03

03

ஓரினச்சேர்க்கை தவறில்லை; இந்தியாவில் பரபரப்பு தீர்ப்பு

ஓரினச் சேரக்கையாளர்கள் செக்ஸ் உறவு வைத்துக்கொள்வதில் எந்தவித சட்டவிரோதமும் இல்லை என்று டில்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் ஓரினச் சேர்க்கை சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓரினச் சேர்க்கையை தடைசெய்ய வழி வகுக்கும் ஐ.பி.சி 377வது பிரிவையும் டில்லி உயர் நீதிமன்றம் செல்லாது என்று கூறி விட்டது.

இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை நிதிபதிகள் அஜித் பிரகாஷ் முரளிதர் ஆகியோர் பிறப்பித்தனர். இது குறித்து நீதிபதிகள் தங்களது தீர்ப்பின் போது கூறுகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது விதிக்கு புறம்பாக உள்ளது இந்த 377 வது சட்டப் பிரிவு.

ஒவ்வொரு குடிமகளும் தனது விருப்பப்படி வாழ அரசியல் சட்டத்தின் 21வது பிரிவு வகை செய்கிறது. ஆனால் அதை தடுக்கும் வகையில் 377 வது சட்டப் பிரிவு உள்ளது. எனவே இது செல்லாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். ஐ. பி. சி. 377 இங்கிலாந்து ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டதாகும். இந்த சட்டப் பிரிவின்படி இயற்கைக்குப் புறம்பான செக்ஸ் உறவு கொள்வது கிரிமினல் குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தசட்டப் பிரிவை நீக்கக் கோரி சமீப காலமாக கோரிக்கைகள் வலுத்து வந்தன. சமீபத்தில் டெல்லி சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஓரினச் சேர்க்கையாளர்கள், அரவாணிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட பேரணிகளும் நடந்தன. இந்த சமயத்தில் இப்படி ஒரு தீர்ப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.