January

January

வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புகின்ற போலி பயண முகவர்களை பிடிக்க ஏற்பாடு

potty-training.jpgவெளி நாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் போலி பயண முகவர்களைப்பிடிக்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அப்பாவி இளைஞர், யுவதிகள் மற்றும் குடும்பத்தலைவர், குடும்பப்பெண் போன்றவர்களுக்கு ஆசைவார்த்தை கூறியும், போலி விளம்பரங்கள் செய்தும் இவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வருவதாக பூர்வாங்க விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை பெற்றுச் சென்ற பலர் கடந்த சில நாட்களாக அங்கிருந்து நாடு திரும்புவது அதிகரித்துள்ளது. இந்த போலி முகவர்கள் கூறியபடி அங்கு சம்பளம், தொழில் மற்றும் வசதிகள் தமக்குத்தரப்படவில்லை என்று இவர்கள் தெரிவித்தனர். இதேபோல ஐரோப்பிய நாடுகள், உட்பட சில நாடுகளுக்கு இவ்வாறான போலி முகவர்களால் அனுப்பப்பட்ட பலர் திருப்பி அனுப்பப்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்களுக்கு எதிராக நீர்கொழும்பு நீதிமன்றத்தில் குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களையடுத்து இந்த போலி பயண முகவர்கள் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார். இவ்வாறு செயற்படும் போலி பயண முகவர்கள் தொடர்பாக பொதுமக்களின் உதவியை பணியகம் நாடியுள்ளது

முடிவின் தொடக்கம் – மக்களின் அவலத்தின் முடிவல்ல: சேனன்

Tamil_Boy_in_a_Bunker‘புலிகளின் அடிமைத்தனத்தில் இருந்து எமது குழந்தைகளை விடுவித்த இராணுவ வீரர்களுக்காக இன்று குடிசையில் இருந்து மாளிகை ஈறாக ஒவ்வொரு கூரையிலும் தேசியகொடி பறக்கிறது’ என்று முழங்கி ஜனவரி 26ல் முல்லைதீவில் இராணுவம் நுழைந்ததை கொண்டாடினார் நமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. – என்னே கரிசனை!

ஜனாதிபதியின் ஆசீர்வாதத்துடன் தெற்கில் இனவாதிகளின் கூத்தும் கொண்டாட்டமும் அதிகரித்து வருகிறது. வெடிகொழுத்தி குதூகலிப்பார் ஒருபக்கம். இரண்டாம் உலக யுத்த நிகழ்வுகளில் இருந்து உதாரணங்கள் எடுத்து ஆய்வுகளை அள்ளி வீசி இராணுவத்தை புழுகுவார் ஒரு பக்கம். வட கிழக்கை நோக்கி சுரண்டலுக்கு தம்மை தயார்படுத்துவார் ஒரு பக்கம் என்று தென் இலங்கை ஆளும் வர்க்கம் இருப்பு கொல்லாது துடிக்கிறது.

தை 2ல் புலிகளின் தலைமை பிரதேசமான கிளிநொச்சிக்குள் இலங்கை இராணுவம் நுழைந்ததை தொடர்ந்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக பாவனை செய்து அரசும் அரசுசார் ஆளும் சக்திகளும் கடும் பிரச்சாரம் செய்து வருகிவதை நாமறிவோம்.

ஆனால் வட கிழக்கில் சந்தோசப்பட ஒன்றுமில்லை – மாறாக இராணுவத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாகி கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்களின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் அவல நிலையில் இராணுவ வெற்றியில் பூரிக்கிறார் ஜனாதிபதி. யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து விட்டோம் என்ற பினாத்தல் பரப்பப்படுகிறது. இது வரலாறு காணாத வெற்றி என்று அரசாங்கம் வெற்றி பிரச்சாரம் செய்கிறது.

மக்கள் படும்பாடு என்ன என்பது பற்றி – சனத்துக்கு என்ன நடந்தது என்பது பற்றி எப்பக்கமும் எந்த மூச்சுபேச்சும் இல்லை.

வென்றது என்ன?

கடந்த முப்பது வருட காலமாக யுத்தமும் சாவும் பொருளாதார சரிவும் என்று இலங்கை மக்கள் மேலும் மேலும் வறுமைக்குள் தள்ளப்பட்டு வந்துள்ளார்கள்.  முன்பு வென்றெடுத்த உரிமைகள் பல பறிக்கப்பட்டு வாழ்க்கைதரம் பாதிக்கப்பட்டு ஒரு தலைமுறை சீரழிக்கப்பட்டுள்ளது. யுத்தத்தின் குழந்தைகளான புதிய தலைமுறையினர் மிக சீரழிந்த எதிர்காலத்தை நோக்கி நிறுத்தப்பட்டுள்ளனர். யுத்த செலவுகள் இலங்கை பொருளாதாரத்தை முடக்கியுள்ள நிலையில் உலகளாவிய பொருளாதார சரிவின் பாதிப்பு மேலதிக சிக்கல்களை தோற்றுவித்துள்ளது.

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கிளிநொச்சி மக்கள் பலவந்தத்தாலோ பயத்தாலோ இடம்பெயர்ந்த நிலையில் அவர்களின் எதிர்காலம் சீரழிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உணவு மருந்து மற்றும் தங்கும் வசதியற்று வாடிக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் இன்னும் மிக கேவலமான அழிவை நோக்கி தள்ளப்பட்டுள்ளனர் என்பது தெளிவு.

கிளிநொச்சியில் இருந்து பின்வாங்க முதல் வீடுகள் கடைகள் அனைத்தும் உடைத்து முழு பிரதேசத்தையும் தரைமட்டமாக்கிவிட்டு சென்றுள்ளனர் புலிகள். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பற்றிய எந்த கவலையுமின்றி வெற்றி பூரிப்புடன் வெறிச்சோடிய கிளிநொச்சிக்குள் இராணுவம் புகுந்தததை எமது ‘மதிப்புக்குரிய’ ஜனாதிபதி அறிவித்ததை நாமறிவோம்.

கொல்லப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை – காயப்பட்டவர்கள் மற்றும் எஞ்சியவர்களின் பயக்கெடுதி என்று ஒட்டுமொத்த சமூக கட்டமைப்பு குலைந்துள்ள நிலையில் கொண்டாட என்ன இருக்கு?

பறிக்கப்பட்ட வாழ்க்கைத்தரம் மீண்டும் கட்டமைக்க – பொது மீளமைப்பு செய்ய இன்னும் ஒரு தலைமுறை காலம் தேவை. எல்லா பக்கத்தாலும் மக்கள் கொடுமை அனுபவிக்க வெற்றி ஆட்டம் ஆடுகிறார் ‘பொறுப்புள்ள’ ஜனாதிபதி.

பயங்கரவாத பூச்சாண்டி காட்டி மேற்கத்தேய ஆளும் வர்க்கம் காட்டும் விளையாட்டுகளை பார்த்து தாமும் விளையாடிப் பார்க்கிறார் ஜனாதிபதி.

வீடுகள் கடைகள் வைத்தியசாலைகள் பாடசாலைகள் மற்றும் அரச கட்டிடங்கள் உடைக்கப்பட்டு ஆயிரக்கணக்கானவர்கள் மரங்களை அண்டி வாழும் கேவலத்துக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள். உணவு பொருட்களின் தட்டுப்பாடும் நல்ல தண்ணீர் தட்டுப்பாடும் என்றுமில்லாத அளவு அதிகரித்துள்ளது. பசி பட்டினியால் வாடுபவர் எண்ணிக்கை கடந்த சில மாதங்களில் பல மடங்கு அதிகரித்துள்ளது.

மண்னெண்னை முதற்கொண்டு அத்தியாவசிய பொருட்களின் விலை உச்ச விலையில் விற்கப்படுகிறது. கடந்த ஆறு மாத காலத்துக்குள் பல பொருட்களின் விலை இரண்டு மடங்காகியுள்ளது. உள்நாட்டு பிரச்சினை போதாதென்று உலகளவில் ஏற்பட்டுள்ள உணவுப் பண்டங்களுக்கான தட்டுப்பாடு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்ஆசியாவின் அதிகூடிய பணவீக்கத்துடன் தள்ளாடும் இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை இப்போதைக்கு இறங்குவதற்கான சாத்தியங்கள் இல்லை. அண்மையில் விடாது பெய்த மழையும் அதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கும் உள்நாட்டு உணவு உற்பத்தியை பாதித்து விலைவாசியை மேலும் உயர்த்தியுள்ளது.

உலகெங்குமுள்ள மனித உரிமை மற்றும் நிவாரண அமைப்புக்கள் ‘அவசர நிவாரண நிலை தேவை’ யான வகைக்குள் இலங்கையை வகைப்படுத்தியுள்ளன. இலங்கை வறுமை நிலவரத்தை அவர்கள் ‘அமைதி சுனாமி’ என்று வர்ணிக்கிறார்கள். முக்கியமாக வடக்கில் மனித அவலம் மிக மிக மோசமான நிலையில் இருப்பதை அவர்தம் அறிக்கைகள் சுட்டிக் காட்டியுள்ளன. இலங்கையில் 14 வீதத்துக்கும் அதிகமான குழந்தைகள் மிக மோசமான பட்டினி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்று அரச கணிப்பீடுகளே கூறியுள்ளன. கிழக்கில் இத்தொகை 30 வீதத்தை தாண்டியுள்ளது. இந்த கணிப்பீட்டில் வடக்கு இணைத்துக் கொள்ளப்படவில்லை. அதனால் ஒட்டுமொத்த விகிதாசாரம் அரச கணிப்பீட்டிலும் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்பது திண்ணம்.

