2009

2009

A-9 பாதை படையினரின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் : தொகுப்பு – ஏகாந்தி

a-9-road.jpg23 வருடங்களுக்கு பின்னர்  A-9 பிரதான வீதி முழுமையாக பாதுகாப்பு படையினரின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.  இந்த அறிவித்தலை நேற்று (09) முப்படைகளின் பிரதம தளபதி என்ற அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலத்திரனியல் ஊடகங்களின் மூலம் நேற்று (09) நாட்டு மக்களுக்கு உத்தியோகபூர்வமாக விடுத்தார்.

கண்டி யாழ்ப்பாணப் பாதையான A-9  சுமார் 270 கிலோமீற்றர் நீளமுடையது. கடந்த 23 ஆண்டுகளாக  A-9 பாதையில் வன்னிப் பிரதேசத்தில் இடைக்கிடையே புலிகளின் கட்டுப்பாடு நிலவியது தெரிந்ததே.

 A-9 பிரதான பாதையில் ஓமந்தை தொடக்கம் முகமாலை வரை இடைக்கிடையே படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த போதும்கூட,  23 வருடங்களுக்கு பிறகு படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இது பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும் என்றும் தெரிவித்தார்.

இது குறித்து இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

_army.jpgஓமந்தை சோதனைச் சாவடியிலிருந்து முகமாலை வரையிலான 96 கிலோ மீற்றர் பிரதேசமே தற்பொழுது முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது. முகமாலை மற்றும் கிளாலி பிரதேசங்களிலிருந்து படை நடவடிக்கைகளை ஆரம்பித்த இராணுவத்தின் 53 வது மற்றும் 55 வது படைப் பிரிவினர் பளை, சோரன்பற்று ஆகிய பிரதேசங்களை நேற்று முன்தினம் (08) கைப்பற்றினர். அங்கிருந்து முன்னேறிய படையினர் நேற்று (09) இயக்கச்சியையும், ஆணையிறவு பிரதேசத்தையும் முழுமையாகக் கைப்பற்றி தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். ஆணையிறவிலிருந்து முகமாலை வரையான 20 கிலோ மீற்றர் பிரதேசத்தை குறுகிய நாட்களுக்குள் படையினர் மீட்டெடுத்துள்ளதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர் ஆணையிறவை விடுவித்தமையூடாக  A-9 பிரதான வீதியை இணைக்க முடிந்ததாக குறிப்பிட்டார்.

1991 ஆம் ஆண்டு ஆணையிறவில் பாதுகாப்பு படையினர் பாரிய முகாம்களை அமைத்தமை புலிகளுக்கு தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க மிகவும் இடையூறாக அமைந்திருந்தது. ஆணையிறவின் மீது தமது பூரண கவனத்தை செலுத்தியிருந்த புலிகள் 1991 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் திகதி ஆணையிறவு பிரதேசத்தை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். ஆணையிறவிலுள்ள தமது நிலைகளையும், முக்கிய தளங்களையும் பாதுகாத்துக் கொள்ள 1991 ஜூலை மாதம் 14 ஆம் திகதி வெற்றிலைக்கேணி பிரதேசத்திற்கு படையினர் அனுப்பிவைக்கப்பட்டனர்.  ஜெனரல் டென்சில் கொப்பேகடுவவின் தலைமையில் படை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி படையினரின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. ஆணையிறவை கைப்பற்றும் படை நடவடிக்கைகளின் போது அப்போதைய பிரிகேட் கொமாண்டராக தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா கடமையாற்றியதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி ஆணையிறவு புலிகள் வசமானதை அடுத்து நேற்று (09) மீண்டும் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
A-9  பிரதான வீதி ஓமந்தையிலுள்ள இராணுவச் சோதனைச் சாவடியை அடுத்து புலிகளின் சோதனைச் சாவடி அமைந்திருந்தது. இந்த பிரதேசத்தை ஊடுருவி யாழ். குடாநாட்டுக்குச் செல்பவர்களுக்கு விசேட பாஸ் நடைமுறைகளை புலிகள் அமுல்படுத்தியிருந்தனர். வாகனங்களில் செல்பவர்களிடம் வரி அறவிட்டனர். சொந்த பாவனைக்காக பொருட்கள் எடுத்துச் செல்பவர்களிடம் கூட வரி அறவிடப்பட்டது. வர்த்தகர்களிடம் வரி அறவிட்டதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலைக்கு யாழ். குடாநாட்டிலுள்ள வர்த்தகர்கள் தள்ளப்பட்டனர்.

A-9 மீட்டெடுக்கப்பட்டதன் ஊடாக பொது மக்கள் எவ்வித கெடுபிடிகளும் இன்றி தரைவழி பாதையூடாக மக்கள் யாழ். குடாவுக்கு சுதந்திரமாக சென்றுவர நல்லதொரு சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.  பெருந்தொகைப் பணத்தை செலவு செய்து விமானத்தின் மூலம் யாழ். – கொழும்பு சென்றவர்கள் இனி A-9  பாதையூடாக செல்லும் வாய்ப்பை படையினர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர் என்றும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக் காட்டினார்.

இவ்வாறாக இராணுவப் பேச்சாளர் கருத்துத் தெரிவித்துள்ள போதிலும்கூட, A-9 பாதை பொதுமக்களின் பாவனைக்காக எப்போது திறக்கப்படும் என்ற அறிவித்தல் இதுவரை வெளியிடப்படவில்லை. தற்போது வன்னிப் பகுதியில் தொடர்ச்சியான யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் A-9 பாதை விரைவாக பொது மக்களின் பாவனைக்கு விடப்படும் எனவும் எதிர்பார்க்க முடியாது.

