24

24

வேட்பாளர்களின் தராதரங்களை அறிந்தே மலையக மக்கள் வாக்களித்துள்ளனர் – இரா.தங்கவேல்

election_ballot_.jpgமலையக வாக்காளர்கள் கண்ணை மூடிக்கொண்டு கட்சிகளுக்கு வாக்களிப்பதைவிடுத்து ஒவ்வொரு வேட்பாளர்களையும் நன்றாக அறிந்தே வாக்களித்துள்ளார்கள் என்பதை ஒவ்வொரு தமிழ் வேட்பாளர்களும் பெற்ற வாக்குகளிலிருந்து தெளிவாகத் தெரிகின்றது. எவரது முகவரிக்காகவோ அல்லது எவரது முன்னணி கட்சிக்காகவோ அன்றி களத்தில் இறக்கப்பட்டுள்ள வேட்பாளர்களின் சுய உருவத்தை அவரவர் ஆற்றியிருக்கின்ற சேவைகளை கணக்கிட்டுப் பார்த்தே தமது தீர்ப்பை வழங்கியிருக்கின்றார்கள்.

மேற்கண்டவாறு இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் மத்திய மாகாண சபை முன்னை நாள் பிரதித் தலைவருமான இரா.தங்கவேல் இம்புல்பிட்டி தோட்ட கீழ்ப்பிரிவில் நடைபெற்ற தொழிற்சங்கக் கூட்டத்தில் உரையாற்றும்போது குறிப்பிட்டார். தொடர்ந்தும் குறிப்பிட்ட பொதுச்செயலாளர் தமதுரையில்;

சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல் முடிவையும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் மலையக மக்கள் வழங்கியிருக்கின்ற தீர்ப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மலையக மக்கள் எத்தகையோருக்கு தமது ஆதரவைத் தெரிவித்திருக்கின்றார்கள் என்பதையும் எந்தவித கவர்ச்சிக்கும் வெளிப்பிரசாரங்களுக்கும் எளிதில் ஏமாறுபவர்கள் மலையக மக்கள் அல்ல என்பதையும் உணர்த்தி உள்ளார்கள், வெறுமனே வெற்று வேட்டுகளுக்கும் தலைமைத்துவத்தின் பேரைச் சொல்லிக்கொண்டு அல்லது அவர்கள் மூட்டிய நெருப்பில் குளிர்காய நினைக்கும் கையாலாகாத பேர்வழிகளுக்கு துணைபோக மாட்டார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றார்கள்.

நடந்து முடிந்த மத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக எந்த தகுதியும் இல்லாது கட்சிவிட்டு கட்சி தாவி சீட்டு வாங்கியவர்களை மலையக மக்கள் நன்கு இனங்கண்டு தங்கள் தீர்ப்பை வழங்கியிருக்கின்றனர். தகுதி வாய்ந்த வேட்பாளர் இல்லையென்ற முடிவுக்கு வந்த பெருவாரியான வாக்காளர்கள் தாம் விரும்பும் கட்சியின் சின்னத்திற்கு மாத்திரம் வாக்களித்துவிட்டு வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகளைத் தவிர்த்திருப்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

எல்லாவற்றிற்கும் மேலாக பெருவாரியான மலையக மக்கள் வாக்களிப்பதையே தவிர்த்திருப்பதை பார்க்கின்றபோது அவர்களது ஆர்வமின்மையையும் வாக்குகளைப் பெற தகுதியற்றவர்களை மேடையேற்றிய கட்சிகளுக்கு ஒரு படிப்பினை புகட்டும் விதத்திலும் மக்கள் செயல்பட்டிருக்கின்றார்கள் என்பது புலனாகிறது. குறிப்பாக கண்டிமாவட்டத்தில் சுமார் 87 ஆயிரம் தமிழ்வாக்காளர்கள் இருந்த போதிலும் அதில் 40 வீதத்தினரே வாக்களித்துள்ளார்கள் என்பது வேதனைக்குரிய விடயம் மாத்திரமின்றி, எதிர்காலத்தில் இத்தகைய தவறுகளை தவிர்த்துக்கொள்ள அரசியல் கட்சிகளுக்கும் அவர்களது தலைமைத்துவத்திற்கும் விடுத்த எச்சரிக்கையாகவுமே கருத வேண்டியிருக்கிறது எனக் குறிப்பிட்டார்.

