March

March

முல்லைத்தீவில் மீள்குடியேறிய மக்களுக்காக 3700 வீடுகள் – 2 ஆயிரம் வீடுகளை புனரமைக்கவும் திட்டம்

house.jpgமுல் லைத்தீவு மாவட்டத்தில் மீளக் குடியமர்த்தப்பட்டிருப்போருக்காக 3700 வீடுகளை புதிதாக அமைக்க திட்டமிடப்பட்டிருப்பதாக மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி செல்வராஜா தெரிவித்தார். இதேவேளை மோதல்களின் போது சேதமடைந்த 2 ஆயிரம் வீடுகள் புனர்நிர்மாணம் செய்யப்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அபிவிருத்திகளை முன்னெடுக்கவும் இடம்பெயர்ந்தோருக்கு பல்வேறு உதவி களைச் செய்யவுமென முன்வந்த தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் 15க்கு ஜனாதிபதி செயலணி அனுமதி வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் யுஎன். ஹெபிட்டாட், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், நர்ட் ஆகிய தன்னார்வு நிறுவனங்களே வீடுகளை அமைத்துக் கொடுக்க முன்வந்துள்ளன.

யதார்த்தமும் இயலாமையும் – கொன்ஸின் பதில் பின்னூட்டம் : ரி கொன்ஸ்டன்ரைன்

Toilet_Cleaning_Brushஅண்மையில் மதங்களைப் பற்றியும் நம்முடைய நீண்ட நாள் நண்பர்கள் மன்னிக்கவும் தோழர்களை ‘கீ போர்ட் மார்க்ஸிட்’ என வர்ணித்ததும் எழுத்துலகில் மாபெரும் புயலைக் கிழப்பிவிட்டதை நான் நன்குணர்ந்தேன். உண்மையில் இந்த ‘கீ போர்ட் மார்க்ஸிட்’ என்ற சொல்லை நான் உபயோகிக்கவில்லை. இது என் சக நண்பர்களின் திட்டமிட்ட சதி அல்லது அதற்கு பின்ணணியில் ரஷ்ய உளவுப்படை இருந்திருக்க வேண்டும். நான் உபயோகித்த சொல் ‘டொட் கொம் மார்க்சிஸ்டுக்கள்’. என்னுடைய இந்தக் கருத்து சில பிற்போக்கு திரிபுவாதிகளால் மாற்றப்பட்டு என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது நிற்க.

இந்த டொட் .com எனப்படுகின்ற பதம் எங்கிருந்து வந்தது? இது commercial என்பதன் சுருக்கம் தான் இந்த .com. இனியாவது எமது தோழர்கள் இந்த வரலாற்றுத் தவறை தொடர்ந்தும் இழைக்காமல் தமது web siteகளுக்கு டொட் .marx, டொட் .len, டொட் .sta, டொட் .mao என்று பெயரிடட்டும். யாருக்காவது என்னில் பேரன்பு இருந்தால் டொட் .cons என்று வைக்கலாம்.

இனி நம்முடைய தோழர் பாண்டியன் விடயத்திற்கு வருவோம். ஏதோ சிலர் (நான் உட்பட) பெரிய முதலாளி, நாட்டிலுள்ள ஏழை மக்களை சுரண்டப் புறப்பட்ட புறம்போக்குகள் என்று தொடங்கிவிட்டார். நாமும் தோழர் பாண்டியன் போல் வெறுங்கையுடன் இந்த நாட்டிற்கு வந்தவர்கள்தான். கக்கூஸ் கழுவுவது தொடக்கம், கோழி பொரிப்பது, பாண் சுடுவது வரை வேலை செய்தவர்கள் தான். ஒரு வித்தியாசம் சில வேளைகளில் இருக்கலாம். நாங்கள் என்ன வேலை செய்தாலும் எமக்கு வேலை கொடுப்பவனுக்கு சற்று நன்றியுள்ளவனாக இருந்து, நாம் ஏற்றுக் கொண்ட வேலையை முழுதார செய்வது முன்னேற்றத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம். (நீங்கள் எனது நிலையை உயர்வாகக் கருதினால்) அல்லது இன்னொரு காரணம், உங்களது தாழ்வு மனப்பான்மையாகக்கூட இருக்கலாம்.

அல்லது நானும் இந்த நாசமாய்ப் போன முதலாளி எனக்கு இரண்டு பவுண்தானே சம்பளம் தாறான் என்று எனக்குள் எண்ணிக்கொண்டு, மொபைல் போனில் கார்ல் மார்க்ஸ் இறக்கும்போது யாரையாவது வைத்திருந்தாரா? வைத்திருந்தால் அதனை தனது மனைவிக்கு தெரிந்து வைத்திருந்தாரா? அல்லது தெரியாமல் வைத்திருந்தாரா? அவர்களுக்கு பிள்ளை இருக்கிறதா? என விவாதித்துக் கொண்டிருந்தால் கோழியும் கருகிப் போயிருக்கும், முதலாளி வேலையிலிருந்தும் கலைத்திருப்பான். ஏதோ காரணத்திற்காக நான் இந்த வேலையை ஏற்றுக் கொண்டேன். இதுதான் எனது சம்பளம் என்ற யதார்த்த உண்மையை மனதார ஏற்றுக் கொண்டு, ஒழுங்காகக் கக்கூஸ் கழுவியததால்தான் பின் அந்த நிலையத்திற்கு மனேஜராகி பின் அதற்கும் மேலாகப் போக வாய்ப்புக் கிடைத்தது. (சில படிப்பும் கொஞ்சம் உதவும்தான்).

அன்றைக்கு உந்த வேலையெல்லாம் செய்ய மாட்டேன் மார்க்ஸிய கொள்கைப்படி தான் வேலைசெய்வேன் என்று அடம்பிடித்து இருந்தால் நானும் என்னவோ ஆகியிருப்பேன். நைஜீரியாவில் எண்ணை எடுக்கின்ற கொம்பனிகள் எல்லாம் தொழிலாளரை வாட்டுகின்றது, அந்த ஊர் மக்களை வதைக்கின்றனர் என்பதே உண்மை. அதற்காக பிரித்தானியாவில் பெற்றோல் ஸ்ரேசனில் வேலை செய்யமாட்டேன் என்று அடம்பிடிக்க முடியுமா?

மேற்கு நாடுகள் அனைத்துமே முதலாளித்துவ சுரண்டலை மேற்கொள்கின்ற நாடுகளே. எனக்கு முதலாளியாக வேண்டும் என்று சின்னச் சின்ன ஆசைகள் இருந்தது, இங்கு வந்தேன். ஆனால் இலங்கையில் ஒடுக்குமுறைக்கு உள்ளான தமிழ் மக்கள் எதற்காக முதலாளித்துவ நாடுகளை நோக்கி படையெடுக்கின்றனர். மக்கள் சரி படையெடுக்கட்டும். நம்மடை கீபோர் மார்க்ஸிஸ்டுக்கள் மன்னிக்கவும் டொட் கொம் மார்க்ஸிஸ்ட்டுக்கள் ஏன் முதலாளித்துவ நாடுகளை நோக்கிப் படையெடுக்கின்றனர்.

