January

January

உரிமைகளைப் பாதுகாக்க நாளை தலைநகரில் எதிரணி ஆர்ப்பாட்டம்

ranil-2912.jpgயுத்தத்தையும் இராணுவ வெற்றியையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு அரசாங்கம் அரசியல் நாடகமாடி வருவதாகவும் நாட்டு மக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாகவும் கடும் விசனத்தை வெளிப்படுத்தியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் இறைமை, ஜனநாயகம், மக்களின் உரிமைகள் போன்றவற்றை பாதுகாக்கும் பொருட்டு நாளை புதன்கிழமை தலைநகரில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தவிருப்பதாகவும் அறிவித்தார். “பொறுத்தது போதும்’ எனும் தொனிப்பொருளில் நாளைய தினம் ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெறவிருக்கும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளவிருப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட பல்வேறு எதிரணிகள் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் விஷேட செய்தியாளர் மாநாடு நேற்று திங்கட்கிழமை எதிர்க்கட்சித் தலைவரின் கேம்பிரிட்ஜ் ரெரஸ் அலுவலகத்தில் நடைபெற்றபோதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்க மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

நாட்டில் ஜனநாயகமும் இறைமையும் பாதுகாக்கப்படாமல் எவ்வளவு காலத்துக்கு யுத்தம் செய்தாலும் மக்களுக்கு நல்ல தீர்வெதுவும் கிட்டப் போவதில்லை. யுத்தத்தில் கிளிநொச்சி படையினர் வசம் வீழ்ந்தது உண்மைதான். படைவீரர்களின் அந்தத் திறமையை நாமும் சேர்ந்து பாராட்டுகின்றோம். கௌரவிக்கின்றோம். இந்த யுத்த வெற்றி இராணுவத்துக்கும் நாட்டு மக்களுக்குமே உரியதாகும். ஆனால், ராஜபக்ஷ அரசாங்கம் யுத்த வெற்றியை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அரசியல் நாடகமாடிக் கொண்டிருக்கின்றார். ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய அதேசமயம் அரசியல் யாப்பையும் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு அரசுக்கு இருக்கின்றது. அரசு யாப்புக்கு முரணாகச் செயற்பட முடியாது. நினைத்தபடி யாப்பை மாற்றவும் முடியாது.

ஜனாதிபதியும் அவரது அரசும் அரசியல் யாப்பையும் சட்டத்தையும் மதித்துச் செயற்படத் தவறியுள்ளது. தன்னிச்சையான போக்கில் செயற்பட்டு வருகின்றது. நாட்டு மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர் கொண்டுள்ளனர். யுத்தத்தில் முனைப்புக்காட்டும் அரசு நாட்டு மக்களை பாதுகாக்கத் தவறிவிட்டது. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் நாம் மேற்கொண்ட போர் நிறுத்த உடன் படிக்கைக்கு எவரும் தவறான அர்த்தம் கற்பிக்க முடியாது. அன்றைய போர் நிறுத்தத்தின் மூலம் பல்வேறு நன்மைகளை அடைய முடிந்தது. கிழக்கை மீட்டெடுக்க முடிந்தது. விடுதலைப் புலிகள் அக்கால கட்டத்தில் பலமடைந்ததாகக் கூறுவதும் தவறானதே. இக்கால கட்டத்தில் எந்தவொரு நாடும் புலிகளுக்கு ஆயுதம் வழங்கவில்லை. அதற்கு நாம் இடமளிக்கவுமில்லை. அன்று போர் நிறுத்த உடன்படிக்கையை ஆதரித்தவர்களில் இன்றைய இராணுவத்தளபதியும் ஒருவர் என்பதை பகிரங்கமாகத் தெரிவிக்கின்றேன்.

அன்று நான் மக்களிடம் போர் நிறுத்தம் செய்து சமாதான முயற்சிகளை முன்னெடுக்கவே மக்களிடம் ஆணைகேட்டேன். அதன் பிரகாரமே போர்நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தேன். இடைநடுவில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு எமது முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. அதன் பின்னர் நடந்தவற்றுக்கு ஆட்சியிலிருக்கும் அரசுதான் பொறுப்புக்கூற வேண்டும். யுத்த முனையில் படைவீரர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்படுவதாக தகவல்கள் கிட்டியுள்ளன. படைத்தரப்பிலிருந்து நிறையத் தகவல்களைத் திரட்டியுள்ளேன். காயமடையும் படைவீரர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகவே காணப்படுகின்றன. அவர்களை போர்களத்திலிருந்து கொண்டுவர ஒரு அம்புலன்ஸ் கூட வழங்கப்படவில்லை. பஸ்களிலும், டிராக்டர் வண்டிகளிலுமே கொண்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளன. அதற்குரிய ஆதாரம் கூட என்னிடம் இருக்கின்றது. (பஸ்ஸிலும் டிராக்டரிலும் காயமடைந்த படைவீரர்களை ஏற்றப்படும் படங்களை ரணில் ஊடகவியலாளர்களிடம் காண்பித்தார்) இவற்றைச் சுட்டிக்காட்டியதால்தான் இராணுவத்தளபதி ஆத்திரமடைந்துள்ளார்.

