September

September

ஜெனீவாவில் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்படும் எந்த தீர்மானமாயினும் ஏற்கப்போவதில்லை – இலங்கை அரசாங்கம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு உறுப்பு நாடுகள் ஆதரவு வழங்கினாலும் வழங்காவிட்டாலும் இலங்கை அரசாங்கம் அதனை முற்றுமுழுதாக எதிர்க்கும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது  இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரைபு தீர்மானம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அலி சப்ரி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் பேசிய அமைச்சர் அலி சப்ரி,

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு உறுப்பு நாடுகள் ஆதரவு வழங்கினாலும் வழங்காவிட்டாலும் இலங்கை அரசாங்கம் அதனை முற்றுமுழுதாக எதிர்க்கும். தற்போதைய தருணத்தில் இந்தத் தீர்மானம் தேவையற்ற ஒன்றாகும். முக்கிய நாடுகளின் இணை அனுசரணையுடன் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படும் தீர்மானம், பிளவுபடுத்தும் பொறிமுறை என்பதால், அதனை ஏற்கப் போவதில்லை.

தீர்மானம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உள்நாட்டுப் பொறிமுறையின் ஊடாக பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. இந்த கடமையை நிறைவேற்றும் பணிகள் தொடரும். உள்நாட்டு பொறிமுறைக்கு அப்பால், அரசியலமைப்பை மீறும் எந்தவொரு வெளிப்புற பொறிமுறையையும் நாம் தொடர்ந்து எதிர்ப்போம்.

இலங்கை தொடர்பான புதிய வரைவுத் தீர்மானம், அதிகாரப் பகிர்வு, தேர்தலை நடத்துதல், காணாமல் போனவர்களின் அவல நிலையை நிவர்த்தி செய்தல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றுதல், அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான வன்முறைகளுக்குப் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

இதன்போது அமைச்சரிடம் புலம்பெயர்ந்த அமைப்புக்களுடனான சந்திப்புக்களு் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போது,

சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் அமைப்புகளுடன் எந்தக் கலந்துரையாடலும் மேற்கொள்ளவில்லை. என தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண விரிவான சர்வதேச அணுகுமுறை தேவை என்று நான்கு அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் முன்வைத்த தீர்மானம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது,

அது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் அலி சப்ரி, வெவ்வேறான நபர்கள் இந்த விடயத்தில் பணியாற்றுகின்றார்கள் எனவும் அது எவ்வாறு செயற்படுத்தப்படுகின்றது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உலக வங்கியால் வெளியிடப்பட்டுள்ள உலக உணவுப் பணவீக்க சுட்டி – முதல் பத்து நாடுகளில் இலங்கையும் !

செப்டம்பர் 2021 முதல் ஓகஸ்ட் 2022 வரை, 53 நாடுகளில் உணவுப் பாதுகாப்பு குறித்த புதிய அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகில் உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள 10 நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது.

இலங்கையில் உணவுப் பணவீக்கம் 91 சதவீதமாக உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 செப்டெம்பர் மாதத்தில் இலங்கையில் உணவுப் பணவீக்கம் 9.9 சதவீதமாக இருந்ததுடன் கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் 90.9 சதவீதமாக பத்து மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து உணவுப் பணவீக்கம் வேகமாக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளின் பட்டியலில் சிம்பாப்வே முதலிடத்தில் உள்ளது.

லெபனான் மற்றும் வெனிசுலா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.

துருக்கி, ஈரான், அர்ஜென்டினா, மால்டோவா, எத்தியோப்பியா, ருவாண்டா ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள மற்ற நாடுகள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான்களின் ஆட்சியால் உயர்கல்வியை இழந்த ஒரு மில்லியன் ஆப்கானிய பெண்கள் !

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அதை தொடர்ந்து அங்கு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக பெண்கள் மேல் நிலைக் கல்வி பயில தடை விதித்து தலிபான்கள் உத்தரவு பிறப்பித்தனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது.

இதனால் கடந்த ஒரு ஆண்டாக அங்கு பெண்கள் மேல்நிலை கல்வி கற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு பெண்களுக்கான உயர்நிலைப் பள்ளிகளை மீண்டும் திறக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை தலிபான்களை வலியுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் உயர் கல்வியை இழந்துள்ளதாக ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகளின் உதவிக் குழு தெரிவித்துள்ளது.