நான் செய்யும் தொழில் hotel, உல்லாசப் பயணம் தொடர்பான தொழில். கடந்த 10 வருடங்களாக எனக்கு இந்தத் தொழில் மூலமாகத்தான் சில அமைச்சர்களின் நேரடித் தொடர்பு கிடைத்தது. சிறீலங்காவில் எனக்கு ஒரு சதம்கூட மூலதனமும் இல்லை, ஒரு சதம் நயமும் இல்லை. நான் எனது அரசியல் நம்பிக்கைகளையும், பொது வேலையையும், தொழிலையும் ஒன்றாகக் கலப்பதில்லை. நீங்கள் உங்களது அனுபவத்தையும் புத்தியையும் மட்டுமே அடிப்படையாக வைத்துக்கொண்டு சேறடிப்பது உங்களுடைய இயலாமையைத்தான் காட்டுகின்றது.

இந்த கம்மியூனிச பலஸ்தீன அடக்குமுறை கதையெல்லாம் அங்கு போய்ப் பார்த்தால் நீங்கள் பேசமாட்டீர்கள். அறியான்மையில் பெரிதுபடுத்திக் கதைப்பதில் பிரயோசனம் இல்லை. சீனாவின் கிராமப் புறங்கள் எல்லாம் சென்று வந்திருக்கிறேன். சீன கம்மியூனிசத்தைப் பற்றி நான் யாரிடமும் கதை கேட்க வேண்டிய அவசியமில்லை. அதேபோல் பாலஸ்தீன மக்களின் எதிரி இஸ்ரேலியர்கள் மட்டுமல்ல அல்ல, ஏனைய முஸ்லிம் அரபு நாடுகளும்தான்.

கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது சோசலித்திற்கும் முதலாளித்துவத்திற்கும் வின்சன்ட் சர்ச்சில் கூறிய கருத்து நூற்றுக்கு நூறு வீதம் சரி. ‘‘முதலாளித்துவத்தில் தீமை என்னவென்றால் செல்வங்களை சரியாக பங்கிட்டு கொள்ளாதது. சோசலிசத்தின் நன்மை என்னவென்றால் கஷ்ட துன்பங்களை சரியாக பங்கிடுவது.’’

எங்களுடைய மனத்திருப்திக்கு பிடித்தவற்றை, தத்துவங்களை வாரி வழங்கலாம். ஆனால் யதார்த்தம் என்று ஒன்றிருக்கின்றது. அதை புரியாத போதும், ஏற்றுக்கொள்ள முடியாதபோதும் தான் காழ்ப்புணர்வு மேலோங்குகிறது.

பின்னோட்டம் விட்ட பல பேரும் நண்பர் பாண்டியனும் நான் சிறீலங்காவில் கலந்துகொண்ட மகாநாடுகளைப் பற்றி பல கொன்ஸ்பிரசி தியரிகளை கூறுகிறார்கள். சென்ற வருடம் மார்ச் 9ல் நடந்த மகாநாட்டிற்கு திருமதி ராஜேஸ்பாலா லண்டனில் இருந்து ஆட்களை சேர்த்தார். அதன்படி என்னையும் வருமாறு கேட்டதால் இணைந்து கொண்டேன்.

இந்த வருடம் ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற மகாநாட்டிற்கு கலந்து கொள்ள விருப்பமானவர்கள் என்னை அல்லது டாக்டர் நடேசனை தொடர்புகொள்ளும்படி எமது முழு தொடர்பிலக்கங்களுடன் கட்டுரை வெளியிடப்பட்டது. இக்கட்டுரைகள் இன்றும் ‘தேனீ’, ‘Sri Lanka Guardian’, ‘Daily Mirror’ இணைய ஊடகங்களில் இருக்கின்றது. ஒருவர்கூட என்னை தொடர்பு கொள்ளவில்லை. அதுபற்றி விசாரிக்கக்கூட இல்லை. உண்மை நிலைமை இப்படி இருக்கும்போது ‘இவர்கள் யார்?’, ‘இவர்கள் எப்படித் தெரிவு செய்யப்படுகிறார்கள்?’, ‘இவர்கள் யாரைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள்?’, ‘இவர்கள் பணம் கொடுத்து முக்கியத்துவம் பெறுகிறார்கள்’ என்று கூறுவது உங்கள் அற்பத்தனத்தையும் இயலான்மையையும் கூட படம் இட்டுக் காட்டுகிறது. மீண்டும் அடித்துச் சொல்கிறேன் இங்கு சுத்துமாத்து ஒன்றும் இல்லை. உங்களுடைய இயலான்மையையும் சோம்பேறித் தனத்தையும் தவிர வேறென்ன.

Religious_Conflictஅடுத்து நான் இந்து மதத்தைப் பற்றி எழுதிய குறிப்பு பலரை ஆத்திரப்படுத்தி இருப்பதை நன்குணர்வேன். சில வேளைகளில் சில உண்மைகள் கசப்பாக இருந்தாலும் அதை சொல்லித்தான் ஆக வேண்டும். மதங்கள் அனைத்தும் மக்களின் மூட நம்பிக்கைகளையும், பயத்தையும், பலவீனங்களையும் மூலதனமாகக் கொண்டு கட்டப்பட்ட விடயம்தான். இதில் சந்தேகம் இல்லை. இந்து மதம் குறிப்பிட்ட பிரதேசத்தின் கலை, கலாச்சாரம், பழக்க வழக்கங்களை மெருகூட்டி வளர்த்தது எல்லாம் உண்மைதான். அதேநேரம் இந்து மதத்தில் புரையோடிக் கிடந்த பல விடயங்கள்தான் ஏனைய மதங்கள் வளர உரமிட்டன என்ற வாதத்தையும் மறுக்க முடியாது. நிர்வாகத்திலும் புதிய அம்சங்களை உள்வாங்குவதிலும் கிறிஸ்தவமதம் ஒருபடி முன்நிற்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.

கத்தோலிக்க மதமாக இருந்தால் என்ன அல்லது சக கிறிஸ்தவ அமைப்புக்களாக இருந்தால் என்ன (மெத்தடிஸ்ட், Church of England, Evangelical, Sevenday Appostits, Jevokah witness), அவ் அமைப்புக்களிடம் ஒரு பலமான கட்டுமானத் திட்டம் இருக்கின்றது. அடிப்படை வரையறைகள் இருக்கின்றன. யார் என்ன செய்யலாம் என்ற அடிப்படை உடன்பாடு இருக்கின்றது. அதுதான் இந்த மதங்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைகின்றது.

