2023

2023

இலங்கையின் மனிதாபினமாச் சட்ட மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறாத நிலைமை நீடிக்கின்றது – ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைகள் மற்றும் மனிதாபினமாச் சட்ட மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறாத நிலைமை நீடிக்கின்றது என்பதை ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளதோடு, முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் பற்றியும் கரிசனைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக சிவில் சமூக பிரதிநிதிகளான, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் மற்றும் மாற்றுக்கொள்கை நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி. பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின், இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய முற்கூட்டிய எழுத்துமூலமான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பற்றிய கருத்து வெளியிடும்போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அம்பிகா சற்குணநாதன் தெரிவிக்கையில்,

இலங்கை பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க விடயத்தில் முன்னேற்றங்கள் எட்டப்படாதுள்ளமையை உயர்ஸ்தானிகரது அறிக்கை வெளிப்படுத்தியுள்ளதோடு, முக்கியமான சில விடயங்கள் இம்முறை புதிதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அதில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு அமைவாக இலங்கையில் நிகழ்ந்த உரிமை மீறல்கள் பற்றிய சாட்சியங்களை சேகரிக்கின்ற பொறிமுறை பற்றிய விடயம் முக்கியமானதாகின்றது.

அதனடிப்படையில், தற்போதைய நிலையில் இலங்கையில் பத்து தனிநபர்களுடைய மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்கள் பற்றி வெவ்வேறு நாடுகளில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் அவற்றுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பில் குறித்த பொறிமுறையின் பங்களிப்புச் செய்யும் தன்மை பற்றி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஏனைய முகவரகங்கள் இலங்கைக்கு நிதி உள்ளிட்ட செயற்றிட்டங்களை வழங்குகின்றபோது, ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் சர்வதேச சமவாயச் சட்டங்கள் ஆகியவற்றின் நிலைமைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற விடயம் கூறப்பட்டுள்ளது.

மேலும், பொருளாதாரக் குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமைகள் தொடர்பான குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் மீது இலக்கு வைக்கப்பட்ட பயணத்தடைகள், சொத்துக்களை முடக்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளை ஏனைய நாடுகள் முன்னெடுக்குமாறு உயர்ஸ்தானிகர் பரிந்துரைத்துள்ளார்.

இதனைவிடவும், படைக்குறைப்பு மேலும் செய்யப்பட வேண்டும் என்பதும், படைகளுக்கான செலவீனத்தை குறைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஒன்றுகூடும் சுதந்திரம், பேச்சு சுதந்திரத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களை மறுதலிக்கும் வகையில் ஒலி,ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம், புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் ஆகிய நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முற்படுகின்றமையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் உள்ள சிவில் சமூகத்தினர் மீதான அடக்குமுறைகள், அச்சுறுத்தல்கள், காண்காணிப்புச் செய்தல், பயங்கரவாத தடைச்சட்ட பிரிவினரால் விசாரணைகளுக்கு அழைத்தல், பின்தொடர்தல் உள்ளிட்டவை தொடர்ந்து இடம்பெறுகின்றமையும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தமது உறவுகளை தேடும் செயற்பாடுகள் நீடிக்கின்றமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்றார்.

இதேநேரம், கலாநிதி.பாக்கியசோதி சரவணமுத்து தெரிவிக்கையில்,

இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக பொறுப்புக்கூறல் விடயத்திலிருந்து தவிர்ந்து வருகின்றமையை உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளார்.

அதேநேரத்தில் பொருளாதாரக் குற்றங்கள் நீடித்து வருவதோடு, மனித உரிமைகள் மீறப்படுகின்ற செயற்பாடுகள், கருத்துச்சுதந்திரத்திற்கும், ஒன்று கூடும் சுதந்திரத்திற்கும் விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

விசேடமாக, பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது வரையில் நீதிக்காக போராடிவருகின்றமை பற்றியும் அவர்கள் நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருப்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொருளாதார குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல்களுடன் தொடர்புடையவர்கள் மீது நாடுகள் இலக்கு வைக்கப்பட்ட தடைகள், மற்றும் சொத்துக்களை முடக்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் பரிந்துரைத்துள்ளார்.

