2009

2009

தமிழ் இளைஞர் (முருகதாசன்) ஐக்கிய நாடுகள் சபையின் முன்பாக தீக்குளித்து மரணம்

murugathasan_.jpgசுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்பாக தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று தீக்குளித்து மரணமடைந்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஐக்கிய நாடுகள் சபையின் முன்பாக  திடீரென நேற்று வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான நேரத்துக்குள் இளைஞர் தீக்குளித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் இளைஞரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  எனினும் இளைஞர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்து விட்டார்.

லண்டனில் இருந்து வந்த இந்த இளைஞரின் பெயர் முருகதாசன் எனவும் இவருக்கு 27 வயது இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர், 7 பக்கங்களுக்கு தாயக பிரச்சினை தொடர்பாக ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தீக்குளித்துள்ளார். முருகதாசன் தீக்குளித்த இடத்தில் மலர்கள் வைத்து மக்கள் வணக்கம் செலுத்தி வருகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம்

நேற்று ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டது. சுவிஸ் தமிழ் இளையோர்களால் குறுகிய காலத்துக்குள் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் ஒன்றுகூடலிற்காக ஐக்கிய நாடுகள் சபை முன்றலிற்கு தமிழ் மக்கள் அணிதிரண்டனர். ஈழத்தமிழரின் இன்னலைத் தீர்க்க சர்வதேச சமூகம் தலையிடக்கோரி 12.02.2009 வியாழக்கிழமை இரவு 08.30 மணியளவில் தீக்குளித்த பிரித்தானியாவில் வசித்து வந்த ஈழத்தமிழரான முருகதாசனிற்கு தமது மலர் அஞ்சலியைச் செலுத்தினர். கட்டுப்படுத்த முடியாத உள்ளுணர்வுகளினால் ஒன்றி நிற்கும் மக்கள் காவற்துறையினரின் தடைகளையும் மீறி ஐ.நாவின் பிரதான வாசலை முற்றுகையிட்டு உள்ளே செல்வதற்கு முயற்சித்த வண்ணம் இருந்தனர். அவர்களின் உணர்விற்கு மதிப்பளித்த காவல்துறையினர் பிரதான சாலையை மூடி உதவினர். இறுதியில் முருகதாசனின் மரண சாசனம் வாசிக்கப்பட்டு நிகழ்வு நிறைபெற்றது.

swiss_13_2_09-01.jpg

முல்லைத்தீவிலிருந்து காயமடைந்த 400 பேர் கப்பல் மூலம் திருகோணமலைக்கு வருகை

ship-10022009.jpgமுல்லைத் தீவு, புதுமாத்தளன் பகுதியிலிருந்து நேற்று வியாழக்கிழமையும் காயமடைந்தோர், நோயாளிகளென 400 பேர் திருகோணமலைக்கு கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் (ஐ.சி.ஆர்.சி.) வாடகைக்கு அமர்த்தப்பட்ட “கிரீன் ஓசியன்’ கப்பல் மூலமே இவர்கள் அரச கட்டுப்பாடற்ற பிரதேசமான புதுமாத்தளன் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமையும் இதே கப்பல் மூலம் காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளிகள் 240 பேரும், அவர்களுக்கு உதவியாக வந்த 116 பேரும் ஐ.சி.ஆர்.சி.யின் உதவியுடன் புதுமாத்தளன் பகுதியிலிருந்து, திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டிருந்தனர். இதில் நோயாளிகளும், காயமடைந்தவர்களும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேநேரம், நேற்று மாலை கப்பல் மூலம் திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டவர்களில் நோயாளிகள் மற்றும் காயமடைந்தோர் எத்தனை பேர் என்பது தொடர்பாக சரியான தகவல்கள் கிடைக்கவில்லை என ஐ.சி.ஆர்.சி.யின் கொழும்பு அலுவலக பேச்சாளர் சரசி விஜேரட்ன தெரிவித்தார். புதுமாத்தளன் பகுதியிலிருந்து நேற்றுக் கொண்டு வரப்பட்ட நோயாளிகளும், காயமடைந்தவர்களும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். அதுமட்டுமல்லாது, ஐ.சி.ஆர்.சி.யினால் 160 மெத்தைகளும், மருத்துவ விநியோக உதவிகளும் வழங்கப்பட்டிருப்பதாகவும் சரசி விஜேரட்ன தெரிவித்தார்.