பெண்கள் கல்வி கற்க முடியாமல் போன கடந்த ஓராண்டானது, ஒரு சோகமான, வெட்கக்கேடான மற்றும் முற்றிலும் தவிர்க்கப்படக்கூடிய ஒரு ஆண்டுவிழா என்று ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது. இது ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்திற்கு ஆழமான சேதத்தை ஏற்படுத்துகிறது என ஐநா தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைது செய்யப்படுவோரில் 25 சதவீதம் பேர் மாணவர்கள் – புத்தகக்கல்வியை மட்டுமே போதிக்கும் பாடசாலைகளே காரணம் !

இலங்கையில் போதைப்பொருள் பாவைனை தொடர்பான அறிக்கைகள் மற்றும் தரவுகளின் படி “ போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைது செய்யப்படுவோரில் பெரும்பாலானோர் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களே எனவும் அவர்களில் 20 அல்லது 25 சதவீதம் பேர் பாடசாலை மாணவர்களாாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.” எனவும் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த நிலை வட-கிழக்கில் இன்னமும் மோசமடைந்துள்ளது. பாராளுமன்ற அமர்வுகளில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட இது தொடர்பான பதற்றமான நிலை தொடர்பில் பாராளுமன்றில் பதிவு செய்திருந்தனர். போதைப்பொருள் ஒழிப்புக்கான முறையான தீர்வுத்திட்டம் ஒன்றை கல்வி அமைச்சு முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில் இந்த போதைப்பொருள் ஒழிப்புக்கான கல்வி அமைச்சின் நடவடிக்கைகள் என்ன என்ற கேள்வி பாராளுமன்றின் ஏனைய உறுப்பினர்களாலும் அதிகமாக விமர்சிக்கப்பட்டன. அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் இது தொடர்பான கேள்வியை கல்வி அமைச்சரிடம் எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்து கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த உரையாற்றிய போது “பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளை பரிசோதிக்கும் நடைமுறை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. மேலும் எதிர்காலத்தில் இது தொடர்பான சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்படும் எனவும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நுட்பமான வழிகளில் பல்வேறு போதைப் பொருட்கள் பரிமாற்றப்படுகின்றன எனவும் இது தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும் கூறியிருந்தார். இதனை தற்காலிகமான – வழமையான அமைச்சர்கள் வழங்கும் சராசரியான உறுதிப்பாடற்ற பதிலாகவே எடுத்துக்கொளள முடியும். தவிர இது பற்றி எந்த முன்னேற்றமும் ஏற்படப்போதில்லை என்பதையும் கல்வி அமைச்சரின் பதில் மூலமாக உணர முடிகிறது. ஒப்பீட்டளவில் தெற்கை விட வட-கிழக்கில் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஐஸ்போதைப்பொருள், ஊசி போதப்பொருள் பாவனை அசுர வளர்ச்சி கண்டு வருவதுடன் இதன் விளைவாக வாள்வெட்டு மற்றும் வன்முறை கலாச்சாரம் ஒன்றும் நமது பகுதிகளில் மேலோங்கிக்கொண்டிருக்கின்றது. கடந்து முடிந்த குறுகிய கால இடைவெளியில் ஊசி போதைப்பொருள் பாவனையால் யாழ்ப்பாணத்தில் ஐந்து இளைஞர்கள் வரையில் உயிரிழந்துள்ளமையும் இங்கு நோக்கப்பட வேண்டியது. இது அண்மைய காலத்தில் போதைப்பொருள் பாவனையின் தீவிர தன்மையை நன்கு தெளிவுபடுத்துகிறது.

“கிரிக்கெட்டில் வென்றாலும் ஆப்கானிஸ்தானை விட நாம் வீழ்ச்சியடைந்த நிலையிலுள்ளோம்.”- ஜனாதிபதி ரணில்

“கிரிக்கட் விளையாட்டுக்கு மாத்திரமல்ல. நாட்டுக்கும் சிறந்த உதாரணத்தை தசுன் வழங்கியுள்ளார்.” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஆசிய கிண்ணங்களை வெற்றி கொண்ட வலைப்பந்தாட்ட வீராங்கனைகள், கிரிக்கட் வீரர்கள் மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களைப் பெற்ற வீர, வீராங்கனைகளுக்கு கௌரவமளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள சினமன் லேக் சைட் ஹோட்டலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கயாஞ்சலி அமரவன்சவுடனான வலைப்பந்தாட்ட அணியும் , தசுன் ஷானக தலைமையிலான கிரிக்கட் அணியும் ஆசிய கிண்ணங்களை வெற்றி கொண்டுள்ளன. இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைப் போன்று நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன். காரணம் இந்த வெற்றிகள் எமக்கு கிடைக்க வேண்டிய கட்டாயம் காணப்பட்டது.

