார்.
ஆனால் தான் தோண்றிகளாக பல பத்து ஊடகங்கள் தமிழர்கள் மத்தியில் இருந்த போதும் ஊடக விழுமியங்களைப் பின்பற்றுகின்ற ஒரு ஊடகவியலாளரைக் கூட யாழ் பல்கலைக்கழகத்தின் ஊடகத்துறையால் உருவாக்க முடியவில்லை. ஒரு பெயர் சொல்லக் கூடிய ஊடகவியலாளர் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து இதுவரை வெளிவரவில்லை.
காரணம் பேராசிரியர் ரகுராம் ஊடகவியலாளர்களை உருவாக்குவதற்குப் பதில் ஜால்ராக்களையே உருவாக்கி வருகின்றார். சமூக அநீதிகளைக் கண்டு கோபம் கொள்ளக்கூடிய சிந்தனையாளர்கள், ஊடகவியலாளர்கள் உருவாவதை அவர் ஊக்குவிக்கவில்லை. மாறாக சமூக அநீதிக்கு எதிரான விடயங்களை பேசுவதை பேசப்படுவதை அவர் தடுத்தே வருகின்றார்.
கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் திகதி புங்குடுதீவு சிதைவுறும் நிலம் ஆவணப்படம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் திரையிட இருந்தது. ஆனால் அன்யை தினம் இறுதி நேரத்தில் அதற்கான அனுமதியை வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்திருந்தது. புங்குடுதீவு சிதைவுறும் நிலம் சாதி பற்றிய ஆவணப்படமும் இல்லை. அது அழிந்து கொண்டிருக்கின்ற நிலத்தின் பல்வேறு அரசியல், சமூக, பொருளாதார பின்புலங்களை ஆராய்கின்ற படம். நிலத்தின் அழிவுக்கும் சாதிக்குமான தொடர்பு அதில் ஒரு பகுதியாகப் பேசப்படுகின்றது.
அவ்வாறிருக்கையில் அதனை சாதியம் தொடர்பான படம் என்ற கோணத்தில் பார்த்து திரையிடலுக்கான அனுமதியை நிர்வாகம் மறுத்திருந்தது. ஒருவேளை அது சாதியம் பற்றிய திரைபடமாகவே இருந்தாலும் கூட அதை நிர்வாகம் தடுத்திருக்க கூடாது. நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு பின்புலத்தில் இருந்தவர்களில்; பேராசிரியர் . சி. ரகுராமும் ஒருவர்.
சாதிய அடக்குமுறை தமிழ் சமூகத்தில் ஆழ வேரூன்றியுள்ள ஒரு விடயம். அதை சமூகத்திலிருந்து அகற்றி சமூகத்தை முன்னோக்கி நகர்த்த வேண்டிய கடப்பாடு உயர் கல்விப் பீடம் என்றவகையில் பல்கலைக்கழகத்திற்குரியது. அதிலும் ஊடகத்துறைக்கு இதன் மீதான பொறுப்பு மிக அதிகம். ஆனால் பேராசிரியர் ரகுராம் இதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதையே காண முடிகின்றது.
யாழ் பல்கலைக்கழகக் கலைப்பீடம் செய்ய வேண்டிய ஆனால் செய்ய முயற்சிகூட எடுக்காத, செய்யப்படாத ஆய்வை, கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக தங்கேஸ் பரம்சோதி மேற்கொண்டு தயாரித்ததே இந்த Pungudutivu: A Disintergrating Land என்ற ஆவணப்படம். கலைப்பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கைலாசபதி அரங்கு தான் தெரியுமேயொழிய தென்னாசியா போற்றிய அந்த ஆளுமையை யார் என்று தெரியாது. காரணம் அவரைப் பற்றி விரிவுரை நடத்துமளவுக்கு இவர்களுக்கு அவருடைய ஆற்றல் பரப்பு தெரியவில்லை அல்லது அவரைப் பற்றித் தெரியவந்தால் இவர்களின் பலவீனம் வெளிப்பட்டுவிடும். இப்புங்குடுதீவு தொடர்பான ஆவணப்படத்தில் யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அப்பல்கலைக்கழகத்தினால் வாழ்நாள் பேராரிரியர் என்று பட்டம் வழங்கப்பட்ட பொன் பாலசுந்தரம்பிள்ளையின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பேராசிரியர் குகபாலனின் கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விருவருமே புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். ஆனாலும் அவ்ஆவணப்படம் யாழ் பல்கலைக்கழகத்தில் காண்பிக்க அனுமதிக்கப்படவில்லை. ஏன்?