போர் மாயையில் மூழ்கி பொருளாதாரச் சீரழிவை மூடி மறைப்பதில் அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றது. இதற்கெதிராகவே நாளை புதன்கிழமை பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். மக்களையும் மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதே இந்த ஆர்ப்பாட்டப் பேரணியின் பிரதான நோக்கமாகும். தலைநகர் கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இன, மத, மொழி, கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவிருக்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் இணைந்து அரசுக்கு அழுத்தத்தைப் பிரயோகிக்க முன்வருமாறு அழைப்பு விடுக்கின்றேன் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணி: 12 எம்.பிக்களும் இன்று ஆளும் தரப்பில் அமர்வு

parliamnet-1511.jpg
அரசாங்கத்தில் இணைந்து கொண்ட தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேரும் இன்று (6) ஆளும் தரப்பு ஆசனங்களில் அமர உள்ளதாக கட்சி செயலாளர் நந்தன குணதிலக தெரிவித்தார். தேசிய சுதந்திர முன்னணி அண்மையில் அரசாங்கத்துடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டு அரசாங்கத்துடன் இணைந்து கொண்டது.

இதன்படி தமது கட்சி எம்.பிக்கள் அரச தரப்பில் அமர உள்ளதாக அவர் கூறினார். இதேவேளை தே.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேரையும் ஆளும் தரப்பில் அமர வைப்பதற்கு போதுமான ஆசனங்கள் கிடையாது எனவும் சிலரை மட்டுமே ஆளும் தரப்பில் அமரவைக்க முடியும் எனவும் உதவி பாராளுமன்ற செயலாளர் நாயகம் நைல் இத்தவெல கூறினார். ஆளும் தரப்பில் 116 ஆசனங்களே உள்ளதெனவும் சிரேஷ்ட அடிப்படையில் உள்ளவர்கள் ஆளும் தரப்பில் உட்கார வைக்கப்படுவர் எனவும் கூறிய அவர் கூறினார்.

பொங்கல் பரிசாக யாழ். மாவட்டத்துக்கு 24 மணிநேர மின் விநியோகம்

power1.jpgயாழ். மாவட்டத்துக்கு பொங்கல் பரிசாக 24 மணித்தியால மின்சார விநியோகத்தை மின் சக்தி வள அமைச்சு வழங்கவுள்ளது. தற்போது சீன நிறுவனத்தினால் சுன்னாகத்தில் அமைக்கப்பட்டுள்ள “நோத்பவர்’ மின் உற்பத்தி நிலையம் தனது செயல்பாட்டை பூரணப்படுத்தியிருப்பதால் அடுத்த இருவாரங்களுக்குள் உற்பத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்நிறுவனம் தினமும் 35 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கும் திறன் கொண்டுள்ளதால், குடாநாடு முழுவதும் நாள் முழுவதும் தேவையான மின்சாரத்தை வழங்க முடியுமென யாழ். மாவட்ட மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது குடாநாட்டுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கும் பிரிட்டிஷ் நிறுவனத்தின் ஒப்பந்த காலம் கடந்த வருடத்துடன் முடிவடைவதால், புதிய சீன நிறுவனமே மின் உற்பத்தியை தொடரமுடியும். இதேவேளை வடபகுதிக்கு லக்ஸபான மின்சார பாதையை விஸ்தரிப்பதற்கு ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக அரச கட்டுப்பாட்டுப் பகுதியாகவுள்ள மாங்குளம் வரையான விஸ்தரிப்பு வேலைகள் அடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ளன.

பஸ் கட்டணங்கள் இன்று முதல் குறைப்பு

திட்ட மிட்டபடி சகல பஸ் கட்டணங்களும் இன்று முதல் (6) குறைக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக் குழு அறிவித்துள்ளது.  பஸ் கட்டண அதிகரிப்பை இடை நிறுத்துமாறு சில பஸ் உரிமையாளர் சங்கங்கள் கோரியுள்ள போதும் திட்டமிட்டபடி கட்டண குறைப்பு அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழுத் தலைவர் அமல் குமாரகே தெரிவித்தார்.

