21

21

புத்தளத்தில் கற்கை நெறியையும் வதிவிட பயிற்சிகளையும் ஆரம்பிக்க ஏற்பாடு

புத்தளம் மாவட்டத்திற்கு அத்தியாவசியமாக தேவைப்படும் கற்கை நெறிகளையும், வதிவிட பயிற்சிகளையும் அவசரமாக ஆரம்பிப்பதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வயம்ப பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஏ. என். எப். பெரேரா தெரிவித்தார்.

வயம்ப பல்கலைக்கழகத்தின் கிளையை புத்தளத்தில் விஸ்தரிப்பது தொடர்பான கூட்டமொன்று நேற்று புத்தளத்திலுள்ள கால்நடை வள அபிவிருத்தி அமைச்சின் புத்தளம் மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே உபவேந்தர் பேராசிரியர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கால்நடை வள அபிவிருத்தி பிரதி அமைச்சர் கே. ஏ. பாயிஸின் அழைப்பின் பேரில் வயம்ப பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் உட்பட பகுதி தலைவர்கள் புத்தளம் நகருக்கு வருகை தந்தனர். வயம்ப பல்கலைக்கழக கற்கை நெறிகளை நடாத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களையும் அவர்கள் பார்வையிட்டனர். பிரதி அமைச்சர் பாயிஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தொடர்ந்து கருத்து தெரிவித்த உபவேந்தர்,
பிரதி அமைச்சர் பாயிஸ் எமது பல்கலைக்கழகத்தினை பொறுத்தவரை மிக முக்கியமான ஒருவராக காணப்படுகின்றார். அவரின் அமைச்சினூடாக நாம் நிறைய பிரயோசனங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. வயம்ப பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 10 ஆண்டுகள் பூர்த்தி அடைந்துள்ளன. இந்த தருணத்தில் எமது செயற்பாடுகளை புத்தளத்தில் விஸ்தரிப்பதில் பெருமை அடைகின்றார்.

உயர்தர மாணவர்கள், ஆசிரியர்கள், தொழில்சார், ஊழியர்கள், நிபுணர்களுக்கு தேவையான கற்கை நெறிகளையும் பயிற்சி வகுப்புகளையும் புத்தளத்தில் ஆரம்பிக்க ஏற்பாடுகளை செய்கின்றோம். குறிப்பாக விஞ்ஞான, விவசாய துறைசார் ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சிகளை வழங்க ஏற்பாடுகளை செய்கின்றோம். தெங்கு உற்பத்தி, கடல்சார் தொழில், விவசாய உற்பத்தி தொடர்பான டிப்ளோமா மற்றும் பட்டப் படிப்புக்கள், பட்டப்பின் படிப்புக்களை புத்தளத்தில் ஆரம்பிக்க ஏற்பாடுகளை செய்கின்றோம் என்று உபவேந்தர் தெரிவித்தார்.

யாழ்., வவுனியா தேர்தலில் பசப்பு வார்த்தைகளை நம்பி முஸ்லிம்கள் ஏமாந்துவிடக் கூடாது – அமைச்சர் ரிஷாட்

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணியை மீட்டுத் தந்த ஜனாதிபதிக்கு நாம் நன்றிக்கடன் செலுத்தாத பட்சத்தில் அது ஒரு வரலாற்றுத் தவறாகவே கணிக்கப்படும் என மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தெரிவித்தார்.

யாழ். மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களை ஆதரித்து புத்தளம், மலீஹாபுரம் மீள் குடியேற்றத் திட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பதியுத்தீன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் பதியுத்தீன் தனதுரையில் மேலும் கூறியதாவது,

இடம்பெயர்ந்த ஒவ்வொரு மகனும் தமது மண்ணை நேசிப்பவனாக இருந்தால் தமது மீள் குடியேற்றத்தில் நம்பிக்கை கொண்டிருந்தால், தமது பிள்ளைகளின் நல்வாழ்வில் அக்கறை கொண்டிருந்தால் அரசுக்கு எதிராக செயற்படவே முடியாது.

