13

13

இராணுவத் தளபதியாக ஜகத் ஜயசூரியவும், கடற்படைத் தளபதியாக திசர சமரசிங்கவும் நியமனம் – பிரதான பாதுகாப்பு அதிகாரியாக ஜெனரல் சரத் பொன்சேகா

sarath-pon.jpgபாது காப்புத் துறை உயர் பதவிகளில் முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய நியமனங்களையும் நேற்று வழங்கினார். பிரதான பாதுகாப்பு அதிகாரி, தேசிய பாதுகாப்புக்கான ஜனாதிபதியின் ஆலோசகர், புதிய இராணுவத் தளபதி, கடற் படைத் தளபதி ஆகிய பதவிகளுக்கே புதிதாக நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் புதன்கிழமை 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த புதிய நியமனங்களை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது. இதற்கமைய தற்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா புதிய பிரதான பாதுகாப்பு அதிகாரியாகவும், தற்போதைய கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட தேசிய பாதுகாப்புக்கான ஜனாதிபதியின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து ஏற்பட்டுள்ள இராணுவத் தளபதி பதவி வெற்றிடத்திற்கு புதிய இராணுவத் தளபதியாக தற்போதைய வன்னி பாதுகாப்புபடைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத்ஜயசூரியவும், கடற் படைத் தளபதி பதவி வெற்றிடத்திற்கு புதிய கடற்படைத் தளபதியாக கடற்படையின் தற்போதைய பிரதான அதிகாரி பதவி வகிக்கும் ரியர் அட்மிரல் திஸர சமரசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய நியமனங்களுக்கமைய மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய 19வது இராணுவத் தளபதியாகவும், ரியர் அட்மிரல் திஸர சமரசிங்க 17வது கடற் படைத் தளபதியாகவும் எதிர்வரும் புதன்கிழமை பதவியேற்கவுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு பாதுகாப்பு படை உயர் தளபதிகளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து தமது நியமனங்களை பெற்றுக் கொண்டனர்.

ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, ஏயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேரா, விமானப் படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

வடக்கு வசந்தம் வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்க பேராதனை பல்கலைக்கழகம் முன்வருகை

அரசாங்கத்தின் ஊடாக இப்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற ‘வடக்கு வசந்தம்’ என்ற வேலைத் திட்டத்துக்கு கைகொடுக்க பேராதனைப் பல்கலைக்கழகம் முன்வந்துள்ளது. வட பிரதேச மக்களின் தேவைகள் எனக் கருதப்படும் அம்சங்கள் குறித்து பல்கலைக்கழகம் மதிப்பீடு ஒன்றை முதலில் மேற்கொள்ளும். அதன் பின்னர் குறுகிய, நீண்ட, மத்திய காலங்களை உள்ளடக்கியதாக வேலைத் திட்டங்களை வகுக்கவும் தயாராகியுள்ளது.

வட பிரதேச நவோதய வேலைத் திட்டத்துக்கு பல்கலைக்கழகம் எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்து அண்மையில் மத்திய மாகாண ஆளுநர் தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது விரிவாக ஆராயப்பட்டது. ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசியிர் ஹரிச்சந்திர அபயகுணவர்தன உட்பட மற்றும் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டு ‘வடக்கு வசந்தம்’ தொடர்பாக எத்தகைய பங்களிப்பை பல்கலைக்கழகம் வழங்கலாம் என்பது பற்றி ஆராய்ந்தனர்.

இப்பொழுது வவுனியா மெனிக்பாம் முகாமில் இரண்டாவது வலயத்தில் தங்கி இருக்கும் 45,000 மக்களை மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கான சேம நலன்களைக் கவனிக்க அரசாங்கத்தின் ஊடாக மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவிடமும் மத்திய மாகாண சபையிடமும் இதற்கான பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் அரச அதிகாரிகளும் பல்கலைக்கழக ஆசிரியர் பீடமும் இணைந்து திட்டங்களை வகுத்து வருகின்றன.

நிவாரணக் கிராமங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு க. பொ. த. சாதாரண, உயர் தர பரீட்சைகளுக்குத் தோற்றுவதற்கான கல்வியூட்டலை வழங்க ஆசிரியர்களையும் மற்றும் பயிற்சிகளையும் வழங்குவதற்கான திட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும். நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்கள் உள ரீதியாக தொடர்ந்தும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு இலக்கிய மற்றும் கலை, கலாசார ரீதியாக நிகழ்ச்சிகளை நடத்தவும் இப்பல்கலைக்கழக பீடம் திட்டமிட்டுள்ளது.