அத்துடன், புதுமாத்தளன் பகுதியில் இன்னும் நோயாளிகளும், காயமடைந்தவர்களும் இருப்பதாகவும், அவர்களையும் கப்பல் மூலம் எடுத்து வரும் ஐ.சி.ஆர்.சி.யின் பணிகள் தொடருமென்றும் சரசி விஜேரட்ன மேலும் கூறினார். இதேநேரம், திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் நேற்று முன்தினம் மட்டும் 120 பேருக்கு சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. அத்துடன், மேலதிக சிகிச்சைக்காக 6 பேர் நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன

எந்தவித சர்வதேச அழுத்தங்களாலும் புலிகள்மீதான போரை நிறுத்த முடியாது : -மைத்திரிபால சிறிசேன

maithiripala.jpg“எந்த வகையான உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தங்களை எதிர்கொண்டாலும் விடுதலைப்புலிகள் மீதான இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படவே மாட்டாது” என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். முல்லைத்தீவு பிரதேசத்திலிருந்து விடுதலைப்புலிகள் முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்டு அப்பகுதி முற்று முழுதாக அரசின் கீழ் கொண்டு வரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்றுக் காலை வடமத்திய மற்றும் மத்திய மாகாணசபை தேர்தல் தொடர்பிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதி செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

முல்லைத்தீவிலிருந்து வைத்தியர்கள் வெளியேற்றம்

doctors.jpgமுல்லைத் தீவு மாவட்டத்திலிருந்து வைத்தியர்கள் வெளியேறியிருப்பதாக சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவில் தற்பொழுது காணப்படும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு வைத்தியர்களுக்கும், திணைக்கள அதிகாரிகளுக்கும் சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவித்தல் விடுத்திருந்தது. இதற்கமைய புதுக்குடியிருப்பு வைத்தியசாலையிலிருந்தும், முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்தும் வைத்தியர்கள் பலர் ஏற்கனவே வவுனியாவுக்கு வந்துவிட்டதாக சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் மொன்டிஸ் கூறினார்.

“மோதல்கள் தொடர்ந்துகொண்டிருப்பதால் அங்கிருந்து வெளியேறுவதே சிறந்த வழி” என அவர் தெரிவித்தார். இதேவேளை, வன்னியிலிருந்து மேலும் 400 சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் திருகோணமலைக்கு அழைத்துச் சென்றுள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் இவர்கள் கப்பல் மூலம் திருகோணமலைக்கு அனுப்பப்பட்டனர்.

புதுமத்தாளன் பகுதியிலிருந்து காலை புறப்பட்ட கப்பல் நேற்றுமாலை திருகோணமலையைச் சென்றடைந்ததுடன், நோயளர்கள் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த செவ்வாய்க்கிழமையும் முல்லைத்தீவிலிருந்து 240 நோயளர்கள் திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்டிருந்தனர். நேற்றுமுன்தினம் திருகோணமலை வைத்தியசாலையில் 120 பேருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமலையில் ஈபிடிபியினர் மக்களுக்காக இரத்த தானம்

blood.jpgமுல்லைத் தீவு பகுதியிலிருந்து செஞ்சிலுவைச் சங்கத்தினரின் உதவியுடன் கப்பல்கள் மூலம் அழைத்துவரப்பட்டு திருமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்த மற்றும் நோயாளர்களுக்கு தேவைப்படும் குருதித் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கோடு திருமலை மாவட்ட ஈபிடிபியினர் இன்று இரத்ததானம் வழங்கியுள்ளனர்.

இதேவேளை நேற்றைய தினம் இரத்ததானம் செய்ய விரும்பும் பொதுமக்களை இரத்த தானம் செய்யுமாறு  பொதுவான வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருந்தனர். நேற்றைய தினம் ரெலோ அமைப்பினரும் திருமலை வைத்தியசாலையில் இரத்ததானம் செய்திருந்தனர். திருமலை வைத்தியசாலையில் 778 பேர் வன்னியிலிருந்து அழைத்துவரப்பட்டு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

373 சிவிலியன்கள் பாதுகாப்புப்புத் தேடி வந்துள்ளனர்.

vanni.jpgவிடுவிக் கப்பட்ட பகுதியையான விஸ்வமடு, குரவிக்குளம் பகுதியை நோக்கி பாதுகாப்புத் தேடி மேலும் 373 சிவிலின்கள் கடந்த 48மணித்தியாலத்துக்குள் வந்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை ( பெப்:11) 254 சிவிலியன்கள் விஸ்வமடு வடக்கிலிருந்து வந்துள்ளனர்.அவர்களை 58வது டிவிசன் படையினர் வரவேற்றனர். 9 ஆண்கள்,9பெண்கள், 15 சிறுவர்கள் அடங்கலாக 33பேர் குரவிக்களப்பகுதிக்கு வந்தனர்.அவர்களை 57வது டிவிசன் படையினர் வரவேற்றனர்.மேலும் குப்பியக்குளம் பகுதியை நோக்கி வந்த 33பேர் வந்தனர் அவர்களை இரண்டாவது செயலணி படையினர் வரவேற்றனர்.

சிறுவர்கள் மற்றும் வயோதிபர்கள் அடங்கலாக 53பேர் 58வது டிவிசன் படையினரிடம் நேற்று (பெப்:12) வந்து தஞ்சம் புகுந்துள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட களனி பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் செல்ல அனுமதி

kelani_.jpgகளனி பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களுக்கிடையே அண்மையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட 14 பேரையும் பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. ஒவ்வொருவரையும் தலா 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையில் செல்ல கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள திலகரட்ண அனுமதி வழங்கியுள்ளார்.