மாறாக சில சுயேச்சைக் குழுக்களின் பசப்பு வார்த்தைகளுக்கு ஏமாந்து மாற்றுக் கட்சிகளுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் வாக்காகவே அமையும். ஆகவே ஜனாதிபதியும், அரசும் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை பாழ்படுத்தி விடவேண்டாம். அதிகமான போர் வீரர்களை பலி கொடுத்து தாயக மண்ணை மீட்டுக்கொடுத்தமைக்கு இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் எமக்கு ஆதரவு இல்லையே என்ற பழிச் சொல்லுக்கு வழிவகுத்து விடாதீர்கள்.

இலங்கை வாழ் மக்கள் மட்டுமல்ல அனைத்து உலக மக்களும் உன்னிப்பாக எம்மை அவதானி த்துக்கொண்டிருக்கின்றார்கள். பதிவு செய்யப்பட்டுள்ள 6200 வாக்குகளில் எத்தனை வாக்குகள் வெற்றிலைச் சின்னத்திற்கு அளிக்கப்படுகின்றன என்பதை அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.

இன்று தமிழ்ச் சமூகம் சிங்கள சமூகம் என்பன ஜனாதிபதிக்கு பின்னே அணி திரண்டு நிற்கின்றன. ஜம்இய்யத்துல் உலமாக சபையினர் கூட அண்மையில் ஜனாதிபதிக்கு பாராட்டு விழா நடாத்தியுள்ளனர். இப்படியிருக்கும்போது ஏன் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மட்டும் ஜனாதிபதிக்கு தமது முழு ஒத்துழைப்பையும் வழங்க முடியாது.

இன்று கிழக்கு மாகாண மக்கள் சுதந்திரமான காற்றை சுவாசித்தவர்களாக நிம்மதியுடன் வாழும் நிலை ஏற்பட ஜனாதிபதி வழி வகுத்துள்ளார். அதேபோன்று எமது சுதந்திரமான மீள் குடி யேற்றமும் இடம்பெற்று எமது இளம் சமுதாயத்தினர் மகிழ்வுடன் வாழவேண்டுமானால் அனைத்து மக்களும் வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களித்து எமது தாயக மண்ணை மீட்டுத் தந்த ஜனாதிபதிக்கு எமது நன்றிக் கடனை செலுத்துவோம் என்றார்.

சிங்களவர் அனுபவிக்கும் உரிமைகளை தமிழ் மக்களும் அனுபவிக்க வேண்டும் – அமைச்சர் நிமல்

பெருந்தோட்டங்கள் மற்றும் கிராமியப் பகுதிகளை ஒன்றிணைக்கவும் தமிழர் சிங்களவர்களுக்கிடையிலான ஐக்கியத்தினை மேம்படுத்தவும், அரசினால் பொறுப்பேற்கப்பட்ட பெருந்தோட்ட வைத்தியசாலைகள், பிரதான கேந்திர நிலையங்களாக அமையும் அதேவேளை சிங்கள மக்கள் அனுபவிக்கும் சகல உரிமைகளையும் பெருந்தோட்டத் தமிழ் மக்களும் அனுபவிக்க வேண்டும். இம்மக்கள் எவ்வகையிலும், எமது அரசினால் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்.ள

என சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். அரசினால் பொறுப்பேற்கப்பட்டு, நவீனமயப்படுத்தப்பட்ட வெலிமடை டவுன்சைட் பெருந்தோட்ட வைத்தியசாலை திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் தொடர்ந்தும் கூறியதாவது இலவச சுகாதார சேவையின் போது தமிழ் சிங்கள முஸ்லிம் சமூகங்கள் சமமான சேவையினைப் பெறல் வேண்டும். அந்நோக்கினடிப் படையிலேயே, பெருந்தோட்ட வைத்தியசாலைகள் அரசினால் பொறுப்பேற்கப்பட்டன.