டீசல் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதன் பிரகாரம் 4.3 வீதத்தினால் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படுவதோடு இதனுடன் இணைந்ததாக மேல் மாகாணத்தில் உள்ள 780 மார்க்கங்களில் நிலவும் பஸ் கட்டண முரண்பாடும் சீர்செய்யப்படுவதாக ஆணைக்குழு கூறியது. இதன் பிரகாரம், 231 மார்க்கங்களில் பஸ் கட்டணம் ஒரு ரூபா, முதல் 22 ரூபா வரை குறைக்கப்பட உள்ளதோடு 237 மார்க்கங்களில் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளன. பஸ் கட்டணங்கள் குறைக்காத பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கட்டணம் குறைக்காத பஸ்கள் தொடர்பாக முறையிடுமாறும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புதிய கட்டணக் குறைப்பின்படி ஆரம்பக் கட்டணத்திலும் ஒன்பது ரூபா கட்டணத்திலும் மாற்றம் ஏற்படவில்லை. 12 ரூபா முதல் 33 ரூபா வரையான கட்டண தொகைகள் ஒரு ரூபாவினாலும் 35 ருபா முதல் 59 ரூபா வரையான கட்டணங்கள் 2 ரூபாவினாலும் 61 முதல் 96 ரூபாவரையான கட்டணங்கள் 3 ரூபாவினாலும் 98 ரூபா முதல் 118 ரூபா வரையான கட்டணங்கள் 4 ரூபாவினாலும் 120 ரூபா முதல் 142 ரூபா வரையான கட்டணங்கள் 5 ரூபாவினாலும் குறைக்கப்படுகின்றன. அரைச் சொகுசு, சொகுசு பஸ் கட்டணங்களும் இன்று முதல் குறைக்கப்படுகின்றன. பஸ் கட்டணங்கள் கடந்த டிசம்பர் மாதத்திலும் குறைக்கப்பட்டது தெரிந்ததே.

கிளிநொச்சி வீழ்ந்ததால் புலிகள் ஊடுருவாமல் தடுக்க நடவடிக்கை- தமிழக கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு

tamils-conference.jpgசென்னையில் நடைபெறவுள்ள உலகத் தமிழர் வர்த்தக மாநாட்டுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதாலும் இலங்கையில் கிளிநொச்சி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால் விடுதலைப் புலிகள் ஊடுருவி வருவதைத் தடுக்கவும் தமிழக கடல் பகுதியில் தீவிர ரோந்துப் பணியும் கண்காணிப்பு பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. சென்னையில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 7 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் மாநாட்டில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். இந்த மாநாட்டில் வெளிநாடுகளில் வாழும் இந்திய தொழில் அதிபர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த மாநாட்டில் தாக்குதல் நடத்தப்போவதாக சவூதி அரேபியாவில் இருந்து ஈமெயில் மூலம் தீவிரவாதிகள் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர். எங்கள் அடுத்த தாக்குதல் இந்த மாநாடு தான் என்று மிரட்டல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மும்பையில் தாக்குதல் நடத்திய “டெக்கான் முஜாகிதீன்’ தீவிரவாத இயக்கம் இந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பியுள்ளது. மிரட்டல் கடிதம் வந்தது பற்றி சென்னை சைபர் கிரைம் பொலிஸார் விசாரித்து வருகிறார்கள். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதால் தொழில் மாநாட்டுக்கு வரலாறு காணாத வகையில் 5 அடுக்கு பாதுகாப்புப்போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் இடத்தில் 2 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்படுகிறார்கள். மாநாட்டில் கலந்துகொள்ள வரும் பிரதமரும் ஜனாதிபதியும் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஓய்வு எடுக்கவுள்ளனர்.

