25

25

மன்னாருக்கு விஜயம் செய்குதுள்ள இந்தியக்கோடீஸ்வரர் கௌதம் அதானி !

இந்தியாவின் செல்வந்த வர்த்தகர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் கௌதம் அதானி உள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவரும் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். அதானி குழுமம் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்திக்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், அவர் இங்கு வருகை தந்துள்ளார். கெளதம் அதானியும் அவரின் குடும்பத்தின் சிலரும், இரண்டு தனியார் விமானங்களில் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

கௌதம் அதானியின் மகன், பிரதம நிறைவேற்றதிகாரி, அதானி பசுமை எரிசக்தி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் உள்ளிட்டோரும் இலங்கைக்கு வந்துள்ளனர்.

துறைமுகம், எரிசக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி செயற்றிட்டம் தொடர்பில் இலங்கையின் உயர் அதிகாரிகளுடன் கௌதம் அதானி கலந்துரையாடவுள்ளார். அவர், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்திய வர்த்தகர்கள் சிலர் இன்று மாலை மன்னாருக்கு சென்றுள்ளனர். இராஜாங்க அமைச்சர் சானக்க, இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் சஞ்சய மொஹொட்டால ஆகியோரும் அவர்களுடன் அங்கு சென்றிருந்தார்.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத பங்கை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கும் உடன்படிக்கை கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது. புதிய கூட்டு நிறுவனமொன்றினூடாக, இந்த மேற்கு முனையத்தின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கு முன்னர், இந்தியா, ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையில் கூட்டுத் திட்டமாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு பிரேரிக்கப்பட்டிருந்ததுடன், தற்போதைய அரசாங்கம் அந்தத் திட்டத்தை நிறுத்தி, மேற்கு முனையத்தை அதானி குழுமம் தலைமையிலான கூட்டுத் திட்டத்திற்கு வழங்கியது.

இதனிடையே, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம் இணைந்து அபிவிருத்தி செய்யும் கொழும்பு துறைமுகத்தின் நுழைவாயிலின் முதலாவது கான்கிரீட் பாலத்தை பொருத்தும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது. புதிய களனி பாலத்திலிருந்து காலி முகத்திடல் வரை தூண்களில் நிர்மாணிக்கப்படும் இந்த வீதியில், முன்னரே பொருத்தப்பட்ட கான்கிரீட் பாலத்தின் 3,279 பகுதிகள் பொருத்தப்படவுள்ளன.

நான்கு வழிச்சாலைகளையும், 5.3 கிலோமீட்டர் நீளத்தையும் கொண்டதாக இது அமையவுள்ளது. துறைமுக நுழைவாயிலின் அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தினால் துறைமுக வளாகத்தில் இடித்து அகற்றப்பட்ட கட்டடங்களுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒதுக்கீட்டில் 17 மாடிகளைக் கொண்ட கடல்சார் வசதி நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

‘என் எண்ண ஓட்டத்தில்…’ நூல் வெளியீடும்! ‘சிவஜோதி நினைவுப் பரிசு’ (ஒரு லட்சம் ரூபாய்) – அறிவிப்பும்!

‘என் எண்ண ஓட்டத்தில்…’ என்ற தலைப்பில் அமரர் சிவஜோதி வயீத்தீஸ்வரனின் ஆக்கங்களின் தொகுப்பு வருகின்ற 18ம் திகதியன்று கிளிநொச்சி லிற்றில் எய்ட் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. லிற்றில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் இணைப்பாளராகப் பணியாற்றி குறுகிய காலத்தில் அம்மண்ணின் மைந்தனான சிவஜோதியின் 50வது பிறந்ததினத்தையொட்டி இந்நூல் வெளியீடு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சிவஜோதியின் பிறந்த தினமான நவம்பர் 18 இலேயே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிவஜோதி எழுதிய கட்டுரைகள், மேற்கொண்ட நேர்காணல்கள், நூல் விமர்சனங்கள், ஆகியவற்றின் தொகுப்பாக இந்நூல் வெளியிடப்படுகின்றது. தேசம் வெளியீடாக வரும் இந்நூலை திருமதி ஹம்சகௌரி சிவஜோதி தொகுத்துள்ளார். நாடகக் கலை, நாடகக் கலைஞர்களுடனான நேர்காணல், பேராசிரியர் கா.சிவத்தம்பி மற்றும் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் ஆகிய கல்வியியலாளர்களின் நேர்காணல்கள் என பல்வேறு வகையான ஆக்கங்களையும் தாங்கி இந்நூல் வெளிவருகின்றது.