 A-9 வீதி படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருப்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள சில கருத்துக்கள். கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

வீ. ஆனந்தசங்கரி
(கிளிநொச்சி முன்னாள் எம்.பி)

இது ஒரு பெரிய வரப்பிரசாதம். இதனையே மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்தார்கள். இப்பாதை திறக்கப்பட்டிருப்பதன் பயனாக யாழ். குடாநாட்டுக்குத் தரை வழியாக சென்று வரக் கூடிய வாய்ப்புக் கிடைக்கப் பெற்றிருக்கிறது. இனிமேல் தரைவழியாக யாழ்ப்பாணத்திற்கு சென்று வர போக்குவரத்து சிரமங்கள் இராது. இப்பாதையைத் திறந்ததன் மூலம் அரசாங்கம் யாழ். குடா நாட்டு மக்களுக்கு பாரிய உபகாரத்தைச் செய்திருக்கிறது. இது என்றும் மறக்க முடியாத உபகாரம்.

புலிகள் இயக்கத்தினர் இப்பாதையை இழுத்து மூடியதனால் யாழ். குடாநாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். அம்மக்களின் பொருளாதாரம் முடக்கப்பட்டது. புலிகள் இயக்கத்தினரின் இந் நடவடிக்கையால் யாழ். குடாநாட்டு மக்கள் வறுமைப் பிடிக்குள் பிடித்துத் தள்ளப்பட்டார்கள். பொருட்களின் விலைகள் முன்னொரு போதுமே இல்லாத அளவுக்கு அதிகரித்தன. யாழ். குடாநாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க முடியாமல் திண்டாடினார்கள்.

புலிகள் இயக்கத்தினர் தரைவழி பாதையை மூடிய போதிலும் அரசாங்கம் மக்களை கைவிடவில்லை. யாழ். குடாநாட்டு மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவு மற்றும் பொருட்களைக் கடல் வழியாக சரக்கு கப்பல்களில் அரசாங்கம் அனுப்பி வருகின்றது. இதுவும் அரசாங்கம் யாழ். குடாநாட்டு மக்களுக்கு செய்து வரும் மறக்கமுடியாத பேருபகாரமாகும்.

புலிகள் இயக்கத்தினர் இப்பாதையை இழுத்து மூடாததற்கு முன்னர் இப்பாதை வழியாகத் தினமும் 60, 70 லொறிகளில் யாழ். குடாநாட்டு உற்பத்தி பொருட்கள் தென்பகுதிக்கு வரும். அவற்றில் மரக்கறி, கிழங்கு வகைகள், மீன் வகைகள், கருவாடு, இறால், வாழைப்பழம் போன்றன அடங்கி இருக்கும். இதேபோல் 60, 70 லொறிகள் யாழ். குடாநாட்டுக்கு தென்பகுதியிலிருந்து பொருட்களை எடுத்துச் செல்லும். இவற்றில் சீனி, பருப்பு உள்ளிட்ட சகல அத்தியாவசியப் பொருட்களும் அடங்கியிருக்கும்.
இவ்வாறான சூழலில் யாழ். குடா நாட்டிலும், தென்பகுதியிலும் பொருட்களின் விலைகள் நியாயமான முறையில் குறைவாக ஏற்றத்தாழ்வின்றி காணப்பட்டன. இதே நேரம் யாழ். குடாநாட்டு மக்களின் பொருளாதாரமும் வளர்ச்சி அடைந்திருந்தது.
புலிகள் இயக்கத்தினர் தங்களது சுயலாபத்திற்காகவே A- 9 பாதையை இழுத்து மூடினர். அவர்கள் மக்களின் நலன்களை சிறிதளவேனும் கருத்தில் கொள்ளாமலேயே இவ்வாறு செய்தனர். தங்களை வளப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே அவர்கள் இப் பாதையை மூடினர்.  இப்பாதை படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பதன் மூலம் யாழ். குடா நாட்டு மக்களின் பொருளாதாரம் மீண்டும் சுபீட்சம் பெறும். பொருட்களின் விலைகள் குறையும். எதுவிதமான சிரமங்களுமின்றி தரை வழியாகச் சென்று வரக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

புளொட்.- தர்மலிங்கம் சித்தார்த்தன்

A-9 பாதை திறக்கப்பட்டிருப்பது மிகவும் வரவேற்கக் கூடிய விடயமாகும். இப்பாதை மூடப்பட்டதால் மக்கள் பெரிதும் துன்பப்பட்டார்கள். யாழ்ப்பாணத்திற்கு விமானத்தில் ஒரு தடவை சென்று வருவதற்கு 25 ஆயிரம் ரூபாவுக்கு மேல் செலவிட வேண்டிய நிலைமை நிலவியது.  அதுவும் நினைத்த மாத்திரத்தில் சென்று வர முடியாது. அந்தளவுக்குக் கஷ்டமான காரியமாக அது இருந்தது.  இவ்வாறான காரணங்களினால் தான் இப்பாதை எப்போது திறக்கப்படும்? என்ற பெருத்த எதிர்பார்ப்புடனும், ஆவலுடனும் மக்கள் இருந்தார்கள். அந்த எதிர்பார்ப்பு இப்போது நிறைவேறியுள்ளது.
புலிகள் இயக்கத்தினர் இப்பாதையை மூடியதால் யாழ். குடாநாட்டின் விளைபொருட்கள் எதனையும் தென் பகுதிக்குக் கொண்டு வர முடியாத நிலைமை ஏற்பட்டது. இதேநேரம் யாழ். குடாநாட்டில் பொருட்களின் விலைகளும் பெரிதும் அதிகரித்தது. இதனால் யாழ். குடாநாட்டு மக்களும், உற்பத்தியாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இந்த நிலைமை எப்போது முடிவுக்கு வரும் என்ற பெருத்த எதிர்பார்ப்புடன் தான் மக்கள் இருந்தார்கள். அந்தளவுக்கு மக்கள் கஷ்டப்பட்டார்கள்.