பிரான்ஸில் பொலிஸ் அதிகாரி படுகொலை! ஆறு தமிழர்கள் கைது!!! : த ஜெயபாலன்

French_Policeபெப்ரவரி 21ல் பரிஸின் புறநகர்ப் பகுதியான லாக்குறுனவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சென்சன்ரனிஸ் பகுதி பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்டு உள்ளார். அயூலின் டான்லேம் (33) என்ற பொலிஸ் அதிகாரியே இச்சம்பவத்தில் கொல்லப்பட்டதாக அடையாளம் காணப்பட்டு உள்ளது. இக்கொலைச் சம்பவம் தொடர்பாக ஒரு பெண் உட்பட ஆறு தமிழர்கள் கைது செய்யப்பட்டதாக பிரான்ஸில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று வெளியான மரண விசாரணைகளின்படி துப்பாக்கியில் இருந்து 14 தோட்டாக்கள் சுடப்பட்டு இருந்ததாகவும் படுகொலை செய்யப்பட்ட அதிகாரியின் தலைப் பகுதியில் இரு குண்டுகள் பாய்ந்து உள்ளதாகவும் அவற்றில் ஒன்றே உயிரிழப்பிற்குக் காரணமாக அமைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொல்லப்பட்டவர் மது போதையில் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவரின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும் மரண விசாரணையில் தெரியவந்து உள்ளது.

லூ பரிசியன் உட்பட பிரானிஸின் தேசியப் பத்திரிகைகளிலும் இச்செய்தி வெளியாகி உள்ளது.

இச்சம்பவம் பற்றி தேசம்நெற்க்குத் தெரியவருவதாவது, பரிஸின் புறநகர்ப் பகுதியான லாக்குறுன பாரிஸின் லா சப்பலுக்கு ஒப்பானது. தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதி. அங்குள்ள கத்ருட் பகுதிக்கு அருகாமையில் மயூரிஸ் பிரோ வீதியில் சிவில் உடையில் தனது துப்பாக்கியுடன் பொலிஸ் அதகாரி அயூலீன் டான்லேம் வந்தள்ளார். அப்போது அங்கிருந்த சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாகியது என்றும் முடிவில் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியைப் பறித்தே அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் தெரியவருகிறது.

சம்பவ இடத்தை சுற்றி வளைத்த பொலிஸார் மறுநாள் காலையே ஒரு பெண் உட்பட ஆறு இலங்கைத் தமிழர்களைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண் கைது செய்யப்பட்டவர் ஒருவரின் தாயார் என உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

பரிஸில் உள்ள இலங்கைத் தூதரகத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டு உள்ள பிபிசி சந்தேசயா (பிபிசி சிங்கள மொழிச் சேவை) இப்படுகொலை தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஆறுபேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கின்றது. சில புலி எதிர்ப்பு இணையங்களும் இச்சம்பவத்தை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி உள்ளன.

தேசம்நெற்க்கு கிடைக்கும் செய்திகளின்படி இச்சம்பவம் குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரிக்கும் அப்பகுதியில் இருக்கும் சில தமிழர்களுக்கும் இடையேயான விவகாரம் எனத் தெரியவருகிறது. இச்சம்பவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லது அவ்வமைப்பின் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டது அல்ல என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்டவர்கள் சட்ட விரோதமாக விசா பெறமுயற்சித்து இருந்ததாகவும் அவர்களுக்கு அப்பகுதியில் இருந்த பாகிஸ்தானியர்கள் ஊடாக அயூலின் டான்லேம் இன் தொடர்பு கிட்டியதாகவும் லக்குறுனவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மற்றுமொரு செய்தி இவர்களுக்கிடையே பணம் பரிமாறப்பட்டதாகவும் தெரிவிக்கின்றது. இச்செய்திகளை உறுதிப்படுத்த முடியவில்லை.

இதற்கிடையே சென்சென்ரனிஸ் பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தர் மோசடிக் குற்றங்கள் தொடர்பாக தண்டனை பெற்று இவ்வாரம் விடுதலையாகி உள்ளதாக அப்பகுதி உள்ளுர்ப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட அயூலின் டான்லேம் மீதும் அவ்வாறான ஒரு சம்பவம் தொடர்பான பதிவு உள்ளது. ஆயினும் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்ட்டிருக்கவில்லை. தொடர்ந்தும் பொலிஸ் அதிகாரியாகவே பணியாற்றி வந்தார்.