சிவஜோதியை ஆண்டுதோறும் நினைவு கூருகின்ற வகையில் சிவஜோதி நினைவுப் பரிசு ஒன்றை வழங்கவும் சிவஜோதி நினைவுக்குழு தீர்மானித்துள்ளது. மேலும் சிவஜோதி ஒரு நாடகக் கலைஞர் என்பதாலும்; நாடகக் கலையில் தீவிர ஆர்வத்தைக் கொண்டிருந்ததாலும் நாடகக் கலைக்காக தங்களை அர்ப்பணித்த ஒரு கலைஞருக்கு அல்லது நாடகக் கலைக்கு சேவையாற்றுகின்ற அமைப்பு ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அதன்படி சன்மானத்தை பெறுகின்றவருக்கு அல்லது அமைப்புக்கு அந்நிகழ்வில் ஹம்சகௌரி சிவஜோதி ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்குவார்.

இந்நிகழ்வில் சிவஜோதி நினைவாக லிற்றில் எய்ட் இல் கற்கும் மாணவ மாணவியருக்கு யாழ் விக்ரோரியாக் கல்லூரி பழைய மாணவர்கள், அவர்களுக்கு வேண்டிய பாடசாலை சீருடைகளை வழங்க உள்ளனர். சிவஜோதி யாழ் சுழிபுரம் விக்ரோரியாக் கல்லூரியின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவஜோதியின் நினைவு நிகழ்வுகளை ஆண்டுதோறும் மேற்கொள்ளவும், நாடகக் கலைக்கு உழைக்கின்றவர்களையும் அமைப்புகளையும் கௌரவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் சிவஜோதி நினைவுப்பரிசை வழங்கவும் சிவஜோதி நினைவுக்குழு தீர்மானித்து உள்ளது. அதற்காக சிவஜோதி ஞாபகார்த்த நிதியம் ஒன்று லிற்றில் எய்ட் இல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சிவஜோதி நேசித்த நாடகக் கலைக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க முன்வருபவர்கள் இந்நிதியத்திற்கு நிதி வழங்குவதன் மூலம் அதனைச் செய்ய முடியும்.

சிவஜோதி ஞர்பகார்த்த நிதியத்துக்கு நிதி வழங்க விரும்புபவர்கள் கீழுள்ள வங்கிக் கணக்கிற்கு தங்கள் நிதியை வழங்க முடியும்.
வங்கி: HNB
கணக்கின் பெயர்: Little Aid Skill Development Centre (Gurantee) Limited
வங்கிக் கணக்கு இலக்கம்: 146020176746

இவ்வாண்டுக்கான சிவஜோதி நினைவுப் பரிசைப் பெறும் நாடகக் கலைஞர் அல்லது நாடக்குழு நவம்பர் 18 அன்று அறிவிக்கப்படும்.

இந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு சிவஜோதி ஞாபகார்த்த குழு அழைப்புவிடுத்துள்ளது. இந்நிகழ்வை சிவஜோதி முன்நிலை உறுப்பினராக இருந்து இயக்கிய மக்கள் சிந்தனைக் கழகம் மற்றும் லிற்றில் எய்ட் அமைப்பு என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

– சிவஜோதி ஞாபகார்த்த குழு –