2009

2009

வன்னி முகாம்களிலுள்ள க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கு 5 மாதிரி வினாத்தாள்கள் விநியோகம் : பி எம் புன்னியாமீன்

261009school_child_dp.jpgவன்னி முகாம்களிலுள்ள க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான தேசம்நெட், சிந்தனைவட்ட நிவாரண உதவித்திட்டத்தின் முதற் கட்டமாக கணிதம்,  வரலாறு, தமிழ்மொழியும் இலக்கியமும், ஆங்கிலம், விஞ்ஞானம் ஆகிய ஐந்து பாடங்களுக்குமான முதலாம் கட்ட மாதிரி வினாத்தாள்களை இவ்வாரம் வழங்கவுள்ளது.

தற்போது அகதி முகாம்களிலுள்ள மக்கள் பலவிதமான தேவைகளுக்கு உட்பட்டவர்களாக இருந்த போதிலும் கூட,  நீண்ட கால அடிப்படையைக் கருத்திற்கொண்டு மாணவர்களின் கல்விநிலை பாதிப்படையக் கூடாது என்பதைக் கருத்திற்கொண்டு சிந்தனைவட்டமும்,  தேசம்நெற்உம் கல்விசார்ந்த நிவாரண நடவடிக்கைகளை முன்னேடுக்க திட்டமிட்டு சில செயற்பாடுகளை மேற்கொண்டது. முதற் கட்டமாக தரம் 05 புலமைப் பரிசில் மாணவர்களுக்கு எம்மால் மேற்கொள்ளப்பட்ட நிவாரண செயற்றிட்டம் எமக்குப் பூரண வெற்றியைத் தந்தது. குறிப்பாக எமது முதற் திட்டத்தின் கீழ் 4872 மாணவர்கள் நேரடியாகப் பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

நிவாரணக் கிராமங்களிலுள்ள மாணவர்களுக்கு பல சுயேட்சை நிறுவனங்கள் பல்வேறுபட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. ஆனால், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவது தொடர்பாகவும்,  அனைத்து முகாம்களிலுமுள்ள மாணவர்களின் கல்வித் தரத்தைக் கருத்திற் கொண்டும் பரந்துபட்ட திட்டங்களை சுயேட்சை நிறுவனங்கள் முறையாக மேற்கொண்டதாக அறியமுடியவில்லை. இதனைக் கருத்திற்கொண்டே மாணவர்களின் பௌதீக வசதிகளைவிட மாணவர்களின் கல்வித் தரத்தைக் கருத்திற் கொண்டு நாம் கல்வித் தரத்தை உயர்த்தும் முகமாக முதற் கட்டமாக புலமைப்பரிசில் பரீட்சைக்கான கல்வி உதவிகளை அனைத்து மாணவர்களுக்கும் வழங்கினோம்.

அதன் தொடர்ச்சியாகவே க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கும் கல்வி நிலையை அபிவிருத்தி செய்யக்கூடிய திட்டத்தினை வகுத்தோம். இத்திட்டம் வகுக்கப்படும் போது கல்வி செயற்பாட்டுடன் ஈடுபாடுடைய புத்திஜீவிகள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்வியதிகாரிகள், ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோர்களுடன் கலந்தாலோசித்து க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் கல்வி அபிவிருத்திற்கென விசேட திட்டமொன்றினை வகுத்தோம்.

எமது திட்டத்தை வகுக்கும்போது நாம் குறிப்பாக பின்வரும் விடயங்களை விசேடமாக கவனத்தில் கொண்டோம்.

01. நிவாரண கிராமங்களிலுள்ள மாணவர்கள் வடக்கின் யுத்தம் காரணமாக 6 மாதங்கள் மற்றும் 6 மாதங்களுக்கு மேற்பட்ட காலங்களில் பாடசாலை கல்வியை பெற முடியாது இருந்தமை

02. யுத்த பாதிப்புக்களினால் மாணவர்களின் மானசீகமான பாதிப்புக்களை கருத்திற் கொண்டமை

03. சாதாரண தர பரீட்சை தரம் 10, 11 பாடப்பரப்புக்களை உள்ளடக்கியதாக அமையும். எனவே, பாடசாலைகளில் கற்க முடியாதுபோன பாடஅலகுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருந்தமை.

04. நிவாரண கிராமங்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள் கற்கும் மாணவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் பாடப் புத்தகங்கள் தவிர, மேலதிக கல்வியைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வழிகாட்டிகளோ,  வசதிகளோ இல்லாதிருந்தமை.

05. புதிய பாடத்திட்டத்தைத் தழுவி இப்பரீட்சை நடைபெறுகின்ற போதிலும்கூட, யுத்த சூழ்நிலை காரணமாகவும் முகாம்களின் சில அசௌகரியங்கள் காரணமாகவும் கல்வித் திணைக்களத்தால் வழங்கப்படக்கூடிய பயிற்சிக் கருத்தரங்குகளில் முறையாக நலன்புரி கிராம ஆசிரியர்களுக்கு வழங்கப்படாதிருந்தமை.

இத்தகைய நிலைகளைக் கருத்திற்கொண்டு டிசம்பர் மாதம் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்காக வேண்டி எம்மால் நடத்தப்படக் கூடிய நிவாரண கல்விச் செயற்றிட்டத்தின் மாணவர்களுக்கு கற்க முடியாது போன தரம் 10,  11 பாட அலகுகளை மையமாகக் கொண்ட குறிப்பேடுகளையும்,  மாணவர்கள் அரசாங்கப் பரீட்சையை இலகுவான முறையில் எதிர்கொள்வதை கருத்திற் கொண்டும் பரீட்சைப் பற்றிய விளக்கத்தை வழங்கக் கூடிய வகையில் மாதிரி வினாத்தாள்களையும் வழங்கத் தீர்மானித்தோம். எமது திட்டப்படி மேற்குறிப்பிட்ட ஐந்து பாடங்களுக்கும் 30 மாதிரிவினாத்தாள்களையும் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற அரசாங்க வினாத்தாள் ஐந்தையும் (இம்மாணவர்களிடம் புதிய பாடத்திட்டத்தின் கீழ் இலங்கையில் முதலாவதாக நடைபெற்ற 2008 டிசம்பர் அரசாங்க வினாத்தாள்கள் இருக்கவில்லை.) இவற்றுக்கு மேலதிகமாக புதிய பாடத்திட்டத்தில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ள புதிய விடயங்களை உள்ளடக்கிய 42 குறிப்பேடுகளையும் வழங்கத் திட்டமிட்டிருந்தோம். எமது நிவாரண உதவிகள் ஒரு சில நிவாரணக் கிராம மாணவர்களுக்கு மாத்திரம் போய்ச் சேராமல் வவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ள 6290 மாணவர்களுக்கும் சென்றடையக் கூடிய வகையிலே திட்டங்களை தீட்டினோம்.