வேலைவாய்பும் குறைந்து வரும் நிலையில் தெற்கு வறிய மக்களே ஆடிப்போயுள்ள நிலையில் வடக்கு நிவாரணம் மிகப்பெரிய கேள்விக்குறியே. விலைவாசி கூடி வேலை வாய்ப்பு குறைந்துள்ள நிலையில் மக்கள் என்ன செய்ய முடியும்? சம்பள உயர்வு மட்டும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. பல தொழிலாளர்கள் பல வருடங்களாக எவ்வித சம்பள உயர்வுமின்றி வேலை செய்து வருகிறார்கள்.

ஆனால் கடந்த முப்பது வருடத்தில் ‘பாதுகாப்புக்கான’ செலவு – யுத்த செலவு மட்டும் 800 மடங்கு அதிகரித்துள்ளது.

இராணுவ கலாச்சாரம்

வட கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் இராணுவ தளபாடங்கள் பதவிகள் பெயர்கள் பேச்சுவழக்கில் அடிபடுவதை நாமறிவோம். விமானங்களின் பெயர்கள் இராணுவ தளபதிகளின் பெயர்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளின் பெயர்கள் எல்லாம் சிறுவர்களுக்கே தெரியும். விமான சத்தத்தை வைத்தே சிறுவர்கள் எந்த விமானம் வருகிறது என்று கண்டு பிடித்து விடுவார்கள். துப்பாக்கி சத்தத்தை வைத்து எந்து துப்பாக்கி என்பதை கண்டுபிடித்துவிடுவார்கள். செல் குத்துற சத்தத்துக்கு பதுங்க வேண்டும் என்று வடக்கு கிழக்கு நாய்க்குட்டிகளுக்கு கூட தெரியும். இது யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கொண்டிருந்த சமூகத்து கதை.

தெற்கில் யுத்தமற்ற பிரதேசத்தில வாழ்ந்த மக்கள் மத்தியில் இவ்வகை யுத்த -இராணுவ அறிவு இருந்ததில்லை. ஆனால் இன்று கதை வேறு. யுத்த தளபதிகள் புகழ்பெற்ற கதாயாகர்களாக உலா வருகிறார்கள். யுத்தம் சார் சொற்கள் சகஜமாக ஊடகங்களில் பாவிக்கப்படுகிறது. யுத்தத்தின் ஒவ்வொரு சிறு வெற்றியும் ஆர்ப்பாட்டமாக பதிப்பிக்கப்படுகிறது. இராணுவ நடவடிக்கைக்கு கேள்வியற்ற ஆதரவு வழங்கும்படி மக்கள் பல திசைகளிலும் உந்தப்படுகிறார்கள். இராணுவத்துக்கெதிரான – அரசுக்கெதிரான ஒவ்வொரு நடவடிக்கைகளும் மூர்க்கத்தனமாக எதிர்க்கப்படுகிறது. தன்னிச்சையாக இயங்க முற்படும் ஊடகங்கள் அடித்து நொருக்கப்படுகிறது. சண்டே லீடரின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க அண்மையில் அரச காடையரால் அநியாயமாக கொல்லப்பட்டது உலகறிந்த ஒன்று.

தாம் ஒரு இராணுவம் என்று புலிகள் பிரச்சாரம் செய்து வந்தாலும் அவர்கள் ஒருபோதும் இராணுவ வகை நேரடி யுத்தத்தில் ஈடுபட்டதில்லை. அதிநவீன ஆயதங்களுடன் காசாவுக்குள் அத்துமீறி நுழையும் உலகின் மிகப் பலம்வாய்ந்த இஸ்ரேலிய இராணுவத்துக்கு பல பின்னடைவுகளை ஏற்படுத்தும் கமாசிடம் இருப்பதை விட அதிகளவு ஆயதம் புலிகளிடம் உண்டு என்பது உலகறிந்தது. கிளிநொச்சிக்குள் நுளையும் இலங்கை இராணுவத்தை நேரடியாக புலிகள் எதிர்கொள்ளாதது அவர்தம் முழு பலவீனத்தை காட்டவில்லை. கிளிநொச்சிக்குள் இருப்பதாக சொல்லிக் கொண்டிருந்த விமானங்கள் ஆயுதங்கள் ஒன்றையும் இராணுவம் இன்னும் கைப்பற்றவில்லை. கிளிநொச்சிக்குள் தளம் அமைத்து இராணுவம் நிலைகொள்ள முடியுமா என்பது கடும் கேள்விக்குள்ளாகி வருகிறது. ஊடகவியலாளர்களும் மனித உரிமை வாதிகளும் தினமும் தாக்கப்பட்டு வருகிறார்கள். சாக்கோடு சாக்காக அரசியல் எதிரிகளும் வேட்டையாடப்படுகிறார்கள். எதிர்த்து நிற்கும் ஒற்பன் இடதுசாரிகளும் தெற்கு புலிகள் என்று பெயர் வைக்கப்பட்டு வேட்டையாடப்படுகிறார்கள்;. ஜக்கிய சோசலிச கட்சியின் உறுப்பினர் பலர் ஒழித்திருந்து வேலை செய்ய வேண்டிய நிiயில் உள்ளனர். ஒவ்வொரு நிமிடமும் தமது உயிருக்கு பயந்த நிலையிலும் அவர்கள் ராஜபக்ச குடும்ப அராஜகத்துக்கு தெற்கில் பலத்த எதிர்ப்பு செய்து வருபவர்கள் அவர்கள் மட்டுமே.

ஊடகவியலாளர் மற்றும் நிவாரண அமைப்புக்கள் என்று இராணுவம் சாரா அனைவரும் யுத்த பிரதேசம் செல்வதற்கு தடைவிதித்துள்ளது அரசு. இதனால் இராணுவ பிரச்சாரம் மேலும் இலகுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் ராஜபக்ச இலங்கையை காக்க வந்த இளவரசன் மாதிரி சால்வையை போத்துகொண்டு திரிய முடிகிறது. இராணுவம் கொன்று குவிக்கும் மக்களின் தொகை பற்றி அலட்டிக்கொள்ள தேவையில்லை – எல்லாம் நாட்டின் நல்லதுக்கே என்று பாவனை கட்டமைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செலவை 177.1 பில்லியன் ரூபாய்களுக்கு அதிகரிக்க கோரி இவ்வாண்டு பாராளுமன்றத்தை கோரவுள்ளது அரசு. இது கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சமன். மிகவும் வறுமையான வடக்கை விட்டு பார்த்தாலும் மிகுதி நாட்டின் மொத்த சனத்தொகையில் 41.6 வீத மக்கள் ஒரு நாளைக்கு 2 டாலர்களிலும் குறைந்த வருவாயிலேயே வாழ்கிறார்கள். அரைவாசி மக்கள் ஒரு நாளைக்கு இரண்டு டாலரிலும் குறைந்த தொகையில் வாழும் ஒரு நாட்டில் ஒரு நாளைக்கு 5 மில்லியன் டாலர்களை யுத்த செலவுக்கு ஒதுக்க கேக்கும் அரசை என்ன சொல்வது? இந்த அரசில் புரட்சிகர கூறுகளை கண்டுபிடிக்கும் சில மத்தியதர வர்க்க ‘மா’க்களை என்ன சொல்வது?

இருபது மில்லியன் சனத்தொகயுள்ள இலங்கையில் 250000க்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பு துறையில் வேலை செய்கிறார்கள். நாட்டில் பத்து பேரில் ஒருவர் இராணுவத்துடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டவராக இருக்கிறார். இவர்களை குறிவைத்து இராணுவத்துக்கான பிரச்சார நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளது.

இன்று இலங்கையின் முக்கிய – மற்றும் பெரும்பான்மை அரச ஊழியர்கள் இராணுவத்தினரே. இராணுவத்தினருக்கு 30 000 ரூபாய் வரை சம்பளம் வளங்கப்படுகிறது. முப்பது வருடத்துக்கு முன் வேலை தொடங்கிய பல ஆசிரியர்கள் இன்றும் 6000 ரூபாய்க்கு குறைவாகவே சம்பளம் வாங்குகிறார்கள். மற்றய பெரும்பான்மை அரச ஊளியர்களின் சராசரி வருவாய் 4000 ரூபாய்கும் குறைவாகவே உள்ளது. கொழுத்த சம்பளம் மட்டுமின்றி இராணுவத்தினருக்கு இதர சலுகைகளும் வளங்கப்படுகிறது. ஓய்வூதிய அதிகரிப்பு மடடுமின்றி சமுக அந்தஸ்தை கூட்டும் சலுகைகளும் வளங்கப்படுகிறது. உதாரணமாக பொது அரச இடங்களில் இராணுவத்தினருக்கென்று தனிவரிசை அமைக்கப்பட்டுள்ளது.

இளம் சமுதாயத்தை இராணுவ ஊழியத்துக்கு கவர்ந்திளுக்கவே இத்தனையும். மிக வறுமையான தென் மாகாணங்களில் வாழ்பவர்களுக்கு இராணுவத்தில் சேர்வதை தவிர வேறு வழியில்லை. இராணுவத்தினர் இறந்தால் ஆயுட்கால சம்பளமும் பெரும் தொகையும் குடும்பங்களுக்கு வளங்கப்படுகிறது. இதனால் ஒரு குடும்பத்தில் இருந்து பலர் இராணுவத்தில் இணைகின்றனர். அண்மையில் ஜனாதிபதி ஒரு குடும்பத்துடன் போஸ் குடுத்து ஆகா கோ என்று புழுகி பலத்த பிரச்சாரம் செய்தது இலங்கை ஊடகங்களை கவனித்து வந்தவர்கள் அறிந்திருக்க கூடும். ஒரே குடும்பத்தில் இருந்து நாட்டை காக்க பல வீரர்கள் இராணுவத்தில் இனைந்துள்ளனர் என்பதே பின்னனி பிரச்சாரம். ஆனால் அந்த குடும்பத்தினர் இலங்கையின் மிக வறிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள். வேறு எந்த தொழிலும் செய்ய முடியாத இக்கட்டான நிலையில் வேறு வழியின்றி இராணுவத்தில் சேர்ந்தவர்கள் அவர்கள். நாட்டு பற்று தேசிய இறையான்மை என்ற எந்த மன்னாங்கட்டி அக்கறையுமின்றி வயித்துபசியை முன்னிலைபடுத்தியதே அவர்களுக்கும் இராணுவத்துக்குமான தொடர்பின் இரகசியம். இதை லாவகமாக தமக்கு சாதகமாக்கி பிரச்சாரிக்கின்றனர் ஆளும் வர்க்கத்தினர். இலங்கை இராணுவத்தில் பெரும்பான்மையானவர் மிக மிக வறிய பகுதிகளில் இருந்து வந்தவர்களே.

