2009

2009

உலக சனத்தொகை 2012இல் 700 கோடியை எட்டிவிடும்

world-map.jpg2012 இன் ஆரம்பத்தில் உலக சனத்தொகை 700 கோடியை எட்டிவிடுமெனவும் 2050 இல் 900 கோடியாகிவிடுமெனவும் ஐ.நா. மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அதிகளவு சனத்தொகைப் பெருக்கம் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலேயே ஏற்படும்.

2010 2050 வரையான காலப்பகுதியில் உலக சனத்தொகையின் அரைப்பங்கை கொண்டதாக 9 நாடுகள் இருக்குமென கூறப்படுகிறது. அதில் இந்தியா, அமெரிக்கா, சீனா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகியவை அடங்கியுள்ளன.

ஏனைய நாடுகள் நைஜீரியா, எதியோப்பியா, கொங்கோ குடியரசு, தான்சானியா ஆகியவை அதிகளவு சனத்தொகையை கொண்ட நாடுகளாக இருக்கும். அண்மைய மதிப்பீடுகளில் பாரிய மாற்றங்கள் இல்லையென்று பொருளாதார, சமூக விவகாரத் திணைக்களத்தின் குடித்தொகை பிரிவின் பணிப்பாளர் ஹானியா ரிவிசன் நிருபர்களுக்கு தெரிவித்துள்ளார்.

2050 இல் உலக சனத்தொகை 901 கோடியாயிருக்குமென மதிப்பிடப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். உலக சனத்தொகை எதிர்பார்ப்புகள் தொடர்பாக 2008 இற்கான மீளாய்வு அறிக்கையை அவர் சமர்ப்பித்திருக்கிறார்.

பெண் ஒருவருக்கு 2.5 பிள்ளைகள் என்ற விகிதத்தில் தற்போது உலகளாவிய ரீதியில் பிறப்பு வீதம் உள்ளது. இப்போதிலிருந்து 2050 வரை பெண் ஒருவருக்கு 2.1 பிள்ளைகள் என்ற விகிதத்தில் பிறப்பு வீதம் வீழ்ச்சியடையுமென கணிப்பிடப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

மிகக்குறைந்தளவு வளர்ச்சியடைந்த 49 நாடுகளில் சனத்தொகை வேகமாக அதிகரித்துவருகிறது. வருடாந்தம் 2.3 வீதத்திற்கு சனத்தொகை பெருகி வருவதாக குடித்தொகை மதிப்பீட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு வவுனியாவில் சிறந்த சேவையாற்றப்படுகின்றது : கண்டி ஆயர்

bis-kandy.jpg
வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கு சிறந்த சேவை ஆற்றப்படுவதையிட்டுத் தாம் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பதாக இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் தலைவரான கண்டி ஆயர் பேரருட்திரு. வியான்னி பர்னாண்டோ தெரிவித்தார். செட்டிக்குளத்திலுள்ள மனிக் பாம் நலன்புரி நிலையத்துக்குச் சென்ற அவர், அங்கு இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கு வீட்டு வசதிகள் செய்து கொடுத்திருப்பதையிட்டுத் தாம் திருப்தியடைவதாகவும் தெரிவித்தார்.

அங்கு விஜயம் செய்த ஆயர் குழுவை நலன்புரி முகாமில் வவுனியா அரசாங்க அதிபர் ஜி.எஸ்.எம்.சார்ள்ஸ் வரவேற்றார். முகாமைப் பார்வையிட்ட குழு அங்கு இடம்பெயர்ந்த மக்களுக்குp போதிய வசதிகள் அளிக்கப்பட்டிருப்பதையும் அவதானித்தது. விடுதலைப் புலிகளின் கட்டப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள சுமார் 88,000 மக்கள் 14 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய வசதிகளும் செய்து தரப்பட்டிருப்பதோடு தொழிற்பயிற்சி நெறிகள, மாணவர்கள் கற்பதற்கேற்ற பாடசாலை வசதிகளுடன் சிறுவர்களுக்கான முன்பள்ளிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தையும் பார்வையிட்ட ஆயர் குழு, “அரசாங்கத்துக்குத் தான் நன்றிகூற வேண்டும்;” என்று கூறினர். வன்னியில் தாம் அச்சத்துடனேயே வாழ்ந்ததாகவும் தற்போது இங்கு சந்தோமாக இருப்பதாகவும் மக்கள் தெரிவித்ததாக கண்டி ஆயர் தெரிவித்தார். “இத்தகைய சூழ்நிலையில் நாம் முதல் தடவையாக இங்கு விஜயம் செய்துள்ளோம். இடம்பெயர்ந்து வந்த மக்கள் இன்று சந்தோமாக இருக்கின்றனர். பிள்ளைகளும் பாடசாலை செல்ல வாய்ப்பேற்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கம் இம்மக்களுக்கு வழங்கிவரும் வசதிகளையிட்டு நாம் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றோம்” என்றும் அவர் கூறினார். 