மேலும் நிவாரணக் கிராமங்களில் உள்ள மாணவர்கள் மீள்குடியமர்த்தப்படுமிடத்து அந்த மாணவர்களுக்கு எமது மாதிரி வினாத்தாள்களையும்,  பாட அலகுகளை மையமாகக் கொண்ட குறிப்பேடுகளையும் வழங்கும் போது மீள்குடியமர்த்தப்படும் இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கும், விசேட ஒழுங்குகளை செய்தோம்.  

இவ்விடத்தில் சில உண்மைகளை வெளிப்படையாக குறிப்பிட வேண்டிய ஒரு கட்டாயப்பாடுண்டு. இத்திட்டத்தை மூலமாக முன்னெடுத்த சிந்தனைவட்டம் அமைப்போ தேசம்நெற் அமைப்போ பாரியளவில் நிதியினைக் கொண்டுள்ள நிறுவனங்கள் அல்ல. இதனால் எமது திட்டத்தை நடைமுறைப்படுத்த சில பரோபகாரிகளின் உதவியைப் பெற வேண்டிய நிலையிலேயே எமது முழுமையான திட்டத்தை அவர்களிடம் வழங்கி உதவிகள் கோரினோம். கிட்டத்தட்ட எமது முழுமையான செயற்றிட்டத்தை நிறைவேற்ற எமக்கு சுமார் 30 ஆயிரம் பவுண்கள் தேவைப்பட்டன. கிட்டத்தட்ட ஒரு மாணவனுக்கு 5 பவுண்களுக்குட்பட்ட ஒரு தொகையை ஒதுக்கீடு செய்வதை அடிப்படையாகக் கொண்டு மேற்படி திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்திருந்தோம். ஒரு மாணவனுக்கு நாம் ஒதுக்கிய 5 பவுண்களிலிருந்தே 30 மாதிவினாத்தாள்களையும் 5 அரசாங்க வினாத்தாள்களையும் 42 வழிகாட்டி குறிப்பேடுகளையும் வழங்க தீர்மானித்திருந்தோம். எனவே, அறிவுபூர்வமாக சிந்திக்கும் எவருக்கும் இது இலாப நோக்கத்தைக் கருத்திற் கொண்டு மேற்கொள்ளப்பட்ட திட்டமன்று என்பதையும் மாணவர்களின் கல்வி அபிவிருத்தியை மாத்திரமே குறிக்கோளாகக் கொண்டு திட்டமிட்ட செயற்பாடு என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும். இருப்பினும்,  எமது இத்திட்டத்துக்கு லண்டனிலிருந்து 2000 பவுண்களும், கனடாவிலிருந்து 1180.00. CDN மாத்திரமே கிடைத்தன. இதனால் நாம் திட்டமிட்ட மாதிரிவினாத்தாள்களில் முதலாம் கட்ட மாதிரிவினாத்தாள்கள் ஐந்தை மாத்திரமே எம்மால் வழங்க முடியுமாக இருந்தது.

புலம்பெயர்ந்த நாடுகளில் மாத்திரமல்லாமல் இலங்கையிலும் பல தனவந்தவர்களுடனும், அரசியல் வாதிகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்தினோம். இலங்கையில் ஒருவரிடமும் நாம் பணமாகக்  கேட்கவில்லை. மாறாக எமது திட்டத்தை வழங்கி குறிப்பிட்ட மாதிரிவினாத்தாள்களை அல்லது வழிகாட்டிப் புத்தகங்களை ஓரிரண்டை அச்சிட்டு தரும்படி மாத்திரமே கோரினோம். எமது திட்டத்தை நன்றாக ஆராய்ந்து எம்முடன் பல தடவைகள் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி அவர்கள் தொடர்புகொண்டு அவரும் உச்ச முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சகல முயற்சிகளும் தோல்வியிலே முடிந்துள்ளதுடன், இலங்கையிலிருந்து எதுவிதமான உதவிகளும் எமக்குக் கிடைக்கவில்லை.

அதேநேரம், இவ்விடத்தில் மற்றும் ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். வன்னி அகதி முகாம்களிலுள்ள மாணவர்களுக்கு மாதிரிவினாத்தாள்கள் வழிகாட்டிக் குறிப்பேடுகள் தயாரித்துத் தரக்கூடிய உதவியைக் கோரி (பண உதவியல்ல) மொத்தம் 1782 பாடசாலைகளுக்கு தனிப்பட்ட முறையில் கடிதங்களை அனுப்பினோம்;.

அக்கடிதத்தின் பிரதியொன்றை கீழே தங்கள் தெளிவுக்காக இணைத்துள்ளோம். அக்கடிதப் பிரதியை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 415 பாடசாலைகளுக்கும் இலங்கையில் சகல மாவட்டங்களைச் சேர்த்த தமிழ் பாடசாலைகளுக்கும், கண்டியிலும் கொழும்பிலும் பிரபல்யம் மிக்க தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைத்தோம். ஆனால்,  வேதனைக்குரிய விடயம். ஒரு பாடசாலையிலிருந்தாவது அல்லது தனியார் கல்வி நிறுவன ஆசிரியரிடமிருந்தாவது எமக்கு ஒரு பதிலாவது வரவில்லை. இச்சம்பவத்தை வைத்து நோக்கும்போது வன்னி முகாம்களிலுள்ள மாணவர்களின் கல்வி நிலை தொடர்பாக இவர்கள் கதைப்பதன் அர்த்தத்தை எம்மால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. இந்நிலையில் சில முஸ்லிம் பாடசாலை ஆசிரியர்கள் வினாப்பத்திரங்கள் தயாரிப்பதில் எமக்கு ஒத்துழைப்பினை வழங்கினார்கள். அதே போல வத்தேகம கல்விப்பணிப்பாளர் திரு சிவநாதன் அவர்களும்,  எமக்கு ஆலோசணைகளையும் ஒத்துழைப்பையும் வழங்கினார்.  இவ்விடத்தில் இவர்களுக்கு எமது விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

விமர்சனங்கள் மேற்கொள்வது இலகு. பத்திரிகை அறிக்கைகள் வெளியிடுவது இலகு. ஆனால்,  ஆக்கபூர்வமான ஒரு செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது அதற்கு மானசீகமான முறையில் ஒத்துழைப்பு வழங்குவது மிகக் குறைவு என்பதை எமது இம்முயற்சிக்கான அனுபவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. எனவே,  ஒரு உண்மையான இலக்கை நோக்கி திட்டம் தீட்டுவதும் அதை நடைமுறைப்படுத்த முனைவதும் அர்த்தமற்ற ஒரு விடயம் என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. எவ்வாறாயினும் கூட, தரம் 05 மாணவர்களுக்கு சுமார் 15ஆயிரம் பவுண் பெறுமதிமிக்க செயற்றிட்டத்தை வெற்றிகரமாக நடத்திமுடித்தோம். ஆனால் க.பொ.த. சாதாரணதர மாணவர்களுக்கு சுமார் 2500 பவுண் பெறுமதியான உதவிகளை அதாவது ஒரு மாணவனுக்கு சுமார் 39 பென்ஸ்  பெறுமதியான உதவிகளை மாத்திரமே வழங்கக்கூடியதாக இருந்தது.