புலிகளின் எதிர்காலம் ?

தமது முப்பது வருடகால வரலாற்றில் புலிகள் என்றுமில்லாத பின்னடைவை கண்டுள்ளனர். இராணுவ ரீதியில் ஒரு மிகப்பெரிய தோல்வியடைந்துள்ளனர். இந்திய இராணுவத்திடம் ஏற்பட்ட தோல்வி புலிகளை பொறுத்த வரையில் பெரிய தோல்வியில்லை. அத்தோல்வியால் ஆயுத ரீதியான பின்னடைவோ அல்லது போராளிகளுக்கு பாரிய மனச்சோர்வோ ஏற்படவில்லை. அதுமட்டுமின்றி பொது மக்களிடம் இருந்த பெரும்பான்மை ஆதரவிலும் பெரும் மாற்றம் ஏற்படவில்லை. இந்திய இராணுவத்தின் ஆதரவுடன் மற்றய இயக்கங்கள் செய்த அட்டகாசங்கள் புலிகளின் ஆதரவை அதிகரிக்க உதவினவே அன்றி புலிகளின் செல்வாக்கை பாதிக்கும்படி எதுவும் நிகழவில்லை. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள தோல்வி புலிகளை பல்வேறு வழிகளில் பின்னடைய வைத்துள்ளது.

யுத்த வெற்றிகளை விற்பனை செய்து வெளிநாட்டு தமிழர்கள் மத்தியில் காசு சேர்க்கும் கலாச்சாரத்தை பரப்பியிருந்த புலிகளுக்கு இந்த யுத்தத்தின் போது பெரிய ‘பிரச்சார நிகழ்வுகளை’ வழங்க முடியாமற்போய்விட்டது. இறுதி அடி விழும் என்ற கதைகட்டி ஆளுக்கு ஆயிரம் பவுன்ஸ் சேர்த்து திரிந்தவர்கள் வாயில் இடி விழுந்த மாதிரி முல்லைத்தீவும் பறிபோனது. இயக்கம் என்ன இந்த அடி வாங்குது என்று இறுகிய புலி ஆதரவாளர்களே அதிருப்தியடைந்துள்ளனர். ஆயிரம் இரண்டாயிரம் என்று இராணுவத்தை ஒரே அடியில் விழுத்தபடுவர். புலிகளின் வீர பிரச்சாரம் கொடி கட்டி பறக்கபோகிறது என்று கனவு கண்டவர்கள் சப்பென்று போயுள்ளனர். இத்தேல்வியானது புலிகளின் கடும் ஆதரவு வட்டங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது மட்டுமின்றி அவர்களது பொருளாதார நிலையிலும் பலத்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கத்தேய அரசுகளின் கெடுபிடி காரணமாக பாதிக்கப்பட்டிருந்த புலிகளின் பொருளாதார நடவடிக்கைகள் மேலும் முடக்கப்படும் சாத்தியமுள்ளது. பல நாடுகளில் புலிகளுக்கான தடை அமுலில் இருப்பதாலும் அவர்கள் சொத்துக்கள் – பினாமி சொத்துக்கள் உட்பட – பல பறிக்கப்பட்டிருந்ததாலும் புலிகளின் வெளிப்படையான அசைவுகள் வெளிநாடுகளில் சாத்தியமற்று போயுள்ளது.

மிக கடுமையான கட்டுப்பாட்டுடன் – தமக்கு மிகவும் நம்பிக்கையானவர்களை வைத்து தமது வெளிநாட்டு நடவடிக்கைகளை செய்து வந்த புலிகள் அவ்வாறு தொடர்ந்தும் இயங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முதற்தடவையாக போராளிகள் அல்லாத – போராட்டத்தோடு தொடர்பற்ற உதிரி ஆதரவாளர்களின் உதவியுடன் புலிகள் தமது நடவடிக்கைகளை வெளிநாடுகளில் செய்யவேண்டிய நிலை உருவாகியுள்ளது. புலிகளின் காலம் போய் புலி வால்களின் காலம் வந்துள்ளது என்று சொல்லலாம்!

மீண்டும் புலிகள் பலப்படுவதற்கு எந்த நாடும் உதவப்போவதில்லை. இராணுவ ரீதியான – பிராந்திய ரீதியான வெற்றிகளை புலிகள் மீண்டும் நிறுவும் வரை புலிகளுக்கான ஆதரவு மங்கிக்கொண்டே போகப்போகிறது. இலங்கை அரசியலில் தமது செல்வாக்கை தொடர்ந்து நிலை நாட்ட அரசியல் எதிரிகளை கொல்லுதல் – மற்றும் வடக்கு கிழக்கில் தலையெடுக்கும் முக்கிய புள்ளிகளை ‘களையெடுத்தல்’- மக்கள் ஆதரவை நோக்காக கொண்ட செயற்பாடுகளை முடக்குதல் – முதலான காரியங்களில் புலிகள் ஈடுபடுவர் என்பது நிச்சயம்.

இது மட்டுமின்றி மக்கள் மத்தியில் நிலைகொல்லகூடிய இராணுவ தளங்களில் கொரில்லா தாக்குதல்களை நிகழ்த்துவதன் மூலம் இராணுவத்தை பொது மக்களுக்கு எதிராக திருப்பும் செயல்களிலும் புலிகள் கூடுதல் கவனம் செலுத்தகூடும். புலிகளின் கொரில்லா தாக்குதல்களுக்கு இரானுவம் எவ்வளவுதூரம் – எவ்வளவு காலத்துக்கு ஈடுகொடுக்க முடியும் என்பது கேள்விக்குறியே. இந்திய இராணுவ கட்டுப்பாட்டில் இருந்தது போல் இராணுவ காம்புகளை மையமாக வைத்த கட்டுப்பாடு புலிகளை பலப்படுத்தவே உதவும். அதற்கு மாறான புலிகளின் நடமாட்டம் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட நிர்வாகத்தை ஏற்படுத்துவது என்பது மிக மிக கஸ்டமான விசயம். முக்கியமாக வடக்கில் – அதுவும் புலிகள் நீண்டகாலமாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரதேசங்களில் முழு கட்டுபாட்டை கொண்டுவருவது மிகவும் சிரமமான காரியமே. மக்கள்மேல் வன்முறை பாவித்து பயக்கெடுதி ஏற்படுத்தாமல் அது சாத்தியமில்லை. ஆனால் அதற்கான முயற்சியையே அரசும் அரசு சார் குழுக்களும் செய்வர்.

புலிகள் இராணுவ ரீதியாக மிகப்பெரிய தோல்வியடைந்திருப்பினும் கடைந்தெடுத்த மிகவும் பயிற்றுவிக்கப்பட்ட பல போராளிகள் தொடர்ந்து இயங்கிகொண்டுதான் இருக்க போகிறார்கள். தோல்வியால் ஏற்பட்ட விரக்தி – அதனால் ஏற்பட்ட கோபம் காரணமாக ஒருங்கமைக்கப்படாத அவர்கள் இயக்கம் பல அனர்த்தங்களை விளைவிக்கும் என்பதில் ஜயமில்லை. உதாரணமாக மக்களை கவனத்திற்கொள்ளாத மோட்டுத்தனமான தற்கொலை தாக்குதல்கள் அதிகரிக்க வாய்ப்புண்டு. பல புலி உறுப்பினர்களுக்கு போராடுவதை தவிர வேறு வழியில்லை. அதை தவிர வேறு எதுவும் அவர்களுக்கு பயிற்றுவிக்கப்படவுமில்லை. கருணா பிள்ளையான் முதற்கொண்டு அவர்களுக்கு பின்னால் இருக்கும் போராளிகள் உட்பட பலரும் ஆயுதம் சார் இயக்கம் தவிர வேறு பயிற்சி இல்லாதவர்கள். ஆயுதமற்ற அரசியல் நடவடிக்கையில் அவர்கள் திருப்திப்படப் போவதோ அல்லது பாதுகாப்பாக உணரப்போவதோ சாத்தியமில்லை. ஆயுதமற்ற கட்சி அது இது என்று எத்தனை புருடா விட்டாலும் ஆயுத குழு சாராது இயங்குவது கருணாவுக்கு சாத்தியமில்லை. இதே நிலைதான் பல புலி உறுப்பினர்களுக்கும். அரசாலும் அரசுசார் குழுக்கலாலும் வேட்டையாடப்படக் கூடிய நிலையில் அவர்களின் இந்த போக்கு தவிர்க்க முடியாததுமே. புலிகள் மேலான அனுதாபத்தை மீண்டும் மக்கள் மத்தியில் வளர்க்க இந்த அரசு சார் குழுக்களின் நடவடிக்கைகள்தான் உதவப்போகின்றன.