அம்மக்களுக்கான புதிய வீடுகளை நிர்மாணிப்பதன் பொருட்டு குறைந்த செலவில் அவற்றை உருவாக்கவும், நீர் விநியோகத் திட்டம் ஒன்றின் மூலம் விவசாய உற்பத்தி நடவடிக்கைகளுக்காக விவசாய, கால்நடை அபிவிருத்தி போன்ற துறைகளில் ஆலோசனைகளை வழங்கவும் குழாய் நீர் போன்ற வசதிகளையும் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன.

பேராதனைப் பல்கலைக்கழக கட்டிட நிர்மாண மற்றும் அமைப்புகளின் உதவியுடன் கட்டிட பணிகளுக்கு உதவிகளைப் பெறவும் இணக்கம் காணப்பட்டது. பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியியல் பீடாதிபதி பேராசிரியர் சரத் அபயகோன் மற்றும் கல்விப் பீடங்களின் பேராசிரியர்கள், பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர்கள் பலரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 20,000 குடும்பங்களை மீள்குடியேற்ற ஏற்பாடு – பூநகரி, ஏ9, பளை பகுதிகளில் மீள்குடியேற்ற படையினர் அனுமதி

வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் இருபதினாயிரம் (20,000) குடும்பங்களைச் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த முடியுமென கிளிநொச்சி அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் நேற்றுத் தெரிவித்தார்.

பூநகரி பிரதேச செயலகப் பிரிவின் தெற்கு பிரதேசங்களிலும், ஏ-9 நெடுஞ்சாலைக்கு மேற்கு பிரதேசங்களிலும் பளை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கிராம சேவகர் பிரிவுகளிலும் மக்களை மீளகுடியமர்த்துவதற்குப் பாதுகாப்பு படையினர் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

கிளிநொச்சி, மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் வவுனியா நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ளார். வன்னிப் பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களை வடக்கின் வசந்தம் 180 நாள் திட்டத்தின் கீழ் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளது.

இந்தடிப்படையில் வன்னிப் பிரதேசங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை துரிதமாக மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சூழ்நிலையில், கிளிநொச்சி அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தலைமையில் கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி, சுகாதாரம், வீதி, உள்ளுராட்சி, கட்டடத் துறை ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள் தொழில் நுட்பவியலாளர்கள், பொறியியலாளர்கள் அம்மாவட்டத்தின் வெவ்வேறு பிரதேசங்களுக்கும் நேற்று முன்தினம் சென்று திரும்பியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில், நாச்சிகுடா, வீரவில், ஜெயபுரம், வலைப்பாடு, அக்கராயன் குளம், வன்னேரிக்குளம் ஆகிய பிரதேசங்களுக்கே இக் குழுவினர் சென்று திரும்பியுள்ளனர்.

இம்மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் மக்களை வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் மீளக்குடியமர்த்துவது தொடர்பாக விரிவாக கவனம் செலுத்தியதுடன் அப்பிரதேசங்களின் உட்கட்டமைப்பு வசதிகளைத் துரிதமாக மேம்படுத்துவது குறித்தும் இக் குழுவினர் விசேட கவனம் செலுத்தியுள்ளனர்.

பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் அரசாங்க கட்டடங்களும் உட்கட்டமைப்பு வசதிகளும் பெரிதும் பாதிக்கப்படவில்லை. அவற்றை குறுகிய காலத்தில் புனரமைக்க முடியும் என்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிகாரிகள் நேற்றுத் தெரிவித்தனர்.

இந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்படி பிரதேசங்களின் வீதிகள், பாடசாலைக் கட்டடங்கள், ஆஸ்பத்திரிக் கட்டடங்கள், பொதுச் சந்தைக் கட்டடங்கள் என்பன துரிதகதியில் புனரமைக்கப்படவிருக்கின்றன.  இது தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்ளும் பணியில் தற்போது அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்று கிளிநொச்சி அரசாங்க அதிபர் கூறினார்.

