யுத்த மனநிலையை முழு நாட்டிலும் ஏற்படுத்தவோ, மக்களை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து அன்பளிப்புப் பொருட்களை வழங்கி விருந்தளித்து மக்களை ஏமாற்றும் வாய்ப்பு ஜனாதிபதிக்கு இனிக்கிடைக்கப்போவதில்லை என ஐக்கிய தேசியக்கட்சியின் நிறைவேற்றுக் குழுத் தலைவர் காமினி ஜயவிக்ரம பெரேரா திங்கட்கிழமை குருநாகலில் தெரிவித்தார்.
வடமேல்மாகாண சபையின் தேர்தல் முடிவுகள் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது;
யுத்தத்தின் மூலம் பெறும் வெற்றிகளைக்காட்டியவாறு எப்போதும் தேர்தல்களில் வெற்றி கொள்ள முடியாது. நடந்து முடிந்துள்ள மத்திய மற்றும் வடமேல் மாகாணசபைத் தேர்தல்களில் அரசாங்கம் தற்காலிக வெற்றியொன்றையே பெற்றிருக்கின்றதேயொழிய வேறு குறிப்பிடத்தக்கவை எதுவும் இல்லை.
அரசாங்கத்தின் தற்காலிக வெற்றி குறித்து நாம் அச்சம் கொள்ளவோ அதைரியம் கொள்ளவோ தேவையில்லை. எதிர்வரும் தேர்தல்களில் நாம் சிறந்த வியூகங்களை வகுத்து எமது கட்சி ஆதரவாளர்களுடன் இணைந்து வெற்றி பெறுவோம் கட்சியை மேலும் பலப்படுத்துவோம்.
மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கமும் ஜனாதிபதியும் அனைத்து அரசவளங்களையும் பயன்படுத்தி அரச ஊடகங்களின் மூலம் மக்களிடையே யுத்த மனநிலையை வலுப்படுத்திக் காட்டித் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளனர்.
நடந்து முடிந்த தேர்தலில் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்ட போதிலும் அவ்விருவரும் மத்திய மாகாணத்தில் மிகக் குறைந்தளவு எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்றுள்ளனர்
வடமேல்மாகாண சபைத் தேர்தலில் பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர் தமது வாக்குகளைப் பயன்படுத்தத் தவறியமையாலேயே ஐ.ம சு. முன்னணி அங்கு அதிக ஆசனங்களைப் பெறமுடிந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.