இலங்கையின் மனித அவலங்களைச் சுட்டிக்காட்டி 38 அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கிளிண்டனுக்குக் கடிதம்

hillary-clinton.jpgஇலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் உயிரிழப்பு, அவலங்கள் என்பவற்றைச் சுட்டிக்காட்டி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் சூசன் றைஸுக்கும் அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் 38 பேர் கையெழுத்திட்டுக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் வன்னிப் பகுதியில் அப்பாவித் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மனிதப் பேரழிவு குறித்தும், அப்பகுதியில் இருந்து வெளியேறி வந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முகாம்களில் நிலவும் மோசமான நிலைமை குறித்தும் அந்த கடிதத்தில் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்தப் பிரச்சினையை ஐ.நாவின் பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், நீண்ட காலமாக இழுபறிபடும் அரசியல் தீர்வை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கத் தலைமை முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் ஜிம் மோறன் தலைமையிலான இந்த 38 பேர் குழுவில், டொம் லான்டொஸ், மனித உரிமைக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மெக்கவர்ன், அனைத்து மனித உரிமைச் சிக்கல்களையும் எழுப்புவதில் முன்னணி வகிக்கும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் வொல்ஃப், மக்கள் பிரதிநிதிகள் சபையின் மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியா தொடர்பான வெளியுறவுத் துறை துணைக் குழு உறுப்பினரான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொன் பேர்ட்டன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகளுடன் சீனத்தூதுவர் நேற்று சந்திப்பு

kandy1.jpgஇலங்கைக்கான சீனத் தூதுவர் சியூபிங் யென்ங், அஸ்கிரிய, மல்வத்தை பீடாதிபதிகளைச் சந்தித்துப் பேசினார். கண்டியிலுள்ள அஸ்கிரிய, மல்வத்த விகாரைகளில் இந்தச் சந்திப்பு நேற்று இடம் பெற்றது.

இலங்கை – சீனா இரு நாடுகளினதும், நட்புறவை மேலும் வலுப்படுத்த சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக இலங்கைக்கான சீன நாட்டு புதிய தூதுவர் சியூ பிங் யென்ங் உறுதியளித்துள்ளார். இலங்கை மற்றும் சீன நாட்டு உறவுகளை பலப்படுத்தும் முகமாக இரு நாடுகளிலுமுள்ள வாலிப பெளத்த மத குருமார்களை இலங்கையிலிருந்து சீன நாட்டுக்கும் சீன நாட்டிலிருந்து இலங்கைக்கும் அனுப்புவதன் மூலம் எமது இரு நாடுகளுக்குரிய உறவுகளும் பலப்படுத்துவதற்கு ஒரு பிரதான காரணமாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் புத்தபெருமானின் தந்தம் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. இதனை கண்டுகளிக்க வந்திருக்கும் மக்கள் கூட்டத்தை என்னால் அவதானிக்கின்ற பொழுது இந்த நாட்டு பெளத்தர்கள் பெளத்த மதம் மீது வைத்திருக்கும் அன்பையும் ஆதரவையும் என்னால் மிக தெளிவாக உணரக் கூடியதாக இருக்கின்றன.

இன்று இலங்கை பெளத்தர்கள் மட்டுமல்ல உலகில் வாழும் அனைத்து பெளத்தர்களும் ஸ்ரீதலதா மாளிகையையும் அதன் போதனைகளையும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இது போல் நானும் இச்சந்தர்ப்பத்தில் இங்கு வந்திருப்பது பெரும் அதிர்ஷ்டத்திற்குரிய ஒருவராக இருக்கின்றமை குறித்து மிகவும் சந்தோஷப்படுகின்றேன்.