சிக்காக்கோ தொடக்கம் சாவகச்சேரி வரை உள்ள கத்தோலிக்க ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள் பதியப்பட்டு அதில் எத்தனை பேர் படிக்கிறார்கள், எத்தனை பேர் பூஜைப்பலியில் பங்கு கொள்கிறார்கள் என பதியப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஒரு தனிப்பட்டவர் எந்தவொரு கிறிஸ்தவ ஆலயத்தையும் தொடக்கவும் முடியாது. அவ்வாறு தொடர்ந்தால் அது நிலைக்கவும் முடியாது. அவ் அமைப்பின் கட்டுமானம் அப்படி. அது மட்டுமல்லாமல் ஆலயத்தின் பெயரால் சேர்க்கப்படுகின்ற பணம் முழுவதும் மீண்டும் அமைப்புக்குள் உள்வாங்கி பின்னர் அதன் பெரும்பகுதி சமூகத்திற்கு அல்லது குறிப்பிட்ட மதத்தைப் பரப்புவதற்கு உபயோகிக்கப்படுகிறது. இந்த விடயங்கள் உணரப்படாமல் அவன் கள்வன், இவன் கள்வன், போப் ஒரு நாஜி, வண பிதா ஜேம்ஸ் பக்திநாதர் ஒரு புலி என கதை அளப்பது இயலாமையின் வெளிப்பாடும், காழ்ப்புணர்ச்சியின் உச்சக் கட்டமும் தவிர வேறொன்றும் இல்லை.

சரி இப்படியெல்லாம் feel பண்ணுபவர்கள் இந்துமத வளர்ச்சிக்கு என்ன வேலையை ஆணித்தரமாக செய்துள்ளனர் அல்லது செய்து கொண்டிருக்கின்றனர்? ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திற்கு முன் நாங்கள் எல்லோரும் பட்டம் விட்டோம்’ என்ற கதையெல்லாம் ‘ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பதில்…..’ என்ற கூட்டணி சென்ரிமென்டைவிட வேடிக்கையானது. குறைவான வாடகைக்கு பலகாலம் மூடிக்கிடந்த தவறனையை (Pub), பலசரக்குக் கடையை வாங்கி அதை ஏதோவொரு ஆலயம் என்று பெயரிட்டு வருடாவருடம் இந்தியாவிலிருந்து சுகிசிவத்தை வரவழைத்து அவருடைய அலம்பலை குந்தியிருந்து கேட்டுவிட்டுப் போவதால் மட்டும் மதம் வளர்ந்து விடாது.

கிறிஸ்தவம் உட்பட மதங்கள் அனைத்தும் ஒரு பேய்க்காட்டு மாய வித்தைதான். அது அழியவும் மாட்டாது. அழிக்கப்படவும் முடியாது. ஆனால் இந்த மத நிறுவனங்கள் எவ்வாறு சமூகத்திற்கு அதிக பலனைக் கொடுக்கும் என்பதிலேயே கவனம் செலுத்தப்படல் வேண்டுமே தவிர, வேறொன்றும் பயனைத் தராது.

சிலருக்கு தண்ணி அடிப்பதில் ஒரு சந்தோசம், ஒரு மனநிறைவு! சிலருக்கு மார்க்சிசம் கதைப்பதில் ஒரு மனமகிழ்ச்சி! இன்னும் சிலருக்கு தண்ணி அடித்து மார்க்சிசம் கதைப்பதில் பரமதிருப்தி! ஆனால் பலருக்கோ கோயில் சென்று தரிசிப்பதில் உள மகிழ்ச்சி, நிறைவு. இருந்துவிட்டு போகட்டும் பிரச்சினையில்லை. மனிதம் என்றாலே பலவீனம்தானே. இதில் நாம் மட்டும் விதிவிலக்கா என்ன?

300 வருடங்களுக்கு முன் பாதிரி வந்து எங்களை சுத்திப் போட்டார்கள் என்ற வாதத்தில் உண்மை இருக்கலாம். அதே கதையை இப்போதும் அளப்பது கிறிஸ்தவ மதங்களின் கெட்டித்தனத்தை காட்டுவதைவிட மற்றைய மதங்களின் பலவீனத்தைத்தான் காட்டுகிறது. இந்து மதத்தினர் எல்லாம் சரியான ‘இனசன்ட்’ என்று ஜோக் அடித்துவிட வேண்டாம்.

300 வருடத்திற்கு முன் போவானேன். இன்று லண்டனிலுள்ள இந்து ஆலயங்கள் என்ன செய்கின்றது. ‘உயர்வாசக் குன்று’ என்று அழகாக அழைக்கப்படும் ஆச்சுவே முருகன் ஆலயம் ஆலயத்திற்கு முன்னால் உள்ள கடைகளை வாங்கி வாடகைக்கு விட்டுள்ளது. நாகபூசனி அம்மன் ஆலயம் புலிகளின் வருமானத்திற்காகக் கட்டப்பட்டது. . ரூட்டிங் சீவரத்தினம் ஐயாவின் முத்துமாரி அம்மன் ஆலயம் புலிகளை வளர்ப்பதாக என்று கூறிக்கொண்டாலும் சீவரத்தினம் ஐயா தன்னையும் சேர்த்து வளர்த்துக் கொண்டார். இல்பேர்ட் தூள் விநாயகர் சொல்லவே வெண்டாம். இலண்டனில் உள்ள ஆலயங்களின் வருமானத்தில் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் தாயக மக்களுக்காக பல்வேறு பணிகளை முன்னெடுக்கின்றது. ஏனையவை தங்கள் வருமானத்தில் எத்தனை சதவீத வீதத்தை திரும்பவும் அந்த மக்களின் நலனுக்காக செலவிடுகின்றன.

கிறீஸ்தவ மதம் ஒன்றும் புனிதமான மதம் கிடையாது. அவர்களும் ஆயுதக் கொம்பனிகளில் முதலீட்டை வைத்துள்ளனர். இங்கு நான் எந்த மதத்திற்கும் நற்சான்றிதழ் வழங்க கட்டுரை எழுதவில்லை. கிறிஸ்தவ மதம் கள்வர் காடையரின் மதம் என்பதுபோல் பின்னூட்டம் விட்ட நண்பர்களின் கருத்தை கவனத்தில் எடுத்தால் என் மனைவி பத்தினிதான் ஆனால் சூனியக்காரன்தான் வசியம் செய்துபோட்டான் என்ற மடமையான கருத்துக்கு ஒப்பானது. அதனையே இங்கு சுட்டிக்காட்டினேன்.

தலிபான்களை ஒழிக்க பாகிஸ்தான் அரசு இலங்கையை பின்பற்ற வேண்டும்! பழங்குடித் தலைவர் செய்யத் அலாம் மசூட் கோரிக்கை

mehsud.jpgபாகிஸ் தானில்  பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் தலிபான்களை ஒழிக்க இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட உறுதியான நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசாங்கம் பின்பற்றவேண்டும் என பாகிஸ்தான் பழங்குடி மக்களின் தலைவா செய்யத் அலாம் மசூட் பாகிஸ்தான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் எல்லைக் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பழங்குடியினரின் முக்கிய பாதுகாப்புக் கூட்டமொன்றில் உரையாற்றியபோதே அவர் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

பாகிஸ்தானின் வடமேற்கு நகரான பேஷவாரில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு பாகிஸ்தானுக்கு உதவி வழங்கும் குழுக்கள் அரசியல் கட்சிகள் மற்றும் மோதல்களால் பாதிக்கப்படும் பிரதேச மக்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

பாகிஸ்தான் இராணுவத்தினர் தலிபான்களின் வலையமைப்புக்களை தகர்த்தெறியும் வகையில் புதிய தாக்குதல்களை நடத்தவேண்டும் எனவும் பழங்குடிகளின் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