இதனையொரு தோல்வியாக நாம் கருதவில்லை. நாம் அகதி மாணவர்களுக்கு உதவ முழுமையாக முயற்சிகள் செய்தோம். எமது முயற்சியால் அம்மாணவர்களுக்கு 5 மாதிரிவினாத்தாள்கள் அனுப்புவதை இச்சந்தர்ப்பத்தில் பெருமையாகக் கொள்கின்றோம்.

மீண்டும் இவ்விடத்தில் நாம் ஞாபகமூட்ட விரும்புகின்றோம். 2009ம் ஆண்டு ஆகஸ்ட் புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு எம்மால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாதிரிவினாத்தாள்கள் வழிகாட்டிப் புத்தகங்கள், கணக்கறிக்கைகள் போன்ற விபரங்களை தேசம்நெற் வாசகர்கள் பெறவிரும்பினால் பின்வரும் மின்னஞ்சல் முகவரிகளுடன்  தொடர்புகொள்ளுமிடத்து பி.டி.எப். வடிவில் 126 பக்கங்கள் கொண்ட அவ்வறிக்கையை அனுப்பி வைப்போம்.

த ஜெயபாலன் : 0044 208 279 0354 அல்லது 0044 7800 596 786 அல்லது thesam97@hotmail.com
ரி சோதிலிங்கம் : 0044 7846 322 369 அல்லது sothi@btinternet.com
இலங்கையில்:
பி எம் புன்னியாமின் : 0094 812 493 892 அல்லது pmpuniyameen@yahoo.com

._._._._._. 

வன்னி நிவாரண முகாம் மாணவர்களுக்கு நாம் வழங்கிய அதே மாதிரி வினாத்தாள்களையும்,  வழிகாட்டிக் குறிப்பேடுகளையுமே சிந்தனை வட்டம்  அகில இலங்கை ரீதியிலும் விநியோகித்தது. அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் முதலாம் இடத்தைப் பெற்ற மாணவன் லோ. ஸ்ரீகர்சன் அவர்களும் சிந்தனை வட்ட மாதிரி வினாத்தாள்களையும், வழிகாட்டிப் புத்தகங்களையும் படித்தவரே. நிவாரணக் கிராம  மாணவர்களின் பரீட்சை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை. வெளிவந்ததும் அவற்றை பூரணமாக தங்களுக்குத் தருவோம்.

jafna-1.jpg

jafna.jpg

._._._._._. 

கடிதப்பிரதி- இணைப்பு

அதிபர் அவர்கட்கு,

வவுனியா நலன்புரிநிலையங்களில்
க.பொத. சாதாரண தரத்தில் கல்வி பயிலும்
6290 மாணவர்களின் கல்வி அபிவிருத்தி
நிவாரண நடவடிக்கைகளில்
தங்களையும் இணைத்துக் கொள்ளல்.

2009ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்காக வேண்டி சுமார் 28இலட்சம் ரூபாய் பெறுமதிமிக்க 04 வழிகாட்டி நூல்களையும் 30 மாதிரிவினாத்தாள்களையும் தனித்தனியாக 4872 மாணவர்களுக்கு வழங்கி நலன்புரிநிலைய ஆசிரியர்கள் துணையுடன் அம்மாணவர்களை வழிகாட்டி சிறந்த முறையில் பரீட்சையை எதிர்நோக்க எமது சிந்தனைவட்டம் வழியமைத்துக் கொடுத்ததை தங்களது மேலான கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

அதேபோல 2009 டிசம்பர் மாதத்தில் க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக வேண்டியும் சுமார் 56 இலட்சம் ரூபாய் நிதித்திட்டத்தின் கீழ் கல்வி நிவாரண செயற்றிட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடக்கிலுள்ள நலன்புரிநிலையங்களில் மொத்தம் 6290 மாணவர்கள் க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இம்மாணவர்கள் தற்போது கீழ்க்காணப்படும் நிவாரண முகாம்களில் பின்வரும் எண்ணிக்கையில் உள்ளனர்.

வலயம் 0 –     535 மாணவர்கள்
வலயம் 01 –   1261 மாணவர்கள்
வலயம் 02 –   1401 மாணவர்கள்
வலயம் 03 –     912 மாணவர்கள்
வலயம் 04 –     907 மாணவர்கள்
வலயம் 05 –       99 மாணவர்கள்
சுமதிபுரம் நிவாரண முகாம்    156 மாணவர்கள்
வீரபுரம் நிவாரண முகாம்    116 மாணவர்கள்
தர்மபுரம் நிவாரண முகாம்    136 மாணவர்கள்
IDP பாடசாலைகள்   583 மாணவர்கள்
புல்மோட்டை நலன்புரிநிலையம்  184 மாணவர்கள்
மொத்தம்    6290 மாணவர்கள்

பல்கலைக்கழக மட்டத்திலும் சில புத்திஜீகளுடன் இணைந்து நாம் தயாரித்த செயற்றிட்ட அறிக்கையின்படி மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு மாணவர்களுக்கும் 05 பிரதான பாடங்களை மையமாகவும் கொண்டு, ஒவ்வொரு பாடத்திற்கும் 06 மாதிரிவினாத்தாள்களையும்,  பாட அலகு ரீதியான 42 வழிகாட்டிக் கையேடுகளையும் வழங்க முடிவெடுத்துள்ளோம்.

பிரதானமாக புதிய பாடத்திட்டத்திற்கமைய கணிதம், விஞ்ஞானம்,  வரலாறு, தமிழ் மொழியும் இலக்கியமும்,  ஆங்கிலம் ஆகிய 05 பாடங்களுக்கும் இத்தகைய மாதிரிவினாத்தாள்களையும்,  கையேடுகளையும் வழங்க உத்தேசித்துள்ளோம்.

தங்கள் கல்லூரியில் அனுபவமிக்க ஆசிரியர்களின் துணையுடன் அவர்களால் தயாரிக்கப்பட்ட அல்லது புதிதாக தயாரித்துதர விருப்பமுள்ள மாதிரிவினாத்தாள்கள் –  குறிப்பிட்ட 05 பாடங்களுக்குமான கையேடுகள் அல்லது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முக்கியமான குறிப்புகள் காணப்படின் அவற்றின் புகைப்படப் பிரதிகள் ஆகியவற்றை எமக்கு அனுப்பி வைத்தால் எமது கல்வி அபிவிருத்தி சபையின் வழிகாட்டலுடன் அவற்றை வடிவமைத்து நலன்புரிநிலைய மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்ய முடியும்.