அரசின் இலவச சுகாதார சேவைகள் பெருந்தோட்ட மக்களை சென்றடையாமலிருந்து அம்மக்கள் புறக்கணிக்கப்பட்டமையே தோட்ட வைத்தியசாலைகள், அரசால் பொறுப்பேற்கப்பட்டதற்கு முக்கிய காரணமாகும்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசினாலேயே பெருந்தோட்டப் பகுதிகளில் பாரிய மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனை எவரும் மறுக்வோ, மறைக்கவோ முடியாது. பெருந் தோட்டப் பாடசாலைகளுக்கென 3179 ஆசிரிய நியமனங்கள், அரசினால் பொறுப்பேற்கப்பட்ட பெருந்தோட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றவென மருந்துக் கலவையாளர்கள், தாதிகள், ஊழியர்கள் என்ற நியமனங்கள், சமூக தொடர்பாடல் நியமனங்கள் ஆகியன வழங்கப்பட்டதுடன், பாதைகள் அமைத்தல், குடிநீர் விநியோகத் திட்டங்களை ஏற்படுத்துதல், மலசலகூடங்களை அமை த்தல் போன்ற அடிப்படை வேலைத் திட்டங்களும் பெருந் தோட்டப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக் கின்றன.

இவ்வேலைத் திட்டங்கள் தொடரவும், மேலும் புதிய வேலைத் திட்டங்களை ஆரம்பிக்கவும், நடைபெறவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலில் பெருந்தோட்ட மக்கள் ‘வெற்றிலை’ சின்னத்திற்கு வாக்களித்து, ஆளும் கட்சியை வெற்றியடைய வைக்க வேண்டும். அதனை, இம்முறை பெருந்தோட்ட மக்கள் நிறைவேற்றுவார்களென்று எதிர்பார்க்கின்றேன் எனக் கூறினார்.

‘லண்டன் மாப்பிளை’ ஓகஸ்டில் லண்டனில் படப்பிடிப்பு.

London Mappillaiகௌதம் விஷன்ஸ் நிறுவனம் பொலிவூட் சினி புறடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் ‘லண்டன் மாப்பிளை’ திரைப்படம் பாரிய பொருட்செலவில் தயாரிக்கப்படவுள்ளது. 90 வீதம் படப்பிடிப்புக்கள் லண்டனிலும் மிகுதி இராமேஸ்வரம் பகுதியிலும் படமாக்கப்படவுள்ளன.

ஆகஸ்ட் முதலாம் திகதி லண்டனில் படப்பிப்புக்கள் ஆரம்பமாகும் இத்திரைப்படம் முழுநீள நகைச்சுவைப் படமாகும். லண்டன் பிரஜையான ஆர் புதியவன்  இயக்கும் இந்தப் படத்தில் இடம்பெறும் காட்சித் தளங்கள் இதுவரை எந்த இந்தியத் திரைப்படங்களிலும் வராத அனுமதி பெறமுடியாத இடங்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மணிரத்தினம் இயக்கும் ராவணா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அஸ்வந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் நடிகர் சத்தியராஜின் புதல்வி திவ்யா. இது மாத்திரமல்லாமல் நூற்றுக்கு மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றிய எஸ். ஏல். பாலாஜி முக்கிய பாத்திரத்தில் தோன்ற இருக்கிறார். நகைச்சுவை கலாட்டாவுடன் வித்தியாசமான  பாத்திரத்தில் முதல் முதல் தோன்ற இருக்கிறார் காதல் சுகுமார். இவர்களுடன் சேர்ந்து கலக்கும் இன்னொரு நட்சத்திரம் மண் படத்தில் தன் நடிப்பால் பாராட்டைப் பெற்ற விஜித்.