அனோமா பொன்சேகாவிடம் புலனாய்வு பிரிவு விசாரணை ஜே.வி.பி. – எம்.பி. அநுரகுமாரவுக்கு கடிதம்

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகாவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை விசாரணை நடத்தினர்.  மாலை 4 மணியளவில் அவரது வீட்டுக்குச் சென்று விசாரணையை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்தனர்.  இச் செய்தி அச்சுக்குப் போகும் வரை  விசாரணை தொடர்ந்து இடம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதேவேளை, ஜே.வி.பி. எம்.பி அநுரகுமார திஸாநாயக்கா நாளை செவ்வாய்க்கிழமையும் மறுதினம் புதன்கிழமையும் விசாரிக்கப்படவிருக்கின்றார்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை புலனாய்வுப் பிரிவினர் அனோமா பொன்சேகாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது கணவர் ஜெனரல் சரத் பொன்சேகா சம்பந்தமாக விசாரணையொன்றை மேற்கொள்ள வேண்டியிருப்பதாக தெரிவித்து சனிக்கிழமை மாலை வீட்டுக்கு வந்து விசாரிக்க விரும்புவதாக தெரிவித்திருக்கின்றனர்.

ஆனால் அன்றைய தினம் தான் கொழும்பில் இருக்க மாட்டேன் எனவும் பிறிதொரு தினத்தில் வைத்துக் கொள்ளுமாறும் அனோமா பொன்சேகா தெரிவித்ததையடுத்து அந்த விசாரணையை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்த புலனாய்வுப் பொலிஸார் இணக்கம் தெரிவித்தனர்.

அதன்படி நேற்று மாலை விசாரணை இடம்பெறவிருந்தது.  இந்த விசாரணையை தாம் எப்போதோ எதிர்பார்த்திருந்ததாகவும் இவ்வளவு காலம் தாழ்த்தப்பட்டு விசாரிக்கப்படுவதுதான் புதுமை எனவும் அனோமா பொன்சேகா நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர்களிடம் சுட்டிக்காட்டினார்.

சனல் 4 சர்வதேச தொலைக்காட்சி அலைவரிசைக்கு ஜெனரல் சரத் பொன்சேகாவின் கடிதம் அனுப்பியது தொடர்பாகவா விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறீர்கள் என ஊடகவியலாளர்கள் கேட்டபோது பதிலளித்த அனோமா எனது கணவருக்கு சனல் 4 உடன் எந்தத் தொடர்பும் கிடையாது எனவும் அமைச்சர் டலஸ் அழகப் பெரும மாத்திரமன்றி முழு அரசுமே ஜெனரலுக்கு எதிராகத்தானே பழிவாங்கும் எண்ணத்துடன் செயற்படுகின்றனர் என்றும் தெரிவித்தார்.

அநுரகுமார மீதான விசாரணை

இதேவேளை,  ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்காவிடம் விசாரணையொன்றை நடத்துவதற்காக புலனாய்வுப் பொலிஸ் பிரிவுக்கு 23 ஆம் திகதி சமுகமளிக்குமாறு அவருக்கு கடிதமொன்று கிடைக்கப்பெற்றுள்ளது. இக்கடிதம் கிடைத்து 12 மணித்தியாலத்தில் இன்னொரு கடிதம் அதே இரகசியப் பொலிஸ் பிரிவிலிருந்து அவருக்குக் கிடைத்தது. அதில் 24 ஆம் திகதி புதன்கிழமை விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தது. முன்னைய விசாரணைதான் நேரம் மாற்றப்பட்டதாகக் கருதி புலனாய்வுப் பிரிவிடம் விசாரித்தபோது அப்படியில்லை அவரிடம் இரண்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுரகுமார திஸாநாயக்க மட்டுமல்ல ஜெனரல் பொன்சேகாவை ஆதரித்த எதிரணி அரசியல் தலைவர்கள், ஆதரவாளர்கள், ஓய்வுபெற்ற படைவீரர்கள், புத்திஜீவிகள் என அனைவருமே விசாரிக்கப்படுவர். நாளை எம்மையும் சி.ஐ.டி.யினர் கைது செய்து விசாரிக்கலாம். அதற்கு எந்த நேரமும் முகம் கொடுக்க நாம் தயாராக இருக்கின்றோம் என்று ஜனநாயக தேசிய முன்னணி செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் தமிழர்களுக்கு எந்தவொரு அநீதியும் இடம்பெறவில்லை என்கிறார் புத்திரசிகாமணி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் தமிழ் மக்களுக்கு எத்தகைய அநீதியும் இடம்பெறவில்லை. 1983 யுகம் மீண்டும் உருவாகாது என்பது உறுதியென பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார். மலையகத் தலைவர்களாகிய நாம் இருட்டில் செய்த தவறை வெளிச்சத்தில் ஒரு போதும் செய்யப் போவதில்லையென தெரிவித்த பிரதியமைச்சர், ஐ. நா. வில் தமிழில் உரையாற்றி தமிழினத்துக்கே கெளரவம் சேர்த்த தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு மலையக மக்கள் தமது ஆதரவினை வழங்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.

நுவரெலியா குதிரைப் பந்தயத்திடலில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற இப் பிரசாரக் கூட்டத்தில் பிரதியமைச்சர் மேலும் உரையாற்றுகையில்:- நான் பிரதி மேயராக பதவி வகித்த போதே 83 கலவரம் வெடித்தது. நுவரெலியா நகரம் தீப்பற்றியெரிந்தது. எனது செயலாளர் உட்பட பலர் அதற்குப் பலியாகினர். தற்போது நாட்டில் அத்தகைய அச்சம் இல்லை. ஜனாதிபதி பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தியுள்ளார்.

நான் ஒரு தமிழனாக அன்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதிநிதியாகவே தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுகிறேன். நுவரெலியா மாவட்டத்தில் ஜனாதிபதிக்கு வெற்றி பெற்றுக் கொடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அரசியல் யாப்பை மாற்றியமைக்க 2/3 பெரும்பான்மையை தாருங்கள் – திருமலை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர்

வெளிநாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவென சட்டத்தில் ஏற்பாடு செய்யப்படுவது அவசியம் என்று பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று திருமலையில் தெரிவித்தார்.

நாட்டு மக்களின் சமத்துவத்திற்கும், துரித அபிவிருத்திக்கும் தடையாக இருக்கும் அரசியல் யாப்பை மாற்றியமைத்து நாட்டுக்குப் பொருத்தமான அரசியல் யாப்பை அறிமுகப்படுத்துவதற்காகவே மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கோருகின்றோம் என்றும் பிரதமர் கூறினார்.