ஆகவே, இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தனது பொறுப்புக்கூறலில் இருந்து விலகி நிற்கின்ற தருணத்தில் சர்வதேச ரீதியாக பாரிய பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டிய நிலைமைகள் ஏற்படும்.

குறிப்பாக, ஐ.நா.வின் முகவரகங்கள் தங்களது திட்டங்களை முன்னெடுக்கின்றபோது சர்வதேச தரங்களுக்கு அமைவான விடயங்களை கவனத்தில் கொள்ளுமாறு கோரியிருப்பதும் இங்கு முக்கியமான விடயமாகின்றது.

எனவே, அரசாங்கம், உயர்ஸ்தானிகரின் அறிக்கையை வழமைபோன்று கடந்து செல்லமுடியாது என்பதோடு, அவருடைய கரிசனைக்குரிய விடயங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

“பாரத்” எனப்பெயர் மாற்றிக்கொள்ளும் இந்தியா.? – ஐ.நாவின் நிலைப்பாடு என்ன..?

இந்தியா தனது நாட்டின் பெயரை “இந்தியா” என்பதை “பாரத்” என மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோரின் பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழில் இந்தியா என்பதற்கு பதிலாக “பாரத்” என அச்சிடப்பட்டுள்ளது.

 

எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய அளவில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. என்றாலும், உலகளவில் “இந்தியா” என்பது “பாரத்” என மாற்றப்பட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து விவாதம் தொடங்கியுள்ளது. பாஸ்போர்ட், தூதரகம், மின்அஞ்சல் போன்றவற்றில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஐ.நா. இந்த விவகாரத்தை எவ்வாறு எடுத்துக் கொள்கிறது என்று பார்ப்போம் என்றால், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின் துணை செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறுகையில் ”துருக்கி (Turkey) துருகியே (Turkiye) என கடந்த வருடம் மாற்றப்பட்டது. இதற்கு அந்த அரசிடம் இருந்து முறையாக கோரிக்கை எங்களுக்கு வந்தது.

அதனடிப்படையில் மாற்றப்பட்டது. அதேபோல், எங்களுக்கு கோரிக்கை வந்தால், நாங்கள் அவர்களிடம் இருந்து கோரிக்கை வந்ததாக கருதுவோம்” என்றார்.

இந்திய அரசு சார்பில் முறைப்படியான கோரிக்கை விடுக்கப்பட்டால் ஐ.நா.வில் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என அழைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

“உண்மையைக் கண்டறியும் பொறிமுறைக்காக உண்மையான பின்னணியை தயார் செய்ய வேண்டும்.” – ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் Volker Türk இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச கொள்கைக்கு முரணானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முன்மொழியப்பட்ட உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலமானது சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனத்தின் 19-3 பிரிவு மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்தின் மீது தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் Volker Türk சுட்டிக்காட்டியுள்ளார்.

 

தனிமனித உரிமைகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை போன்றே இதுவும் அமைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஒரு வருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற பாரிய மக்கள் போராட்டங்களை கருத்தில் கொண்டு, வரலாற்று மாற்றத்தின் சவால்களை யதார்த்தமாக்குவதற்கு அர்ப்பணிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

 

யுத்தம் முடிவடைந்து 14 வருடங்கள் கடந்துள்ள போதிலும், அதனால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நீதி, நியாயம், உண்மை என்பன நிறைவேற்றப்படாமல் வேதனையுடன் வாழ்ந்து வருவதாக உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

உண்மையைக் கண்டறியும் பொறிமுறையொன்று அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள நிலையில், அவ்வாறானதொரு பொறிமுறைக்காக உண்மையான பின்னணியை தயார் செய்ய வேண்டும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச ஆதரவுடன் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

“என்னால் இந்த பாவத்தை என் வாழ்நாள் முழுவதும் சுமந்து செல்ல முடியாது.“ – அதிர்வலைகளைஏற்படுத்தியுள்ள சனல் – 4 வீடியோவில் TMVP முன்னாள் ஊடகப்பேச்சாளர் !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சனல் -4 காணொளி தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்றையதினம்(05) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

குறித்த விசாரணைகளை மேற்கொள்ள அதற்கான தெரிவுக்குழுவொன்றை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களின் விபரங்கள் குறித்து சனல் 4 என்ற ஊடகம் காணொளியை ஒன்றை வெளியிட்டிருந்தது.