கிரிக்கட் விளையாட்டில் ஆப்கானிஸ்தானுடன் போட்டியிட்டு நாம் தோல்வியடைந்தோம். எனினும் இந்த தோல்வியைக் கண்டு எமது அணி பின்வாங்கவில்லை. தசுன் இந்த தோல்வியை , தமது அணியை பலமிக்கதாக்குவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். இது கிரிக்கட் விளையாட்டுக்கு மாத்திரமல்ல. நாட்டுக்கும் சிறந்த உதாரணத்தை தசுன் வழங்கியுள்ளார்.

இலங்கை இன்று ஆப்கானிஸ்தானை விடவும் வீழ்ச்சியடைந்த நிலையிலேயே உள்ளது. இந்நிலைமையிலிருந்து மீள முடியாது என்று சிலர் எண்ணுகின்றனர். கிரிக்கட் விளையாட்டில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்த போது இலங்கை கிரிக்கட் அணி பின்வாங்காமல் பலத்துடன் அடுத்த கட்டத்திற்குச் சென்றது.

அதேபோன்று நாமும் தோல்வியை வெற்றியடைவதற்கான ஆயுதமாக்கிக் கொண்டால் விரைவில் நெருக்கடிகளிலிருந்து மீள முடியும்.

தற்போது நாம் ஆப்கானிஸ்தானை விட வீழ்ச்சியடைந்துள்ளோம். சிலர் இந்த நெருக்கடிகளிலிருந்து மீள முடியாது என்று எண்ணுகின்றனர். தசுனைப் போன்று அனைவரும் எண்ணினால் இந்த நெருக்கடிகளிலிருந்து நிச்சயம் மீள முடியும்.

நாம் ஆசியாவில் மாத்திரமின்றி முழு உலகிலும் வெற்றியாளர்களாவதற்கு , எவ்வித அச்சமும் இன்றி உலகத்துடன் போட்டியிடத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் நாம் உலகத்துடன் போட்டியிடுவதற்கு பதிலாக, உலகிலுள்ள சட்டங்களை எமது வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொள்வதற்கே நாம் பழக்கப்பட்டுள்ளோம். இது ஒருபோதும் சாத்தியமாகவில்லை.

இதற்கு முன்னர் இது போன்ற வெற்றிகளின் ஒரு பங்கினை அரசியல்வாதிகள் தம்வசப்படுத்திக் கொண்டனர். எனினும் நாம் அந்த நடைமுறையை முற்றாக நீக்கி, வெற்றியின் நூற்றுக்கு 200 சதவீத பங்கினையும் வீர, வீராங்கனைகளுக்கே உரித்தாக்கியுள்ளோம் என்றார்.

இலங்கைக்கு புத்துயிர் அளிக்க வாருங்கள் – வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் குமார் சங்கக்கார கோரிக்கை !

வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியில் இலங்கைக்கு வருகை தருமாறு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார அழைப்பு விடுத்துள்ளார்.

https://www.facebook.com/Official.Kumar.Sangakkara/posts/pfbid0CRNjvqWUo1jXh44y2G7EXZYdTfb6ugn6iyFaeVoEwGCMXnzzuBZkz2fwr49Xz4fcl

உள்ளூர் புகைப்படக் கலைஞர் பிரதீப் கமகேயினால் பிடிக்கப்பட்ட இலங்கையின் இயற்கை காட்சிகளை தனது பேஸ்புக்கில் பகிர்ந்துகொண்ட குமார் சங்கக்கார,

“நிச்சயமாக பிரமிக்க வைக்கிறது! எங்கள் தீவு மிகவும் வித்தியாசமானது மற்றும் அழகானது.