‘நக்குகின்ற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன?’ என்று வாழும் அற்ப மனிதர் பொன் அல்ல கறள்கட்டிய பாலசுந்தரம்பிள்ளை. ஒரு பொய்மான். அன்று புங்குடுதீவு ஆவணப்படத்தை தனிப்பட்ட முரண்பாடுகளுக்காக போடாமல் தடுத்த வடமராட்சியைச் சேர்ந்த சி ரகுராம் உட்பட்ட குழுவுடன் பொன் பாலசுந்தரம்பிள்ளை நல்லுறவுடனேயே உள்ளார். இந்த ஆவணப்படத்தில் பொன் பாலசுந்தரம்பிள்ளை இனவதத்தை கக்குகின்றார். நயினாதீவு நாகதீபத்தை வைத்து பௌத்தர்கள் சிங்களவர்கள் வந்து குடியேறிவிடுவார்கள் என்று பொன் பாலசுந்தரம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார். இதே பாலசுந்தரம்பிள்ளை 1990க்களின் முற்பகுதியில் யாழ் பல்கலைக்கழகம் இயங்கா நிலையில் இருந்த போது தன்னுடைய மகளுக்கு கொழும்பில் மருத்துவத்துறையில் கல்வியைத் தொடர வேண்டும் என்பதற்காக யாழ் மருத்துவத்துறையை மூடுவதற்கு முற்பட்டவர். அவ்வாறு மூடினால் தான் அதனைக் காரணம் காட்டி தன்னுடைய மகளுக்கு தென்னிலங்கையில் கற்க அனுமதி பெறமுடியும் என்பதற்காக.
தமிழ் இலக்கியப்பரப்பில் மு தளையசிங்கம் போன்ற பெரும் ஆளுமைகளைத் தந்த புங்குடுதீவை தமிழ் சமூகத்தின் கல்வியை அழித்த பொன் பாலசுந்தரம்பிள்ளை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது அம்மண்ணுக்கு பெரும் இழுக்கே.
புங்குடுதீவு ஆவணப்படம் யாழ் பல்கலைக்கழகத்தில் வெளியிடாதது தொடர்பாக இவ்ஆவணப்படத்தின் காட்சிப்படுத்தலை மேற்கொண்ட ஞானதாஸ் காசிநாதரிடம் இதன் பின்னணி பற்றி தேசம்நெற் ஜனவரி 21இல் உரையாடிய போது, யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் பற்றி கதைப்பதே வீண்வேலை என்றும் அவர்களுக்கு சமூகம் சார்ந்த எவ்வித கரிசனையும் இல்லை என்றும் அங்குள்ள தனிநபர் அரசியல் மிக அருவருக்கத்தக்கது என்றும் விசனத்துடன் தெரிவித்தார்.
இந்தப் புங்குடுதீவு பற்றிய மிகக் காத்திரமான அவணப்படத்தை வெளியிடாத, Demons in paradise என்ற 1980க்களின் அரசியல் சூழலை வெளிப்படுத்தும் படத்தை யாழ் பல்கலைக்கழகத்தில் வெளியிட மறுத்த பேராசிரியர் சி ரகுராம் தன்னுடைய மாணவர்களின் ஆய்வுக்கு தமிழர்களின் சினிமாரசனை பற்றிய உப்புச்சப்பற்ற ஆய்வுகளையே எழுத வைத்துள்ளார். இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அது எம் ஜீ ஆர், சிவாஜி ரசிகர் மன்றங்கள் பற்றி பிச்சு உதறுகிறது. வித்தியா போன்ற இளம் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மண்ணைப் பற்றிப் பேசுகின்ற ஆவணப்படத்தைக் காட்டிலும் எம்ஜீஆர், சிவாஜி ரசிகர்களின் ரசனையை ஆராய்வது தான் முக்கியம் என எண்ணுகிறார் பேராசிரியர் சி ரகுராம்.
2018ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவிருந்த இயக்குநரான ஜூட் ரட்ணத்தின் Demons in paradise திரைப்படம் அன்று விழாக்குழுத் தலைவராக இருந்த பேராசிரியர் ரகுராமின் தலையீட்டால் நிறுத்தப்பட்டிருந்தது. குறித்த படம் புலிகளை விமர்சிப்பதாலேயே இந்த நிராகரிப்பு இடம்பெற்றது. இதற்கு தமிழ்த் தேசியவாதிகள் தரப்பிலிருந்து ரகுராமிற்கு பெரும் புகழாரம் சூட்டப்பட்டது.