இந்த சனல் 4 ஊடகத்தின் வெளிப்படுத்தல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நாடாளுமன்ற தெரிவிக்குழு ஒன்றை நிறுவுவது என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேவை ஏற்பட்டால் சர்வதேச ரீதியிலான விசாரணைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பிலான பல அதிர்ச்சித் தகவல்களை பிரித்தானியாவின் சனல் – 4 இல் இன்று வெளியாகியுள்ள முன்னோட்ட காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளவிடயங்கள்.,

“ என்னால் இந்த பாவத்தை என் வாழ்நாள் முழுவதும் சுமந்து செல்ல முடியாது. நான் உண்மையை சொல்ல வேண்டும்.” என பிரித்தானியாவின் சனல் – 4 இல் இன்று வெளியாகியுள்ள முன்னோட்ட காணொளியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (TMVP) ஊடகப் பேச்சாளராக இருந்த ஆசாத் மௌலானா குறிப்பிடுகின்றார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலைத் தாக்குதலில் சாதாரண பொதுமக்களே ஆலயங்களிலும் ஹோட்டல்களிலும் கொன்று குவிக்கப்பட்டனர்.

இவர்கள் கொல்லப்பட்டமை ஆட்சியை கைப்பற்றுவதற்காகவா என்று கேள்வி எழுப்புகிறார் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (TMVP) ஊடகப் பேச்சாளராக இருந்த ஆசாத் மௌலானா.

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அரசியலில் மிகவும் விசுவாசமாக செயற்பட்ட பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனுடன் ஆசாத் மௌலானா அரசியலில் ஈடுபட்டுவந்தவர்.

என்னிடம் ஆபத்தான கைதிகள் உள்ளனர், அவர்கள் கடும்போக்கானவர்கள். அவர்களில் ஒருவரை சந்திக்குமாறு பிள்ளையான் தன்னிடம் தெரிவித்ததாக ஆசாத் மௌலானா குறிப்பிடுகின்றார்.

இதையடுத்து இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தை (NTJ) சேர்ந்த செய்னி மௌலவியை தான் சந்தித்ததாக ஆசாத் மௌலானா கூறுகின்றார். இதையடுத்து இதுவொரு நல்ல சந்தர்ப்பம். நாம் அவர்களை பயன்படுத்துவோம் என பிள்ளையான் எனக்கு கூறினார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிள்ளையான் எனக்கு கூறுகிறார் உளவுத்துறை அதிகாரி சுரேஷ் சாலேக்கும் அந்த அமைப்பினருக்கும் இடையில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யுமாறு .

இதையடுத்து தான் தேசிய தவ்ஹீத் ஜமாத்தை (NTJ) சேர்ந்தவர்களுக்கும் உளவுத்துறை அதிகாரி சுரேஷ் சாலேக்கும் இடையிலான சந்திப்பை கிழக்கில் ஒரு கைவிடப்பட்ட பகுதியில் ஏற்பாடு செய்ததாக ஆசாத் மௌலானா கூறுகிறார்.

இதன்போதே செய்னி மௌலவி தனது சகோதரனான சஹ்ரானை எனக்கு அறிமுகப்படுத்தினார் எனக் கூறுகிறார் ஆசாத் மௌலானா. அதன் பின் நான் உளவுத்துறை அதிகாரியான சுரேஷ் சாலேயை அவருக்கு அறிமுகப்படுத்தினேன்.