இவர்களுக்கு எதிராக, சட்டவிரோதமாக ஒன்று கூடியமை, பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியமை, பல்கலைக்கழக உடைமைகளுக்கு சேதம் விளைவித்தமை போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பொலிஸார் அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

பல்கலைக்கழக நிர்வாக நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இந்த மோதல் இடம் பெற்றதாகவும் பொலிஸார் சமர்ப்பித்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. கைதானவர்களில் 9 பேர் பல்கலைக்கழக மாணவர்கள் என்பதுடன், எந்தவொரு நிபந்தனையின் பேரிலேயாவது, அவர்களுக்கு பிணை வழங்குமாறு அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்

வடபகுதி ரயில் சேவை ஓமந்தை வரை நீடிக்கப்படும்

sri-lanka-railway.jpgவட பகுதிக்கான ரயில் சேவை வவுனியா ஓமந்தை வரை நீடிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது வவுனியா வரை நடைபெறும் யாழ்தேவி ரயில் சேவையை ஓமந்தை வரை விஸ்தரிப்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

அநுராதபுரத்திலிருந்து வந்த ரயில்வே பொறியியலாளர் குழு ஓமந்தை வரை சென்று ரயில் பாதை தொடர்பான நிலைமைகளை அவதானித்துள்ளனர். புதிதாக பாதை நிர்மாணிக்க மதிப்பீடுகளையும் மேற்கொண்டதாக வவுனியா ரயில் நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.

வடக்கின் பெரும் பகுதி படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதால் ரயில் சேவையை விஸ்தரிப்பது தொடர்பாக உயர்மட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் ரயில்வே திணைக்களத்திற்கு பெரும் வருமானத்தை ஈட்டித்தந்த சேவை இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது

ரோஹித போகொல்லாகமவுடன் டென்மார்க் வெளிவிவகார அமைச்சர் உரையாடல்

rohitha-bogollagama.jpgவடக்கில் தற்பொழுதுள்ள சமகால நிலையினை கலந்துரையாடுவதற்காக டென்மார்க்கின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பெர் ஸ்டிக்மொலர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுடன் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார். நாட்டிய பரப்பப்படும் திரிபுபடுத்தப்பட்ட சில தகவல்கள் பற்றி நேரடியாக விளக்கமளிப்பதற்கு தமக்கு சந்தர்ப்பமொன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக ரோஹித போகொல்லாகம கூறினார்.

வடக்கில் அல்லலுறும் பொது மக்கள் பற்றிய டென்மார்க் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரின் கவலை மற்றும் அவரது யுத்த நிறுத்தத்திற்கான அழைப்பு என்பவற்றிற்கு பதிலளித்த வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், பாதுகாப்பு மற்றும் நலனோம்புகை என்பன இலங்கை அரசாங்கத்திற்கு மிக அவசியமானவை எனக் கூறினார்.

அரசாங்கம் வடக்கிற்கு பொருட்களை வழங்குதலை தொடர்தல் மற்றும் பாதுகாப்பான பிரதேசங்களுக்கு சிவிலியன்களை செல்ல அனுமதித்து பாதுகாப்பு பிரதேசமொன்றை ஒதுக்கியுள்ளமை என்பன அரசாங்கம் பொது மக்களின் மேல் கொண்டுள்ள அக்கறையினை எடுத்துக் காட்டுவதாக கூறினார். புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகள் சுருங்கிச் செல்லும் அதேவேளை, பொது மக்கள் வாழ்வதற்கான நிலப்பரப்பு அதிகரித்துச் செல்கின்றது எனவும், அன்றாடம் மாற்றம் பெறும் நிலைவரம் பற்றிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த அமைச்சர், இலங்கை பல்லின சமூக சமுதாயமொன்றை கட்டியெழுப்புவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்வதுடன், ஜனநாயக கட்டுக்கோப்பின் கீழ் அதிகார பரவலாக்கத்தை மத்தியிலிருந்து சகல பிரதேசங்களுக்கும் பகிர்ந்தளிப்பதற்கான செயல்முறையினை முன்னெடுப்பதாகவும் கூறினார்.

சிஐஏவின் இயக்குநராக பனீட்டா நியமனம்

leon-panetta.jpgஅமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏவின் புதிய இயக்குநராக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த லியோன் பனீட்டா நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் ஆட்சியின்போது வெள்ளை மாளிகை பணியாளர் குழுத் தலைவராக இருந்தவர் பனீட்டா.

இந்த நிலையில் இவரை புதிய சிஐஏ இயக்குநராக ஒபாமா அரசு அறிவித்துள்ளது.

இந்த நியமனத்தை செனட் குரல் வாக்கெடுப்பு மூலம் அங்கீகரித்துள்ளது. பனீட்டாவுக்கு புலனாய்வுப் பணியில் நேரடி அனுபவம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.