எனவே,  சுமார் 06 மாதங்களுக்கு மேல் பாடசாலை மண்ணையே மிதிக்காத நிலையில் சகலதையும் இழந்து, மிகவும் சிரமங்களின் மத்தியில் கல்வியைக் கற்றுவரும் அகதிமுகாம் மாணவர்களுக்கு இந்த சிறு உதவியை செய்யுமிடத்து அவர்களுக்கான மாபெரும் உதவியாக இருக்கலாம்.

எனவே,  இது விடயமாக கரிசனைக் காட்டி தங்கள் கல்லூரியில் திறமை வாய்ந்த,  அனுபவமிக்க ஆசிரியர்களினூடாக தயாரிக்கப்பட்ட மாதிரிவினாத்தாள்கள்,  பாட அலகு ரீதியான கையேடுகள் இருப்பின் இம்மாத இறுதிக்குள் அனுப்பி வைப்பீர்களாயின் பேருதவியாக இருக்கும். தேர்ந்தெடுக்கப்படும் வினாத்தாள்களிலும், கையேடுகளிலும் உரிய ஆசிரியர் பெயர்,  பாடசாலை முகவரி ஆகியவற்றையும் பிரசரித்தே வழங்குவோம்.

சேவைநல நோக்கில் – பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்துக்காக உதவும் இத்திட்டத்திற்கு மேற்குறித்த வகையில் தங்கள் பங்களிப்பை வழங்குவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

மாதிரிவினாத்தாள்களையும், கையேடுகளையும் அனுப்ப வேண்டிய முகவரி:

KALAPOOSHANAM  P.M. PUNIYAMEEN
14, UDATALAWINNA  MADIGE,
UDATALAWINNA – 20802

மிக்கநன்றி
தங்கள்

கையொப்பம் -கலாபூசணம் புன்னியாமீன்
(சிந்தனைவட்டம்)
02.09.2009

மேலதிக வாசிப்புக்கு
http://thesamnet.co.uk/?p=17063

ஐக்கிய இலங்கைக்காக முதலில் உயிர்த்தியாகம் செய்தது தமிழ் பொலிஸ் அதிகாரிகளே! களுத்துறையில் ஜனாதிபதி தெரிவிப்பு

290909mahinda.jpgநாட்டைப் பாதுகாத்து,  ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் முதலில் உயிர்த்தியாகம் செய்தது தமிழ் பொலிஸ் அதிகாரிகளே என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சிவில் நிர்வாகத்தைச் சீர்குழைக்க பயங்கரவாதிகள் முனைந்த போது அதற்கெதிராகப் போராடிய தமிழ் பொலிஸ் அதிகாரியான திருநாவுக்கரசு போன்றவர்கள் பொலிஸ் வரலாற்றில் மறக்க முடியாதவர்கள். அவர்கள் நாட்டின் ஐக்கியத்துக்காக உயிர்த் தியாகம் செய்தவர்கள் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற பயிற்சியை முடித்துக் கொண்டு சேவைக்குத் திரும்பும் 370 புதிய பொலிஸ் அதிகாரிகளைக் கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்.

பயங்கரவாதத்திற்கும் பாதாள உலகத்திற்கும் அரசாங்கங்கள் அடிபணிந்த யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்று நாட்டில் சட்டம், ஒழுங்கை எம்மால் நிலைநாட்ட முடிந்துள்ளது.

வடக்கு,  கிழக்கில் பொலிஸார் பயங்கரவாதிகளுக்கு அடிபணிந்து செயற்பட்டதுடன், தெற்கில் பொலிஸார் பாதாள உலகக் குழுக்களுக்கு அடிபணிந்து செயற்பட்ட காலம் ஒன்றிருந்தது. எமது அரசாங்கம் அந்நிலையை மாற்றியுள்ளது.

பொலிஸ் சேவை இன்று சிறப்பானதாக உள்ளது. இன்றைக்கு நான்கு வருடங்களுக்கு முன்பிருந்தது போலன்றி அத்துறை பாரிய முன்னேற்றமடைந்துள்ளது. பொலிஸ் நிலையத்தின் செயற்பாடுகளிலும் மக்கள் சேவையிலும் பொலிஸார் திருப்தியுறாத பிரச்சினைகள் நிறைந்த காலங்கள் இருந்துள்ளன. சகல பிரச்சினைகளும் தற்போது தீர்க்கப்பட்டு,  பதவி உயர்வு உட்பட சகல சலுகைகளும் பொலிஸாருக்கு உரிமை யாகியுள்ளன.

30 வருடங்களுக்கு முன் பொலிஸ் துறை சிறப்பாக இயங்கியது. வடக்கு, கிழக்கிலும், தெற்கிலும் சகல இன, மத பொலிஸாரும் இணைந்து சேவை செய்தனர். இந்த ஐக்கியத்தைப் பிளவுபடுத்தும் வகையில் பயங்கரவாதிகள் முதலில் பொலிஸாரின் அதிகாரத்தைப் பலவீனப்படுத்துவதில் ஈடுபட்டனர்.

புலிகள் முதலில் யாழ்ப்பாணத்தைத் தாக்கினர். அதனையடுத்து யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளிலுமுள்ள 16 பொலிஸ் நிலையங்களைத் தாக்கினர். இதனைத் தொடர்ந்து மூன்று தசாப்தங்கள் பொலிஸார் அதிகாரம் அடக்கப்பட்டவர்களாகவே இயங்கினர்.
மீண்டும் இப்போது நாட்டின் சகல பகுதிகளிலும் பொலிஸார் அதிகாரத்துடனும் சுயாதீனமாக செயற்பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

தற்போது யாழ்ப்பாணத்தில் தமிழ் இளைஞர்கள் பொலிஸ் சேவைக்காக இணைக்கப்பட்டு வருகின்றனர். எதிர்காலத்தில் அவர்கள் ஐக்கிய இலங்கையைப் பாதுகாக்கும் பொலிஸாராகத் திகழ்வர்.

பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையிலான தொடர்புகள் குறித்த சிந்தனைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய யுகம் தற்போது உருவாகியுள்ளது. ஏகாதிபத்திய ஆட்சிக் காலத்தில் வரி வசுலிக்கும் பணியிலேயே பொலிஸார் ஈடுபட்டு வந்தனர்.

பின்னர் மக்களுக்காக பொலிஸ் என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பொலிஸாரின் பங்களிப்பு மிக முக்கியமானது. நாடளாவிய பயங்கரவாத வலையமைப்பை எமது பொலிஸாரால் ஒழிக்க முடிந்தது. அதனால்தான் கொழும்பு உட்பட முக்கிய நகரங்களை எம்மால் பாதுகாக்க முடிந்தது.

இதற்கு பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தவறுக்கு தண்டனை அழிப்பதைவிட தவறுக்கான வாய்ப்புகளை இல்லாமற் செய்வதே பொலிஸாரின் பணியாக வேண்டும். தாய் நாட்டை நேசிப்போராக பொலிஸார் திகழ வேண்டும். மக்கள் பாதுகாப்பு மட்டுமன்றி நாட்டின் முக்கிய தலைவர்கள், பிரபுக்களின் பாதுகாப்பும் பொலிஸாரின் கைகளிலேயே உள்ளது.

