முல்லைத் தீவில் விடுவிக்கப்படாத பிரதேசங்களிலில் சிக்கியுள்ள மேலும் 400 நோயாளர்கள் இன்று திருகோணமலைக்கு அழைத்து வர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் மருத்துவ சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் விமல் ஜயந்த தெரிவித்தார். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியோடு கப்பல் மார்க்கமாக இவர்கள் அழைத்து வரப்படுவர் என்றும் அவர் கூறினார்.
முல்லைத்தீவில் சிக்கி இருந்த 1996 நோயாளர்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின்; உதவியோடு ஏற்கனவே திருமலைக்கு அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறு அழைத்து வரப்படும் நோயாளர்களும், காயப்பட்டவர்களும் திருமலை, ஆஸ்பத்திரிக்கு மேலதிகமாக கந்தளாய், பொலன்னறுவை, மன்னார், வவுனியா ஆகிய ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.
விடுவிக்கப்படாத பிரதேசங்களிலிருந்து வந்து சேர்ந்துள்ள பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சேவையை வழங்கவென மன்னார், வவுனியா, செட்டிக்குளம்,திருமலை, கந்தளாய் ஆகிய ஆஸ்பத்திரிகளில் பணியாற்றவென 35 டாக்டர்களும், 120 தாதியரும், 15 மருத்துவ நிபுணர்களும் மேலதிகமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.