குறித்த சந்திப்பு நிறைவடையும் வரை நான் வெளியில் காத்து நின்றேன். சந்திப்பு நிறைவடைந்து வெளியில் வந்த சுரேஷ் சாலே “ ராஜபக்ஷர்களுக்கு இலங்கையில் ஒரு குழப்பமான நிலை தேவையாக உள்ளது. அதுவே கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க ஒருயொரு வழி” என்று கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற பின்னர் யாரெல்லாம் சந்திப்பில் கலந்துகொண்டார்களோ அவர்களின் முகங்களை நான் அடையாளப்படுத்தி படங்களை வெளியிட்டேன் என்கிறார் ஆசாத் மௌலானா.

முதலாவது படம் சஹ்ரான், அவர் தான் அமைப்பின் தலைவரும் தற்கொலைதாரியுமாவார். இதன் பின்னர் நான் பிள்ளையானுடன் கதைத்தேன். அப்போது அவர் “ நீ வாயை மூடிக்கொண்டு எதுவும் தெரியாதது போல் இரு அது போதும்” என்றார்.

அவர்களது மக்களையே ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற அவர்கள் கொலைசெய்தார்கள். இதுவொரு கசப்பான உண்மை என்கிறார் ஆசாத் மௌலானா.

பிரித்தானிய தொலைக்காட்சி நிலையத்தில் இன்று (05) ஒளிபரப்பப்பட்ட சனல் 4 டிஸ்பாட்ச்கள் ஆவணப்படத்தின் முன்னோட்டத்தில் இந்த கருத்துகளை பதிவு செய்துள்ளார் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (TMVP) ஊடகப் பேச்சாளராக இருந்த ஆசாத் மௌலானா.

இதன் முழுமையான ஆவணப்படம் பிரித்தானிய நேரப்படி இன்று செவ்வாய்க்கிழமை (5) பிற்பகல் 11 : 05 க்கு வெளியாகவுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ ஆலயங்கள், ஹோட்டல்களில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 269 பேர் கொல்லப்பட்டனர்.

தற்போது வெளிநாட்டில் புகலிடம் கோரியிருக்கும் ஆசாத் மௌலானா, ஐ.நா. மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற தூதரக அதிகாரிகளுடன் தகவலை பகிர்ந்துள்ளார்.

இதேவேளை, ஆசாத் மௌலானா புகலிடம் பெறுவதற்காக இந்தக் குற்றச்சாட்டை முன்வைப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்த நிலையில், சுரேஷ் சாலேயும் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த காணொளி

ஹிட்லரின் படைகளால் கொலைசெய்யப்பட்ட இத்தாலிய குடும்பங்களுக்கு 13 மில்லியன் டொலர்  இழப்பீடு !

கடந்த 1943-ம் ஆண்டு ஜெர்மனியின் நாஜிப் படையினர், இத்தாலியை ஆக்கிரமித்தனர். அப்போது அவர்கள்,  இத்தாலி மக்கள் பலரை கொன்று குவித்தனர்.

அந்த சமயத்தில், நாஜிப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் கொல்லப்பட்டதற்காக, இத்தாலி மக்களுக்கு பொது தண்டனை வழங்க நாஜிப் படை முடிவு செய்தது. இத்தாலி மக்களில் 6 பேரை தேர்ந்தெடுத்து அவர்களை பொது இடத்தில் வைத்து நாஜிப் படை தூக்கிலிட்டது. இந்நிகழ்வு நடைபெற்று 80ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், இந்த கொடூர சம்பவத்துக்கு இழப்பீடு வழங்க இத்தாலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கொல்லப்பட்ட 6 பேரின் குடும்பத்தினருக்கு 13 மில்லியன் டொலர்  இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இழப்பீடு அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவரான மெளரோ பெட்ரார்கோ கூறுகையில், “எங்களால் அந்தத் துயரை கடந்து வரமுடியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளில் துக்கம் அனுசரிக்கிறோம்” என்றார்.

 

2016-ம் ஆண்டு ஜெர்மனி அரசு, நாஜிப் படையினரால் இத்தாலியில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. நாஜிப் படையினரால் 22,000 இத்தாலிய மக்கள் உயிரிழந்தாதகவும் பல ஆயிரம் இத்தாலி மக்கள் ஜெர்மனியில் அடிமைகளாக பயன்படுத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

நாஜிப் படையினரால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தற்போது இத்தாலி அரசு இழப்பீடு வழங்கி வருகிறது. இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

“இலங்கையில் மத ரீதியான முறுகல்களைத் தோற்றுவித்து இனப்பிரச்சினையைத் தீவிரப்படுத்துவதற்கான முயற்சிகள்.”- ஐ.நாவிடம் தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டு !

