11

11

அமெரிக்க மற்றும் தலிபான்களுக்கிடையில் பேச்சு – அமெரிக்கா எங்கள் அரசை அங்கீகரிக்க வேண்டும் என தலிபான்கள் வலியுறுத்தல் !

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக இருந்த அமெரிக்க படைகள் வெளியேறியதை  அடுத்து கடந்த ஓகஸ்ட மாதம்  தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முற்றிலுமாக கைப்பற்றினார்கள். இதைத் தொடர்ந்து அவர்களது ஆட்சி அங்கு வந்துள்ளது. ஏற்கனவே 5 ஆண்டுகள் தலிபான்கள் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தான் இருந்தது. அப்போது பல்வேறு கொடூர செயல்களில் அவர்கள் ஈடுபட்டனர். இதனால் பாகிஸ்தான், சவுதி அரேபியா தவிர எந்த நாடுகளும் அப்போது தலிபான்கள் ஆட்சியை அங்கீகரிக்கவில்லை.

ஆனால் ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றியுள்ள அவர்கள் பழைய காலத்தை போல மோசமான செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று அறிவித்தார்கள்.

ஆனாலும் கடுமையான அடக்குமுறைகளை தலிபான்கள் கொண்டு வந்துள்ளனர். பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் மரண தண்டனை உள்ளிட்ட கொடூர தண்டனைகளையும் வழங்கி வருகிறார்கள். இதனால் மற்ற நாடுகள் தலிபான்கள் ஆட்சியை அங்கீகரிக்க தயங்கி வருகின்றன.

இந்தநிலையில் பரம எதிரியான அமெரிக்காவுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள தலிபான்கள் முயற்சி செய்தனர். இது சம்பந்தமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாமல் கட்டார் நாட்டில் உள்ள டோகாவில் இருதரப்பு பிரதிநிதிகளும் ரகசியமாக பேச்சு வார்த்தை நடத்தினார்கள் தலிபான்கள்.

அதைத்தொடர்ந்து கடந்த சனிக்கிழமையும்,நேற்றும் இரு தரப்பினருக்கும் இடையே அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது அமெரிக்கா கடுமையான நிபந்தனைகளை விதித்தது.

இதை ஏற்றுக் கொள்ள தலிபான்கள் மறுத்தனர். இதனால் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் நடத்தப்பட்டது. அதிலும் சரியான முடிவுகள் எட்டப்படவில்லை. ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் செயல்படாதது போல் ஒடுக்கப்பட வேண்டும் என்பது அமெரிக்காவின் முக்கிய கோரிக்கையாகும்.

ஆனால் தலிபான்கள் தங்கள் தரப்பில் தெரிவித்த கோரிக்கைகளை ஏற்க வேண்டும், தங்கள் அரசை அங்கீகரிக்க வேண்டும் என்று கூறினார்கள். அவ்வாறு அமெரிக்கா செய்யவில்லை என்றால் ஐ.எஸ். பயங்கரவாதிகளையும் மற்ற பயங்கரவாதிகளையும் எங்களால் கட்டுப்படுத்த முடியாது என்று தலிபான்கள் எச்சரித்தார்கள்.

எனவே பேச்சுவார்த்தையில் உடன்பாடுகள் ஏற்படவில்லை. அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் மக்கள் பாதிப்பு அடையாமல் இருக்க உணவு, மருந்து உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை செய்வதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையில் என்ன வி‌ஷயங்கள் பேசப்பட்டது? என்ன முடிவுகள் எடுக்கப்பட்டது? என்பது பற்றி அமெரிக்கா இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

“டெல்லியை அழிக்க 5 நிமிடம் போதும்.” – பாகிஸ்தான் அணுகுண்டு தந்தையின் உயிரை காவுவாங்கிய கொரோனா !

பாகிஸ்தானின் அணுகுண்டு தந்தை என்று அழைக்கப்பட்டவர் அப்துல் காதிர்கான். இந்தியா அணுகுண்டு கண்டுபிடித்ததைத் தொடர்ந்து, எதிலும் இந்தியாவுடன் போட்டி போடும் பாகிஸ்தானும் அணுகுண்டு உருவாக்கும் முயற்சியில் இறங்கியது. அப்போது, பாகிஸ்தானும் அணுகுண்டை உருவாக்க முக்கிய காரணமாக இருந்தவர் அப்துல் காதிர்கான். அணு விஞ்ஞானியான இவர் பாகிஸ்தானில் அணு குண்டை உருவாக்கியதால், அந்நாட்டினர் இவரை பெருமையுடன் பாகிஸ்தானின் அணுகுண்டு தந்தை என்று அழைத்து வந்தனர்.