2 ஆண்டுகளுக்கு பிறகு சானியா திருமணம் – நிச்சயதார்த்தம் முடிந்ததும் தந்தை தகவல்

saniya222.jpgஐதராபாத் தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு 2 ஆண்டுகள் கழித்து திருமணம் நடைபெறும் என்று அவரது தந்தை தெரிவித்து உள்ளார். பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கும், அவருடன் சிறுவயது முதலே பழகிய அவரது குடும்ப நண்பரும், தொழிலதிபருமான சோரப் மிர்சாவுக்கும் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இருவரும் நிச்சயதார்த்த மோதிரத்தை மாற்றிக் கொண்ட பின்னர், பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட 10 கிலோ கேக்கை வெட்டி மகிழ்ந்தனர். அந்த கேக்கில் சானியா- சோரப் ஜோடியின் பெயர் எழுதப்பட்டு வாழ்த்து வாசகம் இடம்பெற்றிருந்தது. அழகுபதுமையாக ஜொலித்த சானியா, டைமண்ட்டுகள் பதிக்கப்பட்ட தங்க நிறத்திலான ‘காக்ரா சோலி’ என்ற விலை உயர்ந்த ஆடையை அணிந்து இருந்தார். பிரபல டிசைனர் ஷாந்தனு- நிகில் வடிவமைத்திருந்த இந்த ஆடையின் மதிப்பு 20 இலட்சம் இந்திய நாணய ரூபா ஆகும். இதனை நிச்சயதார்த்த பரிசாக மணமகன் சோரப் மிர்சா வழங்கினார்.

நிச்சயதார்த்தம் வெகு விமரிசையாக நடந்தாலும், திருமண திகதி பற்றி உடனடியாக எந்த முடிவும் செய்யப்படவில்லை. இது பற்றி சானியாவின் தந்தை இம்ரான் மிர்சா கூறுகையில், ‘சானியாவுக்கு முஸ்லிம் முறைப்படி திருமண நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்து முடிந்தது. அவர் தொடர்ந்து டென்னிஸ் விளையாடுவார். அவர் 2 ஆண்டுகள் கழித்து திருமணம் செய்ய விரும்புவதாக என்னிடம் கூறியிருக்கிறார். எனவே அவரது ஆசைப்படி 2 ஆண்டுகள் கழித்தே திருமணம் நடத்த முடிவு செய்து உள்ளோம். அடுத்த மாதம் இறுதியில் தொடங்க உள்ள அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் சானியா பங்கேற்க உள்ளார்’ என்றார்.

சோரப் மிர்சா எம்.பி.ஏ. படிப்பதற்காக இங்கிலாந்து செல்ல உள்ளார். அவரது படிப்பு முடியவும் 2 ஆண்டுகள் ஆகிவிடும். எனவே 2011ம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை – பாகிஸ்தான் இரண்டாவது டெஸ்ட்: இலங்கை அணி 74 ஓட்டங்கள் முன்னிலையில் – 36 ஓவர்களில் பாகிஸ்தான் 10/90

srilanka-cri.jpgஇலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று கொழும்பு சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமானது. இப்போட்டியில் இலங்கை அணி 74 ஓட்டங்களில் முன்னணியில் உள்ளது.

நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி முதன் இன்னிங்சில் 36 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட் டுக்களையும் இழந்து 90 ஓட்ட ங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பெடுத் தாடிய இலங்கை அணி 48 ஓவர்கள் முடிவில் 03 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை எடுத்தது. ஐந்து நாட்களைக் கொண்ட இந்த டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 16ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸ்

குஹரம் மன்சூர் 03
பவாட் அலிம் 16
யூனுஸ் கான் 00
மொஹமட் யூசுப் 10
மிஸ்பஹா உல் ஹக் 00
சுஐப் மலிக் (ஆ.இ) 39
கம்ரன் அக்மல் 09
அப்துர் ரவூப் 00
உமர் குர் 01
மொஹமட் அஹமர் 02
சஹீட் அஜ்மல் 00
உதிரிகள் 10
மொத்தம் 90

பந்து வீச்சு:
குலசேகர 9-3-21-4,
துஷார 8-3-23-2,
மென்டிஸ் 10-3-20-3,
மெத்திவ்ஸ் 3-0-15-1,
ஹேரத் 6- 3-5-0

இலங்கை அணி முதல் இன்னிங்ஸ்

வர்ணபுர 11
பரணவித்தாரன 26
சங்கக்கார (ஆ.இ) 81
ஜயவர்தன 19
சமரவீர (ஆ.இ) 13
உதிரிகள் 14
மொத்தம் 164

பந்துவீச்சு:
உமர்குல் 10-1-28-1,
மொஹமட் அஹமர் 9-2-30-0,
அப்துல் ரவூப் 8-1-31-0,
சஹீட் அஜ்மல் 15-1- 45-2,
யூனூஸ்கான் 06-1-21-0.