பொதுத் தேர்தலின் நிமித்தம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாவட்ட மட்டத்தில் நடாத்தும் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று திருமலை விளையாட்டரங்கில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

பிரதமர் ரத்னசிறி விக்கிரம நாயக்கா தொடந்தும் உரையாற்றுகையில்,

அதனால் இப்படியான அரச சார் பற்ற நிறுவனங்களின் செயற்பா டுகளைக் கட்டுப்படுத்துவது அவசி யம் இதற்காக சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

அதே நேரம் கிராமங்களின் அபிவிருத்தியைக் கிராமத்தவர்களின் யோசனைபடி மேற்கொள்ளுவதற்காக மக்கள் சபை (ஜனசபா) முறையை அறிமுகப்படுத்தவிருக்கின்றோம்.  அத்தோடு கிராம மன்ற முறையும் (கண்சபா) மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இவை நாட்டின் துரித அபிவிருத்திக்குப் பெரிதும் உதவும்.

சிறு கட்சிகளின் தயவில் தங்கி நிற்கும் அரசு எமக்கு அவசிய மற்றது. அது எமது துரித அபிவிருத்தி பயணத்தைத் தாமதப்படுத்த முடியும். நிபந்தனைகளின் கீழ் செயற்பட நேரிடும். இதனை மக்கள் உணர்ந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

எமது துரித அபிவிருத்தியை மேற்கு நாடுகளைப் போன்று இயந் திரப்படுத்த நாம் விரும்பவில்லை. மாறாக ஒழுக்கத்தை மதித்து நடக்கும் நற்பண்புகள் நிறைந்த சமு தாயத்தை கட்டியெழுப்பும் வகை யில் அதனை மேற்கொள்ள நட வடிக்கை எடுத்திருக்கின்றோம்.

ஐ.தே.க.வின் திருமலை மாவட்ட முன்னாள் எம். பி.யும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம். ஏ. எம். மஃரூப் (சின்ன மஃரூப்) இக்கூட்டத்தில் நன்றியுரையாற்றினார்.

சகல வேட்பாளர்களுக்கும் விசேட அடையாள அட்டைகள் – தேர்தல்கள் ஆணையாளர் அறிவிப்பு

election_cast_ballots.jpgசகல வேட்பாளர்களுக்கும் விசேட அடையாள அட்டை வழங்குவதற்கு தேர்தல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலதிக தேர்தல் ஆணை யாளர் டபிள்யு. பி. சுமணசிரி தெரிவித்தார். தேர்தலில் 7696 வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர்.

இவர்களுக்கு அந்தந்த பிரதேச மாவட்ட செயலகங்களினூடாக விசேட அடையாள அட்டை வழங்கப்பட உள்ளதோடு, சகல வேட்பாளர்களின் விபரங்களும் திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். வேட்பாளர்களுக்கு வாக்குகள் எண்ணும் நிலையங்களுக்குச் செல்வதற்காகவும் தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காகவும் வசதியாக அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன.

இதேவேளை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆராயும் முக்கிய கூட்டமொன்று நேற்று முன்தினம் (20) தேர்தல் ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள், உதவித் தேர்தல் ஆணையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

யார் வென்றது? மகிந்தவா? இல்லை. ஆசிய மூலதனம்: லோகன்

bull_fight
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச பெற்ற வெற்றி அவருக்குக் கிடைத்த இரண்டாவது மாபெரும்  வெற்றியாகும். இரத்தம் சிந்திய அரசியல் யுத்தத்தில் கிடைத்ததுதான் அவரின் முதலாவாது வெற்றியாகும். இது மே மாதம் 18ஆம் தேதியாகும். ஜனவரி மாதம் 29ஆம் தேதி இரத்தம் சிந்தா யுத்ததில் கிடைத்ததுதான் இரண்டாவது வெற்றியாகும். முதலாவது களத்தில் தோற்கடிக்கப்பட்டது மேற்குலக நாடுகளாலும், இந்தியா, ஜப்பான் மற்றும் மலேசியா ஆகிய ஆசிய நாடுகளாலும் பயங்கரவாதம் என நாமம் சூட்டப்பட்டு  தத்தமது நாடுகளில் தடைசெய்யப்பட்ட “புலிகள்”  இயக்கமாகும். இவ்வெற்றிக்காக மேற்குலக முகாமும், ஆசிய முலதன  முகாமும் “பயங்கரவாதத்தை” ஒழிப்பதற்காக இதய சுத்தியுடன்  ஐக்கியமானார்கள். இது ஒரு முறைசார் அமைப்பிலை. இதனால்  இவ்விரு சாரார்களுக்கும் ஒரு பொதுவான வேலைத்திட்டம்  இருக்கவில்லை, ஆனால் “புலிகளை” வெல்வது என்ற விடயத்தில் ஒரு ஒற்றுமை இருந்தது. இதற்காக போட்டி போட்டுக்கொண்டு இரு சாராரும் இலங்கை அரசுக்கு உதவி செய்தார்கள்.

“புலிகளின்” தனித்து நிற்கும் ஆற்றலை நீத்துப் போகச்செய்து அவர்களை வளர்ப்பு விலங்காக (பூனைகளாக)  மாற்றுவதுவே மேற்குலகத்தின் வேலைத்திட்டமாக இருந்தது. அது அத்துடன்  நிற்கவில்லை. மகிந்த உட்பட அனைத்து தேசியவாதிகளினதும் வீரியத்தைக் குறைத்து அனைவரையும் தாம் செல்லமுடன் வளர்க்கும் சண்டைச் சேவல்களாக்கி, அவர்களை  சண்டைபிடிக்கவிட்டு வேடிக்கை பார்ப்பதுவே அவர்களின்  நோக்கமாக இருந்தது. இதைத்தான தமது உள்ளூர் முகவர்களின்  மூலம் இவர்கள் செய்து வந்தார்கள். இதனால் தாமும் அடிக்கடி  குழம்பியதுடன் பிறரையும் குழப்பினார்கள். பெரும் சதிநாச வேலிகளிலும்  ஈடுபட்டார்கள்.  கருணாவும் சரத் பொன்சேகராவும்  இச் சதியின் குழந்தைகளே.

ஆனால் ஆசிய மூலதன முகாமோ, தமது கொள்கையில்  தெளிவாகவும் வெளிப்படையாகவும்  இருந்தது. அதனது பாதை முன்னைய முகாமினுடையதையும்விட வேறுபட்டதாக இருந்தது. எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு, எப்படி எப்படியெல்லாம் முடியுமோ அப்படி அப்படியெல்லாம் மகிந்தவின் அதிகாரத்தை  வளர்த்து விடுவதே இவர்களின் வேலைத் திட்டமாக இருந்தது. அடுத்த பக்கத்தில் பிற தேசியவாத இயக்கங்களை வேரும் வேரடி மண்ணோடும் அழிப்பதையும் நோக்கமாகக்  கொண்டிருந்தார்கள். பௌத்த சிங்களப் பேரினவாததுடன் பரிபூரண  சமரசத்தைப் பேணியும் வருகிறார்கள். இதில் ஒழிவு மறைவோ ஊசலாட்டமோ இருக்கவில்லை. 2004 இல் இருந்து இன்றுவரை  இதே கொள்கையைத்தான் பின்பற்றி வருகிறார்கள்.

ஆசிய மூலதனத்தின் பாதையே வெற்றிகண்டது.  இலங்கையை சண்டைக்கார சேவல்களின் சமர்க்களமாக மாற்றும் மேற்க்குலக மூலதனத்தின் பாதை தோல்விகண்டது.