அப்படம் 1980க்களில் தமிழீழ விடுதலை அமைப்புகளின் அரசியல் செயற்பாடுகளை விமர்சனபூர்வமாக வெளிக்கொணர்ந்து சில சர்வதேச விருதுகளையும் பெற்றிருந்தது. லண்டனில் முதல் தரமான பல்கலைக்கழகங்களைக் கொண்ட யுனிவர்சிற்றி கொலிஜ் லண்டனில் இப்படம் (ஆவணப்படம்) காண்பிக்கப்பட்டும் இருந்தது. அதில் அனைத்து விடுதலை அமைப்புகள் மீதும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் விமர்சனங்கள் இருந்தது.
“உன்னுடைய கருத்தில் நான் உடன்படவில்லையாயினும்; உனது கருத்தை வெளியிடுவதற்கு உனக்குள்ள உரிமையைப் பாதுகாப்பதற்காக எனது உயிரைக் கூட விடுவதற்கும் நான் தயாராக இருக்கின்றேன்” என்றார் பிரெஞ்சு அறிஞர் வோல்டேயர்!
ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கான தாரக மந்திரமாக இது சொல்லப்படுகிறது. ஆனால் ஊடகத்துறை பேராசிரியர் ரகுராமிற்கும் இதற்கும் எள்ளளவும் தொடர்பில்லை. தன்னுடைய செயற்பாடுகள் மூலமாக பேராசிரியர் சீ ரகுராம் என்ன சொல்ல முற்படுகின்றார். தமிழர்களை தமிழர்களே அடக்கலாம். ஒடுக்கலாம். சுரண்டலாம். ஆனால் சிங்களவர்கள் அதையெல்லாம் செய்வது தான் பிரச்சினை. அதேபோல் தமிழ் பெண்களை தமிழர்கள் குறிப்பாக யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் எப்போதும் சுரண்டலாம், துன்புறுத்தலாம், பாலியல் வல்லுறவும் கொள்ளலாம். ஆனால் சிங்கள இராணுவம் யுத்தத்தின் போது செய்தது குற்றம். இது என்ன லொஜிக்?
தன்னுடைய விருப்பு வெறுப்பைத் தாண்டி அடுத்தவர்களுடைய எண்ணங்கள், சிந்தனைகளுக்கு சி ரகுராம்; துளிகூட இடமளிப்பது கிடையாது என்பது பல்கலைக்கழக விரிவுரையாளர் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அவ்வாறிருக்கையில் இவ்வாறான ஒருவர் உருவாக்கும் ஊடகப்பட்டதாரிகள் எவ்வாறு அநீதிகளுக்கு எதிராக துணிந்து குரல் கொடுப்பார்கள்?
ரகுராம் ஊடகத்துறையைப் பொறுப்பெடுத்த பின் ஊடத்துறையில் விரிவுரையாளர்களுக்கான வெற்றிடம் நிலவியது. அதற்கு கூட தன்னிடம் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கற்ற இருவரையே உள்ளீர்த்திருந்தார். மற்றைய ஒருவரும் ரகுராமிற்கு சலாம் போடக்கூடிய ஒருவரே. ரகுராம் பொறுப்பேற்க முன்னர் 5 வருடங்களுக்கு மேலாக தனித்து நின்று ஊடகத்துறையை கொண்டு நடத்திய ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய கிருத்திகா என்ற பெண் விரிவுரையாளர் மிகச் சாதாரணமாக வெளியேற்றப்பட்டார். அவர் தன்னுடைய எந்த பட்டப்படிப்பையும் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகத்தில் முடிக்கவில்லை என்பதால் அவரை தொடர்ந்து வைத்திருக்க முடியாது என்பதே அவரது வெளியேற்றத்துக்கு சொல்லப்பட்ட காரணம்.
ஆனால் இதேவேளை பேராசிரியர் ரகுராமும் எந்தவொரு பட்டத்தையும் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பெற்றிருக்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது. இவ்வாறு சுயமாக சிந்திக்க முடியாத சுயமாக முடிவெடுக்க முடியாத ரகுராமிற்கு வேண்டப்பட்ட ஆளணியே ஊடகத்துறையில் தற்போது உள்ளது. வருங்காலத்திலும் இந்த நிலையே தொடரும் என்பதே எதிர்பார்ப்பு.