இனி யாழ் குடாநாட்டுக்குத் தரை வழியாக சிரமங்களின்றி சென்று வர முடியும். அங்கு பொருட்களின் விலைகள் குறையும். யாழ்ப்பாணத்தில் விளைகின்ற பொருட்கள் தென் பகுதிக்கு வந்து சேரும். இதன் மூலம் மக்களின் வாழ்வில் பொருளாதார ரீதியாக சுபீட்சம் ஏற்படும். மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்.

திருநாவுக்கரசு
ஈ.பி.ஆர்.எல்.எப் (பத்மநாபா அணி)

A – 9 வீதி திறப்பது தொடர்பாக அனைத்து தரப்பினராலும் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்த விடயமாகும். வன்னி மக்களின் சமூக பொருளாதார நடவடிக்கைகள் A – 9 வீதியையே மையமாகக் கொண்டுள்ளது. இவ் வீதி இயங்கினால்தான் மக்களின் வாழ்வு உயிர்பெறும்.

பெரும் வரப்பிரசாதமாய் அமைந்த இவ் வீதி திறக்கப்பட்ட பின்னர் எவரும் குழப்பக்கூடாது. மனிதனது வாழ்வு தொடர்பான பிரச்சினையாகவே இதனை நோக்க வேண்டும். A – 9 வீதி திறப்பதால் பொருட்களின் விலைகள் குறைவதுடன், மக்கள் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.
போக்குவரத்து வசதிகள் இல்லாமல் மக்கள் அனுபவித்த துன்பங்களை வார்த்தைகளால் விபரிக்க முடியாது. சாதாரண மக்கள் விமானத்தில் பயணம் செய்ய முடியாது. A – 9 வீதி திறப்பின் மூலம் வடக்கு, தெற்கிடையேயான உறவுகள் வலுப்பெற்று இனங்களுக்கிடையில் ஐக்கியம் ஏற்படும்.

பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்ம
சர்வதேச இந்துமத பீடம

A – 9 பாதை திறக்கப்பட்டிருப்பது தமிழ் மக்களுக்குக் கிடைக்கப்பெற்றிருக்கும் மிகப் பெரிய வரப்பிரசாதமாகும். அதேநேரம் பெளத்த மக்கள் நாகதீப விகாரைகளில் வழிபடுவதற்கான வாய்ப்புக்களும் இலகுவாகிவிடும். இப்பாதை மூடப்பட்டதால் யாழ். குடாநாட்டு மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் தான் பல் வேறு தேவைகளின் நிமித்தம் கொழும்புக்கு வருகின்றார்கள். இப் பாதை திறக்கப்பட்டிருப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கு பொன்னான வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருப்பதுடன், பொன்னான காலமும் பிறந்திருக்கிறது என உறுதிபடக் கூறலாம்.

தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் போராட வேண்டியுள்ளது. அந்தவகையில் இப்பாதை திறக்கப்பட்டிருப்பதன் மூலம் வடக்கு, தெற்கு மக்களுக்கிடையில் அன்னியோன்ய உறவும், புரிந்துணர்வும் வளர்ச்சி அடையும். இவை இன செளஜன்யத்திற்கும் சகவாழ்வுக்கும் வழி வகுக்கும்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தரைவழியாகச் செல்லுவது ஏற்கனவே மக்கள் மனங்களில் ஆச்சரியம் மிக்கதான செயலாக இருந்தது. ஆனால் இப்போது இப்பாதை திறக்கப்பட்டிருப்பதன் மூலம் தமிழ் மக்கள் மட்டுமல்லாமல் முழுநாட்டு மக்களுமே சந்தோஷமடைவார்கள் என்பதில் ஐயமில்லை.

ஜனாதிபதியின் உரை

presidentmahinda.jpgநேற்றைய தினம் (09) ஆணையிறவு விடுவிக்கப்பட்டமை குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தொலைக்காட்சிகளினூடாக மக்களுக்கு நிகழ்த்திய உரையின் தொகுப்பு வருமாறு:

2009 ஆம் ஆண்டு படையினரின் வெற்றி வருடமென நான் ஏற்கனவே கூறியிருந்தேன். பரந்தனை படையினர் முழுமையாக மீட்டெடுப்பதோடு 2009 ஆம் ஆண்டு உதயமானது. ஜனவரி 2 ஆம் திகதியாகும் போது படையினர் கிளிநொச்சியை முழுமையாக மீட்டனர்.

எமது படையினர் மற்றொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியொன்றை ஈட்டியுள்ளனர். ஆனையிறவு பகுதியை எமது படையினர் இன்று மாலையாகும் போது முழுமையாக மீட்டுள்ளனர்.

அதேபோல, தேவேந்திரமுனை முதல் பருத்தித்துறை வரையான பகுதியை மீண்டும் இணைக்கும் வகையில் A-9 வீதியை முழுமையாக புலிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 23 வருடங்களின் பின்னரே A-9 வீதி முழுமையாக படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. 