புலிகளின் போராடும் பலம் முறியடிக்கப்பட்டுவிட்டது. புலிகள் கதை முடிந்துவிட்டது என்ற அரச – மற்றும் புலி எதிர்ப்பு தமிழ் மத்தியதர வர்க்க (புலி விசயத்தில் இந்த இரண்டு பகுதிக்கும் பெரிய வித்தியாசமில்லை) பிரச்சாரத்துக்கு எடுபடுவதில் அர்த்தமில்லை. புலிகளின் ஆயுதங்களை இதுவரை இராணுவம் கைப்பற்றவில்லை. புலிகள் தமது ஆயுதங்களை குறிப்பிட்ட பங்கர்களுக்குள் முடக்கி பாதுகாத்ததாக வரலாறில்லை. தமது ஆதரவாளர்கள் வீடுகள் மற்றும் பொது இடங்கள் என்று அவர்கள் ஆயுதங்கள் பல்வேறு இடங்களிள் பரவி கிடக்கும்.

அது மட்டுமின்றி பல்வேறு நாடுகளிள் தமது சொத்துக்களை பதுக்கி வைத்துள்ளனர் புலிகள். ஆயுத ரீதியாக புலிகளை பலவீனப்படுத்தவது என்பது அண்மையில் நடக்கிற கதையில்லை. இடைவிடாத புலிகளின் கொரில்லா தாக்குதலுக்கு எதிராக நீண்ட காலத்துக்கு நிண்டு பிடிக்க வேண்டும் என்றால் மக்களின் ஆதரவு தேவை. இதுவரை காலமும் பல்வேறு காரணங்களுக்காக புலிகளுக்கு ஆதரவு கொடுத்து வந்த மக்களின் ஆதரவை வென்றெடுப்பது என்பது சுலபமான காரியமல்ல. அவர்தம் அடிப்படை உரிமைகளை நிவர்த்தி செய்வதன் மூலம் மட்டுமே அது சாத்தியம்.

புலிகளின் நேரடி நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் முடக்கப்பட்டாலும் அவர்களது இரகசிய நடவடிக்கைகள் தொடரும் என்பதில் ஜயமில்லை. அவர்களது சர்வதேச ஆயுத வியாபாரமும் தொடரும். புலிகள் எதிர்கொள்ளக்கூடிய முக்கிய சவால் தொடர்ந்து எவ்வாறு மக்கள் ஆதரவை தக்க வைத்து கொள்வது என்பதே. வெளிநாடுகளில் முடிந்தளவு தமது கால் ஊன்றுவதற்கான முயற்சியை அவர்கள் செய்வர். புலம்பெயர் மக்கள் மத்தியில் தொடர் போராட்டங்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதன் மூலம் தமது இருப்பை பாதுகாக்க முயல்வர்.

அரசும் அரசுசார் குழுக்களும் மக்கள் பிரச்சினையை நேரடியாக எதிர்கொண்டு அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் நகராத வரை அரசியல் ரீதியாக பலம் பெறப்போவது புலிகள்தான்.

யுத்தம் முடிந்து விட்டதா?

புலிகளின் கட்டுபாட்டில் இருந்த பிரதேசங்களை கைப்பற்றுவதன் மூலம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருகிறோம். யுத்தம் முடிவுக்கு வருவதால் இலங்கை பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டுவருகிறோம் என்று ஒரு மிக மோசமான பிரச்சாரம் செய்து வருகிறது இலங்கை அரசு.

நீண்ட காலத்துக்கு பிறகு முழு இலங்கையும் இராணுவத்தின் கட்டுபாட்டின் கீழ் வருவது சாத்தியமே. ஆனால் இந்த இராணுவ ‘பிராந்திய ஆக்கிரமிப்பு’ எந்த தீர்வையும் கொண்டுவந்துவிடப் போவதில்லை. இராணுவ பலத்தை நிறுவிய கையுடன் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஆதரவும் – அல்லது அவர்களை கட்டுபடுத்தும் வல்லமை – தமக்கு வந்துவிட்டதாக அரசாங்கம் கனவுகாண்பது போன்ற கேலிக்கிடமான விசயம் எதுவும் கிடையாது.

கிழக்கில் ஏதோ பொற்காலம் நடக்கிறது பொன் மழை பொழிகிறது என்று அந்த பொற்காலத்தை வடக்கிலும் கொண்டு வந்து காட்டுவதாக உறிதியளித்துள்ளது அரசு! மட்டுப்படுத்தப்பட்ட 13ம் திருத்த சட்டத்தை தவிர வேறு எந்த தீர்வையும் அரசு முன்வைக்கவில்லை. அரச பிரச்சாரத்தின் பின்னனி பலமாக இருக்கும் ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உரிமய போன்ற வலதுசாரி தேசியவாத – இனவாத கட்சிகள் 13ம் திருத்த சட்டத்தைகூட அமுல்படுத்த விடப்போவதில்லை.

கிழக்கில் ஜனநாயகம் பூத்து குலுங்குகிறது என்று இனியும் சொல்லி அதேபோல் வடக்கும் வந்தால் போதும் என்பதை கிஞ்சித்தும் ஏற்றுக்கொள்ள முடியாது. வடக்கு கிழக்கில் எப்பகுதியையும் சுயாதீனமாக விட அரசுக்கு சம்மதமில்லை. அதேவேளை நேரடி இராணுவ கட்டுப்பாட்டில் வட கிழக்கை தொடர்ந்து வைத்திருக்க முடியும் என்ற நம்பிக்கையும் அரசுக்கில்லை. அதனால்தான். கருணா பிள்ளையான் டக்ளஸ் கட்சிகள் வடக்கு கிழக்குக்கான சரியான தீர்வாக அரசுக்கு தெரிகிறது. தமது முழு கட்டுப்பாட்டில் இயங்கும் ஆயுத குழுக்களிடம் அதிகாரத்தை வளங்குவதன் முலம் தமது பிராந்திய கட்டுப்பாட்டை நிலை நிறுத்த முடியும் என்று அரசு நினைக்கிறது.

பிராந்திய அதிகாரம் செய்யும் குழுக்கள் அரச ஆதரவின்றி எந்த முடிவும் எடுக்க முடியாத அரசின் பினாமி –  பம்மாத்து குழுக்கள் மட்டுமே. மக்கள் மத்தியில் பயக்கெடுதியை உருவாக்கி அவர்களை அரச கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மட்டுமே இவர்கள் செய்யகூடியது. தப்பித் தவறி இவர்கள் மாற நினைத்தால் அரசு அவர்களை உருவி புதிய அதிகார குழுவை இறக்கும் என்ற பயத்தில் இவர்கள் அரச ‘கைகூலிகளாக’ இயங்கப்போவது தவிர்க்க முடியாதது.

அது மட்டுமின்றி ஆயிரக்கணக்கான புலி உறுப்பினர்களின் குடும்பங்கள் – ஆதரவாளர்கள் மற்றும் நேரடியாகவோ மறைமுகமாகவோ புலிகளுடன் இயங்கியவர்கள் என்று ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களை அரசு பயங்கரவாதிகள் என்று ஒதுக்ககூடிய நிலையுள்ளது. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் இனவாதிகள் இவர்களை கோட்டுக்கிழுத்து சிறைக்கனுப்பும் சாத்தியம் உள்ளது. மேலும் கருணா டக்ளஸ் பிள்ளையான் குழுக்களின் தனிப்பட்ட வேட்டைக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகக் கூடிய சாத்தியம் உள்ளது. யுத்தம் முடிவுக்கு வந்த பிறகு பலியாக் கூடிய காணாமற் போகக்கூடிய மக்களின் தொகை ஆயிரக்கணக்கிற் செல்லலாம்.

இது தவிர இலங்கையில் ஆயுத போராட்டத்துக்கு வித்திட்ட பிரச்சினைகள் அப்படியே இருக்கிறது. அதுபற்றி பேசுவார் இல்லை. இந்த அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கும்வரை யுத்தம் முடிவுக்கு வரப்போவதில்லை. அது மட்டுமின்றி யுத்த காலத்தில் உருவாக்கப்பட்ட புது பிரச்சினைகளும் பேசப்படுவதில்லை. எல்லாம் முடிஞ்சுபோச்சு அமெரிக்க மேற்குலக இந்திய ஆசிய முதலாளிகளை கூப்பிட்டு வடக்கு கிழக்கில் சுரண்டல் கடை போடச்சொன்னால் எல்லாம் சரியாப்போகும் என்பவர்கள் வரலாற்றை சற்று உற்று நோக்க வேண்டும்.

சுயநிர்ணய பிரச்சினை முதலாளித்துவ சமுதாயத்தில் தீர்க்கப்பட்டதாக வரலாற்றில் எங்காவது ஆதாரமுண்டா? ஸ்கொட்லாந்து, வேல்ஸ் ஜயர்லாந்து, பாஸ்க், பெல்ஜியம், குபெக் என்று ‘வளர்ச்சி’ அடைந்ததாக சொல்லப்படும் இடங்களிலேயே தீர்த்து வைக்கபடாத சிக்கலான பிரச்சினை இது. அதனாற்தான் சமுதாய மாற்றத்துக்காக போராடுவNது சுயநிர்ணய உரிமையை அடைய ஓரே வழி என்கிறோம் நாம்.

இலங்கையின் அனைத்து இன மக்களும் ஒன்றுபட்ட சமுதாய மாற்றத்துக்கான புரட்சியை முன்னெடுக்காத வரை இலங்கைக்கு எதிர்காலமில்லை. இந்த போராட்டம் கனவுமல்ல. சமீபத்தில் பல வேலை நிறுத்தங்களை நாம் பார்த்துள்ளோம். யுத்தக் காய்ச்சல் – பிரச்சார திரை அவிழ மக்களின் கேள்விகளுக்கு பதில் தரமுடியாமல் ஆழும் வர்க்கம் திண்டாடப்போவது உண்மை. அத்தருனத்தில் நாம் ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். யுத்தத்துக்கு நிரந்தர முடிவை கொண்டுவர அதைவிட வேறு வழியில்லை.

