2009

2009

சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் (குண்டர் சட்டம்). 1வருடத்திற்கு வெளியே வர முடியாத நிலை

seeman.jpgஇயக் குனரும், இலங்கைத் தமிழர் போராட்ட ஆதரவாளருமான திரைப்பட இயக்குனர் சீமானை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (குண்டர் சட்டம்) கைது செய்ய தமிழக அரசு ஆணைப் பிறப்பித்துள்ளது.

ஈழத் தமிழருக்கு ஆதரவாக புதுச்சேரியில் சட்டக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதத்தில் மாணவர்களை வாழ்த்திப் பேசிய இயக்குனர் சீமான் மீது, இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசிதாக காங்கிரஸ் கட்சியினர் கூறிய புகாரின் அடிப்படையில் புதுச்சேரி போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

இதைத் தொடர்ந்து அவரை புதுச்சேரி போலீசார் தேடி வந்தனர். போலீசார் தேடிக்கொண்டிருக்கும் போதே, சீமான் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நடந்த ஈழத் தமிழர் ஆதரவு போராட்டத்தில் கலந்து கொண்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக போலீசார் அறிக்கை சமர்ப்பித்தனர். இந் நிலையில் சீமான் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக வக்கீல்கள் நடத்திய பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இங்கும் இந்திய அரசுக்கு எதிராக அவர் பேசியதாக குறிப்பு அனுப்பப்பட்டது. அந்த நேரத்தில்தான் அவரைக் கைது செய்வதற்கு புதுச்சேரி போலீசார் வந்தனர். ஆனால் அதற்குள் சீமான் தனது பேச்சை முடித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டார் சீமான்.

இதையடுத்து புதுச்சேரி போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். அச்சமயம் தானே நேரில் வந்து ஆஜராவதாக சீமான் அறிவித்தார். அதன்படி நெல்லை காவல்துறை ஆணையர் முன்பு சீமான் நேரில் சரணடைந்தார்.

நெல்லை கமிஷனர் மஞ்சுநாதா, சீமானை புதுச்சேரி போலீசாரிடம் ஒப்படைத்தார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சீமானை புதுச்சேரி நீதிமன்றத் தீர்ப்பின் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இந் நிலையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவதாகக் கூறி சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

க்ரைம் நம்பர் 308/2009,  இந்திய தண்டனை சட்டம் 505, சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் 13(1), (B), 13(2) ஆகிய சட்டப்பிரிவுகளில் காவல்துறை சீமான் மீது வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில் இன்று, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்படும் தமிழக அரசின் உத்தரவை புதுச்சேரி சிறையில் இருக்கும் சீமானிடம் பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் நாகராஜன் வழங்கினார். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சீமான் சிறையில் அடைக்கப்படுவதால் அவர் 1வருடத்திற்கு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஈடுபடும் எண்ணத்தில் இருந்தார் சீமான். இந்த நிலையில் அவர் மீது தேசிய பாதுகாப்பு  சட்டம் பாய்ந்துள்ளது.

இளைஞர்களின் செயல்கள், இலங்கைத் தமிழர்களுக்கு ஆக்க பூர்வமாகப் பயன்பட வேண்டும் – விஜயகாந்த்

vijayagath1.jpgஇளைஞர் களின் செயல்கள், இலங்கைத் தமிழர்களுக்கு ஆக்கபூர்வமாகப் பயன்பட வேண்டும். இலங்கைப் பிரச்சினைக்காக யாரும் தீக்குளித்து தங்கள் உயிரை மாய்த்து கொள்ள வேண்டாம்” என்று கட்சித் தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து  விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “தேசிய முற்போக்கு திராவிட கழகம் தொடர்ந்து இலங்கைத் தமிழர்களின் இன்னல்களைத் தீர்க்க ஜனநாயக முறையில் நடத்தி வரும் போராட்டங்களில் கட்சியினர் கலந்து கொள்ள வேண்டுமே தவிர, தனிப்பட்ட முறையில் தீ வைத்து கொண்டு உயிரை மாய்த்து கொள்ளும் முயற்சியில் எக்காரணத்தை முன்னிட்டும் ஈடுபட வேண்டாம் என்று வேண்டுகோள் வைக்கிறேன். இளைஞர்களின் செயல்கள், இலங்கைத் தமிழர்களுக்கு ஆக்க பூர்வமாகப் பயன்பட வேண்டும். அதற்கு மாறாக அவர்களது உயிரைத் தாங்களே மாய்த்துக் கொள்வதை கட்சி ஒரு போதும் ஊக்கப்படுத்தாது.