ஒன்பது வருடங்களுக்கு முன்னர் ஆனையிறவை எமக்கு இழக்க நேரிட்டது. இந்த மோதலில் 359 படையினர் உயிர் நீத்தனர். மேலும் 349 பேர் காணாமல் போனார்கள். 2500 பேர் காயமடைந்தனர்.  அன்று தொடக்கம் எமது படையினர் முகமாலையினூடாக ஆனையிறவைக் கைப்பற்ற பல தடவைகள் முயன்றார்கள். இந்த முயற்சிகளினால் பெருமளவு படையினர் உயிர் நீத்தார்கள்.  இன்று 53 ஆம் 55 ஆம் படையணியினர் முகமாலையினூடாக ஆனையிறவை முழுமையாக மீட்டுள்ளனர். ஆனையிறவு வெற்றிக்காக கடந்த காலங்களில் உயிர் நீத்த சகல படையினருக்கும் நாட்டின் கெளரவத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

வடக்கினதும் தெற்கினதும் ஒற்றுமையை வெளிக்காட்டும் பாதையாகவே A-9 வீதி குறிக்கப்படுகிறது. A-9 வீதியினூடாக பயணிக்க மக்களுக்கு சட்ட விரோத பயங்கரவாதத்தின் கட்டுப்பாட்டிற்கு அடிபணிய நேரிட்டது. A-9 வீதியினூடாக பயணித்த மக்களிடம் புலிகள் பல மில்லியன் ரூபா கப்பமாக பெற்றது. அந்த வரலாற்றை எமக்கு ஒருபோதும் மறக்க முடியாது.  புலிகளின் பிடியிலுள்ள இடங்களை மட்டு மன்றி வடக்கு மக்களின் சுதந்திரம் ஜனநாயகம் மற்றும் சமாதானத்தையே எமது படையினர் வென்று தந்துள்ளனர்.

பயங்கரவாதமில்லாத இலங்கையொன்றை உருவாக்கும் மனிதாபிமானப் போராட்டமே இன்று முன்னெடுக்கப்படுகிறது. முழு நாடுமே படையினரின் வெற்றிகளுக்கு தமது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறது. ஆனால் அந்த வெற்றிகளை இழிவுபடுத்தவும் மக்களின் கவனத்தை திசை திருப்பவும் உள்நாட்டு வெளிநாடடு சதிகள் முன்னெடுக்கப்படுகின்றன.  இந்த வெற்றிகளுக்கு முன்னின்று உழைக்கும் இராணுவத் தளபதி மீதும் அரசாங்கத்தின் மீதும் பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தவும் அதனூடாக நாட்டில் ஸ்தீரமற்ற தன்மையை ஏற்படுத்தவும், சர்வதேச ரீதியில் அவப்பெயர் ஏற்படுத்தவும் சதி முன்னெடுக்கப்படகிறது.

நத்தார் தினத்தில் ஜோசப் பரராஜசிங்கம் ஆலயமொன்றினுள் வைத்து சுடப்பட்டார். இதன் மூலம் நாட்டுக்கு சர்வதேச மட்டத்தில் அபகீர்த்தி ஏற்படுத்த முயற்சி செய்யப்பட்டது. சர்வதேச ஊடக தினத்தில் உதயன் பத்திரிகை மீது தாக்கல் நடத்தப்பட்டது.  தொப்பிகல மீட்கப்பட்ட சந்தர்ப்பத்தில் ஆங்கில பத்திரிகயொன்றின் ஊடகவியலாளர் கடத்தி தாக்கப்பட்டார். பல வருடங்களின் பின் பயங்கரவாதிகளுக்கு பலத்த தோல்வியை ஏற்படுத்தி விடத்தல்தீவை மீட்ட மறு தினம் வவுனியாவிலுள்ள முகாமொன்றின் மீது தீ வைக்கப்பட்டது.  தி. மகேஸ்வரன் கொல்லப்பட்ட போது அரசின் மீதே குற்றஞ் சுமத்தப்பட்டது. ஆனால், புலிகளே இந்தக் கொலையை செய்தனர் என பின்பு உறுதியானது.  கிளிநொச்சி வெற்றியின் சூடு தனிய முன்னர் ஊடக நிலையமொன்று தாக்கப்பட்டது. அதன் பின்னர் நாமறிந்த ஊடகவியலாளர் ஒருவர் கொல்லப்பட்டார்.  இந்த சகல சம்பவங்களினாலும் வெற்றி கிடைப்பது யாருக்கு? இந்த சதிகளின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை நாம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த உள்ளோம்.  இது எனக்கோ அரசுக்கோ எதிரான சதிகளல்ல. இது முழு நாட்டுக்கும் எதிரான சதியாகும். படையினரின் வெற்றியை கண்டு பீதியடைந்தவர்களே இந்த சதிகளின் பின்னால் உள்ளனர்.

எந்த சவாலுக்கும் முகம் கொடுக்கும் உறுதியுடனே நான் 2005 ஆம் ஆண்டு ஆட்சி பீடமேறினேன். தோற்கடிக்க முடியாது என்று கூறப்பட்ட பயங்கரவாதத்தை தோற்கடித்துள்ள எமக்கு சிறிய குழுவின் சதிகளைத் தோற்கடிப்பது இலகுவான விடயமாகும்.  நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு நாம் உயிரூட்டி வருகிறோம். ஜனநாயகத்துக்கு உயிரூட்டி வருகிறோம். பயங்கரவாதத்தை தோற்கடிப்பதென்பது சமாதானத்திற்கும் சுதந்திரத்திற்கும் உயிரூட்டும் நடவடிக்கையேயாகும்.
பருத்தித்துறையில் இருந்து தேவேந்திரமுனை வரை சுதந்திரமாக பயணிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் மற்றும் மலே மக்கள் ஒற்று மையாக வாழும் நிலையை நிச்சயமாக உருவாக்கு வோம். அந்த வெற்றிக்காக அனைவரும் ஒன்றுபடுவோம்.

இவ்வாறு ஜனாதிபதி உரையாற்றினார்.