இலங்கை சாக்கடை அரசியலை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்ற தலைவிதி மக்களுக்கு இல்லை.

In Sri Lanka, politics is a terrible, terrible game. So dirty, absolutely filthy. Decent people do not want to have anything to do with it anymore.
FROM THE MARCH 29, 2004 ISSUE OF TIME MAGAZINE
– சொன்னது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா.- பாம்பின் கால் பாம்பறியும்.

இன்று 26 ஜனவரி இந்தியாவின் குடியரசு தினம்:

republic-day.jpg
இந்தியாவின் 60வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தலைநகர் புதுடெல்லியில் நடந்த விழாவில், குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் தேசியக்கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். விழாவில் கஜகஸ்தான் அதிபர் நூர் சுல்தான் நாஸர்பயேவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

முன்னதாக, டெல்லியின் இந்தியா கேட் பகுதியில் உள்ள அமர்ஜவான் ஜோதி நினைவிடத்தில், ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி மற்றும் முப்படைத் தளபதிகள், வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

குடியரசுத் தின அணிவகுப்பை, குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பார்வையிட்டனர்.

தமிழரை கொல்லவேண்டுமென இராணுவம் எண்ணவில்லையென ஜெயலலிதா கூறியிருப்பது ஆதரவான வார்த்தை இல்லையா? – கருணாநிதி கேள்வி

karunanithi.jpgஇலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று இலங்கை இராணுவம் எண்ணவில்லை என்று ஜெயலலிதா கூறியிருப்பது இலங்கை இராணுவத்திற்கு ஆதரவான வார்த்தைகளா இல்லையா என்று முதலமைச்சர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்விபதில் அறிக்கை வருமாறு;

இலங்கை இராணுவத்திற்கு ஆதரவாக தான் பேசவில்லை என்றும் அப்படி மாயத் தோற்றத்தை உருவாக்க சில தீய சக்திகள் முயல்வதற்குக் கண்டனம் தெரிவிப்பதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளாரே?

இலங்கை வேறுநாடு. அந்த நாட்டுப் பிரச்சினையில் தலையிடுவதில் ஒரு எல்லை உண்டு. இலங்கையில் ஈழம் என்ற நாடு இன்னும் அமையவில்லை. இலங்கைத் தமிழரைக் கொல்ல வேண்டும் என்று சிங்கள இராணுவம் எண்ணவில்லை. ஒரு போர் நடக்கும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கு அல்ல என்று ஜெயலலிதா அளித்த பேட்டி 18ஆம் திகதி அனைத்து நாளிதழ்களிலும் வெளிவந்துள்ளது.

இலங்கைத் தமிழரைக் கொல்ல இராணுவம் எண்ணவில்லை என்று அவர் சொன்னது இலங்கை இராணுவத்துக்கு ஆதரவான வார்த்தைகள் இல்லையா? ஜெயலலிதா முதலில் ஒன்றை சொல்வதும் பிறகு அப்படி சொல்லவே இல்லை என்று வாபஸ் வாங்குவதும் இது முதல்முறை அல்ல. இதுதான் கபட நாடகம். இது புரியாமல் பன்னீர்செல்வம் எதையோ நாடகம் என்றும் அதில் நடிக்க தான் தயாராக இல்லை என்றும் சொல்கிறார்.

இலங்கையில் தமிழர்களின் படுகொலைக்கு விடுதலைப்புலிகள் தான் காரணம் என்று அறிக்கையில் ஜெயலலிதா கூறியியுள்ளாரே?

இதற்குப் பதில் சொல்ல வேண்டியவர்கள் எங்கே பதுங்கியிருக்கிறார்கள் என்று தேடிப் பார்த்து கண்டுபிடியுங்கள்.

இலங்கைத் தமிழருக்காக கருணாநிதி திரட்டிய நிதி, அந்த மக்களுக்குப் போய்ச் சேர்ந்ததாக இதுவரை தகவல் இல்லை. அதை கருணாநிதி தன் குடும்ப நிதியில் சேர்த்துக் கொண்டு விட்டாரோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது என்று ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை பற்றி?

அமெரிக்காவில் இருந்து வந்த ஒரு கோடி ரூபாவுக்கான காசோலைகள் யாரிடம் இருந்து வந்தது என்றே தெரியாமல் தன் கணக்கில் வரவு வைத்துக் கொண்டேன் என்று நீதிமன்றத்திலேயே சொன்னவர் அல்லவா. தான் திருடி, பிறரை நம்பாள் என்ற பழமொழிக்கு ஏற்ப இவ்வாறு கூறியுள்ளார். அந்த நிவாரணப் பொருட்கள் எல்லாம் செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியோடு பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டன என்று பல நாளேடுகளில் செய்தி வந்துள்ளது.

இலங்கைத் தமிழர் நிவாரண நிதியைப் பொறுத்தவரை ஒவ்வொருவரிடம் இருந்தும் காசோலையாகத்தான் வழங்கப்பட்டதே தவிர யாரும் தொகையாக வழங்கவில்லை. என்னிடம் உதவி வழங்கிய அனைவரது பெயரும் ஏடுகளில் வெளியிடப்பட்டது. அந்த நிதி ஒவ்வொரு நாளும் நிதித்துறைக்கு அனுப்பப்பட்டு அரசு இருப்பில் செலுத்தப்பட்டது. முதல்கட்டமாக நிவாரணப் பொருட்கள் வழங்கியது போக மீதி இன்றளவும் அரசு கணக்கில் இருக்கிறது.

மேலும் யாழ்ப்பாணம் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் எழுதிய கடிதம் மத்திய அரசின் வெளியுறவு அமைச்சு மூலமாக கிடைத்தது. இந்திய அரசால் வழங்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்ட பொட்டலங்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் கிடைத்தது. ஒரு வாரத்துக்குத் தேவையான பொருட்கள் அதில் இருந்தன. சமையலுக்கு தேவையான மளிகைப் பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தன. போர் நடந்துகொண்டிருக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் தமிழக மக்களிடம் இருந்து வந்த நன்கொடைப் பொருட்களை இலங்கைத் தமிழர்கள் பெரிதும் பாராட்டி வரவேற்றுள்ளனர்? என்று அதில் கூறியிருக்கிறார்.

இலங்கையில் தமிழ் இனமே அழிகிறது என்ற தலைப்பில் நீங்கள் தீர்மானம் கொண்டு வந்த போது தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வை காட்ட முன்வராமல் அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்ததும் அவர்களை ம.தி.மு.க.பின்பற்றியதும் பற்றி?

இன்னும் தமிழ் இனம் நெல்லிக்காய் மூட்டையாகத்தான் இருக்கிறது என்று எண்ணி நெஞ்சம் பதைபதைக்கிறேன்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினை. இதில் தி.மு.க.செயற்குழுவை மட்டும் கூட்டி முடிவெடுப்பது சரியல்ல என்று ராமதாஸ் கூறியுள்ளாரே?

தி.மு.க.ஜனநாயக இயக்கம். அதன் தலைவராக நான் இருந்த போதிலும் சில முக்கிய முடிவுகளை தன்னிச்சையாக எடுத்து விட முடியாது. முடிவுகளை எடுக்கலாம் என்ற போதிலும் நான் அவ்வாறு சர்வாதிகாரமாக நடந்து கொள்வதில்லை. முதலில் கட்சியில் முடிவெடுத்து பின்னர் அனைத்துக் கட்சிகளையோ, தோழமைக்கட்சிகளையோ கலந்தாலோசித்துத்தான் முடிவு அறிவிப்போம். அனைத்துக் கட்சிக்கூட்டங்களில் கலந்து கொள்ளும் கட்சியினர் கூட முன்னதாக தங்கள் கட்சிக்குள் விவாதித்து ஒரு முடிவு எடுத்துக் கொண்டுதான் வருவார்கள்.

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றத் தலைவர் கூறும்போது, ?காங்கிரஸ் அரசையும் மத்திய அரசையும் தமிழக அரசு பகைத்துக் கொள்ள விரும்பவில்லை எனத் தெரிகிறது? என்று கூறியிருக்கிறாரே?