தமிழர் வாழ்விடங்களில் பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதன் மூலம் மத ரீதியான முறுகல்களைத் தோற்றுவித்து இனப்பிரச்சினையைத் தீவிரப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ள தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், எனவே இலங்கைக்குத் தொடர்ந்து கால அவகாசம் வழங்குவதை விடுத்து, இம்முறை கூட்டத்தொடரில் வலுவான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி வரையான ஒரு மாதகாலத்துக்கு நடைபெறவுள்ளது.

இந்த அமர்வின் தொடக்க நாளான 11ஆம் திகதியன்று ஏற்கனவே இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பிலான 51/1 தீர்மானத்தின் உள்ளடக்கங்களின் அமுலாக்கத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அதிகாரிகளுக்கும் இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த வியாழக்கிழமை (31) சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக மெய்நிகர் முறைமையில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் சார்பில் இரு அதிகாரிகளும், தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் சார்பில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன், புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் அக்கட்சியின் பேச்சாளர் சுரேன் குருசுவாமி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது அண்மைய காலங்களில் தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் தொடர்பில் ஐ.நா அதிகாரிகளிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக வட, கிழக்கு மாகாணங்களில் படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்கப்படுவதாகக் கூறப்படுகின்ற போதிலும், யதார்த்தபூர்வமாக அதற்குரிய நடவடிக்கைகள் உரியவாறு முன்னெடுக்கப்படவில்லை என்றும், பெருமளவான காணிகள் இன்னமும் படையினர்வசமே இருப்பதாகவும் தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் விசனம் வெளியிட்டனர்.

அதுமாத்திரமன்றி, கடந்த சில மாதங்களாக வட, கிழக்கு மாகாணங்களில் தீவிரம் பெற்றுள்ள தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து ஐ.நா அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.

தமிழ் மக்களின் நீண்டகால வாழ்விடங்களில் பௌத்த விகாரைகளை அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், சில இடங்களில் இச்செயற்பாடுகள் ஜனாதிபதியின் உத்தரவை மீறி மேற்கொள்ளப்படுவதாகவும், மேலும் சில பகுதிகளில் நடைபெறும் சம்பவங்கள் கண்டும் காணாமல் விடப்படுவதாகவும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகளிடம் கூறினர்.

அத்தோடு இவ்வாறான செயற்பாடுகள் மூலம் மத ரீதியான முறுகல்களைத் தோற்றுவித்து இனப்பிரச்சினையைத் தீவிரப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும் தீர்வின்றித் தொடரும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், பயங்கரவாத தடைச்சட்டப் பிரயோகம், கடந்த கால மீறல்கள் தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.

எனவே, எதிர்வரும் 11ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கையில், இத்தகைய செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்ட அவர்கள், இலங்கைக்கு தொடர்ந்து கால அவகாசம் வழங்குவதில் எவ்வித பயனும் இல்லை என்றும், இம்முறை கூட்டத்தொடரில் இலங்கை மீது வலுவான அழுத்தம் பிரயோகிக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

“ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்கு ராஜபக்ஷ குடும்பத்திற்கு விசுவாசமாக இருந்த இலங்கை அதிகாரிகள்.”- லண்டன் டைம்ஸ் அறிக்கையால் பரபரப்பு !

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் பின்னனியில் அரச புலனாய்வு சேவையின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே இருந்ததாக லண்டன் டைம்ஸ் அறிக்கை கூறுகிறது.

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்கு ராஜபக்ஷ குடும்பத்திற்கு விசுவாசமாக இருந்த இலங்கை அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியான சுரேஷ் சாலி மற்றும் ஐ.எஸ். அமைப்பு இடையே ஒரு சந்திப்பு 2018 இல் இடம்பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

இலங்கையை சீர்குலைக்கவும் ராஜபக்சர்களை மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு சதித்திட்டம் தீட்டும் வகையில் இந்த சந்திப்பு இடம்பெறத்தாக பிரித்தானிய ஊடகமான த டைம்ஸ் தெரிவித்துள்ளது.