தனது உளவு விமானத்தை ‘ரோ’ ‘பிரபாகரனைக் கண்காணிக்கவே பயன்படுத்தி வருகிறது. – திருமாவளவன்

thiruma.jpgதனது உளவு விமானத்தை ‘ரோ’ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைக் கண்காணிக்கவே பயன்படுத்தி வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

அண்மைக் காலமாக சிங்கள இனவெறி அரசு ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க இந்திய அரசு ராணுவ உதவிகளும் பண உதவிகளும் பெருமளவில் செய்து வருவது உறுதிப்பட்டு வருகிறது. கிளிநொச்சியை விட்டு விடுதலைப்புலிகளும் பொது மக்களும் இடம் பெயர்ந்துள்ள ஓரிரு நாட்களுக்குள் இந்திய அரசின் உளவு நிறுவனமான ரோ அமைப்பின் நவீன விமானம் ஒன்று தமிழீழத்தின் கடலோரப்பகுதிகளையும் காடுகளையும் கண்காணிப்பு ஆய்வு செய்வதற்கு 3-ம் தேதி அதிகாலை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து சில ‘ரோ’ அதிகாரிகளுடன் புறப்பட்டுச் சென்றுள்ளது.

உயர்ந்த தொழில் நுட்ப வேவு கருவிகளைக் கொண்ட இந்த வானூர்தி இரவு நேரத்திலும் தரையில் நடந்து செல்லும் ஒருவரை மிகத்துல்லியமாக புகைப்படம் எடுக்குமளவிற்கு ஆற்றலுடையது என்று தெரிய வருகிறது.

முதல் – அமைச்சர் கருணாநிதியின் முயற்சியில் இந்திய பிரதமரை சந்தித்து அனைத்துக்கட்சித் தலைவர்களின் கோரிக்கையையும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்தத்தை வலியுறுத்திய தீர்மானத்தையும் புறந்தள்ளியது மட்டுமில்லாமல் முல்லைத்தீவுப் பகுதிகளைக் கண்காணிக்க ரோ அமைப்பின் அதிகாரிகளை உயர் தொழில் நுட்ப உளவு விமானத்தில் அனுப்பியிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. பிரபாகரனை காட்டிக் கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது என்பதையே இது உறுதிப்படுத்துகிறது. தமிழீழ விடுதலைப்போரை நசுக்கவும், அதன் தலைவரை அழித்தொழிக்கவும் இந்திய அரசு வெளிப்படையாக ஈடுபட்டிருப்பது தமிழ்ச் சமூகத்தால் மன்னிக்கவே முடியாத செயலாகும்.

இந்திய அரசு,  இந்தக் காட்டிக் கொடுக்கும் கேவலத்தை உடனடியாகக் கைவிடவில்லையெனில் பொங்கியெழும் தமிழக மக்களுக்கு பதில் சொல்லியேத் தீர வேண்டும் என்று கூறியுள்ளார் திருமாவளவன்

5ம் ஆண்டு புலமைப்பரிசில் தமிழ் பாடசாலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

2008ஆம் ஆண்டு 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ள தமிழ்மொழிமூல மாணவர்களுக்குரிய வெட்டுப்புள்ளிகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதன்படி, 2009ஆம் ஆண்டு 6ஆம் வகுப்புக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளக்கூடிய பாடசாலைகளும், அதற்கான வெட்டுப்புள்ளிகளும் வருமாறு:

ஆண்கள் பாடசாலைகள்

கொழும்பு-7 ரோயல் கல்லூரி – 152

கொழும்பு-7 டி. எஸ். சேனாநாயக்க கல்லூரி – 140

யாழ். இந்துக் கல்லூரி – 120

பம்பலப்பிட்டி, இந்துக் கல்லூரி – 114

மட்டக்களப்பு, புனித மைக்கல் கல்லூரி – 114

கல்முனை, சாஹிரா கல்லூரி – 114

பெண்கள் கல்லூரிகள்

பம்பலப்பிட்டி, முஸ்லிம் மகளிர் கல்லூரி – 134

கண்டி, பதியுதீன் மகளிர் மகா வித்தியாலயம் – 128

கொழும்பு, சென்ட் கிளாயர் கல்லூரி – 124

யாழ். வேம்படி மகளிர் கல்லூரி – 120

மட்டக்களப்பு, வின்சன்ட் உயர் கல்லூரி – 119

கல்முனை, மஹ்மூத் மகளிர் கல்லூரி – 118

கலவன் பாடசாலைகள்

மாவனல்லை, சாஹிரா முஸ்லிம் ம.ம.வித்தியாலயம் – 125

ஹட்டன், ஹைலண்ட் ம.ம. வித்தியாலயம் – 124

ஹபுகஸ்தலாவ, அல் மின்ஹாஜ் முஸ்லிம் ம.ம. வித்தியாலயம் – 123

மடவளை பஸார், மதீனா முஸ்லிம் ம.ம. வித்தியாலயம் – 122

தர்காடவுன், அளுத்கம வீதிய முஸ்லிம் மகளிர் கல்லூரி – 117

மாவனல்லை, பதுரியா முஸ்லிம் மஹா வித்தியாலயம் – 116

கெகுனுகொல்ல, முஸ்லிம் மஹா வித்தியாலயம் – 114

பஹமுன, சியம்பலாகஸ்கொட்டுவ மதீனா முஸ்லிம் மஹா வித்தியாலயம் – 113

போலிச் சான்றிதழ்களுடன் அரச நிறுவனங்களில் தொழில்

denees.jpgபோலிச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து அரச நிறுவனங்களின் தொழில்வாய்ப்பைப் பெற்றுள்ளோர் சம்பந்தமாக அரசாங்கம் கவனமெடுத்துள்ளதுடன் அரச சேவை ஆணைக் குழு இது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமென ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இதற்கு முன்னோடியாகவே கமத்தொழில் அபிவிருத்தி, கமநல சேவைகள் அமைச்சில் போலிச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்தவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் சம்பந்தப்பட்டவர்களை வேலை நீக்கம் செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் (08) ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி ரஞ்சித் அலுவிஹார எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்றம் (09) காலை 9.30 மணிக்குச் சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டாரவின் தலைமையில் கூடியது. வழமையான நடவடிக்கைகளுக்குப் பின் வாய் மூல வினாக்கான விளக்கங்களுக்கான வேளையில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். கமத்தொழில் அபிவிருத்தி அமைச்சில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை முன்னுதாரணமானது எனவும் அமைச்சர் தெரிவித்தார். இதேவேளை, அமைச்சில் பணிபுரிவோரின் தகைமைகளுக்கேற்ப அவர்களுக்கான பதவியுயர்வுகளும் வழங்கப்படுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தேர்தல் பிரசார சுவரொட்டி, பதாதைகளை அகற்ற முதலமைச்சர் வேட்பாளர் சரத் ஏக்கநாயக்க இணக்கம்

ballot-box.jpgமத்திய மாகாண சபைத் தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்படும் தமது பதாதைகள், சுவரொட்டிகளை அகற்றவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளரான சரத் ஏக்கநாயக்க அறிவித்துள்ளார்.  தேர்தல் ஒழுங்கு விதிகளுக்கு முரணான பிரசார நடைமுறைகளை கட்டுப்படுத்துவதற்கு முன்னோடி நடவடிக்கையாக தனது பதாதைகள், சுவரொட்டிகளை அகற்றவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், தேர்தல் சட்டம் மற்றும் அதன் அறிவுறுத்தல்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், தனது புகைப்படங்கள், சுவரொட்டிகளை அகற்ற தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்தார்.  இதேவேளை, சரத் ஏக்கநாயக்கவின் இந்த முன்னுதாரணமான செயற்பாட்டை தாம் பெரிதும் வரவேற்பதாக கண்டி பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். அத்துடன், மத்திய மாகாணத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்தப்படும் அனைத்து வேட்பாளர்களதும் சுவரொட்டிகள் பதாதைகளை அகற்றுமாறு அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளதாகவும் பூஜித ஜெயசுந்தர தெரிவித்தார்.

தேர்தல் நடைமுறை தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளை அனைத்து வேட்பாளர்களும் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். வன்னியில் நடைபெற்றுவரும் போரை தேர்தல் பிரசாரத்துக்காக அரசு பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலுக்கான பிரசாரங்கள் மிகவும் சூடுபிடித்துள்ளன. ஆளும் கட்சியின் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்க்கட்சிகளுக்கிடையே மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில், மத்திய மாகாணத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கான வாய்ப்புகளும் அங்கு குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முகர்ஜியை விரைவில் கொழும்புக்கு அனுப்புவேன் கருணாநிதிக்கு மீண்டும் உறுதியளித்தார் மன்மோகன் – தமிழக அரசு அறிக்கை

singh.jpgவெளி விவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை விரைவில் இலங்கைக்கு அனுப்பிவைப்பேன் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தமிழக முதலமைச்சர் கருணாநிதியிடம் (07) புதன்கிழமை இரவு உறுதியளித்துள்ளார்.  வெளிநாடு வாழ் இந்தியர்களின் மாநாடு சென்னையில் ஆரம்பமானது. இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்னைக்கு புதன்கிழமை இரவு வருகைதந்த இந்தியப் பிரதமரை கருணாநிதி சந்தித்துப் பேசினார்.

அச்சந்திப்பின் போதே முகர்ஜியை விரைவில் கொழும்புக்கு அனுப்பவுள்ளதாக மன்மோகன் சிங் உறுதியளித்திருப்பதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மன்மோகன் சிங் கருணாநிதி சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாகவும் இறுதியாக இலங்கைப் பிரச்சினை பற்றி பேசப்பட்டதாகவும் அப்போது ஏற்கனவே உறுதியளித்ததன் பிரகாரம் முகர்ஜி எப்போது இலங்கை செல்கிறார் என்று கருணாநிதி கேள்வி எழுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கைத் தமிழர்களின் நிலமை குறித்து கருணாநிதி விரிவாக எடுத்துக் கூறியபோது, அவரின் உணர்வை புரிந்து கொள்வதாக கூறியிருக்கும் மன்மோகன் சிங் சாத்தியமான அளவுக்கு துரிதமாக முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பிவைக்கவிருப்பதாக உறுதியளித்தாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க இலங்கை அரசு விரும்பாமல் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்புவது சாத்தியமற்றது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு இந்தவார முற்பகுதியில் கூறியிருந்தார். அதேசமயம் முகர்ஜியை அனுப்ப சாக்குபோக்கு கூறுவதாக விஜய டி ராஜேந்தர் போன்ற தமிழக அரசியல்வாதிகள் மன்மோகன் சிங் அரசை கடுமையாக விமர்சித்திருந்தனர்.  இந்நிலையிலேயே கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு இந்த அறிக்கையை விடுத்திருக்கிறது.
 

அம்பாறை எங்கும் பெருமழை இயல்பு நிலை பாதிப்பு- நெல்வயல்கள் வெள்ளத்தில்

கடந்த மூன்று தினங்களாக அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக மாவட்டத்தின் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. அறுவடைக்குத் தயாரான நிலையிலிருந்த வேளான்மைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

நேற்று வெள்ளிக்கிழமை தொடர்ச்சியாகப் பெய்த அடைமழை காரணமாக பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது. அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் இவ் அடைமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் அரசாங்க உத்தியோகத்தர்கள், முதலியோர் பாடசாலை மற்றும் அலுவலகம் செல்வதில் கடும் அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்தனர். அறுவடைக்குத் தயாரான நிலையிலிருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வீதிகள் யாவும் நீர் நிரம்பி போக்குவரத்து செய்ய முடியாதுள்ளது. மழை தொடர்கின்றது.