வவுனியா, யாழ்ப்பாணம் மாவட்ட உதவி ஆணையாளர்கள் கொழும்புக்கு அழைப்பு

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முக்கிய கலந்துரையாடலுக்கு வவுனியா, யாழ்ப்பாணம் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்களை தேர்தல் ஆணையாளர் கொழும்புக்கு அழைத்துள்ளார்.

எதிர்வரும் 17 ஆம் திகதி ராஜகிரியவில் உள்ள தேர்தல் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கு யாழ்., வவுனியா மாவட்ட உதவி ஆணையாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் தொடர்பான அறிவுறுத்தல்கள் இவர்களுக்கு வழங்கப்படும் என தெரியவருகின்றது. நேர்மையான முறையில் தேர்தலை நடத்த வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கிடையில் அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான பிரசார வேலைத் திட்டங்களை ஆரம்பித்துள்ளன. பல்வேறு வகையான சுவரொட்டிகள் நகரில் காட்சி தருகின்றன. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆனாலும் கட்சிகளிடையே ஆர்வம் காணப்படுகின்றது.

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கே நடைபெறும் முதலாவதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான தேர்தல் இதுவாகும். வவுனியா நகர சபைக்கு 135 வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர். ஆனால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களுடைய எண்ணிக்கை 11 ஆகும்.கட்சியினரிடையே ஆர்வம் காணப்பட்ட போதிலும் வாக்காளர் மத்தியில் சோர்வு தன்மை அவதானிக்கப்படுகின்றது.

பிரபாகரன் இடத்தைப் பிடிக்க யாருடனும் சண்டையிடவில்லை : வி. உருத்திரகுமாரன்

rudrakumaaran_v.jpgதமிழ் மக்கள் பிரச்சினைக்கு சுயநிர்ணய அடிப்படையில் தீர்வு காண்பதற்கே நாடு கடந்த “தமிழீழ அரசு – பிரபாகரன் விட்டுச் சென்ற கொள்கைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் மட்டும் தான ஈடுபட்டிருப்பதாக வழக்கறிஞர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.  நியூயோர்க்கைச் சேர்ந்த வழக்கறிஞரும் அரசியல் ஆலோசகருமான விசுவநாதன் உருத்திரகுமாரன் ஜுனியர் விகடனுக்கு அளித்துள்ள பேட்டியின் விபரம் வருமாறு:-

”நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு, புலம் பெயர்ந்த அனைவரின் உதவியும் அவசியம் தேவை. இந்தியாவின் உதவி மிகவும் அவசியம். இந்தியாவை நாங்கள் என்றுமே எதிரி நாடாக பாவித்ததில்லை. உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் தமிழர்கள்தான் இந்த இயக்கத்தின் தூண். ஆயுதம் எங்கள் குறிக்கோள் அல்ல.

இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழ்த் தலைவர்கள் அமிர்தலிங்கம், செல்வா போன்றோர் அறவழியில் போராடினார்கள். நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்கள். ஆனால், இலங்கை அரசு இதை நசுக்கியது. கயமைத்தனமாக அடியோடு அழிக்க முனைந்தது. வேறு வழியின்றி ஆயுதம் எடுத்தோம். அதன் பின்னரே வெளியுலகுக்கு தமிழினத்தின் துன்பங்கள் தெரியவந்தன. ‘போராட்ட வடிவங்கள் மாறினாலும், லட்சியம் ஒன்றுதான்!’ என்று சுதுமலையில் எங்கள் தலைவர் கூறினார்.

தமிழர்களின் தேசியப் பிரச்னைக்கு சுயநிர்ணய அடிப்படையில் ஒரு தீர்வு காண்பதற்கு இது அமைக்கப்பட்டது. பேச்சு வார்த்தைக்கு சமபல நிலை அவசியம். அரசுக்கு சமமாக இருந்தோம். நாடு கடந்த தமிழ் ஈழ அரசு, இப்போது அந்த இடைவெளியை நிரப்ப மிகவும் அவசியம். புறநிலை அரசுக்கும் [Government in excile] நாடு கடந்த அரசுக்கும் [Transnational Government] பல ஒற்றுமைகள் இருந்தாலும், சில வேறுபாடுகள் உள்ளன.