ஆம். தி.மு.க.வோடு தோழமை கொண்டுள்ள கூட்டணியில் உள்ள கட்சியின் அரசுதான் காங்கிரஸ் அரசு. கூட்டணி தர்மத்தைப் பின்பற்ற வேண்டும் என தி.மு.க.நினைப்பது தவறல்லவே என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

வன்னியில் தினமும் அப்பாவி பொதுமக்கள் பலியாகும் நிலையில் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஏன்?

wanni.jpgவன்னியில் இடம்பெற்றுவரும் இராணுவ நடவடிக்கையின்போது நடத்தப்படும் அகோர ஷெல் தாக்குதல்கள், விமானக் குண்டு வீச்சுகள், பல்குழல் பீரங்கித் தாக்குதல்களினால் தினமும் அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டும் படுகாயப்படுத்தப்பட்டும் வரும் நிலையில் அம்மக்கள் தொடர்பில் எவ்வித அக்கறையுமற்ற நிலையில் இன்று நடத்தப்படும் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை பகிஷ்கரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ச.கனகரட்ணம், ந.சிவசக்தி ஆனந்தன், ச. வினோநோகராதலிங்கம், சிவநாதன் கிஷோர் ஆகியோர் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

வன்னியில் அரசபடையினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கை காரணமாக என்றுமே இல்லாத மனிதப் பேரவலம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் வாழ்விடங்கள், அவர்களின் தற்காலிக இருப்பிடங்கள்

மீது தினமும் கண்மூடித்தனமான ஷெல், விமானத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. தினமும் அப்பிரதேசம் முழுவதும் மரண ஓலம் கேட்ட வண்ணம் உள்ளது. அங்கு பொதுமக்கள் இராணுவத்தினரின் தாக்குதலில் கொல்லப்படாத நாட்கள் இல்லை. இராணுவத்தினரின் ஷெல்தாக்குதலில் பலியானவரின் இறுதிக் கிரியைகள் கூட நடத்த முடியாத அவல நிலையை பொதுமக்கள் அங்கு எதிர்நோக்கி உள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில், போராட்டத்துடன் எவ்விதத்திலும் தொடர்பு படாத 4 இலட்சத்து 75 ஆயிரம் பொது மக்கள் மிகவும் குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கியுள்ளனர். இராணுவத்தினரின் கடுமையான ஷெல்தாக்குதலில் சிக்கி கடந்த ஒன்பது நாட்களில் நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்து உள்ளனர். காயம் அடைந்தவர்களில் பலர் தமது அங்க அவயங்களை இழந்து உள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சாதாரண பொதுமக்கள் மீது தினமும் நடத்தப்படும் தாக்குதல் குறித்தோ அவர்களின் நிலை குறித்தோ அரசாங்கம் எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை. மக்களின் உண்மையான நிலை அறிந்தும் படையினரும் எதுவும் தெரியாதவர்கள்போல் உள்ளனர். மேலும் விடுவிக்கப்படாத வன்னி மக்களுக்கு பாதுகாப்புப் படையினரால் பாதுகாப்பு வலயம் நிறுவப்பட்டுள்ளது.எனினும் குறித்த பாடசாலைகளில் இயங்கிவந்த வைத்தியசாலைகள் மற்றும் தேவாலயங்கள் உள்ள பகுதிகளிலும் ஷெல்கள் வீழ்ந்து வெடித்துள்ள இந்நிலையில் அங்கு தஞ்சமடைந்த மக்களின் நிலைமையும் அபாய கட்டத்தை அடைந்துள்ளது.

புதுக்குடியிருப்பு அரச வைத்தியசாலையை உடன் மூடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மனிதாபிமான அரச வைத்திய உதவிகளை எதிர்பார்த்திருக்கும் வன்னிமக்களின் உயிரோடு விளையாடும் பாதகச் செயலாகும்.

மேலும் யுத்த நடவடிக்கையில் காயம் அடைந்து மேலதிக அவசர சிகிச்சைக்காக வன்னிப்பகுதியில் இருந்து வவுனியா பொது வைத்திய சாலைக்கு கொண்டுவரப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு குணம் அடைந்த பலர் மீண்டும் வன்னிக்கு திரும்பிச் செல்ல முடியாத நிலையிலுள்ளனர். வவுனியாவிலேயே இவர்கள் தங்கவேண்டி உள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் வன்னியில் இருந்து காயத்துடன் வந்து வவுனியா வைத்தியசாலையில் குணம் அடைந்தவர்கள் அவர்களின் குடும்பத்தை விட்டு வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டு வவுனியாவில் தங்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இராணுவத்தினரால் அழைத்து வரப்பட்டு செட்டிக்குளம் மெனிக் பாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை அவர்களின் உறவினர்களோ, நண்பர்களோ பார்வையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் இவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் முசலி சிலாவத்துறை அரிப்பு பகுதியில் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு இராணுவ நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது இதன் விளைவாக கொக்கு, படையான், கொண்டைச்சி, முள்ளிக்குளம், முசலி, சிலாவத்துறை, அரிப்பு, வேப்பங்குளம், பண்டார வெளி, புது வெளி, குளாங்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 1500 இற்கும் அதிக தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தனர்.

மீனவர்களாகவும் விவசாயிகளாகவும் மன்னார் மாவட்ட பொருளாதார தரத்துக்கு கணிசமான பங்களிப்பு நல்கிய மேற்படி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தற்பொழுது தமது அசையும் அசையா சொத்துக்களையும் முற்றாக இழந்து நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள வயல் வெளிகளிலும் கைவிடப்பட்ட அரிசி ஆலைகளிலும் பொதுநோக்கு மண்டபங்களிலும் உறவினர் வீடுகளிலும் தற்காலிகமாக வசித்து வருகின்றனர்.

தற்பொழுது சிலாவத்துறை பகுதி முற்றாக விடுவிக்கப்பட்டதாக அரசாங்கம் கூறிவரும் நிலையில் அங்கிருந்து இடம் பெயர்ந்த மக்களை இரண்டு வருடங்கள் கழிந்த நிலையில் மீளக்குடி அமர்த்தவில்லை. வன்னித்தேர்தல் மாவட்டமானது முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மூன்று நிர்வாக மாவட்டமாக உள்ளது குறித்த மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் வாக்குகளிலேயே நாம் ஐந்து பேரும் பாராளுமன்ற உறுப்பினர்களாக வந்த நிலையில் நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் தற்போது முல்லைத்தீவில் நடைபெறும் மோதலை அடுத்து கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இந்த வகையில் கடந்த மூன்று நாட்களில் இராணுவத் தாக்குதல் காரணமாக வன்னிப்பகுதியில் ஐம்பதுக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதுடன் அதிக எண்ணிக்கையானோர் கடும் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக வன்னிப் பகுதியில் இடம்பெற்ற ஷெல் தாக்குதலில் காயம் அடைந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டவர்களில் சிலர் தீவிர சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. எனினும், குறித்த காயம் அடைந்தவர்களுக்கு தேசிய அடையாள அட்டை இல்லை என்ற காரணத்தினால் அவர்களை அனுராதபுர வைத்தியசாலைக்கு அனுப்பமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ச்சியான இடம்பெயர்வு, அகோர ஷெல் வீச்சு காரணமாக மிகவும் மரண அச்சம் நிறைந்த சூழ்நிலையில் காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்கு அனுப்பும்போது தேசிய அடையாள அட்டையுடன் அனுப்பும் நிலை எச்சந்தர்ப்பத்திலும் எவருக்கும் ஏற்படாது. இவ்வகையில் தேசிய அடையாள அட்டை வரவில்லை என்ற காரணத்திற்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு தீவிர சிகிச்சைக்கு அனுப்பப்பட்டவர்கள் சிலர் மரணத்துடன் போராடிக் கொண்டிருக்கின்றனர். இவ்விடயம் எந்த நியாய புத்தி உடையவர்களாலும் கருணை உள்ளம் கொண்டவர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.

எமக்கு வாக்களித்து நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் இம் மக்கள் மோதலினால் உயிர்கள் உடமைகள் மற்றும் அவர்களுடைய அங்க அவையங்களை இழந்து பெரும் மனிதபேரவலத்துக்கு உள்ளாகி நடைபிணங்களாக உலாவித்திரியும் சந்தர்ப்பத்தில் இன்று நடைபெறும் மக்களின் நலனில் அக்கறை கொள்ளாத குறித்த மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தை நாம் எமது மக்களின் துன்ப நிலையை வெளிஉலகத்துக்கு தெரியப்படுத்தும் நோக்கில் பகிஷ்கரிக்கின்றோம்

லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு குறைவு

Lasantha_Wickramathunga“சண்டே லீடர்’ பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை பற்றி புலனாய்வு செய்வதற்கு பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் ஒத்துழைப்பில் திருப்தியற்ற நிலை காணப்படுவதாக கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸார் தெரிவித்தனர்.  இது தொடர்பில் பிரதிப் பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான ரஞ்சித் குணசேகர கருத்துத் தெரிவிக்கையில்; தாக்குதலுக்கு பயன்பட்ட மோட்டார் சைக்கிளின் பதிவிலக்கத்தை அறிவதற்காக சம்பவ இடத்திலிருந்தவர்களின் சாட்சியங்களை புலனாய்வுக் குழு பதிவு செய்தது. எனினும் அவர்களின் முயற்சி பயனளிக்கவில்லை.

இக் கொலை விசாரணைகள் முன்னேற்றமடைய பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை. இந்நிலையில் விசாரணைகள் விஞ்ஞான பகுப்பாய்வு ரீதியான அறிக்கைகளிலேயே தங்கியுள்ளன. எனவே விசாரணைகளை முன்னோக்கி எடுத்துச் செல்ல நிச்சயமாக நீண்ட காலம் தேவைப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணைகளின் போது உரிய சாட்சியங்களைப் பதிவு செய்யவேண்டும். இல்லாவிடின் பொலிஸரால் சமர்ப்பிக்கப்படும் ஆதாரங்களை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிடும்.

அத்துடன் நீதிமன்றங்களில் சாட்சியங்களை மிகவும் கவனமாக சமர்பிக்க வேண்டும். இன்னமும் 10 நாட்களில் இன்னொரு தடயம் கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்க்கின்றோம். என்றும் அவர் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழக விடுதி மேற்பார்வையாளர் மீது துப்பாக்கிச் சூடு

pistal.jpgயாழ். பல்கலைக்கழக விடுதி மேற்பார்வையாளர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் உரும்பிராயைச் சேர்ந்த மாணிக்கம் பிரேமச்சந்திரன் (வயது 41) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே காலில் காயமடைந்துள்ளார்.