இம்முறை பெரும்போக அறுவடைப் பணிகள் அறுவடை இயந்திரங்களின் உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்குத் தேவையான புத்தம்புதிய அறுவடை இயந்திரங்கள் இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் அறுவடைப் பணிகளுக்கு தேவையான மேலதிக இயந்திரங்களையும், தொழிலாளர்களையும், பிற மாவட்டங்களிலிருந்து பெறுவதற்கான நடவடிக்கைகளிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

பெரும்போக விவசாயிகளுக்கு இம் முறை சிறந்த விளைச்சல் கிடைத்து வருகின்றது. அறுவடையின் மூலம் கிடைக்கும் நெல்லை தனியார் வியாபாரிகள் கொள்வனவு செய்து வருகின்றனர். பெரும்போக அறுவடைப் பணிகள் ஆரம்பித்ததையடுத்து நெல் மற்றும் அரிசி விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை, நாவிதன் வெளி பிரதேசசெயலகப் பிரிவுக்குட்பட்ட சடயந்தலாவ கண்ட நெற் பயிர்கள் நீரின்றி கருகும் நிலையில் அந்த விவசாயிகளுக்கு இம் மழை மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. நேற் றைய தொடர் மழை காரணமாக கல்முனைக்குடி, சாய்ந்தமருது, பாண்டிருப்பு கிராமங் களில் உள்ள வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. மற்றும் சுனாமி வீடமைப்பு நிர்மாணப் பணிகளும் மழையினால் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

புலிகளிடம் பணம் வாங்கினேனா?- பாரதிராஜா ஆவேசம்

bharathiraja.jpgவிடு தலைப் புலிகளிடம் நாங்கள் பணம் வாங்கியதாக எந்த அரசியல்வாதியாவது நிரூபிக்க முடியுமா என சவால் விட்டுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. பாரதிராஜா தலைமையில் ராமேஸ்வரத்தில் இலங்கைத் தமிழர் ஆதரவுப் போராட்டம் தொடங்கிய பிறகு தமிழகத்தில் உணர்ச்சிமயமான பல காட்சிகள் அரங்கேறின. அதுவரை மௌனம் காத்தவர்கள் கூட பாரதிராஜாவுக்குப் பிறகுதான் வெளிப்படையாக இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகப் பேசத் தொடங்கினர்.

ஆனால் இங்குள்ள சில அரசியல்வாதிகள், பாரதிராஜாவும் மற்றவர்களும் புலிகளிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் இப்படி ஆதரவாகப் போராட்டங்கள் நடத்தி வருவதாகக் குற்றம்சாட்டினர். இதனால் கொதித்துப் போன பாரதிராஜா, நான் பணம் வாங்கியதாக எந்த அரசியல் தலைவராவது நிரூபிக்க முடி்யுமா? இதை நான் ஒரு சவாலாகவே விடுகிறேன். முடிந்தால் நிரூபித்துக் காட்டுங்கள் பார்க்கலாம் என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.

600 மில்லியன் ரூபா மானியத்தை இராணுவத்தினருக்கு பயன்படுத்துமாறு கூறியிருக்கும் ஆட்டோ உரிமையாளர்கள்

ranjith-shiyambalapitiya.jpgமுச் சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு எரிபொருள் மானியமாக அரசு வழங்க முன்வந்துள்ள 600 மில்லியன் ரூபாவையும் இராணுவத்தினருக்காக பயன்படுத்துமாறு முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை இடம்பெற்ற தேசத்தை கட்டியெழுப்புவதற்கான வரி அறவீட்டு பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; முச்சக்கரவண்டி உரிமையாளர்களை அலரிமாளிகையில்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து மானியம் தொடர்பாக அறிவித்த போதே முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர் இவ்வாறு தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் இந்தச் செயலை ஐ.தே.க.வினர் முன் மாதிரியாக பின்பற்றவேண்டும். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் தமக்கான எரிபொருள் மானியத்தையே வழங்க முன்வந்துள்ள போது ஐ.தே.க.வினர் கிளிநொச்சியை மீட்ட வெற்றியைக் கொண்டாட எரிபொருள் விலையை குறைக்குமாறு கோருகின்றனர். முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் மானியத்தை திரும்பப்பெற ஜனாதிபதி விரும்பவில்லை. இராணுவத்தினருக்காக இந்த தியாகத்தை செய்ய விரும்பினால் விரும்பியவர்கள் அதனை வழங்கலாமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க.வினர் யுத்தம், பொருளாதாரம் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்தே அரசுக்கெதிராக பிரசாரம் செய்தனர். இப்போது யுத்தத்தைப் பற்றி அவர்களால் பேசமுடியாது என்பதால் பொருளாதாரத்தைப் பற்றி கூச்சலிடுகின்றனர். முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் செயலை முன் மாதிரியாகக் கொண்டாவது ஐ.தே.க. திருந்த வேண்டும்.

இலங்கைப் பிரச்சினையில் மத்திய, தமிழக அரசுகள் இரட்டை வேடம்: இல.கணேசன்

மத்திய அரசும், தமிழக அரசும், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகின்றன என்று பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.

இது குறித்து இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசும், தமிழக அரசும் இரட்டை வேடம் போடுகின்றன. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்தத்தை கோரும் தீர்மானத்தை அமல்படுத்த தமிழக முதல்வர் நேரில் சென்று வலியுறுத்தியும் பிரதமர் மவுனம் சாதிக்கிறார். பிரணாப் முகர்ஜி கொழும்பு செல்வார் என அறிவித்து விட்டு இதுவரை செல்லாமல் இருப்பதும், அதை நியாயப்படுத்தி அமைச்சர் டி.ஆர்.பாலுவே அறிக்கை விடுவதும் திமுக மீது சந்தேகத்தை கிளப்புகின்றன.