குறித்த படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ள குமார் சங்கக்கார, இலங்கை மீண்டும் விருந்தினர்களுக்கான திறக்கப்பட்டுள்ளது என்பதை அனைவருக்கும் நினைவூட்டுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்..

தனது பேஸ்புக் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ள குமர் சங்கக்கார,

“எங்கள் சுற்றுலாத் துறையை மீட்டெடுக்க உலகெங்கிலும் உள்ள அனைத்து நண்பர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவை. இது ஒரு கடினமான ஆண்டு, ஆனால், நமது மக்களின் துணிச்சலான போராட்டங்கள் மற்றும் முயற்சிகளுக்கு நன்றி, இங்கு சில சாதகமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகள் பயண ஆலோசனைகளை தளர்த்துவதன் மூலம், சுற்றுலாப் பயணிகள் தங்கள் விடுமுறையை நம்பிக்கையுடன் மீண்டும் இங்கு கழிக்கலாம். துரதிர்ஷ்டவசமாக, தேவையற்ற செய்திகள் நல்ல செய்திகளை விட வேகமாக பரவுகின்றன. எனவே தயவுசெய்து இதனை பகிரவும், ”என்று சங்கக்கார தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தீண்டாமைக் கொடுமை – மாணவர்களுக்கு பொருட்கள் கொடுக்க மறுத்த கடை முதலாளி !

தமிழ்நாடு – தென்காசி மாவட்டத்தில் ஊர் கட்டுப்பாடு எனச் சொல்லி பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுக்காமல் திருப்பி அனுப்பிய கடைக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ளது பாஞ்சாங்குளம் கிராமம். பெரும்புத்தூர் ஊராட்சிக்கு உள்பட்ட இங்கு அரசுப் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளிக்கூடத்திற்கு வரும் வழியில் மிட்டாய் கடை ஒன்று உள்ளது. இந்தக் கடையில் குழந்தைகள் மிட்டாய் வாங்கிச் சாப்பிடுவது வழக்கம்.

இந்நிலையில், கடைக்கு வந்த குழந்தைகளிடம் கடைக்காரர் , “இனிமேல் நீங்கள் யாரும் இங்கு வந்து தின்பண்டம் வாங்க வேண்டாம். ஸ்கூலுக்குப் போங்க. தின்பண்டம் உள்ளுர் கடையில் வாங்கக் கூடாது. நீங்கள் போங்க. இதை உங்கள் வீட்டிலும் போய் சொல்லுங்கள். தின்பண்டம் கொடுக்க மாட்டுறாங்க எனச் சொல்லுங்க. இனி கொடுக்க மாட்டாங்கடா. ஊரில் கட்டுப்பாடு வந்திருக்கு” என்று சொல்கிறார்.

உடனே, அதில் ஒரு குழந்தை என்னக் கட்டுப்பாடு என்று கேட்கிறார். உடனே, ‘கட்டுப்பாடுன்னா… ஊர்ல ஒரு கூட்டம் போட்டு பேசிருக்காங்க. உங்கத் தெருவுல யாருக்கும் பொருள்கள் கொடுக்கக் கூடாதுன்னு” என்று சொல்வி அந்தக் குழந்தைகளைத் திருப்பி அனுப்புகிறார்.

இதை அந்தக் கடைக்காரரே வீடியோவும் எடுத்துள்ளார். இந்த வீடியோவை அந்தக் கடைக்காரர் தன் சுய சாதியினர் இருக்கும் வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்துள்ளார். இதன் பிறகு பல வாட்ஸ்அப் குழுக்கள் இந்த வீடியோ வைரல் ஆனது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட நிர்வாகம், ராமசந்திரமூர்த்தி என்பவரை கைது செய்தனர். மேலும், அந்தக் கடைக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

இந்த சம்பவத்துக்கான பின்னணி தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் இரு தரப்பினர் (கோனார் மற்றும் பட்டியல் சாதியினர்) சேர்ந்தவர்கள் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோனார் சாதியினர் பட்டியல் சாதியினரிடம் வழக்குகளை திரும்பப் பெறக் கோரி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பட்டியல் சாதியினர் இதற்கு உடன்படவில்லை. இதையடுத்து, பட்டியல் சாதியினருக்கு தங்கள் கடைகளில் எந்த பொருளும் கொடுக்கக் கூடாது என கோனார் சமூகத்தினர் தீர்மானம் செய்ததாக கூறப்படுகிறது..