ஒரு நாட்டில் அரசு அமைக்க இயலாதபோதே புறநிலை அரசு பிறக்கும். தலாய்லாமா, பாலஸ்தீனர்கள், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் போன்றவை இந்த வகை. நாங்களோ, உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்களை ஒருங்கிணைக்க இதைக் கையில் எடுத்திருக்கிறோம். நாடு கடந்த தமிழ் ஈழ அரசு இன்னமும் அமைக்கவில்லை.

அதை அமைப்பதற்காகவே செயற்குழுவை ஏற்படுத்தியுள்ளோம். பலர் இந்தியாவில் இருந்து தொடர்புகொண்டு, ‘உலகத் தமிழர் வரலாற்றில் இது ஒரு புதிய சகாப்தமாயிற்றே. எங்களை ஏன் சேர்க்கவில்லை?’ எனக் கேட்கின்றனர்.  எங்கள் அறிக்கையை இராஜதந்திரிகள், தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பி, அவர்களின் கருத்துகளையும் கேட்டிருக்கிறோம். அடுத்தது, ஒவ்வொரு நாடுகளிலும் செயற்குழுவினை அமைக்கவிருக்கிறோம். கலந்துரையாடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளன. இந்தக் குழுக்களுக்குப் பயிற்சிப் பட்டறையும் நடத்தி வருகிறோம்.

தமிழ் ஈழப் பிரச்னையில், குறிப்பாக கடந்த நான்கு மாதங்களாக நடந்த சம்பவங்களில், இந்தியாவின் பங்கை பல கோணங்களில் ஆராய்ந்து வருகிறோம். எங்கள் திட்டம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்றுதான் கூறுகிறோம். இனி ஆயுதப் போராட்டம் இல்லை. இந்தியாவின் இறையாண்மையையோ அல்லது பூகோள நலன்களையோ எம்முடைய செயல்கள் பாதிக்காது என உறுதி அளிக்கிறோம்.

நாங்கள் திட்டமிடுவது, வெறும் வலைதளத்தில் மட்டுமே வாழும் அரசு அல்ல.தலைவருக்குப் பிறகான பதவிச் சண்டையும் அல்ல. எந்த ஒரு குழுவையோ அல்லது தனிநபரையோ இது முன்னிலைப்படுத்தாது. விரைவில் தேர்தலும் நடத்துவோம். ஜனநாயக முறைப்படி, அதில் யாரும் பங்கு பெறலாம். முகாம்களில் சீரழியும் மூன்று இலட்சம் ஈழ மக்களைக் காப்பாற்றுவதே எங்கள் நோக்கம். எங்கள் இலக்கு, தனி ஈழம். அதை இனி ஜனநாயக முறையில் இந்தியா, உலக நாடுகளின் உதவியுடன் பெறுவோம்.

”பிரபாகரன் இடத்துக்கு நான் வர முயற்சிக்கிறேன்  என்பது சரியல்ல. அவர் இடத்தை இட்டு நிரப்புவதற்கு யாருமில்லை. அதற்கான முயற்சியை நான் மட்டுமல்ல, யாருமே எடுக்க மாட்டார்கள். அவருடைய கொள்கைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சியில்தான் நாங்கள் இறங்கி இருக்கிறோம். ஈழ தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அதற்காகவும் உலக அளவில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது இவ்வாறு உருத்திரகுமாரன் கூறியுள்ளார்.

இலங்கை, இந்தியா, நியூஸிலாந்து முத்தரப்பு போட்டி விபரம்

srilanka-cri.jpgஇந்தியா,  நியூஸிலாந்து, இலங்கை அணிகள் பங்கு பெறும் முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கான போட்டிகள் நடைபெறும் தின அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 8 ஆம் திகதி தொடங்கும் இந்த கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 10 ஆம் திகதி இந்தியா தன் முதல் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது.

செப்டம்பர் 8 ஆம் திகதி இலங்கையும் நியூஸிலாந்தும் மோதுகின்றன. செப்டம்பர் 12 ஆம் திகதி இந்தியாவும் நியூஸிலாந்தும் மோதுகின்றன.