இவ்விதமாக இரத்தம் சிந்திய அரசியலில் தோல்வி கண்ட மேற்குலக மூலதனம், “ஜனநாயகக் காவலன்” என்ற போர்வையில் “ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான விசாரணை”  என்ற பெயரில், அதிகார மமதையால் காட்டு எருதாக  வலம் வரும் மகிந்தவை மஞ்சு விரட்டுக்காக  வளர்க்கும்  காளையாக மாற்ற முற்படுகிறது. நீண்ட காலக் கடன், வரிவிலக்குச் சந்தை  ஆகிய தீவனங்கள் கொடுத்துப் பார்த்தும் காளையை  அடக்க முடியவில்லை. மகிந்தவைப்  பாதுகாக்க ஆசிய மூலதனம் உலக வங்கிக்கு வெளிப்படையாகவே சவால் விட்டது.  இதனால் அச்சம்  தவிர்த்தார் மகிந்த. தோல்வி கண்டது மேற்க்குலகம். விளைவு  ஜனாதிபதித் தேர்தல் என்ற அரசியல் களம்வரை பொறுத்திருக்க  நிர்ப்பந்திக்கப்பட்டது  மேற்குலகம்.

ஆசிய மூலதனம் இந்தத்  தேர்தல்களத்தில் நேரடியாகப் பங்களிக்கவில்லை. ஆனால் இலங்கையின் “தேசியப் பொருளாதாரத்தை” (மகிந்த சிந்தனை) கட்டி வளர்க்க நம்பகரமான  உத்தரவாதங்களை வளங்கியது.  இராணுவச் சதிகள் எதுவும் நடந்தால் அதை எதிர்கொள்ளவும் தயாராக இருந்தது. ஆனால் மேற்குலக மூலதனமோ மிக வெளிப்படையாகவே  களம் இறங்கியது. தாம்  படிப்படியாக பற்பல அடுக்குகளாக உருவாக்கி வைத்துள்ள மனிதநேய அமைப்புகள், ஜனநாயக  அமைப்புகள் ஆகிய அனைத்தையும் தேர்தல் களத்தில்  இறக்கியது.  தற்போது இப்படை அணியில் ஒருவராக உள்ள சந்திரிகா குமாரதுங்காவும் தனது முத்திரை மோதிரத்தைக் காட்டினார். சிங்களவர்கள் அல்லாதோரின் வாக்குகளைப் பெறுவதற்காக இவர்கள் அதிகப் பிரயத்தனங்கள் மேற்கொண்டார்கள். இன மோதல்களற்ற இலங்கையைப் பற்றிப் பேசினார்கள். மலையைக் குடைந்து எலியைப் பிடித்ததைப் போல் சில வெற்றிகளை பெற்றுக்கொடுத்தார்கள். இவ் வெற்றி பாராளுமன்றத் தேர்தலில் சில ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள  உதவலாம்.
 
மேற்குலகின்  இரண்டாவது  தந்திரோபாயம்; கருணாவைக் கொண்டு  பிரபாகரன் தலைமையை வீழ்த்தியது போல், மகிந்த அணியில்  ஒரு கருணாவை உருவாக்குவதாகும்; அதில் வெற்றியும்  பெற்றார்கள். ஒரு சரத் பொன்சேகர உருவாக்கப்பட்டார்.  கருணாவை பிரித்தெடுத்தது மேற்குலகமே. ஆனால் கருணாவால் பலன் அடைந்ததோ ஆசிய மூலதனமேயாகும். புலியை பூனையாக்கத்தான் மேற்குலகம்  விரும்பியது, ஆனால் கருணாவைப் பயன்படுத்தி  ஆசிய  மூலதனம் புலியை “அழித்தே?”விட்டது. (மே18 தான் மகிந்த, சரத்  பொன்சேகராவை  இனங்கண்ட  நாளாக  இருக்கலாம்.) ஆண்ட பரம்பரை மேற்குலகம் சரத் பொன்சேகவை உருவாக்குவதில் வெற்றி பெற்றாலும், அவரைப் பயன்படுத்துவதில் தோல்வி கண்டுவிட்டது. மேற்குலகின் “மனிதநேயக் காவல்”, “ஜனநாயகக் காப்பு”  மற்றும் “இனச் சமத்துவ இலங்கை”ப்  பரிவாரங்களும் அவற்றின் மிகப்படித்த அறிவாழிகளும்  நிலைதடுமாறி அவசர முடிவெடுத்து விட்டாரகள். 

2002இல் அதிகாரத்துக்கு  வருவதற்காகவும், அதிகாரத்திற்கு  வந்ததன்  பின்பும், புலிகளுக்கு எதிரான போர் காலம்புராகவும்  மகிந்த மற்றும் சரத் ஆகிய இவ்விருவராலும் முன்வைக்கப்பட்ட  “இலங்கைத்  தேசியவாதம்” மூன்று  வகையான  அரசியல்  உள்ளடக்கங்களைக் கொண்டதாக இருந்தது.
1) பயங்கரவாததிற்கும் பிரிவினை வாதத்திற்கும் எதிரானது.  இது,அனைத்துச்  சிங்கள  மக்களாலும், தமிழ்பேசும் மக்களில்  கணிசமான பகுதியினராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டிருந்தது.
2) இலங்கையில் யு.என். பி யால் பின்பற்றப்பட்டு வந்த நவகாலனியல் பொருளாதாரக் கொள்கைக்கு எதிரானது. 
3) இலங்கைத் தீவின் மூலை முடுக்கெல்லாம் பௌத்த சிங்களவர்களுக்கே சொந்தமானது என்ற சிங்கள பௌத்த  பேரகங்காரவாதம். சிங்கள மேற்த்தட்டு வர்க்கமும், நடுத்தர  வர்க்கமும் இக்கொள்கையை ஆதரிக்கின்றது.  நிலப் பஞ்சம் மிகுந்த மலைநாட்டு விவசாயிகளுக்கும் இந்தக் கொள்கை  ஏற்புடையதாகவே உள்ளது.

இந்த  மூன்றினதும் சேர்வைதான் “மகிந்த சிந்தனை” யாகும். முதலாவது உள்ளடக்கத்தை நிறைவேற்றுவதில் மகிந்த, தமிழர்களில் சிறுபகுதி உட்பட அனைவராலும்  பாராட்டப்படக்கூடிய வெற்றிபெற்றுவிட்டார். மகிந்தவால் உலகளவில் அமைக்கப்பட்ட அரசியல் வியூகமும், ஆசிய மூலதனத்துடன் அவர் உருவாக்கிய் முறையான உறவுகளும்தான் அவரின் வெற்றிக்கான அடிப்படைக் காரணங்ககளாகும். இராணுவ  நடவடிக்கை பிரதான காரணம். அதுவும் யுத்தம் வரையுமான  பிரதான காரணம்.