தங்களது பதவியை தக்க வைத்துக் கொள்ளவும், ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், சொத்துக்களை காப்பாற்றிக் கொள்ளவும் ஈழத் தமிழரின் உடமையை காவு கொடுக்க திமுக தயாராகிவிட்டது என்பதையே இந்த மெத்தனம் நிரூபிக்கிறது. அதேபோல சிங்கள ராணுவத்துக்கு ஆயுதமும், ஆலோசனைகளையும் பயிற்சியையும் இந்தியா தான் வழங்கி வருகிறது என்கிற குற்றச்சாட்டையும் மத்திய அரசு மறுக்கவில்லை.

சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் நாம் போரினை சந்தித்த போது இலங்கை அரசு நம்மை ஆதரிக்கவில்லை. ராணுவத் தீர்வு சாத்தியமல்ல என்று இந்தியா உட்பட உலக நாடுகள் எல்லாம் கருத்து சொல்லிய பிறகும் தீர்வு என்ன என்பதைச் சொல்லாமலேயே இனப்படுகொலை நடத்திக் கொண்டிருக்கும் சிங்கள அரசின் அரசே நடத்தும் பயங்கரவாதத்தை கண்டிக்கிறேன். மத்திய, மாநில அரசுகள் தங்களது இரட்டை வேடத்தை கலைத்துவிட்டு இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்தி பேச்சு வார்த்தை துவங்கிட இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும்.

மாறாக இலங்கை அரசு போரைத் தொடருமானால் இந்தியா தனது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய நேரிடும் என எச்சரிக்க வேண்டும். சம உரிமை இலங்கைத் தமிழரது பிறப்புரிமை என்பதை சுட்டிக் காட்டவும், இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவும் மத்திய அரசை வற்புறுத்தி சென்னையில் 12.1.09 திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் எனது தலைமையில் நடைபெறும்.

இதற்கு தேசிய செயலாளர் சு.திருநாவுக்கரசர் முன்னிலை வகிப்பார். கட்சியின் அனைத்து முன்னணி நிர்வாகிகளும் இதில் கலந்து கொள்கின்றனர். இதன் காரணமாக சென்னையில் 9ம் தேதி பிஜேபி நடத்த திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. தமிழகத்தில் சரக்குந்துகள் வேலை நிறுத்தம், வாகனங்களுக்கான எரி பொருளை நிரப்ப நீண்ட வரிசை, எரிபொருள் இருப்பு இல்லை என்கின்ற வாசக அட்டைகள் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் தொங்குகின்றது. காரணம் எண்ணெய் வளத்துறையினர் வேலை நிறுத்தம் செய்துள்ளார்கள்.

நம்நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கும் 9 நிறுவனங்களுக்கு நவரத்னா எனப் பெயர் சூட்டி அதற்கான விசேஷ விதிமுறைகளும் பின்பற்றப்பட்டது. அந்த நிறுவனங்கள்தான் அரசுக்கு கோடிக்கணக்கில் லாபம் ஈட்டி வருகிறது. அந்த லாபத்திற்கு நிர்வாகி கள் தொழிலாளர்கள் ஆகியோரும் காரணம் என்பதால் அந்த லாபத்தில் ஓரளவு அவர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது.ஆனால் அரசு சமீபத்தில் சம்பள சீர்திருத்தம் குறித்து கணக்கிடும் போது இந்த லாபம் ஈட்டும் நிறு வனங்களுடன் நஷ்டத்தையே சந்தித்துக் கொண்டிருக்கும் நிறுவனங்களையும் சமமாக்கி பரிந்துரைத்தது.

பொதுவாகவே சம்பள சீர்திருத்தம் என்றாலே ஏதேனும் கொஞ்சமாவது சம்பள உயர்வு இருக்கும் என எதிர் பார்ப்பது இயற்கை. விசித்திரமான முறையில் எண்ணெய் நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு சம்பளம் குறைந்துள்ளது. பணிபுரிபவர்கள் மட்டுமல்ல, நிர்வாகமே கூட சம்பள உயர்வு வரும் என எதிர்பார்த்து முன்பணமாக ஒரு தொகையை தந்தது. மாறாக சம்பளம் குறைந்த தால் ஏற்கனவே நிர்வாகமே தந்த பணத்தை ஊழியர்கள் திரும்பக் கட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டிக் காக்கும் நிறுவனங்களின் அதிகாரி களுக்கு உரிய சம்பளம் வழங்கப் படுதல் அவசியம்; நியாயமும் கூட. மாறாக அவர்கள் வஞ்சிக்கப்படுவார் களானால் தனியார் துறை நிறுவனங் கள் அவர்களது திறமையை பயன் படுத்திக் கொள்ள அதிக சம்பளம் தர காத்துக் கிடக்கின்றன. இதைத்தான் அரசு சார்பான சில பெரியவர்கள் விரும்புகிறார்ளோ என நான் சந்தேகிக்கிறேன். தனியாரிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அரசின் பொதுத்துறை நிறுவனங்களை அழிக்க முயற்சிக்கும் சிலரது திட்டமோ என சந்தேகிக்கின்றேன்.

எனவே அரசு உடனடியாக போராடும் ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு முயற்சிக்க வேண்டும். மாறாக வேலை நிறுத் தத்தை ஒடுக்க கடுமை தண்டனை வழங்கும் நடவடிக்கைகளை மேற் கொள்வதை வன்மையாக கண்டிக்கிறேன் என்றார்.