எனவே, ஆளுநர் மாளிகைக்கும் வழக்கத்தைவிட கூடுதல் பாதுகாப்புப்போட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இப்போது இருந்தே சென்னை புறநகர் பகுதிகளில் பொலிஸார் தீவிர வாகன சோதனை நடத்துகிறார்கள். மும்பையில் தீவிரவாதிகள் கடல் வழியாக வந்து தாக்குதல் நடத்தியதால் தமிழக கடலோரப் பகுதியும் தீவிர கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால் விடுதலைப் புலிகள் தமிழகத்திற்குள் கடல் வழியாக நுழையாமல் தடுக்கத் தமிழக கடலோரப் பகுதியில் தீவிர ரோந்து பணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மேல் மாகாண பொலிஸ் கணக்கெடுப்பு: 1657 பேர் புதிதாக பதிவு: போதிய ஆவணங்கள் இல்லாத 106பேர் கைது

colo-reg.jpgமேல் மாகாணத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பொலிஸ் கணக்கெடுப்புகளின் போது புதிதாக 1657 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.  இந்த கணக்கெடுப்பின் போது தனது வதிவை உறுதிப்படுத்த போதிய ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாமல் போன சிங்களம், தமிழ், முஸ்லிம் மூவினங்களைச் சேர்ந்த 106 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

2003ம் ஆண்டிற்கு பின்னர் வடக்கு, கிழக்கு பகுதிகளிலிருந்து மேல் மாகாணத்தில் தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் வதிபவர்கள் தொடர்பான கணக்கெடுப்பு நேற்று முன்தினம் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை நடைபெற்றது. கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலுள்ள பொலிஸ் பிரிவு களில் நடத்தப்பட்ட இந்த பொலிஸ் கணக் கெடுப்பின் போது 29,244 பேர் மொத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.

29,244 பேரில் 15,975 ஆண்களும், 13,269 பெண்களும் அடங்குவர். இதேவேளை, கடந்த பல மாதங்களுக்கு முன்னர் பொலிஸார் நடத்திய தேடுதலின் போது பதிவு செய்யப்பட்ட வர்களிலிருந்து 1657 பேர் மேலதிகமாக இம்முறை பதிந்துள்ளனர். இவற்றில் 929 ஆண்களும், 728 பெண்களும் அடங்குவர்.

இதேவேளை மேல் மாகாணத்தில் தற்காலிகமாவோ, நிரந்தரமாகவோ தங்கியிரு க்கும் காரணத்தையோ, அதனை உறுதி செய்யும் ஆவணங்களையோ உரிய முறையில் சமர்ப்பிக்கத் தவறியவர்கள் 106 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். இவர்களில் 67 தமிழர்களும், 36 சிங்களவர்களும், இரண்டு முஸ்லிம்களும் அடங்குவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

அரசியல் தீர்வுமட்டுமே இலங்கையின் இன மோதலுக்கு முடிவைத் தரும் – ஜப்பான்

kilinochchi-victory.jpgவிடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகர் கிளிநொச்சி வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், இலங்கைக்கு அதிகளவு உதவிவழங்கும் நாடுகளில் ஒன்றான ஜப்பான், இனநெருக்கடியை அரசியல் தீர்வினால் மட்டுமே முடிவுக்கு கொண்டுவர முடியுமென்று நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. கிளிநொச்சியை கைப்பற்றிய இலங்கை இராணுவம் முல்லைத்தீவை நெருங்கியுள்ளதாக தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் இன நெருக்கடிக்கு உண்மையான தீர்வை அரசியல் முயற்சிகளூடாகவே யதார்த்தபூர்வமானதாக்க முடியும், என்று ஜப்பானிய வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் ஏ.எவ்.பி செய்திச் சேவைக்கு நேற்று தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரத்துக்கு பொறுப்பான இந்த அதிகாரி மேலும் கூறுகையில்; வடகிழக்கு பிராந்தியத்திற்கு உள்ளக சுயாட்சியை கொண்டுவருவதற்கான அரசியல் தீர்வை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை ஜப்பான் ஊக்குவிக்கும் என்று குறிப்பிட்டார்.

அதேவேளை இலங்கை நிகழ்வுகள் குறித்து ஜப்பான் இன்னமும் உத்தியோகபூர்வமான கருத்துகளை தெரிவிக்க வில்லையென்றும் தம்மை அடையாளம் காட்ட விரும்பாத அந்த அதிகாரி வேண்டுகோள் விடுத்தார். மோதல் மேலும் தொடருமென்று எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார். சட்டரீதியற்ற தலைநகரை கைப்பற்றுவது ஒரு அடையாளரீதியான விடயமாகும். ஆனால், யுத்தரீதியான முக்கியத்துவம் மட்டுப்படுத்தப்பட்ட விடயம் என்றும் அவர் தெரிவித்தார். இலங்கையின் கிழக்குப்பகுதி காட்டுக்குள் மோதல்கள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். இலங்கைக்குக் கிடைக்கும் சர்வதேச உதவிகளில் சுமார் மூன்றில் இரண்டு பகுதியை ஜப்பானே வழங்குகின்றது. கடந்த மூன்று வருடங்களில் 4 தடவைகள் விசேட தூதுவரை மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட ஜப்பான் அனுப்பியிருந்தது.