“கூட்டம் முடிந்தது, சுரேஷ் சாலி என்னிடம் வந்து ராஜபக்சேக்களுக்கு இலங்கையில் பாதுகாப்பற்ற சூழல் தேவை, அதுதான் கோட்டாபய ஜனாதிபதியாவதற்கு ஒரே வழி” என ஹன்சீர் ஆசாத் மௌலானா கூறுகிறார்.

தாக்குதல் என்பது ஓரிரு நாட்களில் செய்யப்பட்ட திட்டம் அல்ல, திட்டம் இரண்டு, மூன்று ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குப் பின்னர் 6 மாதங்களில் பாதுகாப்பை மீட்டெடுப்பதாக வாக்குறுதி அளித்து கோட்டாபய ராஜபக்ச ஆட்சியைப் பிடித்தபோது சாலி இராணுவப் புலனாய்வுத் தலைவராக பதவி உயர்வு பெற்றார்.

இவர் இதற்கு முன்னர் தனது சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

மௌலானா கடந்த ஆண்டு இலங்கையை விட்டு வெளியேறி ஐரோப்பிய புலனாய்வு அமைப்புக்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையிடம் தனது சாட்சியத்தை முன்வைத்துள்ளார்.

இதேவேளை பெயரிடப்படாத மூத்த அரசாங்க அதிகாரி, இரண்டாவது விசில்ப்ளோயர் தாக்குதல் தரிகளுடன் சாலியின் உறவுகள் பற்றிய மௌலானாவின் கருத்தை ஆமோதித்துள்ளார்.

மேலும் குண்டுவெடிப்புகளுக்கு முன்னும் பின்னும் இராணுவ புலனாய்வு, பொலிஸ் விசாரணைகளை மீண்டும் மீண்டும் தடுத்ததாகவும் கூறியுள்ளார்.

2019ல் ஆட்சிக்கு வந்ததும், விசாரணையில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர், விசாரணை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது என்றும் அந்த அதிகாரி கூறுகிறார்.

2021 ஆம் ஆண்டு குண்டுவெடிப்பு தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இறுதி செய்யப்பட்ட போதும், அப்போதைய ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ அதை வெளியிட மறுத்துவிட்டார். மேலும் மௌலானா பல ஆண்டுகளாக ராஜபக்சக்களுக்கு விசுவாசமான அரசியல்வாதியான பிள்ளையானுக்கு உதவியாளராக பணியாற்றினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு  மீட்பு விவகாரத்தில் மத்திய அரசே முடிவு செய்யலாம்; நீதிமன்றம் தலையிட முடியாது.” – இந்திய நீதிமன்றம்

கச்சத்தீவு  மீட்பு விவகாரம் மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு எனவும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் இந்திய நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு சென்னை மீனவர்கள் நலன் சங்கம்  தாக்கல் செய்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே, தலைமை நீதிபதி இதனை அறிவித்து வழக்கினை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

1974-இல் இந்தியா மற்றும் இலங்கைக்கிடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், கச்சத்தீவு இலங்கைக்கு  ஒப்படைக்கப்பட்டது.

குறித்த ஒப்பந்தத்தில் பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக்கூடாது என கூறப்பட்டுள்ளதாக  The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

பிரச்சினைக்கு தீர்வாக 1974 ஆம் ஆண்டின் இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தை இரத்து செய்து கச்சத்தீவை மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

எனினும், கச்சத்தீவு  மீட்பு விவகாரம் மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு எனவும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் இந்திய உயர்  நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சூரியனை ஆராய ஆதித்யா-எல்1 விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியது இந்தியா !

சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா-எல்1 விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து குறித்த ரொக்கெட் 11:50 மணி அளவில் பறக்க ஆரம்பித்தது.