ஓளிப்பதிவு சி.ஜே. ராஜ்குமார். நடனம் எஸ்.எல். பாலாஜி. படத்தொகுப்பு சுரேஸ் அர்ஸ். தமிழகம் தலையசைத்து எல்லோரையும் முணுமுணுக்க வைக்கும் அற்புதமான ஜந்து பாடல்களுடன் அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் பாலாஜி. கே. மித்திரன். இந்தப் படத்தின் மூலம் இன்னொரு பரிமாணத்துடன் தனது வசனங்களால் பிரமிப்பூட்ட வருகிறார் வசனகர்த்தா வசந்த் செந்தில். பாடல்களை இயக்குனர் புதியவனும் ஏக்நாத் அவர்களும் எழுதியுள்ளனர். கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் ஆர் புதியவன்.

படப்பிடிப்புக் காலத்தில் சினிமாப் பயிற்சிப் பட்டறை ஒன்றை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக புதியவன் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார். அப்போது இந்தக் கலைஞர்களுடனான சந்திப்பு ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட இருக்கிறது.

பக்ரீறியா நுண்ணங்கியை பயன்படுத்தி நுளம்புகளை கட்டுப்படுத்த விசேட திட்டம்

dengu_1.gif

டெங்கு காய்ச்சலைப் பரப்பும் நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குக் கியூபாவில் பயன்படுத்தப்படும் பக்ரீறியா நுண்ணங்கியை இலங்கையிலும் பாவிப்பதற்குத் தேவையான நிபுணத்துவ சேவையை வழங்குவதற்கென இன்று (21ம் திகதி) கொழும்புக்கு வந்து சேரும் அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள், நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களுக்கும் நேரில் சென்று நிலைமையை ஆராயவிருக்கின்றனர்.

இந்நாட்டில் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் நுளம்புகளைக் கட்டுப்படுத்துவதற்கு கியூபாவில் பயன்படுத்தப்படும் பி. ரி. ஐ. என்ற நுண்ணங்கி பாவிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கென குறித்த பக்ரீறியா தொடர்பான நிபுணத்துவ சேவை வழங்கவென இரு மருத்துவ நிபுணர்களை கியூபா இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.

இவ்விரு மருத்துவ நிபுணர்களும் கடந்த சனியன்று கொழும்புக்கு வந்து சேர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் விமானப் பயணத் தாமதம் காரணமாக இவ்விரு மருத்துவ நிபுணர்களும் இன்று கொழும்புக்கு வந்து சேர்வர் என்று சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத் துறை அமைச்சின் பொது சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹீபால தெரிவித்தார்.

இவ்விரு மருத்துவ நிபுணர்களும் ஒரு வாரகாலம் இந்நாட்டில் தங்கி இருப்பர். இக்காலப் பகுதியில் இவர்கள் ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம் உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கும் நேரில் சென்று டெங்கு காய்ச்சலைப் பரப்பும் நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆராய்வர் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேநேரம் இம்மருத்துவ நிபுணர்களுடன் பி. ரி. ஐ. பக்ரீறியா நுண்ணங்கி தொடர்பாக இலங்கை மருத்துவ நிபுணர்களும், பக்ரீறியா நுண்ணங்கி ஆய்வாளர்களும் இரண்டு அல்லது மூன்று தடவைகள் கலந்துரையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.

இக்கலந்துரையாடலின்போது பி. ரி. ஐ. பாவனையின் மூலம் கிடைக்கப் பெறும் நன்மை தீமை குறித்து விசேட கவனம் செலுத்தப்படும். அதனைத் தொடர்ந்து குறித்த பக்ரீறியாவை கொண்டு வருவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