பங்களாதேஷின் பிரதமராக ஷேய்க் ஹசீனா இன்று பதவியேற்பு

haseena.jpgபங்களாதேஷின் பிரதமராக ஷேய்க் ஹசீனா இன்று செவ்வாக்கிழமை பதவியேற்கவுள்ளார்.  தலைநகர் டாக்காவிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

இவருடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். ஜனாதிபதி அய்ஜுத்தீன் அகமது பிரதமருக்கும் புதிய அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அவாமி லீக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சனிக்கிழமை பதவியேற்ற பின்னர் புதிய பிரதமராக ஹசீனாவைத் தேர்ந்தெடுத்தனர்.  பங்களாதேஷில் கடந்த மாதம் 29 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கூட்டணி மொத்தம் உள்ள 300 இடங்களில் 259 இடங்களில் வென்று மூன்றில் இருமடங்கு பெரும்பான்மையைப் பெற்றது.

இந்தக் கூட்டணியில், முன்னாள் ஜனாதிபதி எச்.எம்.எர்ஷத் தலைமையிலான ஜாதியா கட்சி முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. காலிதா ஷியா தலைமையிலான கூட்டணி கடும் தோல்வியைச் சந்தித்தது. தேர்தலில் குளறுபடி, மோசடி என்று தொடக்கத்தில் புகார் கூறி வந்தாலும் பின்னர் தமது கூட்டணியின் தோல்வியை ஒப்புக்கொண்டு புதிய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளார் காலிதா ஷியா . இருப்பினும் அவரது கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்கவில்லை.

சிரஸ, சக்தி, எம்.டி.வி தொலைக்காட்சி நிறுவனம் தாக்குதல். வழமையான சேவைகள் ஸ்தம்பிதம்.

sirasa.jpgகொழும்பு பன்னிப்பிட்டிய தெப்பானமவில் அமைந்துள்ள மஹாராஜா நிறுவனத்தின் எம்டிவி, எம்பிசி ஊடக நிறுவன பிரதான கலையத்தின் மீது இன்று அதிகாலை 2.10 மணியளவில் இனம்தெரியாத நபர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரதான கலையகம் பாரிய சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக எம்பிசி நிறுவனத்தின் தொலைக்காட்சி சேவைகளான எம்டிவி, சிரச, மற்றும் சக்தி தொலைக்காட்சி சேவைகளும் இன்று நண்பகல் வரை தமது வழமையான சேவைகளை நடத்தவில்லை.  இதுவரை பிந்திய செய்தி என்றடிப்படையில் இத்தாக்குதல் சம்பவத்தையே மூன்று தொலைக்காட்சி சேவைகளும் ஒளிபரப்பி வருகின்றன. வழமையான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் பிரதான கலையகம் பாதிக்கப்பட்டுள்ளமையினால் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன என தகவல் தெரிவிக்கின்றன.

இலக்கத்தகடற்ற வெள்ளை வேனில் வந்த சுமார் 15 தொடக்கம் 20 பேர் வரையிலான ஆயுதம் தாங்கிய கும்பலே இத்தாக்குதலை நடத்தியதாகவும் அவர்களிடம்  டி 56 ரக துப்பாக்கிகளும், கைத்துப்பாக்கிகளும், கைகுண்டுகளும் இருந்ததாகவும்  தெரிவிக்கப்படுகின்றது. அங்கு சென்ற பொலிஸார் கைக்குண்டு ஒன்றை மீட்டதாகவும் கூறியுள்ளனர்.

இனந்தெரியாத கும்பல் கலையகத்துக்குள் நுழைந்து பல இடங்களில் கைக்குண்டு வீச்சுகளை நடத்தியதுடன் துப்பாக்கி சூட்டுகளையும் பொல்லுகளாலும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக தொலைக்காட்சி ஒளிபரப்பின் பிரதான கலையகம் தீயுண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்த தீயணைக்கும் படையினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்,  கலையகத்தில் பொறுத்தப்பட்டிருந்த அதிநவீன ஒளி,  ஒலி பரப்புச் சாதனங்கள் முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பலகோடிக்கணக்கான ரூபாய்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவத்தின்போது, ஆயுததாரிகள் அங்கு சேவையில் இருந்த பாதுகாப்பு ஊழியர்களையும் தாக்கியுள்ளனர். இதன்போது பல ஊழியர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் நேற்றைய தினமும் இலக்கத்தகடற்ற வெள்ளை வானின் நடமாட்டம் இருந்ததாகப் பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக மஹரகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமையன்றும் தெப்பானம கலையகம் மீது பெற்றோல் குண்டு வீச்சு நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
sirasa-02.jpg

