20

20

பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி அமெரிக்க மருத்துவ விஞ்ஞானிகள் சாதனைகள் !

அமெரிக்காவின் நியூயோர்க் நகரைச் சேர்ந்த என்.ஒய்.யு லங்கோன் மருத்துவமனையில் மூளைச் சாவடைந்த ஒரு நபரின் சிறுநீரகம் செயலிழக்கும் நிலையில் இருந்தது. அவருடைய குடும்பத்தினரின் அனுமதியைப் பெற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பன்றியினுடைய சிறுநீரகத்தை பொருத்தி சோதனை மேற்கொண்டனர்.

பன்றியின் சிறுநீரகம் அவரின் இரத்தக் குழாய்களில் இணைக்கப்பட்டு, உடலுக்கு வெளியே வைத்து மூன்று நாட்கள் வரை பராமரிக்கப்பட்டுள்ளது. சிறுநீரகம் மூளைச் சாவடைந்த நபரின் நோயெதிர்ப்பு மண்டலத்தால் உடனடியாக நிராகரிக்கப்படாமல் இயங்கியுள்ளது. சிறுநீரக செயல்பாட்டின் சோதனை முடிவுகள் “மிகவும் சாதாரணமாகத் தோன்றியது” என்று ஆய்வுக்கு தலைமை தாங்கிய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ராபர்ட் கூறியுள்ளார்.

மேலும் முன்னர் இருந்த சிறுநீரகத்தின் செயல்பாடு மிக மோசமானதாகவும், கெரோட்டினின் அளவு அசாதாரணமாகவும் இருந்ததாக குறிப்பிடும் அவர், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு கெரோட்டின் அளவு வழக்கமான நிலைக்கு வந்துவிட்டதாகவும் தெரிவிக்கிறார்.

இது உறுப்பு மாற்று சிகிச்சையில் ஒரு மைல்கல்லாகவும், லட்சக்கணக்கானோர் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருக்கும் நிலையில், உறுப்புகளின் பற்றாக்குறையை நீக்கும் வகையிலும் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

 

பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிராக தொடரும் வன்முறைகள் – முழுமையாக எரிக்கப்பட்ட இந்துக்களின் வீடுகள் !

பங்களாதேஷில் இந்துக்கள் குறைவான தொகையில் வாழ்ந்து வருகின்றனர்.  இதனால் அவர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்படுகிறது. இதில் ஏராளமானோர் ஏற்கனவே கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வாரம் பங்களாதேஷின் குமிலா என்ற இடத்தில் துர்கா பூஜை நடந்தது. அப்போது ஒரு பிரிவினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். கோவில் சேதப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில் மீண்டும் இந்துக்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தலைநகரம் டாக்காவில் இருந்து 255 கி.மீட்டர் தூரத்தில் பிர் காஞ்ச் உபசிலா என்ற கிராமம் உள்ளது. இது மீனவ கிராமம் ஆகும். அங்கு வசிக்கும் அனைவரும் இந்துக்கள் ஆவர். அவர்கள் இஸ்லாம் மதத்தை அவமதித்ததாக பேஸ்புக் மூலமாக தகவல் பரவியது.

இதையடுத்து பக்கத்து பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அந்த கிராமத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 20 வீடுகள் எரிந்து சாம்பல் ஆகின. மேலும் 66 வீடுகளை தாக்கி சேதப்படுத்தினார்கள்.

ஏராளமானவர்கள் மீது தாக்குதலும் நடந்தது. இதையடுத்து கிராம மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு தப்பி ஓடினார்கள். இது பற்றிய தகவல் கிடைத்ததை அடுத்து தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்தனர். போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டார்கள். இந்த கலவரம் தொடர்பாக 52 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே பங்களாதேஷில் இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘மத நம்பிக்கைகளுக்கு மதிப்பு அளித்து வங்காள தேசம் செயல்பட வேண்டும். அவர்கள் விழாக்கள் நடத்துவதற்கு ஆதரவாக இருக்க வேண்டும். இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடப்பதை கண்டிக்கிறோம்’’ என்று கூறப்பட்டுள்ளது.

கிராமத்துக்குள் நுழைந்து பெண்கள், சிறுவர்கள் உள்பட 43 பேரை கொன்று குவித்த பயங்கரவாதிகள் – நைஜீரியாவில் சம்பவம் !

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்க முடியாமல் ,ராணுவம் போராடி வருகிறது. இந்த அசாதாரண சூழலை பயன்படுத்தி அங்கு மேலும் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் உருவாகியுள்ளன. இவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களை கொன்று குவிப்பதோடு, கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வடமேற்கு மாகாணம் சோகோட்டோவில் உள்ள கோரோனியோ நகருக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கரவாதிகள் புகுந்து கொடூர தாக்குதலை நடத்தியதில் 30 பேர் கொன்று குவிப்பட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று முன்தினம் சோகோட்டோ மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குள் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.

மோட்டார் சைக்களில் வந்த 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கிராம மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். பயங்கரவாதிகளுக்கு பயந்து மக்கள் வீடுகளுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டபோதிலும், பயங்கரவாதிகள் கதவுகளை உடைத்து வீடுகளில் இருந்தவர்களை தரதரவென வெளியே இழுத்து வந்து சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.

பயங்கரவாதிகளின் இந்த அட்டூழியத்தால் பெண்கள், சிறுவர்கள் உள்பட 43 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.