சில பொலிஸ் அதிகாரிகளினால் பொலிஸ் துறைக்கே களங்கம் ஏற்பட்டுள்ளது. தாய்நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டப் புதிய பொலிஸார் பாடுபட வேண்டும்.

இதுவரை நாட்டை ஆண்ட அரசாங்கங்கள் நாட்டின் நல்லொழுக்கத்தைக் கணக்கிலெடுக்கவில்லை. அதனால் பயங்கரவாதம்,  பாதாள உலகம் என மக்கள் பெரும் துன்பங்களையே அனுபவிக்க நேர்ந்தது.

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இராணுவத்தினர் அர்ப்பணிப்புடன் உழைத்தது போல் நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க பொலிஸார் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டியுள்ளது. அப்போதுதான் மக்கள் கௌரவம் எனும் வெற்றியை பொலிஸார் பெற முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க,  ரோஹித அபேகுணவர்தன,  நிர்மல கொத்தலாவல, நந்தன குணதிலக்க உட்பட அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பொலிஸ் மாஅதிபர் மற்றும் பொலிஸ்துறை உயரதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மடு பாசாலைகளில் மீண்டும் கல்வி நடவடிக்கைகள்!

இரு வருட காலமாக மூடப்பட்டிருந்த  மன்னார் மடு கல்வி வலயத்திலுள்ள 11 பாசாலைகளில் இன்று முதல் மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மடு கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரதேசத்தில் கடந்த 22ஆம் திகதி மக்கள் மீள்குடியேற்றப்பட்பதையடுத்தே மேற்படி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. மீள்குடியேற்றப்பட்ட மக்களிடையே உள்ள மாணவர்கள் மற்றும்  ஆசிரியர்கள் ஆகியோர் அடையாளங் காணப்பட்டு முதற்கட்டமாக 59 ஆசிரியர்களின் பங்களிப்புடன் 11 பாசாலைகளிலும்; கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகிறது. மோதல் காரணமாக மடு கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகள் 2007 ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வசிம் அக்ரமின் மனைவி காலமானார்.

இதயம் மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வசிம் அக்ரமின் மனைவி ஹ_மா அக்ரம் (42), சிகிச்சை பலனின்றி நேற்று காலை 9.30 மணியளவில் காலமானார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமின் மனைவி ஹ_மா அக்ரம். கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். ஹ_மா அக்ரமிற்கு சிங்கப்பூர் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 20 ம் தேதி ஏர்-ஆம்புலன்ஸ் மூலம் ஹ_மா அக்ரம், வாசிம் அக்ரம் மற்றும் குடும்பத்தினர் சிங்கப்பூர் புறப்பட்டனர்.

இவர்கள் வந்த விமானம் சென்னை வான்வெளியில் பறந்து கொண்டிருந்த போது, ஹ_மா அக்ரமிற்கு உடல்நிலை மோசமடைந்தது. உடனே அவருக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் ஆபத்து என்ற நிலையில், விமானத்தின் பைலட், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, சிகிச்சைக்காக அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டார்.

அனுமதி கிடைக்கவே, வாசிம் அக்ரம் மற்றும் ஹ_மா அக்ரமிற்கு தற்காலிக, “விசா’ வழங்கப்பட்டு, அவர்கள் பயணம் செய்த விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அவர்,  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு, “வென்டிலேட்டர்’ கருவி பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவர் அபாய கட்டத்தை தாண்ட 72 மணி நேர கெடு விதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஐந்து நாட்களாக அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி சுயநினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார்;. 

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை வருகை

261009serje.jpgரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி வி லெவ்ரோ இன்று (26) திங்கட்கிழமை இலங்கை வருகிறார். குறுகிய கால விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். மேலும் இரு நாடுகளுக்குமிடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவுடன் இரு தரப்பு சந்திப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

இலங்கை, ரஷ்யா ஆகிய நாடுகளிடையே சட்டவிரோத ஆட்கடத்தல் போதைவஸ்து துஷ்பிரயோகம் ஆகியவற்றை தடுக்கும் பொருட்டு அமைச்சர்களான போகொல்லாகம, லெவ்ரோ ஆகியோரிடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

இதேவேளை இயற்கை அனர்த்தத்திலிருந்து பாதுகாத்தல், அவ்வாறான சூழ்நிலையின்போது அதனை ஆற்றுப்படுத்தல் என்பன தொடர்பாக இரு நாடுகளுக்கு மிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமெனவும் அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பெற்றோலிய ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவு

எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் நேற்று தீர்மானித்தது. எரிபொருள் விநியோகத்தை சீரமைப் பதற்காகவே அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதேவேளை, சம்பள உயர்வு வழங்குமாறு கோரி பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க ஒன்றியம் முன்னெடுத்த சட்டப்படி வேலைப் போராட்டம் நேற்றுடன் கைவிடப்பட்டுள்ளது. பெற்றோலிய ஊழியர்கள் இன்று முதல் வழமைபோல கடமைக்குத் திரும்புவர் என மேற்படி தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை ஓரிரு பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற் சங்கங்கள் வேலை பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளபோதும் நாடு பூராவும் தடையின்றி எரிபொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக பெற்றோல் மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் ஏ. எச். எம். பெளசி நேற்று தெரிவித்தார்.

பெற்றோலிய தொழிற்சங்கங்கள் அடங்கலாக சகல துறைகளையும் சார்ந்த தொழிற் சங்கங்களையும் ஜனாதிபதி இன்று சந்திக்க உள்ளதாகவும் இதன்போது பெற்றோலிய தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் குறித்தும் ஆராயப்பட உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஏனைய அரச ஊழியர்களை விட பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் அதிக சம்பளம் பெறுகின்றனர்.

அவர்களுக்கு 3 வருடங்களுக்கு ஒரு தடவை சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அமைச்சர் யுத்தம் முடிவடைந்து ஒரு சில மாதங்களே முடிவடைந்துள்ள நிலையில் இவ்வாறு சம்பள உயர்வு கோரி போராட்டம் நடத்துவது அநீதி எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை நாடுபூராவும் உள்ள 32 பிராந்திய எண்ணெய்க் களஞ்சி யங்களினூடாகவும் தடையின்றி எரிபொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் கடந்த சனியன்று மாத்திம் 10 இலட்சம் லீட்டர் எரிபொருட்கள் விநியோகிக்கப்பட்டதாகவும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் கூறியது.

இலங்கை முஸ்லிம்களின் கல்வி பிரச்சினை – கல்வியமைச்சால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று சமர்ப்பிப்பு

இலங்கை முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று கல்வி அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது.