யுத்தம் முடிவடைந்த சூட்டோடு சூடாக மகிந்த தனது  சிந்தனையின் இரண்டாவது உள்ளடக்கத்தை நிறைவேற்றும்  முயற்கியில் துரிதமாக இறங்கிவிட்டார். யுத்தத்தின் போது பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத எதிர்ப்பை உள்ளடக்கமாகக்  கொண்டிருந்த “இலங்கைத் தேசியம்” மேற்குலகின்  சட்டாம்பித்தன எதிர்ப்பை தனது உள்ளடக்கமாக்கிக் கொண்டது. இதனால் இதற்கும்  தனது மட்டற்ற அதிகாரப் பிரயோகத்திற்கும்  தடையாக இருந்த சரத் பொன்சேகராவை களட்டி விடவேண்டிய  அவசியம்  மகிந்தவுக்கு இருந்தது.

மேற்குலகின் தாசர்களாக சிங்கள மக்களால்  இனங்காணப்பட்டிருந்த யு.என்.பி, இந்தத் தேசிய அலையில்  இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, தன்னை உருமறைப்புச் செய்ய வேண்டிய நிலையில் இருந்தது. தேசிய வீரனாகப் பெயரெடுத்திருந்த சரத் பொன்சேகவை உருமறைப்புக்  கவசமாகத் தெரிவு செய்தது.  மகிந்த எண்ணியிருந்ததை இவர்கள்  சுலபமாகச் செய்து முடித்தார்கள்.  கருணாவின் உடைவால்  பிரபாகரனின் படிமம் உயர்ந்தது போல் சரத்தின்  பிரிவால் மகிந்தவின் படிமமும் பலமடங்கு உயர்ந்தது.

மக்கியவல்லி சிறந்த “இராஜதந்திரி”தான், ஆனால் சாணக்கியன்  அதைவிடத் திறமையானவன் என்பது நிரூபணமாகின்றதா? கீழைக்காற்று மேலைக்காற்றை மேவுகிறதா?  எப்படியோ  மேற்குலகின் பருப்பு இனியும் இலங்கையில் அவியாது என்பது  உண்மையாகி வருகின்றது.

அதற்கான காரணங்கள் சில:
1) இலங்கையின் அரசிய – புவிவிய காரணங்களால் மேற்க்குலகின்  இராணுவத் தலையீடு மிகக் கடினமானதொன்றானதாக இருத்தல், அத்துடன் இலங்கை அனைத்து வளமுமிக்க ஒரு சிறிய நாடாக  இருத்தல்.

2) இலங்கையின் பண்பாட்டுப் பாரம்பரியம் ஆசியவகைப்பட்டதாக  இருத்தல்.

3) இரண்டாவது IMF,  குட்டி NATO  என்று  கூறப்படும்,BRIC க்கின் உருவாக்கத்துடன் மேற்குலகிற்கு  எதிரான, உலகளாவிய பொருளாதார வல்லமையும் அரசியல் வல்லமையும் மிகத் தனியான அணியாக வளரத் தொடங்கி விட்டது. அதாவது மீண்டும் பனிப்போர்  ஆரம்பமாகிவிட்டது. இப்  பனிப்போரில் ஆசிய மூலதனம் (BRIC)  தாக்குதல்  நிலையிலும்,  அமெரிக்கப் பொருளாதரம் தற்காப்பு  நிலையிலும்  உள்ளது. சீனா, இந்தியா மற்றும் இலங்கை தமது அந்நியச் செலவாணியை  தங்கமாக சேமிக்கத் தொடங்கியுள்ளன. இது அமெரிக்க றிசேர்வ்  வங்கிக்கும் டொலர் சாம்ராஜ்யத்திற்கும் எதிரானதோர்  பொருளாதாரப் போராகும். மற்றோர் தகவல், BRIC நாடுகள் 2010 ஜனவரி  மாதத்தில் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் 670 கோடி டொலர் (30, 820 கோடி இந்திய ரூபாய்க்கள்) நிதி திரட்டியுள்ளன. இது உலக அளவில் புதிய  பங்குவாயிலாக திரட்டப்பட்ட நிதியில் 76 சதவீத்மாகும்.

4)ருஷ்யா மீண்டும் அமெரிக்காவை நேரடியாக  எதிர்கொள்ளும் ஒரு  இராணுவ வல்லரசாக மாறப்போவதாக அறிவித்து  அதற்கான தயாரிப்புகளிலும்  ஈடுபட ஆரம்பித்திருத்தல்.

5) அமெரிக்காவின் கீழ்நிலைச் சகபாடியாக இருந்த ஐரோப்பிய  யூனியன்(EU) மெரிக்காவின் சமநிலைப் பங்காளியாக வளர்ந்து  வரல். இதனால் மேற்குலகில் பங்காளிச் சண்டைகள்  தொலைதூரத்தில் இல்லை.

6) அமெரிக்கக் கொல்லைப்புறமாக இருந்துவந்த இலத்தீன்  அமெரிக்க நாடுகள் ஆசிய மூலதனத்தின் சமபங்காளிகள் என்ற நிலைக்கு உயர்ந்துவரல்.(ex-பிரேசில், வென்சுலா)

அமெரிக்காவின் ஏகபோகத் தலைமையின் கீழிருந்த ஒரு முனை  உலகம் பல்முனை உலகமாக துரிதகதியில் பரிமாணம்  பெற்றுவருகின்றது. US–EU–BRIC என்ற  மும்முனை ஏற்கனவே  தோன்றிவிட்டது. இனியும் பல முனைகள் தோன்றுவதற்கான  வாய்புகள் உண்டு. தோன்றவேண்டிய  அவசியமும்  உள்ளது.

ஆகவே  இலங்கை மக்கள் இனியும் மேற்குலகில்  தங்கிற்பதை தொடரக்கூடாது. தொடர்வோம் எனத் தொடர்ந்த பிரபாகரனும், சரத் பொன்சேகராவும் தோற்றுப்போயினர். தொடரமாட்டோம்  எனச் செயல்பட்ட மகிந்த வெற்றி பெற்றுவருகிறார். உள்ளங்கை  நெல்லிக்கனி போன்ற இந்த சமகால வரலாற்றை காணத் தவறுபவர்களை கபோதிகள் என்று அழைக்கலாமா? 

மேற்குலகம் என்று இங்கு சொல்லப்படுவது, மேற்குலகை ஆழும்  அதிகார அடுக்குகளையேயாகும்,  மேற்குலகின் மக்களையல்ல. தமது ஜனநாயக சிந்தனையை மிகத்துரிதமாக வளர்த்துவரும் மேற்குலக மக்கள் இலங்கை மக்களின் ஜனநாயகப்  போராட்டங்களுக்கான முதல் வரிசை நம்பகரமான  நண்பர்களாகும் .