சீனாவில் உள்ள பீஜிங் நுவர லீ குவான் விகாரையிலும் புத்த பெருமானின் புனித தந்தமொன்று உள்ளது. அதனை தரிசிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 2007 இல் வந்ததை முன்னிட்டு இலங்கை – சீன நட்புறவு மேலும் வலுவடைந்ததையும் நான் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதனால் அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடாதிபதிகளுக்கு கூட இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவதில் உற்சாகம் காட்டி வருவதையும் என்னால் அறிய முடிந்தது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வட இந்தியாவில் “ஹோலி” மோதல்:8-பேர் பலி;250-பேர் காயம்

holi.jpgஉத்தரப் பிரதேசம்,பிகார் மற்றும் தில்லியில் ஹோலி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட மோதல்களில் 8-பேர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உத்தரப் பிரதேச மாநிலம்,வாராணசியில் புதன்கிழமை இரவு ஹோலி கொண்டாட்டத்தின்போது மசூதி சுற்றுச்சுவர் மீது வண்ணப்பொடியை தூவியதால் ஏற்பட்ட மோதல் வகுப்பு கலவரமாக மாறியது. கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இதில் இருவர் கொல்லப்பட்டனர்.இதே மாநிலத்தில் பஹ்ரைச் மாவட்டத்தில் ஹோலி கொண்டாட்டத்தின்போது தீவைப்பு சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து ஏற்பட்ட வகுப்பு மோதலில் 6-பேர் காயமடைந்தனர்.

காஸிபூரில் நடந்த வகுப்பு மோதலில் 16-வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.முஸாஃபர்நகர் மாவட்டத்தில் லிசாத் கிராமத்தில்,ஹோலி கொண்டாட்டத்தின்போது இரு பிரிவினர் குடித்துவிட்டு பரஸ்பரம் துப்பாக்கியால் சுட்டனர்.இதில் 6-வயது சிறுவன் கொல்லப்பட்டான்.

பிகாரிலும் “ஹோலி” கலவரங்கள் நடைபெற்றன. மோதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். தில்லியில் தையல் வேலை செய்துவந்த இளைஞர் உறவுப் பெண்ணுடன் சென்றுகொண்டிருந்தபோது சிலர் அவர்கள் மீது வண்ணப்பொடியை வீசினர்.இதற்கு அவர் ஆட்சேபம் தெரிவித்தார்.இதனால் ஏற்பட்ட மோதலில் அந்த இளைஞர் கத்தியால் குத்தப்பட்டு இறந்தார்.

ஜெய்ப்பூரில் குடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஹோலி கொண்டாடிய மூன்று இளைஞர்கள் கீழே விழுந்து இறந்தனர். மாநிலம் முழுவதும் ஹோலி மோதல்களில் 200-பேர் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.மகாராஷ்டிர மாநிலம் தாணே அருகே ரயில் மீது தண்ணீர் பலூனை வீசியெறிந்ததில் பயணி ஒருவருக்கு கண் பார்வை பறிபோனது.

பிரிட்டிஷ் தூதுக்குழு மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லாவுடன் சந்தித்துப் பேச்சு

hisbullah.jpgபிரித்தானிய உயர் ஸ்தானிகராலய தூதுக் குழுவினருடான சந்திப்பொன்றினை, கிழக்கு மாகாண சுகாதார, சுதேச, விளையாட்டுத்துறை மற்றும் தொழில் நுட்பக் கல்வி அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் மேற்கொண்டார்.

இச்சந்திப்பு திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சின் பிரத்தியேக காரியாலயத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது கிழக்கு மாகாணத்தின் அடிப்படைத் தேவைகள், சூழ்நிலை தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இவ்வைபவத்தின்போது கிழக்கு மாகாணத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படைத் தேவைகள் தொடர்பான கருத்துகளை மாகாண அமைச்சர் எம். எல்.ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்வினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பிரித்தானிய தூதுவர் டொக்டர் பீட்டர் கெயில், தென்னாசிய உதவிப் பணிப்பாளர் பிலிப்பாடர்ன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

மட்டக்களப்பில் டெங்கு தீவிரம்

batti-01.jpgமட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் தீவிரமாகப் பரவிவருவதாகவும், கட்டுப்படுத்த நட வடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் எஸ். தட்சணா மூர்த்தி தெரிவித்தார்.

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, பாலமுனை மற்றும் வாழைச்சேனைப் பிரதேசங்களில் டெங்கு நோயாளர் இனம் காணப்பட்டுள்ளதாகவும், பலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாங்கள் வெறுமனே பாலம் கட்ட விரும்பவில்லை; ஈழம் கட்டவே விரும்புகிறோம்: கவிஞர் காசி ஆனந்தன் விகடனுக்கு வழங்கிய பேட்டி

kasi-anandhan.jpgகாசி ஆனந்தன் அவர்களை ஆனந்த விகடன் சஞ்சிகையினர் சந்தித்துள்ளனர். அப்போது அவர் வழங்கியுள்ள விறுவிறுப்பான  பேட்டி வருமாறு:- 

‘பத்துத் தடவை பாடை வராது .பதுங்கிக்கிடக்கும் புலியே தமிழா!  செத்து மடிவது ஒருமுறைதானடா,  சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா!’ என்று

கேள்வி: கால் நூற்றாண்டு காலத்துக்குப் பிறகு, மீண்டும் தமிழகத்தில் ஈழ ஆதரவு எழுச்சி. 1983-க்கும் 2009-க்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?