சம்பவத்தின் போது விடுப்பில் இருந்த அயூலின் டான்லேம் சிவில் உடையில் தனது துப்பாக்கியுடன் சென்றிருந்தமை விசாரணைகளின் போது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிந்திய செய்திகளின்படி கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தான் அயூலின் டான்லேம் இன் துப்பாக்கியைப் பறித்து வானத்தை நோக்கியும் தரையை நோக்கியும் வேட்டுக்களைத் தீர்த்ததாகத் தெரிவித்து உள்ளார். அயூலின் டான்லேம் மீது பாய்ந்த இரு குண்டுகளையும் யார் சுட்டது என்பது இன்னும் அறியப்படவில்லை. பொலிஸ் விசாரணைகள் தொடர்கிறது.

மேற்கு நாடொன்றில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் கொலை தொடர்பில் தமிழர்கள் சம்பந்தப்பட்டு இருப்பது இதுவே முதற் தடவையாகும்.

._._._._._.

பொலிஸ் அதிகாரி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக லு பரிசியன் பத்திரிகையில் வெளியான செய்தியின் தமிழ் வடிவம் கீழே பிரசுரிக்கப்பட்டு உள்ளது. – தமிழில் சபா நாவலன் (நன்றி : இனியொரு)

பிரான்சில் பொலிஸ் உத்தியோகத்தர் கொலை : இலங்கையர்கள் கைது

25 இற்கும் 30 இற்கும் இடைப்பட்ட வயதை உடைய ஒரு பெண் உள்பட 5 பிரஞ்சு இலங்கையர்கள் நேற்றுக்காலை கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரிலியன் டான்செல்ம் என்ற பரிஸ் 34 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பரிஸ் புற நகர்ப் பகுதியான லா குருனேவ் என்ற இடத்தில் கொலை செய்யப்படது தொடர்பான இந்த இலங்கையர்கள் மீதான வழக்கு இன்று காலை விசாரணைக்கு கொண்டுவரப்பட்டு சந்தேக நபர்களை நாளைகாலை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இந்தப் பொலீஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியே கொலைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியானது கொலைசெய்யப்பட்ட அதே கட்டிடத் தொடரிலுள்ள குப்பைதொட்டியொன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் பரிசோதனைகளின் அடிப்படையில் குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையிலேயே இவர் மரணமடைந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொலைசெய்யப்பட்ட உத்தியோகத்தர் சம்பவம் நடைபெற்ற நேரம் கடைமையில் ஈடுபட்டிருக்கவில்லை. தேசிய போலிஸ் இணையம் என்ற பொலிஸ் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த Fபாபியன் மொடிகொம் என்பவர் கருத்துத் தெரிவிக்கையில், கொலை செய்யப்பட்ட ஒரிலியன் டான்செல்ம் சண்டையொன்றில் சிக்குண்டிருக்கலாம் எனவும் ஆனால் அதற்கான காரணங்கள் தெளிவற்றதாக உள்ளது என்பதையும் தெரிவித்துள்ளார்.

கொலைசெய்யப்பட்ட உத்தியோகத்தர் முன்னதாக ஊழல் குற்றச்சாட்டொன்றின் சாட்சியாக பொலிஸ் சேவைப்பிரிவினால் விசாரணைக்குட்படுத்தப்பட்ட போதும், பின்னர் சந்தேகம் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டார். இதே இடத்தில் கடமையாற்றும் பிறிதொரு பொலீஸ் உத்தியோகத்தரும் ஊழல் குற்றச்சாட்டொன்றின் பெயரில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்ட போதும், இன்றைய விசாரணைகளின் படி, இவ்விரு சம்பவங்களுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவரவில்லை எனப் பொலீசார் தெரிவிக்கின்றனர்.

பொபினி பொலீஸ் பிரிவின் பிந்திய தகவலின் அடிப்படையில், பழிவாங்கல், குடிபோதையிலான மோதல், பணத்தகராறு போன்ற எல்லா சாத்தியக்கூறுகளும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.