ஆனையிறவின் தென்பகுதி படையினரால் முற்றாக மீட்பு ஒட்டுசுட்டான் பிரதேசமும் முழுமையாக வீழ்ந்தது

lanka-map.jpgபுலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த முக்கிய பிரதேசங்களில் ஒன்றான ஆனையிறவின் தென்பகுதி பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் கூறினார். இதற்கமைய, ஆனையிறவுக்கு தெற்கே உள்ள கரையோர பகுதிகள் முழுவதும் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

கிளிநொச்சியை முழுமையாக விடுவித்த இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் யாழ். குடாவின் நுழைவாயிலான ஆனையிறவை நோக்கி முன்னேறி வந்தனர். பரந்தன், கிளிநொச்சியை கைப்பற்றிய இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் தற்பொழுது ஆனையிறவுக்குள் பிரவேசித்துள்ளனர். இந்தப் படைப்பிரிவினர் கடந்த ஐந்து நாட்களுக்குள் பெற்ற மூன்றாவது பாரிய வெற்றி இதுவாகும்.

ஆனையிறவுக்கு தெற்கே தமிழ்மடம் கரையோரப் பிரதேசம் இராணுவத்திடம் முழுமையாக வீழ்ந்ததையடுத்து யாழ்ப்பாணத்தின் களப்பு பிரதேசம் பாதுகாப்பு படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. அதேசமயம், பூநகரி – பரந்தன் வீதி, பரந்தன் ஆனையிறவு வீதி மற்றும் ஏ-9 வீதிக்கு தென் பகுதி முழுவதும் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனையிறவுக்குள் பிரவேசித்த படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதல்களின் போது புலிகளுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பிரிகேடியர், படையினரின் கடுமையான தாக்குதல்களில் பெருந்தொகையான புலிகள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனையிறவை புலிகளிடமிருந்து ஏற்கனவே மீட்டெடுக்கும் படை நடவடிக்கைகளின் போது முக்கிய பங்களிப்பை வகித்து இராணுவத்திற்காக தன்னை அர்ப்பணித்த ஹஸலக காமினியின் உருவச்சிலை ஒன்றும் ஆனையிறவு பிரதேசத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தது.

தற்பொழுது படைவீரர்கள் அந்த உருவச் சிலையையும் தாண்டி, வடக்கே நோக்கி முன்னேறி வருவதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, ஆனையிறவு பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள பாதுகாப்பு படையினர் தற்பொழுது தமது நிலைகளை மேலும் பலப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பரந்தனுக்குக் கிழக்காக அமைந்துள்ள முரசுமோட்டை பகுதியிலும் இராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புலிகள் வன்னி நிலப்பரப்பில் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள பல முக்கிய பிரதேசங்களை நாளுக்கு நாள் இழந்து வருகின்றனர். புலிகள் பாவித்து வந்த பல விநியோக பாதைகளையும் பாதுகாப்பு படையினர் நாளுக்கு நாள் துண்டித்து வருகின்றனர். முகமாலை, செம்பியன்பற்று மற்றும் முல்லைத்தீவு ஆகிய தரை வழிப்பாதைகளின் ஒரு சில பகுதிகள் மாத்திரமே தற்பொழுது புலிகளிடம் எஞ்சியுள்ளதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, முல்லைத்தீவிலுள்ள ஒட்டு சுட்டான் பிரதேசத்திற்குள் நேற்று முன் தினம் பிரவேசித்த இராணுவத்தின் நான்காவது செயலணியினர் தற்பொழுது ஒட்டுசுட்டான் முழுவதையும் நேற்றைய தினம் விடுவித்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். இதற்கமைய ஏ-32 பிரதான வீதியில் மாங்குளத்திலிருந்து ஒட்டுசுட்டான் வரையான பிரதேசம் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார். இதன் மூலம், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, மாங்குளம் மற்றும் நெடுங்கேணி ஆகிய பிரதேசங்கள் ஊடாக புலிகள் முன்னெடுத்து வந்த பயங்கரவாத மற்றும் விநியோக நடவடிக்கைகளும் நிர்வாக செயற்பாடுகளும் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.