விசர் நாய்க்கடிக்கு இலக்காகி 6 மாதங்களில் 28 பேர் உயிரிழப்பு

விசர் நாய்க்கடிக்கு உள்ளாவோரின் தொகை நாட்டில் அதிகரித்து வருவதால் வீடுகளில் நாய்களை வளர்ப்போர் அவற்றுக்கான தடுப்பூசி மருந்துகளை உரிய காலங்களில் ஏற்றி அவற்றுக்கு விசர் நோய் மற்றும் நோய்கள் ஏற்படாது தடுத்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் விசர் நாய்க்கடிக்கு உள்ளாவோரின் தொகை அதிகரித்துள்ளதால் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் 28 பேர் விசர் நாய்க்கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். ஒருவருக்கு நாய் கடித்தால் உடனடியாக அரச மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்று சிகிச்சையளிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கட்டாக்காலி நாய்களின் தொகை அதிகரித்து வருவதாக உள்ளூராட்சி சபைகள் தெரிவிக்கின்றன. முன்னர் இவற்றை உள்ளூராட்சி சபைகள் அழித்துவரும் பணிகளை மேற்கொண்டன. ஆனால், பௌத்த நாட்டில் அப்பாவி பிராணிகளை கொல்லக்கூடாது என உயர் மட்டத்தினர் அறிவித்துள்ளதால் தற்போது நாய்களுக்குக் கருத்தடுப்பு ஊசிகள் ஏற்றப்படுகின்றன.

நாடு முழுவதும் தற்போது 6 இலட்சத்துக்கும் அதிகமான நாய்கள் உள்ளன. இவற்றில் 55 ஆயிரம் நாய்களுக்கு விசர் நோய் தடுப்பு மருந்து ஏற்றப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்களின்படி இதுவரை 65 ஆயிரம் பெண் நாய்களுக்குக் கருத்தடை மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.

அணுச்செறிவூட்டல் தொழில்நுட்பத்தை இந்தியா பெறுவதை அமெரிக்கா எதிர்க்கவில்லை என்கிறார் ஹிலாரி

இந்தியா அணுசக்தி செறிவூட்டல் தொழில்நுட்பத்தைப் பெறுவதை அமெரிக்கா எதிர்க்கவில்லை என்று தெரிவித்தார் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டன்.

திங்கட்கிழமை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி உள்ளிட்டோரை அவர் சந்தித்துப் பேசினார்.

அவரது இந்தப் பயணத்தின்போது தொழில்நுட்ப பாதுகாப்பு ஒப்பந்தம், அணுசக்தி எரிபொருள் பயன்பாட்டை இறுதியில் கண்காணிக்கும் ஒப்பந்தம் ஆகியவை அதில் அடங்கும். தொழில்நுட்ப பாதுகாப்பு ஒப்பந்தப்படி, இனிமேல் அமெரிக்க சாதனங்களைக் கொண்ட செயற்கைக்கோள்களை வர்த்தக ரீதியாக இந்தியா விண்ணில் செலுத்த முடியும். அணுசக்தி எரிபொருள் பயன்பாட்டை இறுதியில் கண்காணிக்கும் ஒப்பந்தத்தை அடுத்து, இனிமேல் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவுக்கான பாதுகாப்பு ஆயுதங்களை வழங்க முடியும்.

மேலும், இன்றைய ஒப்பந்தத்தில், அமெரிக்க நிறுவனங்கள் அணு உலைகளை அமைக்க இரு இடங்களை ஒதுக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. சுமார் 10 மில்லியன் டாலர் மதிப்புள்ள அந்த ஒப்பந்தங்கள் மூலம், இந்தியாவுக்குத் தேவையான அணுஎரிபொருள்களை அமெரிக்க நிறுவனங்கள் வழங்கும். இதுதவிர, சுகாதாரம், கல்வி, அறவியில் தொழில்நுட்பம், மகளிர் அதிகாரமளிப்பு உள்ளிட்ட பல துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி

strauss.jpg 75 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனிலுள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஆஷஸ் தொடரின் ஒரு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வென்றுள்ளது. திங்களன்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை 115 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஐந்து போட்டிகளை கொண்ட இந்தத் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி எத்தரப்புக்கும் வெற்றியின்றி முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாம் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து இந்தத் தொடரில் 1-0 என்கிற நிலையில் முன்னணி பெறுகிறது. இந்த ஆஷஸ் தொடருக்கு பிறகு டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ள இங்கிலாந்து அணியின் ஆண்ட்ரூ பிளிண்டாஃப், ஆஸி அணியின் இரண்டாவது இன்னிங்க்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியமை இந்தப் போட்டியில் ஒரு சிறப்பம்சமாக இருந்தது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் தலைவரான ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் மற்றும் ஆஸி அணியின் மைக்கெல் கிளார்க் சதமடித்ததும் இதர சிறப்புகளாகும்..இந்த இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் இம்மாதம் 30 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

புதிதாக நியமனம் வழங்கப்பட்ட ஆசிரியர்கள் கடமையை பொறுப்பேற்க தவறினால் பதவியை இழப்பர்

புதிதாக நியமனம் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் உரிய பாடசாலைகளுக்கு செல்லத் தவறினால் அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். இன்று முதல் இது நடைமுறைக்கு வருமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மொனராகலை மாவட்டத்துக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஊவா மாகாண ஆசிரியர் சங்கத்தினர் பெலவத்தையில் சந்தித்தனர். இச்சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.அவர், இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது :-

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் 31,000ற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இன்று ஆசிரியர்களுக்கான தட்டுப்பாடு இருக்க நியாயமில்லை. சில பகுதிகளில் அதிகூடிய ஆசிரியர்களும் சில பாடசாலைகளில் மிகக் குறைவான ஆசிரியர்களும் உள்ளனர். இவர்கள் முறையாகப் பகிரப்படவில்லை.

எவ்வாறெனினும் கஷ்டப் பிரதேசங்கள், கிராமியப் பகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் கண்டிப்பாக தமது பாடசாலைகளுக்குச் செல்வது அவசியம். வசதிகளைக் கருதி சகலரும் நகர்ப்புற பாடசாலைகளுக்குச் செல்ல ஆசைப்பட்டால் கிராமிய பகுதி மாணவர்களின் கல்வியே பாதிப்படையும்.

இதனைக் கருத்திற் கொண்டு ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். இன்றே மேற்படி ஆசிரியர்கள் தமக்கு நியமனம் வழங்கப்பட்ட பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டுமெனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

ஊவா மாகாண அதிபர்கள், ஆசிரியர்கள் வலயக் கல்விப் பணிப்பாளர்களென பலரும் ஜனாதிபதியிடம் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விபரித்தனர். தமிழ் பாடசாலையொன்றின் அதிபர் எஸ். ராஜேந்திரன் தமது பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளை ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்தினார். இவற்றுக்குச் செவிமடுத்த ஜனாதிபதி அவை தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படும் என தெரிவித்தார்.

கஸாப் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

மும்பை நகரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக உயிருடன் பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான முகமது அஜ்மல் அமீர் கஸாப், அந்தக் குற்றத்தில் தான் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

திங்கட்கிழமை மும்பையில் சிறப்பு நீதிமன்றம் ஒன்றில் நடைபெற்ற விசாரணையின்போது, கஸாப் திடீரென தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 170 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதுதொடர்பாக கைது செய்யப்பட்ட கஸாப், பாதுகாப்பு மிக்க ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கேயே சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து கடல் வழியாக படகில் தாங்கள் எப்படிப் பயணித்தார்கள் என்பது குறித்தும், அங்கிருந்து தங்களை இயக்கியவர்கள் யார் என்பது உள்ளிட்ட விவரங்களையும் நீதிபதிகளிடம் கஸாப் விளக்கியதாகத் தெரிகிறது.

கஸாப் திடீரென தனது குற்றத்தை ஒப்புக்கொண்டது அனைத்துத் தரப்பினருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், ஏற்கனவே நடந்த முந்தைய விசாரணைகளின்போது, கஸாப் தான் குற்றவாளி இல்லை என்று கூறிவந்தார்.