ரகுராம் ஊடகத்துறையை பொறுப்பெடுத்த பின்பு ஊடகத்துறை தன் கட்டமைப்பு சார்ந்து தொழில்நுட்பம் சார்ந்து பெருமளவு முன்னேறியுள்ளது. ஆனால் கருத்தியல் சார்ந்த வளர்ச்சி என்பது பூச்சியமாகவே உள்ளது.
தன் கண்முன் பல்கலைக்கழகத்தில் நிகழும் கொடுமைகளைக் கண்டுகொள்ளாதவரால், நன்கு அறியப்பட்ட பாலியல் குற்றவாளிகளின் தயவில் பீடாதிபதியானவரால், மாற்றுக் கருத்துக்களுக்கு இடமளிக்க முடியாத ஒருவரால் எவ்வாறு சமூகத்தை காவல் காக்கும் ஊடகவியலாளர்களை உருவாக்க முடியும்? எவ்வாறு 2000 மாணவர்களுக்கும் அதிமான மாணவர்களைக் கொண்டுள்ள கலைப்பீடத்தை கொண்டு நடாத்த முடியும். அதிலும் குறிப்பாக 75 வீதத்திற்கும் அதிகமான பெண் மாணவிகளைக் கொண்டுள்ள கலைப்பீடத்தை அவர்களுக்கான பாதுகாப்பான இடமாக மாற்றமுடியும்?
முன்பு ஒருறை ”பெண்கள் மேலதிகாரிகளால் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்றனர்” என்றும் ”யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தற்கொலை, தற்கொலை முயற்சிகள் அதிகரித்து உள்ளது” என்றும் அன்று யாழ் அரசாங்க அதிபராக இருந்த இமெல்டா சுகுமார் நிகழ்வுகளில் சுட்டிக்காட்டி இருந்தார். ஏற்கனவே இடம்பெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள், மற்றும் தற்போது இடம்பெறுகின்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களின் பின்னணியில், பல்கலைக்கழக விரிவுரையாளர்களே உள்ளதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். யாழ் அரசாங்க அதிபராக இருந்த இமெல்டா சுகமார் குற்றம்சாட்டி ஒரு தசாப்தம் கடந்த பின்னரும் இன்றும் யாழ் பல்கலைக்கழகத்தில் கணிசமான எண்ணிக்கையில் தற்கொலைகள் தொடர்கின்றது. கல்விக் கனவுகளோடு வரும் மாணவிகள் யாழ் பல்கலைக்கழகத்ததில் வந்ததன் பின் ஏன் தற்கொலை செய்கின்றனர்? இதனைத் தடுக்க ஏன் நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. பேராசிரியர் ரகுராம் ஏன் இவ்விடயங்களையொட்டி எவ்வித ஆய்வுகளையும் மேற்கொள்ள முன்வரவில்லை.
இந்தப் பின்னணியில் நோக்குகின்ற போது உண்மையிலேயே பேராசிரியர் ரகுராம் யார் நல்லவரா? கேட்டவரா? என்ற கேள்வி இன்னும் பல கேள்விகளையே எழுப்புகின்றது.
நியூசிலாந்து நாட்டின் பெண் பிரதமராக இருந்த ஜெசிந்தா ஆர்டர்ன் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த வாரம் அறிவித்தார்.
நியூசிலாந்து தொழிலாளர் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ஜெசிந்தாவின் பதவிக்காலம் அக்டோபர் மாதம் முடிய இருந்த நிலையில் அவர் ராஜினாமா செய்தார். பிரதமருக்கான தேர்தல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் திகதி நடைபெறவுள்ளது. நியூசிலாந்து பிரதமர் பதவியில் இருந்து ஜெசிந்தா ஆர்டர்ன் விலகுவதாக அறிவித்தது கட்சிக்குள்ளும், நாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைதொடர்ந்து, நியூசிலாந்து நாட்டின் கல்வித்துறை அமைச்சராக இருந்து வந்த கிறிஸ் ஹிப்கின்ஸ் புதிய பிரதமராக இன்று பதவியேற்றுள்ளார். இவர், அடுத்த 9 மாதங்களுக்கு மட்டுமே பதவியில் இருப்பார். பின்னர் பிரதமருக்கான தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவியேற்ற பிறகு விழாவில் பேசிய பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் கூறுகையில், ” இது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியம் மற்றும் பொறுப்பு. எதிர்வரும் சவால்களை ஏற்க நான் உற்சாகமாகவும் இருக்கிறேன் ” என்றார்.