இது தொடர்பான வைபவம் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தலைமையில் அமைச்சில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய கலாநிதி ஏ. ஜி. ஹ¤சைன் இஸ்மாயில், எஸ். எச். எம். ஜமீல், தேசபந்து ஜெஸீமா இஸ்மாயில் ஆகிய கல்வியியலாளர்களைக் கொண்ட குழுவை கல்வி அமைச்சு நியமித்திருந்தது.

இதன் செயலாளராக கலாநிதி ஹஜர் ஜான் மன்சூர் நியமிக்கப்பட்டிருந்தார். 2007ம் ஆண்டு இக்குழு அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

உலகத் தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை : பேராசிரியர் சிவத்தம்பி

24prof-karthgesu.jpgதமிழக அரசினால் நடத்தப்படவுள்ள உலகத் தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று இலங்கை தமிழ் ஆய்வாளரான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி கூறியுள்ளார்.

இலங்கையில் தமிழர் அரசியல் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் திட்டவட்டமான நிலைப்பாடு எதனையும் எடுக்காதது குறித்து,  இலங்கை பலத்த விமர்சனம் இருப்பதாக கூறுகின்ற சிவத்தம்பி அவர்கள்,  இந்த நிலையில் தான் உலக தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் கலந்து கொள்வது சிரமமான விடயமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். தனது நிலைப்பாடு தொடர்பாக மாநாட்டு ஒருங்கிணைப்பாளரான இராஜேந்திரன் அவர்களுக்கு தான் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  உலகத் தமிழர் தலைவராக தன்னைக் கொள்ளவேண்டும் என்று விரும்புகிற கருணாநிதி அவர்கள், இந்த விவகாரத்தில் ஒரு சாதகமான நிலைப்பாட்டினை எடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

செம்மொழி மாநாடு நடத்துவது மிகவும் பயனுள்ளது என்பதில் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லாத போதிலும், அதில் அனைவரும் கலந்துகொள்வதற்கான சூழ்நிலையும் அவசியம் என்றும் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் கூறுகிறார்.  ஆனால், தமிழ் ஆய்வு மாநாட்டை அரசியலாக பார்க்கக் கூடாது என்று கூறுகிற தமிழக திட்டக்குழுவின் துணைத் தலைவரான நாகநாதன் அவர்கள், சிவத்தம்பியின் கருத்துடன் முரண்படுகிறார்.

இதேவேளை இந்த மகாநாட்டைப் புறக்கணிப்பது ஒரு தமிழ் அறிஞருக்கு அல்லது பேராசிரியருக்கு ஏற்புடையது அல்ல என கவிஞர் மு. மேத்தா தெரிவித்துள்ளார். எனினும் பேராசிரியரின் முடிவை ஆதரித்துள்ள கவிஞர் இன்குலாப் அவரது செய்தி மகிழ்ச்சியாகவும் ஆறுதலாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார். 

நன்றி: வீரகேசரி 25.10.2009

ஓசியில் ஒரு இந்திய எதிர்ப்பு ஓலம்! : வாசு

Pirabakaran V & Mahathaya‘மறை களண்ட கோமளிகள்!’, ‘வெள்ளி பார்க்க வந்த வெங்காயங்கள்!’, ‘இந்தியா ஒரு வாந்தி!’, ‘சோனியா ஒரு சோந்தி!’, ‘வடக்கன் வம்பிலை பிறந்தவன்’ இது நான் சொல்வது அல்ல. இந்தியா பற்றி அண்மையில் புலம்பெயர் தமிழ் தேசிய ஊடகங்கள் வெளிக்கொணர்ந்த பதங்கள்! 1980களில் இந்தியாவையும் இந்திய அரசை மட்டும் நம்பி படையெடுத்த தேசிய விடுதலைப் போராட்டம் இன்று இந்தியாவை வாந்தி பேந்தி என்று திட்டுமளவிற்கு வந்த காரணங்கள் வெள்ளிடைமலை!. சுருங்ககூறின் புலிகளின் இருப்பை இந்தியா கேள்விக்கு உள்ளாக்கியமையும் புலிகளை அழிக்க சிறீலங்கா அரசிற்கு உதவியமையுமே இந்த இந்திய எதிர்பின் இன்றைய உச்சக் கட்டம். ‘ஆகாசவாணி’யின் செய்திகளை மெய்மறந்து  கேட்ட யாழ்பாண மக்கள் இன்று அதே ஆகாசவாணியை அழிக்க வேண்டும் என்ற பார்வையில் கட்டுரைகள் பல  எழுதப்பட்டு வருகிறது. அதாவது இந்தியா என்ற தேசம் இருக்கும் வரை தமிழீழம் கிடைக்காதாம். இதை எழுதியவர் ஒரு அரசியல் ஆய்வாளராம். இவர் பெயர் சபேசனாம்!. நாம் அனைவரும் இந்தியாவை அழிக்க சீனாவுடன் கூட்டுப் புணர்ச்சி செய்ய வேண்டும் என்று நாசூக்காக வேறு சொல்லுகிறார். அட முட்டாள் பயலுகளே இந்தியாவில் இப்ப பிரபலமாக விற்கப்படும் பிள்ளையார் சிலைகள் செய்யப்படுவதே சீனாவில்தான்.

இந்த ஆய்வாளர் திலகம் இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி போற போக்கில இந்தியாவுக்கு விசா எடுப்பற்கு நாங்கள் ‘இந்தியாவின் இறைமைக்கு ஆதரவாக இருப்போம்’ என்று கற்பூரத்தில் அடித்து சத்தியப் பிரமாணம் எடுக்க  வேண்டி வந்தாலும் வரும்!. இதுதான் இந்த ஆய்வாளரின் இந்திய எதிர்ப்பின் பலாபலனாக இருக்குமே ஒழிய வேறு எதுவும் நடந்துவிடப் போவதில்லை.  1980களில் இருந்த நிலையில்தான் சர்வதேச அரசியல் இருப்பதாக  இந்த பத்திரிகையாளர் நினைப்பதுதான் ‘மறை களன்ட கோமாளி’யின் சிந்தனை. இதை லண்டன் வாழ் தமிழ்மக்கள் ஓசியில் படிப்பது….. ???

இந்திய எதிர்ப்பை இன்று மிக மோசமாக நடாத்திவரும் இந்த பத்திரிகைகளும் வானொலிகளும் யதார்த்தத்தை மறந்து கற்பனை உலகில் இருக்கிறார்கள்.  1986இல் சிறிலங்கா இந்திய ஒப்பந்தம் இடம்பெற்றபோது நான் புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறி கல்வி கற்றுக்கொண்டிருந்த சமயம். புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்ட சமயம், நான் புலிகளின் முக்கிய தளபதியாக இருந்த செங்கமலத்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து. அப்போது அவர்களின் மனநிலை மிகவும் குழம்பியதாக இருந்தது. ”இந்தியாவின் உதவியுடன் நாம் மிகவும் நல்லவிதமாக நமது போராட்டத்தை வென்றெடுக்க முடியும். ஆனால் தலைமை பிழை விடுகிறது. என்ன செய்வது தலைமையின் சொல்லை கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என அவர் மன வேதனையுடன் கூறியது இன்றும் எனக்கு நினைவிருக்கிறது.

