19

19

சிதம்பரத்தின் கருத்து புலிகள் மீது பழியைப்போட்டு திசைதிருப்பும் முயற்சி -திருமாவளவன்

thirumavalavan-1601.jpgவிடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டால் தான் இலங்கையில் போரை நிறுத்த முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியிருப்பது புலிகள் மீது பழிபோட்டு திசை திருப்பும் முயற்சி என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு;

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் நிலைகுறித்து விளக்குவதற்காக நேற்று முன்தினம் மயிலாப்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், “இலங்கையில் நடக்கும் போரை நிறுத்த இந்திய அரசால் முடியும்; ஆனால், விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போடுவதாக உறுதியளிக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.

ஒரு முறைக்கு பல முறை போர் நிறுத்தத்திற்கு தயார் என்றும், இந்தியாவுடன் நட்புறவையே விரும்புகிறோம் என்றும் விடுதலைப் புலிகள் வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.

இந்த உண்மையை மறைத்துவிட்டு போர் நிறுத்தம் செய்வதற்கு இலங்கை அரசு தயார் என்பதுபோலவும், புலிகள் தான் அதற்குத் தயாராக இல்லை என்பது போலவும் கருத்தை பரப்பி தமிழர்களைக் குழப்பும் முயற்சியில் சிதம்பரம் ஈடுபட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு எத்தகைய தீர்வுத் திட்டத்தையும் முன்வைக்காமல், தீர்வு காண்பதற்குரிய முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் புலிகள் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் என்பது கொழும்பின் குரலையே எதிரொலிப்பதாகும்.

இதன் மூலம் உண்மையான அரசியல் பின்னணிகளை மக்களுக்கு விளக்காமல் புலிகள் மீது பழிபோட்டு திசைதிருப்புவதில் சிதம்பரம் முனைப்பாக இருக்கிறார் என்பது தெரியவருகிறது.

மனிதநேய அடிப்படையில் இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை சிதம்பரத்திற்கோ, இந்திய அரசுக்கோ இருப்பது உண்மையானால் ஜனநாயக அடிப்படையிலான ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைத்து அதற்கான பேச்சுவார்த்தைக்கு முன் ஏற்பாடுகளை உடனடியாக செய்யவேண்டும்.

அவ்வாறு இல்லாமல் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டால் தான் போர் நிறுத்தம் செய்யப்படும் என்று சிதம்பரம் போன்றவர்கள் கூறுவது இனவெறியர்களின் கூற்றாகவே அமையும்.

ஆகவே உண்மைகளை திசை திருப்பி பிரச்சினையை மென்மேலும் நீடிக்காமல் இலங்கைத் தமிழர்களின் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு சுமுகமான அரசியல் தீர்வுக்குரிய வரைவுத் திட்டத்தை இந்திய அரசு முன்வைக்க வேண்டும்.

ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

இந்த கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 1,2 ஆகிய இரு நாட்களில் விடுதலைச் சிறுத்தைகளின் முன்னணி பொறுப்பாளர்கள் தலைமையில் “ஈழம் காப்போம்’ என்ற முழக்கத்துடன் ஊர்ஊராய் நடைப்பயணம் நடைபெறும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

மக்களை வெளியேற அனுமதிக்க விடுதலைப்புலிகளுக்கு அமெரிக்க அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் -இலங்கைத் தூதுவர் வேண்டுகோள்

srilanka_displaced.jpgவன்னியில் மோதல்கள் நடைபெறும் பகுதிகளிலிருந்து அங்குள்ள மக்கள் வெளியேறுவதற்கு விடுதலைப்புலிகள் அனுமதிப்பதற்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமென இலங்கை அரசு அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வடக்கே மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் அங்கிருந்து மக்கள் வெளியேறுவதற்கு விடுதலைப்புலிகள் தடுத்து வருவதாக ஐ.நா. அறிவித்து ஒருநாள் கடந்த நிலையில் அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜாலிய விக்ரம சூரிய இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அங்கு தொடர்ந்து இடம்பெற்றுவரும் மோதல்களால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு எதிர்பார்க்கின்றனர். இந்தநிலையில் அங்கிருந்து அம்மக்கள் வெளியேற முடியாதவாறு விடுதலைப்புலிகள் தடுத்து வருகின்றனர். இந்த மக்கள் வெளியேறுவதற்கான அழுத்தத்தை குறிப்பாக அமெரிக்கா கொடுக்கவேண்டுமென இலங்கைக்கான தூதுவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த மனோநிலையை மக்களிடம் வலுப்படுத்தி தற்காலிக வெற்றியையே அரசு பெற்றுள்ளது -காமினி ஜயவிக்ரம பெரேரா எம்.பி.

election_ballot_.jpgயுத்த மனநிலையை முழு நாட்டிலும் ஏற்படுத்தவோ, மக்களை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து அன்பளிப்புப் பொருட்களை வழங்கி விருந்தளித்து மக்களை ஏமாற்றும் வாய்ப்பு ஜனாதிபதிக்கு இனிக்கிடைக்கப்போவதில்லை என ஐக்கிய தேசியக்கட்சியின் நிறைவேற்றுக் குழுத் தலைவர் காமினி ஜயவிக்ரம பெரேரா திங்கட்கிழமை குருநாகலில் தெரிவித்தார்.

வடமேல்மாகாண சபையின் தேர்தல் முடிவுகள் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது;

யுத்தத்தின் மூலம் பெறும் வெற்றிகளைக்காட்டியவாறு எப்போதும் தேர்தல்களில் வெற்றி கொள்ள முடியாது. நடந்து முடிந்துள்ள மத்திய மற்றும் வடமேல் மாகாணசபைத் தேர்தல்களில் அரசாங்கம் தற்காலிக வெற்றியொன்றையே பெற்றிருக்கின்றதேயொழிய வேறு குறிப்பிடத்தக்கவை எதுவும் இல்லை.

அரசாங்கத்தின் தற்காலிக வெற்றி குறித்து நாம் அச்சம் கொள்ளவோ அதைரியம் கொள்ளவோ தேவையில்லை. எதிர்வரும் தேர்தல்களில் நாம் சிறந்த வியூகங்களை வகுத்து எமது கட்சி ஆதரவாளர்களுடன் இணைந்து வெற்றி பெறுவோம் கட்சியை மேலும் பலப்படுத்துவோம்.

மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கமும் ஜனாதிபதியும் அனைத்து அரசவளங்களையும் பயன்படுத்தி அரச ஊடகங்களின் மூலம் மக்களிடையே யுத்த மனநிலையை வலுப்படுத்திக் காட்டித் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளனர்.

நடந்து முடிந்த தேர்தலில் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்ட போதிலும் அவ்விருவரும் மத்திய மாகாணத்தில் மிகக் குறைந்தளவு எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்றுள்ளனர்

வடமேல்மாகாண சபைத் தேர்தலில் பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர் தமது வாக்குகளைப் பயன்படுத்தத் தவறியமையாலேயே ஐ.ம சு. முன்னணி அங்கு அதிக ஆசனங்களைப் பெறமுடிந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.