இயக் குனரும், இலங்கைத் தமிழர் போராட்ட ஆதரவாளருமான திரைப்பட இயக்குனர் சீமானை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (குண்டர் சட்டம்) கைது செய்ய தமிழக அரசு ஆணைப் பிறப்பித்துள்ளது.
ஈழத் தமிழருக்கு ஆதரவாக புதுச்சேரியில் சட்டக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதத்தில் மாணவர்களை வாழ்த்திப் பேசிய இயக்குனர் சீமான் மீது, இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசிதாக காங்கிரஸ் கட்சியினர் கூறிய புகாரின் அடிப்படையில் புதுச்சேரி போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இதைத் தொடர்ந்து அவரை புதுச்சேரி போலீசார் தேடி வந்தனர். போலீசார் தேடிக்கொண்டிருக்கும் போதே, சீமான் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நடந்த ஈழத் தமிழர் ஆதரவு போராட்டத்தில் கலந்து கொண்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக போலீசார் அறிக்கை சமர்ப்பித்தனர். இந் நிலையில் சீமான் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக வக்கீல்கள் நடத்திய பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இங்கும் இந்திய அரசுக்கு எதிராக அவர் பேசியதாக குறிப்பு அனுப்பப்பட்டது. அந்த நேரத்தில்தான் அவரைக் கைது செய்வதற்கு புதுச்சேரி போலீசார் வந்தனர். ஆனால் அதற்குள் சீமான் தனது பேச்சை முடித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டார் சீமான்.
இதையடுத்து புதுச்சேரி போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். அச்சமயம் தானே நேரில் வந்து ஆஜராவதாக சீமான் அறிவித்தார். அதன்படி நெல்லை காவல்துறை ஆணையர் முன்பு சீமான் நேரில் சரணடைந்தார்.
நெல்லை கமிஷனர் மஞ்சுநாதா, சீமானை புதுச்சேரி போலீசாரிடம் ஒப்படைத்தார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சீமானை புதுச்சேரி நீதிமன்றத் தீர்ப்பின் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இந் நிலையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவதாகக் கூறி சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
க்ரைம் நம்பர் 308/2009, இந்திய தண்டனை சட்டம் 505, சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் 13(1), (B), 13(2) ஆகிய சட்டப்பிரிவுகளில் காவல்துறை சீமான் மீது வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில் இன்று, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்படும் தமிழக அரசின் உத்தரவை புதுச்சேரி சிறையில் இருக்கும் சீமானிடம் பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் நாகராஜன் வழங்கினார். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சீமான் சிறையில் அடைக்கப்படுவதால் அவர் 1வருடத்திற்கு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஈடுபடும் எண்ணத்தில் இருந்தார் சீமான். இந்த நிலையில் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.