இந்தியா தனது நலனை தவிர வேறு எந்த நலனுக்காகவும் இலங்கைக்கு வரவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை! ஆனால் இந்திய இராணுவம் தமிழ் மக்களின் காவலாளிகளாகவே அன்று தமிழ் மக்களால் பார்க்கப்பட்டார்கள். கிழக்கில் சிறீலங்கா அரசின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை இல்லாது செய்ய இந்தியா சில திட்டங்களை புலிகளுடன் தீட்டியது பலருக்கு தெரிய நியாயமில்லை. அது மட்டுமல்ல புலிகளின் தலைமைக்கு பல வாக்குறுதிகளை கொடுத்ததுடன் ”மாகாணசபையை முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள். சிங்கள இனவாத அரசு அதை நிச்சயம் மறுக்கும். அந்த நேரத்தில் நமது இராணுவம் வடக்கு கிழக்கில் உங்களிற்கு பயிற்சி அழித்து ஒரு தமிழ் தேசிய இராணுவத்தை ஏற்படுத்த அனைத்தும் செய்வோம்” என்று உறுதிமொழியும் வழங்கப்பட்டது.

ஆனால் ”வடக்கு கிழக்கில் புலிகள் மட்டுமல்ல மற்றைய குழுக்களும் இயங்க புலிகள் வழி சமைக்க வேண்டும்” என்றும் கோரப்பட்டது. இதுதான் புலிகளை உசுப்பேத்திய ஓரே ஒரு பிரச்சனை. இந்த நிபந்தனை இல்லாதிருந்திரதால் புலிகள் இந்திய இராணுவத்திற்கு நிச்சயம் சலாம் போட்டிருப்பார்கள்.  புலிகள் தம்மை தவிர எந்த ஒரு இயக்கமும் இருக்க கூடாது என்பதில் முனைப்பாக இருந்த ஒரே காரணம்தான் அவர்களை இந்தியாவுடன் மோத வைத்தது என்பதை புலிகளின் பல முன்னைநாள் போராளிகள் அன்றே ஒப்புக் கொண்டார்கள். மக்களின் நலனில் எந்தவித அக்றையும் கொள்ளாத புலிகள் தமது இருப்பை மட்டும் முன்நிறுத்தியது என்ன நியாயாம்? காலா காலமாக சிங்கள இனவாதிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளான கிழக்குவாழ் தமிழ் மக்கள் இந்திய இராணுவ பிரசன்னத்தில் பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்தார்கள். புலிகள் மெதுவாக மக்களிடமிருந்து ஒதுக்குப்பட்டார்கள். இதைக் கண்ணுற்ற புலிகள் இனியும் இந்த நிலை நீடித்தால் தாம் முழுவதுமாக மக்களிடமிருந்து ஒதுக்குப்பட்டு விடுவோம் என்ற நிலையில் இந்திய இராணுத்துடன் மோதுவதே தம்மை காக்கும் என பிரபாகரன் உணர்ந்தார். புலிகளின் தலைவர் பிரபகாரனின் இந்த தனிப்பட்ட முடிவு தமிழ் மக்களின் தலைவிதியை மாற்றியதுடன் இந்தியா தமிழர்களுக்கு எதிரான ஒரு நாடாக மாற்றப்பட்டது.

வடக்கு கிழக்கு மக்களிடம்  எந்தவித அபிப்பிராயமும் கேட்காது தான்தோன்றி தனமாக யுத்த நிறுத்தத்தை மீறியது புலிகளே. இந்த முடிவை பல புலிப் போராளிகள் எதிர்த்தபோதும் தலைமைக்கு கட்டுப்பட்டு இந்திய இராணுவத்தை எதிர்த்துப் போராடினார்கள். இதே போராளிகள் பின்னர் இந்தியாவுடன் சேர்ந்து பிரபாகரனை அழிக்க சதி செய்ததாக கூறி போட்டுத் தள்ளப்பட்டார்கள். மாத்தையா, சுசீந்திரன், செங்கமலம் உட்பட 700 புலிப் போரளிகள் பிரபாகரனினாலும் பொட்டம்மானாலும் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டார்கள். இதன் பின்னர் இந்தியாவில் ஆட்சியில் இருந்து தூக்கியெறியப்பட்ட இந்திய முன்னைநாள் பிரதமரை எந்தவித அரசியல் காரணங்களும் இன்றி பிரபாகரனின் தனிப்பட்ட குரோத வெறிக்கு பலியாக்கியது தமிழ் மக்களை இந்தியாவின் நிரந்தர எதிரியாக்கியது. மிகவும் முட்டாள்தனமான இந்திய எதிர்ப்பு முடிவுகளை எடுத்தது புலிகள் அமைப்பும் அதன் தலைமையுமே!

ஒரு காலத்தில் சிறீலங்காவில் இருந்து இராணுவத்தால் துரத்துப்பட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தபோது இந்த புலித் தலைமைக்கு பாதுகாப்பும் பயிற்சியும் கொடுத்தது இந்தியாவே.! இந்தியா தனது நலனுக்காக தான் இலங்கைக்கு வந்தது என்பது அனைவரும் அறிந்த விடயம். ஆனால் அதை நமது அரசியல் இலாபத்திற்கு பாவிக்க தெரியாத முட்டாள்களாக இருந்த புலிகளின் தலைமை படு முட்டாள்கள் தான் என்பதை 22 வருடங்களின் பின் மீண்டும் நிரூபித்துள்ளார்கள். அன்று சமயோசிதமாக முடிவெடுத்திருந்தால் நாம் இன்று இந்த இழப்புகளை சந்தித்திருக்க தேவையில்லை. புலிகளின் பொய்யான பிரச்சாரங்கள் இன்று புலம்பெயர் மக்களை இந்தியாவிற்கு எதிராக திருப்பியதை ஏன் இந்த பத்திரிகையாளர்கள் உணர மறுக்கிறார்கள். அனைத்து தவறுகளையும் துரோகங்களையும் நாமே செய்துவிட்டு இன்று இந்தியா துரோகி அதை அழிக்க வேண்டும் என்பது என்ன நியாயாம்? வரலாறு தெரியாதவர்கள் ஓசியில் பத்திரிகை நடாத்தினால் இதைவிட வேறு எதைதான் எழுதுவார்கள்?