இந்த நிலையில் பாஞ்சாகுளம் கிராமத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாக போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர்.

எலிசபெத் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சீனாவுக்கு தடை – காரணம் என்ன..?

சமீபத்தில் மறைந்த பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், பிரித்தானிய பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாட்டு பிரதிநிதிகளும் நேரில் வந்து ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், சீன அரசு சார்பில், அந்நாட்டு உயர் அதிகாரிகள் வந்து அஞ்சலி செலுத்துவதாக இருந்தது. அதற்கு பிரித்தானிய பார்லிமென்டின் பொதுச்சபை சபாநாயகர் சர் லிண்ட்சே ஹோய்ல் அனுமதி மறுத்து உள்ளார்.

சீனாவின் ஸின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்கர் முஸ்லிம்கள் மீது மனித உரிமை மீறலில் சீன பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருவது குறித்து பிரித்தானியாவை சேர்ந்த எம்.பி.,க்கள் கடந்த ஆண்டு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, பிரிட்டனை சேர்ந்த 5 எம்.பி.,க்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சீன பகுதிக்குள் நுழைய அந்நாடு தடை விதித்தது. இதையடுத்து, ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும் சீன அரசு பிரதிநிதிகள்பார்லிமென்ட் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்க கூடாது என, எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து சீன பிரதிநிதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் நடக்கும் ராணியின் இறுதி சடங்கில் பங்கேற்க சீன ஜனாதிபதி ஷீ ஜிங்பிங்குக்கு பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது. அவர் சார்பில் துணை அதிபர் வாங் குயிஷான் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராணியின் இறுதி சடங்கில் சீனா பங்கேற்க தடை ஏதும் விதிக்கப்படவில்லை.

பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் இலங்கை பெண் தொழிலாளர்கள் – ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர்

இலங்கையில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், நாட்டில் தற்போது அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுடன் ஒத்துப்போவதில்லை. இந்தநிலையில் வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்லும் இலங்கையர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமகால அடிமைத்தனம் பற்றிய ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் டொமோயா ஒபோகாடா முன்வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையில் நன்மைகள் இலங்கையில் தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ள சமகால அடிமைத்தனம் பற்றிய ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர், இலங்கைத் தொழிலாளர்களின், குறிப்பாக தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள் குறித்து அறிக்கையிட்டுள்ளார்.

தேயிலைத் தோட்டங்களில் தேயிலை கொழுந்து பறிக்கும் பெண்கள், ஆண்களை விட இரண்டு மடங்கு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்ற போதும், ஆண்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கு நிகராகவே பெண்களும் சம்பளம் பெறுகின்றனர்.  அத்துடன் ஆடைத் தொழில் மற்றும் வீட்டு வேலைகளில் இதே பாகுபாடு நீடிப்பதாக விசேட அறிக்கையாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் தொழிலாளர்கள் மத்தியில் உள்ள முக்கிய பிரச்சினை பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறையாகும். எனினும் பழிவாங்கப்படலாம் என்ற பயம் காரணமாக முறைப்பாடுகள் செய்யப்படுவதில்லை விடயத்தையும் அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

455 ஊடகவியலாளர்கள் கடமையின் போது கொல்லப்பட்டுள்ளனர் – UNESCO

நேற்று (15.09.202)சர்வதேச ஜனநாயக தினம். ஜனநாயகத்திற்கான ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதே இந்த வருடத்தின் தொனிப்பொருளாகும்.

கடந்த 5 ஆண்டுகளில் உலக சனத்தொகையில் 85 வீதமானோர், ஊடக சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகளை எதிர்கொண்டதாக UNESCO குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச அளவில் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

சட்ட துஷ்பிரயோகம், இலத்திரனியல் பாதுகாப்பு உத்திகள், வெறுப்பூட்டும் பேச்சுகள், நாளாந்தம் ஊடகங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வழக்குகள், உளவு பார்த்தல் மூலம் ஊடக சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக UNESCO சுட்டிக்காட்டியுள்ளது.

UNESCO தரவுகளின் பிரகாரம், 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு காலப் பகுதியில் 455 ஊடகவியலாளர்கள் கடமையின் போது அல்லது கடமை நிமித்தம் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.