ஆனந்தகுமாரசாமி விடுதியில் பணியாற்றிய இவர் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் மதிய உணவுக்காக கொக்குவிலில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்குச் சென்றுவிட்டு விடுதிக்கு திரும்பி வரும் வழியில் கொக்குவில் பொற்பதிப் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இருவர் இவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து இவர் யாழ்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெப்ரவரி 15 இற்குள் தி.மு.க. பொதுக்குழு இலங்கைப் பிரச்சினை குறித்து முக்கிய தீர்மானம்

w_n.jpgஇலங் கைப் பிரச்சினை குறித்து பெப்ரவரி 15 ஆம் திகதிக்குள் தி.மு.க. பொதுக்குழு கூடி முக்கிய முடிவெடுக்கும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சனிக் கிழமை “சங்கத் தமிழ் பேரவை’ என்ற அமைப்பு நடத்திய பாராட்டு விழாவில் அவர் பேசியதாவது; “இந்த விழாவில் என்னைப் பலரும் பாராட்டினார்கள். பொன்னாடைகள், பட்டாடைகள் அணிவித்தார்கள். ஆனால், நான் முழு மகிழ்ச்சி அடையவில்லை.

பக்கத்து நாட்டில் நமது தமிழ் மக்கள் தங்களது தாயகத்தில் வாழ முடியாமல் துரத்தப்படுகிறார்கள். அவர்களின் துன்பத்துக்கு நாம் எப்போதும் முடிவு கட்டப்போகிறோம்? அதற்காகத்தான் சட்டப்பேரவையில் மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தோம். இலங்கைப் பிரச்சினையை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் தேட முயற்சித்து வருகிறார்கள். நாங்கள் இந்தப் பிரச்சினையை அரசியலாக்க விரும்பவில்லை. மத்திய அரசு இப்பிரச்சினையில் தனது கடமையை ஆற்ற வேண்டும்.

வெள்ளிக்கிழமை (ஜன.23) சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்போது தி.மு.க. பொதுக்குழு கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும் என்றேன். அதன்படி வரும் பெப்ரவரி 15 ஆம் திகதிக்குள் தி.மு.க. பொதுக்குழு கூடி முக்கிய முடிவெடுக்கும். இந்த அறிவிப்பு நான் உங்களுக்கு அளிக்கும் பட்டாடையாகும்.

தருமபுரத்திற்கு கிழக்கே புலிகளின் 3 படகுகள் அழிப்பு; 2 படகுகள் சேதம் – படைத்தரப்பு

_bort.jpgமுல்லைத் தீவில் தருமபுரத்திற்கு கிழக்கே நேற்று முன்தினம் சனிக்கிழமை பிற்பகல் படையினரின் முன்னரங்கக் காவல் நிலைகளை உடைத்து கொண்டு முன்னேற முயன்ற விடுதலைப் புலிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று படகுகள் அழிக்கப்பட்டும் இரு படகுகள் சேதமடைந்துமுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்புத் தரப்பு மேலும் கூறுகையில்;

கல்மடுக்குளக்கட்டைத் தகர்த்த புலிகள் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்த போது அதனூடாக ஐந்து படகுகளில் தாக்குதல் நடத்த வந்ததுடன், அதற்கு வசதியாகக் கடும் ஆட்லறி ஷெல் தாக்குதலையும் மோட்டார் குண்டுத் தாக்குதலையும் நடத்தினர். நான்கு அடி உயரத்திற்கு வெள்ளம் வடக்குப் பக்கமாகப் பாய்ந்த போது கால்நடைகள், வீட்டுப் பொருட்கள் மற்றும் விவசாயப் பொருட்கள் யாவும் அடித்துச் செல்லப்பட்டன. புலிகளின் தொடர்ச்சியான கடும் ஷெல் தாக்குதலுக்கு மத்தியில் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

எனினும், இதன் போது ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை மதிப்பிடப்படவில்லை. இதேநேரம், நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.45 மணிமுதல் தர்மபுரத்திற்கு தெற்கேயும் கல்மடுவுக்கு வடக்கேயும் 57 ஆவது மற்றும் 58 ஆவது படையணிக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சமர் நடைபெற்றுள்ளது.

அதிகாலை 1.45 மணியளவிலும் 3 மணியளவிலும் நடைபெற்ற மோதல்களில் புலிகள் பலத்த இழப்புகளைச் சந்தித்துள்ளனர். இதேநேரம், விசுவமடுவுக்கு மேற்கேயிருந்து முன்னேறும் 57 ஆவது படையணியினர் சனிக்கிழமை புளியம்பொக்கனைப் பகுதியிலுள்ள புலிகளின் நிலைகள் மீது கடும் தாக்குதலைத் தொடுத்தனர். உடையார்கட்டுக்குளம், விசுவமடுக்குளம், புதுக்குடியிருப்பின் தென்பகுதியிலும் கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளன. இந்த மோதல்களில் புலிகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

முல்லைத்தீவு முற்றுப் புள்ளியல்ல! புலிகளின் புதிய அத்தியாயம்! : த ஜெயபாலன்

Mahinda RajapaksaPirabaharan_Eelamபுலிகளின் கோட்டையாக விளங்கிய கடைசி நகரான முல்லைத்தீவு நேற்று (ஜனவரி 25) கைப்பற்றப்பட்டதாக இராணுவத் தளபதி சரத்பொன்சேகா உத்தியோகபூர்வமாக அறிவித்தார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆயுட்காலக் குத்தகைக்கு எடுத்துக் கொண்ட வே பிரபாகரனின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையிலான யுத்தம் சில மாதங்களுக்கு முன்வரை சற்றும் எதிர்பாராத புதிய திருப்பு முனையில் வந்து நிற்கின்றது. இலங்கை அரச படைகள் புலிகளின் ஒவ்வொரு கட்டுப்பாட்டுப் பகுதியையும் தம்வசப்படுத்துவதை நேரடியாக அஞ்சல் செய்து வர கிறிக்கட் ஆட்டத்தில் ஓட்டங்களை குவிக்கும் குதுகலத்தைப் போல தெற்கில் ஜனாதிபதி மகிந்தவின் ஆளும்கட்சி பட்டாசுகள் கொழுத்தி குதூகலித்தது. புலம்பெயர் நாடுகளில் உள்ள புலியெதிர்பாளர்களும் மகிந்த அரசின் வெற்றிக் களிப்பில் தங்களை இணைத்துக் கொண்டனர். புலம்பெயர் நாடுகளிலுள்ள புலி ஆதரவாளர்களோ பணம் கட்டிய குதிரை (புலி) பின்வாங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் செய்வதறியாது குழம்பிப் போயுள்ளனர்.

இதுவரை இராணுவம் கைப்பற்றிய விடுதலைப் புலிகளின் பிரதேசங்களில் இருந்த மக்கள் விரும்பியோ விரும்பாமலோ புலிகளுடைய திசையிலேயே செல்ல வேண்டியதாயிற்று. ‘Trapped and Mistreated : LTTE Abuses Against Civilians in the Vanni’ என்ற தலைப்பில் நியுயோர்க்கை தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு யுத்தத்தில் பின்னடையும் விடுதலைப் புலிகள் வன்னி மக்களை ஆபத்தான யுத்த சூழலுக்குள் பலாத்காரமாக தடுத்து வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளது. ‘In research conducted by Human Rights Watch in Sri Lanka from October through December 2008 — including 35 interviews with eyewitnesses and humanitarian aid workers working in the north — we found extensive evidence of ongoing LTTE forced recruitment of civilians, widespread use of abusive forced labor, and improper and unjustified restrictions on civilians’ freedom of movement.” என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு ஜனவரி 9ல் வெளியிட்ட 21 பக்க அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

ஜனவரி 21ல் முல்லைத்தீவில் உள்ள தேவிபுரம் உடையார்கட்டு சுகந்திரபுரம் சுகந்திரபுரம் கொலனி சுகந்திரபுரம் மத்தி கைவேலி வடக்கு இருட்டு மடு போன்ற இடங்களை பாதுகாப்பு வலயங்களாக இலங்கை அரச படைகள் அறிவித்து இருந்தன. அடுத்த 48 மணி நேரத்தில் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு விடுத்த அறிக்கையில் யுத்த பிரதேசங்களில் இருந்து தப்பி வரும் தமிழ் மக்களுக்காக அமைக்கப்பட்ட நலவாழ்வு நிலையங்களை சிறைக் கூடங்களை இயக்குவது போல் இலங்கை இராணுவத்தினர் நடத்துவதாக குற்றம்சாட்டியுள்ளது. அரசாங்கம் யுஎன் மற்றும் சர்வதேச உதிவி அமைப்புகளை வெளியேற்றியதால் யுத்த பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட உதவியே கிடைப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் ஆசிய பிரிவு இயக்குநர் பிராட் அடம்ஸ் தெரிவித்து உள்ளார்.

எந்த மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுக்கப் போவதாக கூறி ஏட்டிக்குப் போட்டியாக இந்த யுத்தத்தை நடத்துகிறார்களோ அந்த மக்கள் பற்றி இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் கவனத்தில் கொள்ளவில்லை. தொடர்ச்சியான யுத்த சூழலுக்குள் 200000 – 300000 மக்கள் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். தற்போது அவ்வளவு மக்களும் ஒரு குறுகிய பிரதேசத்தினுள் செறிவாகிப் போயுள்ளனர். 200000 – 300000 வைத்துக் கொண்டு புலியும் – சிங்கமும் யுத்தத்தில் இறங்கி உள்ளனர். கடந்த நான்கு வாரங்களாக இப்பிரதேசத்தில் இடம்பெறும் தாக்குதல்களால் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இம்மக்கள் மத்தியில் இந்த யுத்தத்தை நடத்துவது மிகப்பெரும் மனித அவலத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

”As the LTTE has lost ground to advancing government forces, civilians have been squeezed into a shrinking conflict zone. The encroaching fighting has placed their lives increasingly in danger. Many spend their day under the constant sound of nearby small-arms fire, shelling, and bombing. Because of a near total government ban on access by humanitarian agencies and the media, the suffering of the civilian population of the Vanni receives scant attention outside Sri Lanka.” என மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு இம்மக்களின் வாழ்நிலையை விபரித்து உள்ளது.