ஓசியில் பேப்பர் விடுவது இலகுவான விடயம் அல்ல. அதற்கு வர்த்தகப் பெருமக்களின் ஆதரவு வேண்டும்! அவர்களுக்கென்ன, என்ன விடயம் பத்திரிகையில் இருக்கிறது என்பது அவர்கள் கவலையில்லை. எத்தனை பேர் ஓசியில் படிக்கிறார்கள் என்பதே அவர்களின் கவலை! அண்மையில் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் சிறீலங்காவின் போர்கால நிலவரம் தொடர்பாக வெளியிட்ட 72 பக்க அறிக்கையில் உள்ள பல தகவல்கள் நமக்கு தெரிந்தவையே! குறிப்பாக சிறீலங்கா அரசு செய்த அத்தனை மனிதஉரிமை மீறல் விடயம் முதல் மக்களை கும்பல் கும்பலாக ஷெல்லடித்து கொன்றது வரை, இந்த ஓசி பேப்பர்கள் இதை வரிக்குவரி எழுதியதோடு அதை ஊதிப் பெரிப்பித்து  இலங்கையில் ஒரு இனப்படுகொலை நடக்கிறது என்று ஓலமிட்டு அழுதன.

ஆனால் அமெரிக்க ராஜாங்க திணைக்கள அறிக்கையில் வரிக்குவரி புலிகள் செய்த அக்கிரமங்கள் பற்றி இந்த ஊடகங்கள் ஒரு மூச்சுக்கூட விடவில்லை. மாறாக அங்கு  நடப்பவை எல்லாம் சரியெனவும் மக்கள் ஒரு சில தியாகங்களை செய்தால்தான் விடுதலை பெறமுடியும் என்றும் இந்த  சேயோன்களும் சபேசன்களும், கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதிக் குவித்தார்கள். ஆனால் தப்பிச் செல்ல முனைந்த தமிழ்மக்களை புலிகள் சுட்டுக் கொன்றதையோ பத்து வயதுப் பாலகன்களை கடத்தி சென்றதை பற்றியோ எந்த மூச்சும் விடவில்லை. அது மட்டுமல்ல ஒரு சில முதுகெலும்புள்ள ஊடகங்கள் அந்த செய்திகளை வெளியிட அவர்களை புலியெதிர்ப்பு ஊடகங்கள் என்று முத்திரை குத்தி அவர்களையும் துரோகிகளாக்கினர்.

இந்த பத்திரிகை ஒருகாலத்தில் பயோடேட்டா என்ற பெயரில் புலம்பெயர் வாழ் பெண் ஜனநாயகவாதிகளை புலியெதிர்ப்பாளர்கள் என்ற போர்வை சுமத்தி அவமானப்படுத்தினார்கள். ஆனால் புலிகள் மக்களை கொடுமைப்படுத்தியதை இன்று வன்னி தடுப்பு முகாம் மக்கள் கூறுவதைக் கூட தமது பத்திரிகையில் போட திரணியற்று நிற்கின்றனர். ஆனால் இந்த சேயான்களுக்கு ராஜேஸ் பாலாவையும் நிர்மலாவையும் உச்சரித்தால் மட்டும் கிக் வந்துவிடும். இவர்களுடைய அந்த எழுத்துக்களுக்கு இவர்கள் ஓசியில் பத்திரிகை அடிப்பதை விடுத்து காசுக்கு விற்பனை செய்யும் மஞ்சள் பத்திரிகையே நடாத்தி இருக்கலாம்.

அதற்குள் தாங்கள் சிவப்புச் சட்டைகாரராம் என்று சிலருக்கு தற்பெருமை. மம்மி ஜெயலலிதா தம்பிக்கு தமிழீழம் வாங்கித் தருவார் என்று அரசியல் ஆய்வு செய்தவர்கள், ஓபாமாவும் ஹிலரியும் கப்பல் அனுப்புவார்கள் என்று தலைவரை நந்திக்கடல் ஓரத்தில் வெள்ளி பார்க்கவிட்ட பெருமை ஒரு பேப்பர் உட்பட தேசிய ஊடகங்களையே சாரும். தலைவரை உசுப்பேத்தி உசுப்பேத்தி முருங்கை மரத்தில் ஏத்தி முள்ளிவாய்காலில் தள்ளிவிட்ட இந்த ஜம்பாவான்களுக்கு மாவீரர் தினத்தன்று தேசிய ஆய்வாளர் விருதுகைள வழங்கி கௌரவிக்க வேண்டும். அப்போது தான் தலைவரின் ஆத்மசாந்தி அடையும்.

நிவாரண கிராமங்களிலிருந்த 23,388 பேர் யாழ்ப்பாண குடாநாட்டில் மீள் குடியேற்றம். 3000 பேர் இன்றும் யாழ். வருவர் – அரச அதிபர் கணேஷ்

வவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்து 23 ஆயிரத்து 388 பேர் (23,388) யாழ்ப்பாணக் குடாநாட்டில் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாக யாழ். அரசாங்க அதிபர் கணேஷ் தெரிவித்தார். 7,414 குடும்பங்களைச் சேர்ந்த 23,388 பேர் நேற்று வரை நிவாரணக் கிராமங்களிலிருந்து வந்துள்ளதாகத் தெரிவித்த அவர், மேலும் 20 ஆயிரம் பேர் யாழ்ப்பாணம் வர இருக்கிறார்களென்றும் கூறினார்.

நிவாரணக் கிராமங்களிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்ந்த 44,000 பேரை அனுப்புவதாக ஏற்கனவே அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய 50 வீதமானவர்கள் இதுவரை அனுப்பப்பட்டுள்ளனர். மீதமுள்ளோர் தினமும் கட்டம் கட்டமாக பஸ்களில் அனுப்பப்பட்டு வருகின்றனர். இதற்கமைய இன்றும் 3000 பேர் யாழ். வந்து சேர்வார்களென அரசாங்க அதிபர் மேலும் கூறினார்.

நிவாரணக் கிராமங்களிலிருந்து விசேட பஸ்கள் மூலம் யாழ்ப்பாணம் வரும் இந்த மக்களுக்கு உடனடியாக ஐயாயிரம் ரூபா வழங்கப்படுகிறது. 20 ஆயிரம் ரூபா அவர்களது கணக்கில் வங்கிகளில் வைப்பிலிடப்படுகிறது. இதைவிடவும் யு. என். எச். சீ. ஆர். வழங்கும் நிவாரணப்பொதிகள், மற்றும் அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டு சொந்த இடங்களும் அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

நிவாரணக் கிராமங்களில் இருந்துவரும் மக்களை பொறுப்பேற்று சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கையில் எவ்வித சிரமங்களும் ஏற்படவில்லையெனத் தெரிவித்த அவர், அரசாங்க உயர்மட்டத்தில் ஒத்துழைப்புக் கிடைக்கிறதெனச் சுட்டிக்காட்டினார்.

உடனடியாக சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படாதோர் உறவினர், நண்பர்கள் வீடுகளில் தங்கவைக்கப்படுகிறார்கள். இவர்கள் ஆறு வார காலத்தினுள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவர். இதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதென அரச அதிபர் கணேஷ் தெரிவித்தார்