இதன் பிறகு இந்தப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களில் வரும் அணிகள் செப்டம்பர் 14 ஆம் திகதி இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன. இந்த 4 போட்டிகளும் பிரேமதாச விளையாட்டு மைதா னத்தில் நடைபெறும்.

சக்தி வாய்ந்த வலிநிவாரண மாத்திரைகளால் மைக்கல் ஜக்சன் மரணம் அடைந்தார்

maical-jak.jpgமைக்கல் ஜக்சனின் உடலில் டாக்டர்களால் பரிந்துரை செய்யப்பட்ட ஏராளமான வலி நிவாரண மாத்திரைகள் ஒரே சமயத்தில் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. எனவே ஒரே சமயத்தில் அவ்வளவு மாத்திரைகளை பரிந்துரை செய்தவர் யார் என்று பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

பாப் இசையால் உலகையே ஆட்டிப்படைத்த மைக்கல் ஜக்சனின் மரணத்தில் இன்னும் சந்தேகம் நீடித்து வருகிறது. அவருடைய உடல் இரண்டு முறை பிரதே பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக சந்தேகம் எழுந்ததால் அவருடைய வயிற்றுப் பகுதிகளும் தனியாக பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஏற்கனவே அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த சில தகவல்களை இங்கிலாந்து பத்திரிகை வெளியிட்டது. அதில் ‘மைக்கல் ஜக்சனின் உடல் முழுவதும் ஊசியால் குத்தப்பட்ட தழும்புகள் இருந்தன என்றும், உடல் பலவீனமான நிலையில் எலும்புகள் நொறுங்கும் படியாக இருந்தது’ என்றும் கூறப்பட்டது.

இந்த சூழ்நிலையில், வயிற்றுப் பகுதியில் இருந்த விஷம் குறித்த பரிசோதனை அறிக்கையின் (டாக்சிகோலோஜி) சில பகுதிகளை லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி சன்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

மைக்கல் ஜக்சன் உடலில் கலந்திருந்த மதுபான வகைகளின் அளவுகளை பார்த்தால், சாதாரண மனிதனையே கொன்றுவிடும் அளவுக்கு இருந்தது. எனினும் அதிக அளவு மதுபான பழகத்துக்கு நீண்டகாலமாக அவர் பழகி இருந்ததால் அவருக்கு பாதிப்பு ஏற்படவில்லை. அதே நேரத்தில் அதிக சக்தி வாய்ந்த மாத்திரைகளை ஒரே சமயத்தில் சாப்பிட்டதால் உயிரிழந்து இருக்கிறார்.

வலி நிவாரண மாத்திரைகளிலேயே மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் ‘டெமரொல்’ என்ற மாத்திரையும் ஹெரொயின் போதைப் பொருள் கலந்த ‘மெத்தடோன்’ என்ற மாத்திரையும் மைக்கல் ஜக்சன் உடலுக்குள் இருந்தன.

மேலும், அவரது இரத்தத்தை பரிசோதித்து பார்த்த போது மன அழுத்தத்தை போக்கக்கூடிய சக்தி வாய்ந்த மருந்தான ‘ஜெனாக்ஸ்’ இருந்தது.

இது தவிர அறுவை சிகிச்சை செய்யும் முன்பு நோயாளிகளை மயக்கமடைய செய்வதற்காக தரப்படும் ‘புரோபோபோல்’ என்ற மருந்து அவரது வயிற்றுப் பகுதியில் காணப்பட்டது. ‘இன்சோம்னியா’ என்ற நோய் இருந்ததால், அதை தூக்க மாத்திரையாக மைக்கல் ஜக்சன் பயன்படுத்தியதாக அவருடைய நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு வலி தெரியாமல் இருப்பதற்காக நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ‘டிலவ்டிட்’ என்ற மருந்தும் மைக்கல் ஜக்சன் வயிற்றில் இருந்தது. இறக்கும்போது ஒரே சமயத்தில், ‘டெமரால்’, ‘மெத்தடோன்’, ‘புரோபோபோல்’, இன்சோம்னியா’ என பல்வேறு மருந்துகளை மைக்கல் ஜக்சன் சாப்பிட்டு இருக்கிறார்.