வேலூர் மாவட்டம், வள்ளி பட்டு ஊராட்சியை சேர்ந்த எனது உயிரினும் மேலான கட்சியின் கிளை செயலாளர் சீனிவாசன் தீக்குளித்தார் என்பதை கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அவருக்குத் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் என்ற செய்தி அறிந்து துயருற்றேன்.

இளைஞர்கள் சாதிக்க பிறந்தவர்களே தவிர, சாவதற்கு பிறந்தவர்கள் அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தொண்டரும் வீட்டிற்கும், நாட்டிற்கும் பயன்படுபவராக இருக்க வேண்டுமென்று நான் அடிக்கடி வலியுறுத்தி வரும் கருத்தாகும். தீக்குளிக்கும் முயற்சியில் தயவு செய்து கட்சியினர் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். தீக்குளிப்பது என்பது இதுவே முதலும், கடைசியுமாக இருக்க வேண்டுமென்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

புதுக்குடியிருப்பில் புலிகளின் அதிநவீன தகவல் தொழில் நுட்ப நிலையம் கண்டுப்பிடிப்பு

setli.jpgமுல்லைத் தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியிலில் தேடுதல் நடவடிக்கைகளிலீடுபட்டிருந்த இராணுவத்தினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிநவீன  உயர் தொழில் நுட்பங்கள் கொண்ட சற்றலைட் தகவல் தொழில்நுட்ப  தொலைத்தொடர்பு  நிலையமொன்றைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது புதுக்குடியிருப்பு மேற்கு பகுதியை நோக்கி முன்நகர்வில் ஈடுப்பட்டுள்ள 58ஆவது படையணி புலிகளின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்து முன்னேறிச் சென்றவேளை புலிகள் இவற்றை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம்  தெரிவித்துள்ளது.

இங்கு கணனிகள், கணனிகளுக்குத் தேவையான உபகரணங்கள், தொலைபேசிகள் போன்றவும் காணப்பட்டதாகவும் சற்றலைட் மூலம் சர்வதேச நாடுகளுடன் தொடர்பு கொள்ளக் கூடியதாக இந்த மத்திய நிலையம் அமைக்கப்பட்டிருந்ததாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம்  தெரிவித்துள்ளது.

பயங்கரவாதம், நிதிநெருக்கடிக்கு எதிரான போராட்டம் சார்க் நிலையியற்குழுவில் விரிவாக ஆராய்வு

Dr Kohonaகொழும் பில் நடைபெற்ற சார்க் நாடுகளின் நிலையியற் குழுவின் 36 ஆவது அமர்வின்போது பயங்கரவாதம் மற்றும் நிதிநெருக்கடிக்கு எதிராகப்போராடுதல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித ஹோகனவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்க் நாடுகளின் நிலையியற் குழுவின் 36 ஆவது அமர்வு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; சார்க் நாடுகளிடையேயான பொருளாதார மற்றும் நிதி ஒத்துழைப்பு தொடர்பாக சார்க் நிலையியல் சபையில் விரிவாக கலந்துரையாடப்பட்டு பொருளாதார மற்றும் நிதி ஒத்துழைப்பினை முன்னேற்றுவதற்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் சப்ராவினுடைய நிர்வாகப்படுத்தல் மற்றும் அமுலாக்கல் தொடர்பாகவும் சார்க் வர்த்தக உடன்படிக்கை தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

தெற்காசிய சுதந்திர வர்த்தக வலயம் தொடர்பான உடன்படிக்கையை ஆப்கானிஸ்தான் ஏற்றுக்கொள்ளுதல் தொடர்பான நிலைப்பாட்டை உறுதிப்படுத்தல், தெற்காசிய பிராந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பினை ஸ்தாபிக்கும் உடன்படிக்கை தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், சார்க் அபிவிருத்தி நிதி சார்க் உணவு வங்கியின் ஸ்தாபிதம் தொடர்பான உடன்படிக்கை, எய்ட்ஸுக்கான சார்க் நாடுகளின் நல்லெண்ணத் தூதர்களின் செயற்பாடுகள், சார்க் சமூகசாசனம் தொடர் ஆகியவை தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், தீவிரவாதத்தை அழித்தல் தொடர்பாக சார்க் நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, மற்றும் குற்றச்செயல்கள் தடுப்பு மீதான பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பாகவும் இங்கு விமர்சிக்கப்பட்டது.

