08

08

அமைச்சரவை நியமனத்தில் தவறு: ஒப்புக்கொண்டார் பராக் ஒபாமா

obama-2001.jpgஅமைச் சர்கள் நியமனத்தில் தவறு நடந்துவிட்டது உண்மையே. இனி இதுபோல் நடக்காது என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்காவில் ஜனாதிபதி பராக் ஒபாமா தலைமையிலான அரசு பொறுப்பேற்று இரண்டு வாரமாகிறது.

இந்நிலையில் அமெரிக்க சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட டாம் டேசஸ் மற்றும் வெள்ளை மாளிகை தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட நான்சி சில்லிபெர், தங்களின் வரிகளை செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் பதவி விலகினர். இந்த விஷயத்தில் தான் தவறு செய்துவிட்டதை ஜனாதிபதி பராக் ஒபாமா ஒப்புக் கொண்டுள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “டாம் டேசஸ் மற்றும் நான்சி சில்லிபெர் நியமனத்தில் மற்றவர்களின் பேச்சைக் கேட்டு செயல்பட்டு விட்டேன். செய்த தவறுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இது போன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வேன். சாதாரண மக்களுக்கு ஒரு விதி, பிரபலமானவர்களுக்கு ஒரு விதி என்ற இரு விதமான விதிமுறைகளை எனது நிர்வாகம் கடைபிடிப்பது போன்ற தவறான செய்தி மக்களை சென்றடைய நான் அனுமதிக்க மாட்டேன்” என்றார்.

தேர்தல் வன்முறைகள் குறித்து பொய் முறைப்பாடு தெரிவித்தால் கடும் நடவடிக்கை

vote.jpgதேர்தல் வன்முறைகள் தொடர்பாக பொய்யான முறைப்பாடுகளை தெரிவிக்கும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் செயலகம் பொலிஸாரை அறிவுறுத்தியுள்ளது. மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் நடைபெறும் தேர்தலை முன்னிட்டு தேர்தல் வன்முறை தொடர்பாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகளில் சில பொய்யானவை என தெரிய வந்துள்ளதையடுத்து தேர்தல் செயலகம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

இதேசமயம், சில கட்சிகளும் அதன் ஆதரவாளர்களும் விசேட சலுகைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் போலி முறைப்பாடுகளை பொலிஸ் நிலையங்களில் தெரிவித்து வருவதாக பொலிஸ் தேர்தல் செயலகத்தைச் சேர்ந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் நவரட்ண தெரிவித்தார். சிலர் அற்பமான விடயங்களை பெரிதுபடுத்த முயல்கின்றனர். சில வேட்பாளர்கள் தமக்கு எதிரான கட்சிகள் தொடர்பாக பிரச்சினையான சூழலை தோற்றுவிக்க முயல்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

சில பொலிஸ் நிலையங்களில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடுகளை விசாரணை செய்த சமயம், இந்த முறைப்பாடுகள் பொய்யானவை என்பது தெரியவந்துள்ளதை அடுத்து அது பற்றி விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார். அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள், ஆதரவாளர்களால் சமர்ப்பிக்கப்படும் முறைப்பாடுகள் பொய்யானவை என்பது இனங்காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.