எனவே ஒரு மனிதனுக்கு இதுபோன்று ஏராளமான சக்தி வாய்ந்த மருந்துகளை ஒரே நேரத்தில் சாப்பிட பரிந்துரை செய்து மருந்துச் சீட்டு எழுதிக் கொடுத்த டாக்டர் யார் என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் இருப்பதாக ‘தி சன்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்தப் பரிசோதனை அறிக்கை லாஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸாரிடம் அளிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து பொலிஸ் அதிகாரி வில்லியம் பிராட்டோன் கூறுகையில், “பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் எங்களுக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டுள்ளது. அதன்படி விசாரணை நடத்தி வருகிறோம். அதிக அளவிலான மாத்திரைகளை திட்டமிட்டு வழங்கப்பட்டதா? அல்லது தற்செயலாக அனைத்து மாத்திரைகளையும் மைக்கல் ஜக்சன் குடித்தாரா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

அணுசக்தி கருவிகள் வழங்கத் தடை; இந்தியாவுக்கு எதிராக ஜி-8 நாடுகள் தீர்மானம்

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அணுசக்தி உற்பத்திக்கான தொழிநுட்ப மற்றும் கருவிகளை வழங்கக் கூடாது என்று ஜி- 8 நாடுகள் மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு இருப்பதால் இந்திய அரசு திகைப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. அணு மின்சார உற்பத்திக்காக அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது. அந்த ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக அணு உற்பத்திக்கான மூலப் பொருட்களை வழங்கும் என்.எஸ்.ஜி. எனப்படும் 45 நாடுகள் கூட்டமைப்பின் அனுமதியும் பெறப்பட்டது.

அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் இந்தியா கையெழுத்திடாததால் அணு தொழில்நுட்பத்தை வழங்கக் கூடாது என்று அந்த கூட்டமைப்பில் உள்ள நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும், அமெரிக்காவின் தலையீடு காரணமாக அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தில் கையழுத்து போடாவிட்டாலும் கூட இந்தியாவுக்கு மட்டும் முழு விலக்கு அளிக்கப்பட்டது. மேலும், அணு சக்தியை அபாயகரமாக பயன்படுத்தாது என்று இந்தியாவுக்கு நற்சான்றும் வழங்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் இத்தாலியில் நடந்த ஜி-8 வளர்ந்த நாடுகள் மாநாட்டில் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது: அணு ஆயுத பரவலை தடுக்கும் விதமாக அணு மூலப் பொருள் (யுரேனியம்) செறிவூட்டல் மற்றும் மறுசுழற்சி தொடர்பான தொழிநுட்பங்களை பிற நாடுகளுக்கு வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டும். இது குறித்து என். எஸ். ஜி. விதிகளை வலுப்படுத்த வேண்டும். அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திடாத நாடுகளுக்கு தொழில்நுட்பம் மற்றும் கருவியை வழங்குவதில்லை என்ற ஒருமித்த முடிவை இந்த ஆண்டு இறுதிக்குள் என். எஸ். ஜி. எட்ட வேண்டும்.

அடுத்த ஆண்டில் இருந்து இதை அமுல்படுத்த நாங்கள் (ஜி-8) ஒப்புக்கொள்கிறோம். உலகளாவிய அளவில் இந்தத் தடையை அமுலுக்குக் கொண்டு வரும் வகையில் தனது பணிகளை விரைவாக என். எஸ். ஜி. முடுக்கி விட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. தீர்மானத்தில் ஜி-8 நாடுகள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட எட்டு நாடுகள் கையெழுத்திட்டு இருக்கின்றன. ஜி-8 மாநாடு முடிந் ததும், தீர்மானம் குறித்த அறிக்கை வெளியானது. அப் போது ஜி-8 மற்றும் ஜி-5 மாநாடுகளில் பங்கேற்பதற்காக சென்ற இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் அமுலுக்கு வந்துள்ள நிலையில் அணு ஆயுத பரவல் தடைச் சட்டத் தில் கையெழுத்திடாத இந்தியா போன்ற நாடுகளுக்கு யுரேனியா செறிவூட்டல் மற்றும் மறு சுழற்சி தொழில் நுட்பத்தையும், அணுசக்தி உற்பத்திக் கருவிகளையும் வழ ங்கக் கூடாது என்று தீர்மானத்தில் அமெரிக்காவே கையெ ழுத்திட்டு இருப்பதால் இந்திய அரசு அதிர்ச்சியடைந்துள்ளது.