பூமியில் இருந்து 1.5 மில்லியன் கி.மீ தொலைவில் உள்ள இலக்கை அடைய 109 நாட்கள் ஆகும்,

ஆதித்யா-எல்1 கப்பலில் சூரிய செயல்பாட்டின் நீண்ட தூர ஆய்வுகளை மேற்கொள்ளும் அறிவியல் கருவிகள் உள்ளன. இதன் பணி 6 மாதங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திரனின் தென் துருவப் பகுதியில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடந்த வாரம் வெற்றிகரமாகப் பெற்றுள்ளது.

ஆழமான விண்வெளியை ஆராயும் மற்ற நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவை இந்தியா வேகமாகப் பிடிக்கிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 1975 முதல் கிட்டத்தட்ட 100 ரொக்கெட்டுகளை ஏவியுள்ளது,

இலங்கையில் பின்தங்கிய சமூகப்பிரிவினரின் தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடியவாறான கொள்கை வகுப்பு மற்றும் செயற்திட்டங்களை உருவாக்க அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் !

இலங்கையில் நலிவுற்ற நிலையில் உள்ள பின்தங்கிய சமூகப்பிரிவினரின் தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடியவாறான கொள்கை வகுப்பு மற்றும் செயற்திட்ட உருவாக்கத்தில் அரசாங்கம் விசேட கவனஞ்செலுத்தவேண்டுமென புத்திஜீவிகள் மற்றும் பல்துறைசார் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டம் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வறுமை மற்றும் மனித அபிவிருத்தி முன்முயற்சி ஆகியவற்றினால் கூட்டாக முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் மூலம் கிடைக்கப்பெற்ற தரவுகள், கண்டறியப்பட்ட விடயங்கள் மற்றும் பரிந்துரைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ‘பல்பரிமாணப் பாதிப்புக்களைப் புரிந்துகொள்ளுதல்: இலங்கை மக்கள் மீதான தாக்கம்’ என்ற தலைப்பிலான ஆய்வறிக்கையின் வெளியீட்டு நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

பல்பரிமாண அடிப்படையில் மக்களை நலிவுற்றவர்களாக உணரவைக்கும் காரணிகள் மற்றும் அவை பொதுமக்கள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் என்பவற்றை வெளிப்படுத்தும் நோக்கில் கடந்த 2022 நவம்பர் மாதம் முதல் 2023 மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில் தேசிய குடித்தொகைக் கணக்கெடுப்பைப் பயன்படுத்தி நாடளாவிய ரீதியில் 25,000 குடும்பங்களை அடிப்படையாகக்கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி இந்த ஆய்வறிக்கையின் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசுஸா குபோடா, ‘அண்மையகாலங்களில் நிதியியல் கட்டமைப்பானது மிகவேகமாகச் சுருக்கமடைந்துவரும் நிலையில், பல்பரிமாணத் தாக்கங்கள் பற்றிய புரிதலை மேலும் ஆழமாக்குதல் என்பது செயற்திறன்மிக்க கொள்கை உருவாக்கத்துக்கான முதற்படியாகும்’ என்று சுட்டிக்காட்டினார். அந்தவகையில் இலங்கை தொடர்பான இவ்வறிக்கையானது நலிவுற்ற சமூகத்தினரின் தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய கொள்கை உருவாக்கம் மற்றும் செயற்திட்ட வடிவமைப்பில் மிகவும் வலுவான தாக்கத்தைச் செலுத்தும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

