கொழும்பு- மாத்தறை தென்பகுதி ரயில் பாதையை மேம்படுத்தும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்காக இந்தியா 67.4 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்கியுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் நேற்று கொழும்பில் செய்து கொள்ளப்பட்டது. நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர இலங்கையின் சார்பாகவும் இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் நிறைவேற்று இயக்குநர் பிரபாகர் தலாலும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
இரண்டாம் கட்ட மேம்படுத்தலையடுத்து கொழும்பு – மாத்தறை ரயில் மணித்தியாலயத்துக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியதாக இருக்கும்.
இதன்படி கொழும்புக்கும் காலிக்கும் இடையிலான தூரத்தை இரண்டு மணி நேரத்தில் ரயில் மூலம் செல்லக் கூடியதாக இருக்கும். கொழும்பு – மாத்தறை ரயில் பாதையை மேம்படுத்தும் திட்டத்தின் முதலாம் கட்டத்துக்கு இந்தியா ஏற்கனவே 100 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.