ஆசிய மூலதனத்தின் அங்கத்துவ நாடுகளின் ஆளும் அதிகார அடுக்குகளோ ஒன்று பாக்கியில்லாமல் அனைத்துமே மகிந்த வகையறாக்கள்தான். மேற்குலக மூலதனத்தை மிகத்துரிதமாக மேவ வேண்டும் என்பதற்காக துரித கதியில் தமது சொந்த  நாட்டை தாமே மறுகாலனியாக்கம் செய்துவருகிறார்கள்.  உலகம் ஒருமுனை ஆதிக்கத்தின் கீழ் இருக்கக்கூடாது என ஜனநாயகக்  குரல்கொடுக்கும் இந்த அதிகார அடுக்குகள் தத்தமது சொந்த நாடுகளில் துரிதமான ஒருமுனைச் சேர்க்கையை  நடத்திவருகிறார்கள். விழிம்புநிலை மக்கள், விழிம்புநிலை தேசியங்கள், விழிம்புநிலை மொழிகள், விழிம்புநிலை மதங்கள், விழிம்புநிலை சாதிகள் எனப் பல்வேறுவிதமான விழிம்புநிலை  ஆக்கங்கள் துரித கதியில் நடைபெற்று வருகிறன.  இதற்காக  இந்நாடுகள் தத்தமது நாடுகளில் ஒரு உள்நாட்டு யுத்தத்தை  முறையாக நடாத்தி வருகின்றன.

நாடுகளுக்கிடையேயான யுத்தம் ஆசிய மூலதனத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதால்  உலகளாவிய யுத்தத்திற்கு எதிராக காந்தியவாதிகளாகவும்  அசோகச் சக்கரவத்திகளாகவும் நடந்துகொள்ளும் இவர்கள்  தத்தமது உள்நாடுகளில் அரச பயங்கரவாதிகளாக நடந்து கொள்கிறார்கள். ஆசிய மூலதனத்தின் வளர்ச்சி முன்றாம் உலக யுத்ததைத் தடுத்துவருகிறது என்பது உண்மை. இதற்காக உலகம் அவர்களுக்கு நன்றி சொல்லக் கடைமைப்பட்டது, அதே நேரத்தில்,  இவ் யுத்தம் மேற்குமுகாம் நாடுகள் தவிர்ந்த அனைத்து  நாடுகளிலும் உள்ளூர்மயப்படுத்தப் பட்டுவிட்டது.  ஆசிய  மூலதனதின் வள்ர்ச்சிக்காக பலிக்கிடாய்கள் ஆக்கப்பட்டவர்களின்  பட்டியலில் இலங்கையரகளும் சேர்க்கப்படுள்ளனர்.

இந் நிலமையால் இலங்கை மக்களுக்கு மாத்திரமல்ல ஆசிய மூலதனத்தின் ஆட்சியின் கீழுள்ள அனைத்து நாடுகளின்  மக்களுக்கும் தமது ஜனநாயக உரிமைகளுக்கான  போராட்டங்களுக்காக எந்த அரசையும் நம்ப முடியாத  நிலையே உள்ளது. உலக மக்களைத்தவிர நம்பகரமான நண்பர்கள்  வேறு எவருமேயில்லை.

நட்பைக் கொடுப்போம்  நட்பைப் பெறுவோம், உள்ளூரமயப்படுத்தப்பட்ட மூன்றாம் உலக  யுத்தத்தில் வெற்றி பெறுவோம்.

வன்னியில் மீட்கப்பட்ட வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு

gacahnrasri.jpgயுத்தம் காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தங்களது வாகனங்கள் உடைமைகளை விட்டு வந்தவர்கள் அவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்வதற்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் உடனடியாக விபரங்களை சமர்ப்பிக்குமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விரு மாவட்டங்களிலும் இதுவரை 50,000 சைக்கிள்கள், 20,000 மோட்டார் சைக்கிள்கள், 500 டிராக்டர்கள் (உழவு இயந்திரங்கள்) 20,000 தண்ணீர்ப் பம்புகள் மற்றும் ஒரு தொகை சிறியரக உழவு இயந்திரங்கள் (லேண்ட் மாஸ்டர்) என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் கிளிநோச்சிக்குக் கொண்டு வரப்படவுள்ளதுடன் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் திருத்த வேலைகள் செய்து புதுப்பிக்கப்படவுள்ளன. கிளிநொச்சியில் 16 ஏக்கர் நிலப்பரப்பு தெரிவு செய்யப்பட்டு சுத்தப்படுத்தும் வேலைகள் செய்யப்படுகின்றன. சேகரிக்கப்பட்ட அனைத்து வாகனங்களும் இங்கு கொண்டு வரப்பட்டு திருத்த வேலைகள் நடத்தப்படவுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

மோட்டார் சைக்கிள்கள்,  டிராக்டர்கள் போன்றவற்றின் உரிமையை உறுதி செய்யக்கூடிய ஆவணங்கள் அல்லது ஏதாவது ஒரு சான்றைக் காண்பித்து தங்களது வாகனங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். இதேவேளை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஊடாக வாகன உரிமம் தொடர்பாகவும் உறுதி செய்யப்படும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் விட்டுவந்த பஸ், லொறிகள் போன்றவற் றையும் பெற்றுக்கொள்ள முடியுமா என ஆளுநரிடம் கேட்ட போது: இப்போதைக்கு அது சாத்தியப்படமாட் டது. அவை பழுதடைந்த நிலையில் இருப்பதால் கொண்டுவருவதில் சிக்கல்கள் உள்ளன. முதலில் இப்போது சேகரிக்கப்பட்ட 10,000 வாகனங்களையும் மக்களிடம் கையயிப்பதே எமது நோக்கம் என்றும் தெரிவித்தார்.

லைன்’ வரிசை வீட்டு முறையை ஒழிக்கும் திட்டம்: 7 பேர்ச் காணியில் தனி வீடுகள் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை

sri-lankas.jpgமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் ‘லைன்’ வரிசை வீட்டு முறையை இல்லாதொழித்து ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 7 பேர்ச் காணியில் சகல வசதிகளையும் கொண்ட தனி வீடுகளை அமைத்துக் கொடுக்க தேச நிர்மாண, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

தேசிய அபிவிருத்தியில் மலையகத் தோட்டப் புறங்கள் உள்வாங்கப்பட்டதன் பின்னர் முதலில் வீடமைப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட் டிருப்பதாகவும் அவ்வாறு கடந்த நான்கு ஆண்டுகளில் 12,231 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் தேச நிர்மாண அமைச்சின் தோட்ட உட்கட்டமைப்பு விடயங்களுக்கான மேலதிகச் செய லாளர் திருமதி சந்திரா விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு 900 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், மலையகத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகளை அரசாங்கம் முன்னெடுப்பதாகவும் ஆனால், ஊடகங்களில் பெரிதாகத் தகவல்கள் வெளிவருவதில்லை எனத் தெரிவித்தார்.

குடிநீர், சுகாதாரம், மலசல கூட வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வளங்களைப் பெற்றுக் கொடுத்து வருவதாகக் கூறிய திருமதி விக்கிரமசிங்க, நீண்ட காலமாக எந்தத் திட்டமும் இல்லாதிருந்த நிலை இனியும் நீடிக்க அரசாங்கம் இடமளிக்காது என்றுக் கூறினார். தோட்ட வீதிகளைச் செப்பனிடு வதற்கென 828 மில்லியன் செலவி டப்பட்டுள்ளது. 139 மில்லியன் செலவில் 700 கிலோ மீற்றர் வீதிகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

87 நீர்விநியோகத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு 235 கோயில்களை அபிவிருத்தி செய்ய வும் நிதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தேச நிர்மாண அமைச்சின் மூலம் மலையகத்தில் 4614 செயற்றி ட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.