அதேவேளை இந்த ஆய்வறிக்கைத் தயாரிப்பில் பணியாற்றிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வறுமை மற்றும் மனித அபிவிருத்தி முன்முயற்சியின் பணிப்பாளர் கலாநிதி சபினா அல்கிரே, ‘பல்பரிமாணப் பாதிப்புக்களைப் புரிந்துகொள்ளுதல்: இலங்கை மக்கள் மீதான தாக்கம்’ என்ற அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள மற்றும் கண்டறியப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் தொடர்பில் விளக்கமளித்தார். ‘இலங்கையில் 55.7 சதவீதமானோர், அதாவது நாட்டின் மொத்த சனத்தொகையில் 12.3 மில்லியன் மக்கள் பல்பரிமாணப் பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றனர் என்ற சிக்கலான விடயத்தை இவ்வறிக்கை வெளிச்சம்போட்டுக் காண்பித்துள்ளது’ என்று சுட்டிக்காட்டிய அவர், இந்நிலைவரத்தை உரியவாறு கையாள்வதற்கு கடன்களின் அளவைக் குறைத்தல் மற்றும் அனர்த்தங்களுக்கு முகங்கொடுப்பதற்கான முற்கூட்டிய தயார்நிலையை வலுப்படுத்தல் என்பன இன்றியமையாதனவாகும் என்று வலியுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசுஸா குபோடாவினால் வெளியிட்டுவைக்கப்பட்ட இந்த ஆய்வறிக்கையைப் பெற்றுக்கொண்ட கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நாட்டின் கல்வித்துறையை முன்னேற்றுவதற்கும் கல்வியைப் பெற்றுக்கொள்வதில் பின்தங்கிய சமூகங்களைச்சேர்ந்த மாணவர்களின் இயலுமையை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்துத் தெளிவுபடுத்தியதுடன் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் 17 ஐயும் அடைந்துகொள்வதற்குரிய முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுவருவதாகக் குறிப்பிட்டார்.

‘நான் கல்வியமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டபோது நாடு தீவிர பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்தது. எரிபொருள், எரிவாயு, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருள் மற்றும் சேவை விநியோகங்களும் தடைப்பட்டிருந்தன. இருப்பினும் நாம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இச்சவாலுக்கு முகங்கொடுப்பதற்கு முன்வந்தோம். அதன்படி நன்கொடையாளர்களின் 70 சதவீத உதவியின் மூலம் பாடசாலை மாணவர்களுக்கான பாடநூல்கள் மற்றும் சீருடைத்துணி என்பன இலவசமாக வழங்கப்பட்டன. அவ்வுதவியை இவ்வருடம் 100 சதவீதமாக உயர்த்துவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அதேபோன்று அடுத்த சில வருடங்களில் சுமார் 3000 பாடசாலைகளை தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கு முன்னுரிமையளித்துத் திறம்படக் கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்த்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.

இருப்பினும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, எமது நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடி மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டதெனச் சுட்டிக்காட்டியதுடன் எனவே அரசியல்வாதிகள் ‘அதனைச்செய்வோம், இதனைச்செய்வோம்’ என்று கூறுவதைவிடுத்து, வகுக்கப்படும் செயற்திட்டங்களுக்கு செயல்வடிவம் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் இவ்வாய்வறிக்கை தொடர்பில் நடைபெற்ற குழு ரீதியான கலந்துரையாடலில் பங்கேற்ற கலாநிதி ரமணி குணதிலக, பி.எஸ்.எம்.சாள்ஸ், வைத்திய கலாநிதி வின்யா ஆரியரத்ன ஆகியோர் பின்தங்கிய பிரதேசங்கள் உள்ளடங்கலாக நாட்டின் பல்வேறு பாகங்களிலும் நிலவும் யதார்த்தபூர்வமான பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து பலதரப்பட்ட கருத்துக்களை விரிவாக முன்வைத்தனர்.

அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் அதிகாரிகளுக்கு இடையிலான மேற்படி சந்திப்பில், மேற்படி  கொள்கை நடவடிக்கைகளை அடைவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பிடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், நீண்டகால சுற்றாடல் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும் இலங்கையின் அர்ப்பணிப்புடன் இந்த சீர்திருத்தங்கள் எவ்வாறு இணைந்துள்ளன என்பன பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டது.

சீர்திருத்தங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கான தனது அர்ப்பணிப்பை இதன்போது அமைச்சர் வெளிப்படுத்தினார். நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதன் முக்கியத்துவத்தை  வலியுறுத்திய அவர், இந்த சீர்திருத்தங்கள் மக்களின் வாழ்வில் ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கத்தையும் பட்டியலிட்டுள்ளார்.மேற்படி இலக்குகளை அடைவதற்காக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் முன்னெடுக்கப்படும் நகர்வுகளுக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.