பிராந்திய அமைதிக்கும் சுபிட்சத்துக்கும் தாக்கம் விளைவிக்கும் பயங்கரவாதத்தினால் ஏற்படும் விளைவுகளுக்காக சார்க் பிரதிநிதிகள் தமது ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொண்டனர்.

அதேவேளை, தெற்காசிய பல்கலைக்கழகத்தினை ஸ்தாபித்தல் தொடர்பாக பேராசிரியர் சாக்கதாவின் அறிவுரைகளுடன் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டது. இப் பல்கலைக்கழகத்தை ஸ்தாபித்தல் சார்க் பிராந்திய நாடுகளின் பாரிய அபிவிருத்தியாக அமையும்.

மேலும் சார்க் நாடுகளிலுள்ள தீவிரவாதத்திற்கு எதிராகப் போராடுதல் மற்றும் நிதிநெருக்கடி தொடர்பான பரிந்துரைகள் அமைச்சர்களிடம் சமர்ப்பிப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

செட்டிகுளம் கதிர்காமர் கிராமத்தில் 728 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டனர்

Wanni_Warசெட்டி குளத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்குரிய கதிர்காமர் கிராமத்தில் 728 குடும்பங்களைச் சேர்ந்த 2791 பேர் குடியமர்த்தப்பட்டுள்ளனர் என செட்டிகுளம் பிரதேச செயலக புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து விடுவிக்கப்பட்ட பிரதேசத்திற்குள் வந்துள்ள மக்கள் தங்கியுள்ள பாடசாலைகளை விரைவில் திறக்கும் நோக்குடன் செட்டிகுளத்தில் அமைக்கப்படும் கிராமங்களில் இவர்கள் குடியமர்த்தப்படவுள்ளனர் என மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண அமைச்சு தெரிவிக்கின்றது.

இராமநாதன், அருணாசலம் ஆகியோரின் பெயர்களிலும் வன்னி அகதிகளுக்கு கிராமங்கள், செட்டிகுளத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன. இடம்பெயர்ந்த மக்கள் வசித்த பிரதேசங்களில் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் பூர்த்தியானதும் மீள்குடியேற்ற வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும். அதுவரையிலும் இவர்களுக்கு அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு பராமரிக்கப்படுவர்.

சுகாதாரம், மருத்துவம், கல்வி, கூட்டுறவு மற்றும் வங்கி சேவைகள் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்படும். கல்வியை இடைநடுவில் தவறவிட்ட இளைஞர்களுக்கு தொழில் பயிற்சியும் வழங்கப்படவுள்ளது. ஆலயங்களும் இங்கு அமைக்கப்படும். உலக உணவு நிறுவனம் இவர்களுக்கு உலர் உணவுப்பொருட்களை வழங்க முன்வந்துள்ளது. செட்டிகுளத்தில் ஆயிரம் ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வீடுகள் அமைக்கும் வேலைத்திட்டம் நடைபெறுகின்றது.

விடுவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு மின் வழங்கத் திட்டம்

electricitypowerlinesss.jpgவிடுவிக் கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு மின்சாரம் வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்துள்ளது. புலிகளினால் சேதப்படுத்தப்பட்டிருந்த ஓமந்தை முதல் புளியங்குளம் வரையிருந்த மின்மாற்றிகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

புளியங்குளம் முதல் கனகராயன்குளம் வரையிலான  10 கிலோ மீற்றர்; தூரமும்  கனகராயன் குளம் முதல் மாங்குளம் வரையிலான  28 கிலோ மீற்றர் தூரமும் கொண்ட பிரதேசங்களுக்கு  புதிதாக மின் இணைப்புக்கள் வழங்கப்படும். அத்துடன் விடுவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு துரிதமாக மின் இணைப்பு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அடுத்த வாரம் நேபாளத்துக்கு விஜயம்

mahinda.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த வாரம் நேபாளத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதியின் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின்போது இரு நாடுகளுக்குமிடையிலான இரு தரப்பு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதியின் நேபாள விஜயம் குறித்து ஆராயும் நோக்கில் இலங்கைக்கு வருகை தந்துள்ள அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் உபேந்திர யாதேவ் நேற்று முன்தினம் ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் கலந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவிலிருந்து 400 நோயாளர்களை இன்று திருமலைக்கு அழைத்துவர ஏற்பாடு.

trico.gifமுல்லைத் தீவில் விடுவிக்கப்படாத பிரதேசங்களிலில் சிக்கியுள்ள மேலும் 400 நோயாளர்கள் இன்று திருகோணமலைக்கு அழைத்து வர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் மருத்துவ சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் விமல் ஜயந்த தெரிவித்தார். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியோடு கப்பல் மார்க்கமாக இவர்கள் அழைத்து வரப்படுவர் என்றும்  அவர் கூறினார்.