இந்த 200000 – 300000 மக்கள் பற்றிய கவனத்திலும் பார்க்க இந்த யுத்தத்தின் வெற்றி தோல்வி பற்றிய ஆராய்ச்சிகளும் கல்மடு குளக்கட்டு உடைப்பின் இராணுவ முக்கியத்துவமும் பற்றியே கவனம் உள்ளது.

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடுவதாகப் புறப்பட்ட புலிகள், தங்களது பாதுகாப்பு அரணாக வன்னி மக்களை பயன்படுத்த முனைகிறார்கள் என்ற குற்றச்சாட்டை முற்றாக மறுத்துவிட முடியாது. மக்களது இழப்புகளை அரசியலாக்கும் புலிகளின் மூன்றாம்தர அரசியல் பிரச்சாரம் ஒன்றும் புதிய விடயமல்ல. அதேசமயம் அந்த மக்கள் இலங்கை இராணுவத்தினர் மீது கொண்டுள்ள அச்சமும் கடந்தகால நிகழ்வுகளும் ‘தெரியாத பேயிலும் பார்க்க தெரிந்த பேய் மேலானது’ என்று எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கும். மேலும் இந்த மக்கள் நீண்ட காலம் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தவர்கள். விரும்பியோ விரும்பாமலோ அவர்களுடன் தொடர்புபட்டவர்கள். அவர்களுடைய உறவுகள் கட்டாய இராணுவப் பயிற்சி கட்டாய உழைப்பு ஆகியவற்றில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பார்கள். இவற்றை அரசபடைகள் எவ்வாறு கையாள்வார்கள் என்ற அச்சம் நியாயமானது.

மேலும் பரிதவிக்கும் மக்களை போரில் ஈடுபட்டு இருக்கும் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் விடுவது மனிதாபிமானமற்ற செயல். சர்வதேச உதவி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பு வலயங்கள் உருவாக்கப்பட்டால் அவற்றை நோக்கி மக்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும். இராணுவக் கட்டுப்பாட்டில் மக்களுக்கான பாதுகாப்பு வலயங்கள் அமைப்பதென்பது யதார்த்தமற்றது.

எந்தவொரு இராணுவ வெற்றியும் நிரந்தரமானதல்ல. இது புலிகளும் இலங்கை இராணுவமும் உணர மறுக்கின்ற உண்மை. இன்று இராணுவத்தின் கை ஓங்கியுள்ளது. விடுதலைப் புலிகளின் கடைசிக் கோட்டையான முல்லைத் தீவையும் கைப்பற்றியது விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கைகளுக்கு வைக்கப்பட்ட முற்றுப் புள்ளியல்ல. விடுதலைப் புலிகளால் அதன் முளையிலேயே அழிக்கப்பட்ட இயக்கங்கள் இரு சகாப்தங்களைக் கடந்தும் இன்றுவரை இயங்குகின்றன. அப்படி இருக்கையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் புலிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட முடியாது.

புலிகளுக்கும் இலங்கை அரச படைகளுக்குமான இந்த யுத்தத்தில் இலங்கை அரச படைகளை மரபுவழி இராணுவமாக புலிகளால் எதிர்கொள்ள முடியவில்லை என்பது உண்மையே. ஹமாஸ் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளால் இஸ்ரேலை எதிர்கொள்ள முடியவில்லை. தலிபானால் அமெரிக்க மற்றும் நேசநாட்டு படைகளை எதிர்கொள்ள முடியவில்லை. அதேசமயம் இஸ்ரேலாலும் அமெரிக்காவாலும் யுத்தத்தை வெல்லவும் முடியவில்லை. இதுவே இலங்கைக்கும் பொருந்தும். இன்னுமொரு ஆப்கானிஸ்தானையும் இன்னுமொரு ஈராக்கையும் இலங்கையில் உருவாக்கும் இராணுவ பலம் புலிகளுக்கு நிச்சயம் உண்டு. புலிகள் புதிய அத்தியாயம் ஒன்றை ஆரம்பிக்கத் தயாராகிவிட்டார்கள் என்பதனையே இந்த யுத்தத்தின் போக்கு காட்டுகிறது.

ரெலோ அழிக்கபட்டபோதும் சரி கருணா குழு அழிக்கப்பட்ட போதும் சரி அவ்வமைப்புகளின் வேறு  வேறு மட்டத் தலைமைகள் அழிக்கப்பட்டன. கட்டளைக் கட்டமைப்பு தகர்க்கப்பட்ட அவற்றின் உறுப்பினர்கள் சிதறி வெளியேறினர். உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டனர். ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இலங்கை அரசாங்கத்தின் இந்த விடுதலைப் புலிகளை அழிக்கும் யுத்தத்தில் இவையெதுவுமே நடைபெறவில்லை. இலங்கை அரச படைகளுக்கும் புலிகளுக்குமான இந்த யுத்தம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயெ இடம்பெற்று உள்ளது. யுத்தத்தின் பிற்பகுதிகளில் அங்குமிங்குமாக சிறு தாக்குதல்களே இடம்பெற்று இருந்தது. புலிகள் ஒவ்வொரு பிரதேசமாக மிகவும் நிதானமாக தங்கள் ஆயுத தளபாடங்களுடன் திட்டமிட்ட முறையில் பின்வாங்கி உள்ளனர். தமது பக்கத்தில் ஏற்படக் கூடிய உயிரிழப்புகளையும் தவிர்த்து உள்ளனர். குறிப்பிட்டு சொல்லக் கூடிய வகையில் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் தளபதிகள் யாரும் உயிரிழக்கவும் இல்லை. சரணடையவும் இல்லை. புலிகளின் பங்கர்களைத் தவிர ஆயுத தளபாடங்கள் கைப்பற்றப்படவும் இல்லை. புலிகளின் கட்டளை அமைப்பு சீர்குலையவும் இல்லை. நிதானமாக தங்களின் ஆயுத தளபாடங்களுடன் பின் வாங்கி உள்ளனர். இலங்கை அரசாங்கம் புலிகளிடம் இருந்த கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை புலிகள் பின்வாங்கிச் செல்ல தன் வசப்படுத்தி உள்ளது. புலிகளின் இறுக்கமான கட்டமைப்பில் இந்த யுத்தம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கொள்ள முடியாது.

புலிகளின் மற்றுமொரு உறங்கு நிலைக் காலமாக இது அமைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த உறக்கம் இலங்கையின் வனப் பிரதேசங்களிலோ பணத்தால் எதனையும் வாங்கும் ஒரு நாட்டிலோ அல்லது சர்வதேச நாடுகளின் கொடிகள் பறக்கும் புலிகளின் கப்பல்களில் சர்வதேச கடலிலோ அல்லது இவை எல்லாவற்றிலுமாகவோ இருக்கலாம். இந்த உறங்கு காலத்தின் காலம் வே பிரபாகரனுக்கே வெளிச்சம். இந்த உறங்கு காலம் சில வாரங்களாகவோ அல்லது சில மாதங்களாகவோ இருக்கலாம். ஆனால் புலிகள் தங்கள் இருப்பை தெரியப்படுத்துவார்கள்.

புலிகள் தமிழ் மக்களது அரசியல் உரிமையை வென்றெடுக்கும் அரசியல் பலத்தை என்றைக்குமே கொண்டிருக்கவில்லை. அவர்களுடைய வரட்டுத்தனமான இராணுவப் போக்குக்கு கிடைத்த மிகப்பெரும் அடி இந்த யுத்தம். ஆனால் இந்த இராணுவக் கண்ணோட்டத்திற்கு வெளியே வரக்கூடிய ஆற்றல் வே பிரபாகரனுக்கு உண்டா என்பது சந்தேகமே. அப்படி ஒன்று நடந்தால் அது ‘தொப்பிக்குள் இருந்து முயல்’ எடுப்பதற்கு ஒத்ததாக இருக்கும்.

இந்த யுத்தத்தில் தீவிர ஆர்வம்காட்டும் ஜனாதிபதி மகிந்த நாட்டின் இந்நிலைக்கு காரணமான இன முரண்பாட்டிற்கான அரசியல் தீர்வு பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. தன்னிடம் சரணாகதி அடைந்துள்ள கிழக்கின் முதல்வரையே ஜனாதிபதியால் திருப்திப்படுத்த முடியவில்லை. அப்படி இருக்கையில் இந்த யுத்தத்தால புலிகளை வென்று தமிழ் மக்களுக்கு ஜனநாயகக் காற்றை சுவாசிக்க வைக்கப் போவதாகக் கூறும் வாய்ச்சவடால்கள் தமிழ் மக்களிடம் செல்லாது. புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் உண்மையிலேயே வெல்வதாக இருந்தால் முதல் தமிழ் மக்களின் உள்ளங்களை வெற்றி கொள்ள வேண்டும். அதற்கு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதனைச் செய்யாத வரை அது புலிகளுக்கு விளைநிலமாகவே இருக்கும்.

Related Articles:

தவறிப் போகும் பிரபாவின் தலைமை : த ஜெயபாலன்

2008ல் சொல்ல என்ன இருக்கிறது? : த ஜெயபாலன்

யுத்தத்தை நிறுத்துங்கள்!! வன்னி மக்களை விடுவியுங்கள்!!! – ஈஸ்ற்ஹாம் பிரதான வீதியில் ‘வேட்டையாடு விளையாடு’ : த ஜெயபாலன்

விடுதலைப் புலிகள் செலுத்தும் யுத்தத்தின் விலை : த ஜெயபாலன்