85 வயதான அப்துல் காதிர்கான் சமீப காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அண்மையில் கொரோனா தொற்று பாதிப்பும் ஏற்பட்டு, உயிருக்கு போராடினார். இஸ்லாமாபாத்தில் உள்ள கே.ஆர்.எல். மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

இந்தியாவில் பிறந்து, பாகிஸ்தானுக்கு குடிபெயரந்து அந்நாட்டின் அணு ஆயுதத்தின் தந்தை எனப் போற்றப்பட்டவர் அப்துல் காதிர்.
இவரது மறைவு குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ட்விட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில், டாக்டர் அப்துல் காதிர் கான் மறைவு செய்திகேட்டு மிகவும் துன்பப்பட்டேன். தேசத்துக்கு அணு ஆயுதத்தை வடிவமைத்த கானின் சேவை தேசத்தால் விரும்பப்பட்டது, தேசமும் அவரை நேசித்தது என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் அப்துல் காதிர் கான் அளித்த பேட்டியில், ராவல் பிண்டி நகலிருந்து வெறும் 5 நிமிடங்களில் டெல்லி தாக்கி அழிக்க முடியும் அதற்கான வல்லமை பாகிஸ்தான் அணு ஆயுதத்துக்கு இருக்கிறது எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

“சீனாவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் அடிப்பணியபோவதில்லை.” – தாய்வான் அறிவிப்பு !

சீனா  அமைதியான முறையில் தாய்வானுடன் ஒன்றிணைய விரும்புகிறது. தாய்வான் சுதந்திர பிரிவினைவாதம் தாய்நாட்டுடன் மீண்டும் ஒன்றிணைப்பதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது. சீனா  தனது இறையாண்மையையும் ஒற்றுமையையும் பாதுகாக்கும். தாய்நாட்டை முழுமையாக ஒன்றிணைக்கும் வரலாற்று பணி நிறைவேற்றப்பட வேண்டும், நிச்சயமாக நிறைவேற்றப்படும். “ என சீன ஜனாதிபதி அண்மையில் சீன ஜனாதிபதி  ஜி ஜின்பிங் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,தாய்வான் சீனாவுடன் இணைக்கப்படும் என்ற சீனாவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் அடிப்பணியபோவதில்லை என தாய்வான் அதிபர் சாய் இங்-வென் தெரிவித்துள்ளார்.

தாய்வான் தேசிய தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தாய்வான் செய்யும் சாதனைகள் அதிகரிக்க அதிகரிக்க, சீனாவிடமிருந்து வரும் அழுத்தமும் அதிகரிப்பதாக கூறினார்.

மேலும் சீனாவுடன் சுமுகமான உறவை விரும்புவதாக தெரிவித்த சாய் இங்-வென் அதேசமயம் சீனாவின் அழுத்தத்துக்கு தாய்வான் மக்கள் அடிபணிவார்கள் என்ற மாயை இருக்கக்கூடாது என்றார்.

டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி 9-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை !

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் முதல் தகுதிச்சுற்று துபாயில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாணயச்சுழற்சியில் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைவரல் எம்.எஸ். டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடச் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ஒட்டங்கள் எடுத்தது. பிரித்வி ஷா அதிரடியாக ஆடி 60 ஓட்டங்கள் எடுத்தார். ஹெட்மையர் 37 ஓட்டங்கள் அடித்தார். ரிஷாப் பண்ட் 51 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல்  இருந்தார்.
சென்னை அணி சார்பில் ஹேசில்வுட் 2 விக்கெட்டும் ஜடேஜா, மொயீன் அலி, பிராவோ தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 173 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. டுபிளசிஸ் ஒரு ஓட்டத்தில் ஆட்ட்மிழந்து அதிர்ச்சி அளித்தார்.
அடுத்து இறங்கிய ரொபின் உத்தப்பா அதிரடியாக ஆடினார். அவர் 44 பந்தில் 2 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 63 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஷர்துல் தாக்குர் ஓட்டமெதுவும் எடுக்காமலும், அம்பதி ராயுடு ஒரு ஓட்டத்திலும் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் ருதுராஜ் கெயிக்வாட் சிறப்பாக ஆடி அரை சதமடித்து 70 ஓட்டங்களில் வெளியேறினார். தோனி ஆடுகளம் வந்த போது அப்போது சென்னை அணிக்கு 11 பந்துகளில் 24 ஓட்டங்கள் தேவையாக இருந்தது, இறுதியில் டோனி 6 பந்துகளில் ஆட்டமிழக்காது 18 ஓட்டங்கள் பெற்றுக்கொடுக்க
இறுதியில், சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருது ருதுராஜ் கெயிக்வாட்டிற்கு வழங்கப்பட்டது.