முல்லைத்தீவில் சிக்கி இருந்த 1996 நோயாளர்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின்; உதவியோடு ஏற்கனவே திருமலைக்கு அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறு அழைத்து வரப்படும் நோயாளர்களும், காயப்பட்டவர்களும் திருமலை,  ஆஸ்பத்திரிக்கு மேலதிகமாக கந்தளாய்,  பொலன்னறுவை, மன்னார்,  வவுனியா ஆகிய ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

விடுவிக்கப்படாத பிரதேசங்களிலிருந்து வந்து சேர்ந்துள்ள பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சேவையை வழங்கவென மன்னார், வவுனியா, செட்டிக்குளம்,திருமலை, கந்தளாய் ஆகிய ஆஸ்பத்திரிகளில் பணியாற்றவென 35 டாக்டர்களும், 120 தாதியரும்,  15 மருத்துவ நிபுணர்களும் மேலதிகமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தவர்கள் மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றம்

vanni-injured.gifவன்னிப் பகுதியில் இடம்பெற்றுவரும் மோதல்கள் காரணமாக திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மக்களில் சுமார் 152 பேர்  (26.02.2009) வியாழன் இரவு 8.15 மணியளவில் மன்னார் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எடுத்துவரப்பட்டுள்ளார்கள்.
 

உயிருக்கு போராடிய நால்வரை காப்பாற்றிய மாணவனுக்கு நாலந்தாக் கல்லூரியில் அனுமதி

nalanda-college-logo.jpgமகியங்கனை வாவியில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த நால்வரின் உயிரைக் காப்பாற்றிய ஒன்பது வயது நிரம்பிய மாணவனுக்கு, கொழும்பு நாலந்தா உயர்நிலைக் கல்லூரியில் கற்கும் வாய்ப்புக் கிட்டியுள்ளது. அடுத்தமாதம் முதல் வாரத்திலிருந்து, இம் மாணவன் கல்வி கற்பதற்கான ஒழுங்குகளை, கல்லூரி நிருவாகம் மேற்கொண்டிருக்கின்றது. மகியங்கனைப் பகுதியின் கெமுனுபுர மகா வித்தியாலயத்தின் ஆண்டு நான்கில் கல்வி கற்றுவரும் ஒன்பது வயது நிரம்பிய தினேஷ் சந்தகெலும் என்ற மாணவனுக்கே, மேற்படி வாய்ப்புக் கிடைத்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் உழவு இயந்திரமொன்று வாவியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியிருந்த வேளையில் அவ்விபத்தில் சிக்கிய நால்வர் வாவியில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தனர்.

அவ்வேளையில் பாடசாலைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த தினேஷ் சந்தகெனும் என்ற மாணவன், உயிருக்காக போராடிக் கொண்டிருந்த நால்வரைக் கண்டு, வாவியில் துணிகரமாகக் குதித்து, வெகு சிரமத்தின் மத்தியில் நால்வரையும் கரைக்கு இழுத்துவந்து, அவர்களைக் காப்பாற்றினான்.

இச் செயலைக் கண்டு, பல்துறையினராலும் இம் மாணவன் பாராட்டுப் பெற்றுவந்தான். மாணவனின் உயர்படிப்புக்கென பலரும் உதவ முன்வந்தனர். அவ்வேளையில், நாலந்தா உயர்நிலைக் கல்லூரி பிரதி அதிபர் கடந்த செவ்வாய்க்கிழமை மாணவனின் வீட்டிற்குச் சென்று, மாணவனை நேரடியாகப் பாராட்டியுள்ளார்.

அத்துடன், நாலந்தாக் கல்லூரியில் கல்வியைத் தொடரவும் ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகக் கூறினார். மாணவனின் கல்விக்கும், தங்குமிடத்திற்குமான அனைத்து செலவினங்களையும் வசதிபடைத்த பலருடன் நாலந்தா உயர்நிலைக் கல்லூரி முகாமைத்துவம் ஏற்றுள்ளது. மாணவனும் கொழும்பு நாலந்தா கல்லூரியில் கல்வியைத் தொடரப் போகின்றோமென்ற மகிழ்ச்சியில் இருந்து வருகின்றார்.

மகியங்கனைப் பகுதியின் கிராமப்பகுதியொன்றில் ஏழை விவசாயியின் புதல்வனே இம் மாணவனாகுமென்பதும் குறிப்பிடத்தக்கது.