1983 என்பது தமிழீழ விடுதலைப் போராளிகள் இயக்கம் வீச்சோடு வளர்ந்து நிமிர்ந்த காலம். வெலிக்கடைச் சிறைச்சாலையில் 52 தமிழீழக் கைதிகள் துடிதுடிக்க அடித்து, வெட்டிக் கொல்லப்பட்டனர்.

குட்டிமணியின் கண்களைப் பிடுங்கிச் செருப்புக் கால்களின் கீழிட்டுச் சிங்கள சிறைக் காவலர்கள் வெறியாடிய காலம். அன்று தமிழகத்தில் எழுந்த பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்பு இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு மீண்டும் எழுந்திருக்கிறது. விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவான தமிழ் மக்களின் உணர்வுகள் இன்னும் பலமடங்கு அதிகரித்திருப்பதை நன்றியுடன், நெகிழ்வுடன் பார்க்கிறோம். 83-ல் தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சித் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.

விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய தமிழீழ அங்கீகார மாநாடு அன்று நடைபெறவில்லை. பத்துக்கும் மேற்பட்ட தாயகத் தமிழர்கள் ஈழச் சொந்தங்களுக்காகத் தங்கள் உடலைத் தீயின் பசிக்குத் தின்னக் கொடுத்த தியாகங்கள் அன்று இல்லை. இத்தனை காலமும் மறைத்து வைத்திருந்த உணர்வுகள் வெடித்துக் கிளம்பியிருக்கின்றன. ‘இன உணர்வைப் புதைப்பது என்பது விதையைப் புதைப்பது போலத்தான்’ என்பதைத்தான் உங்கள் விடுதலைப் புலிகள் பற்றிய விகடன் கருத்துக் கணிப்பு ஏற்கெனவே நிரூபித்ததே.

கேள்வி:அன்று பிரதமர் இந்திராகாந்தி ஈழப் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்தார். ஆனால், இன்றைய மத்திய அரசு புலிகளுக்கு எதிராக உள்ளது பின்னடைவுதானே?

உண்மைதான். மத்திய அரசு புலிகளை அழிக்க சிங்கள அரசுக்கு ஆயுதம், பயிற்சிகள், போர் வழிகாட்டுதல்களை வழங்கி வருவதை காங்கிரஸ் தவிர்த்த தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒப்புக்கொள்கின்றன. இடைக்காலத்தில் ஏற்பட்ட ‘விரும்பத்தகாத விளைவு’ காரணமாக இந்த இடைவெளி ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இருதரப்புகளிலும் சில விட்டுக்கொடுப்புகள் அவசியம் என்று கருதுகிறேன்.

நல்ல நோக்கத்தோடு இலங்கைக்கு அனுப்பிய அமைதிப் படையினரைப் புலிகள் சுட்டுக் கொன்றது நியாயமா?’ என்று இந்திய அரசின் சார்பாகக் கேட்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள். புலிகளோ, ‘எங்கள் போராளி திலீபனை இழந்தோமே, பெருமதியான தளபதிகள் குமரப்பாவையும் ஜானியையும் இன்னும் பல தளபதிகளையும் அமைதிப் படை சுட்டு வீழ்த்தியதே. போரில் சம்பந்தப்படாத அப்பாவித் தமிழ் மக்கள் 12 ஆயிரம் பேர் அமைதிப் படையால் கொலை செய்யப்பட்டார்களே, 300-க்கும் அதிகமான ஈழச் சகோதரிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார்களே, இவையெல்லாம் சரிதானா?’ என்று கேட்கிறார்கள்.

இந்த நிகழ்வுகளை இருதரப்பும் முற்றிலுமாக மறக்க ஏலாதுதான். ஆனால், சில விட்டுக்கொடுப்புகள் இந்தியாவுக்கும் தமிழீழ மக்களுக்கும் இன்றியமையாதது. அண்டை நாடான இந்தியா அறம் தழுவிய ஈழப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். பாரதிய ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட் போன்ற அனைத் திந்தியக் கட்சிகளே எங்களுக்கு ஆதரவாக இருக்கும்போது, மத்திய அரசு மட்டும் எங்களின் நியாயத்தைப் புரிந்துகொள்ளாமல் இருப்பது துரதிர்ஷ்டமே.

கேள்வி: சமீபத்திய போரின் தொடர் வீழ்ச்சிகள் புலிகள் பலவீனமடைந்துவிட்டார்கள் என்பதைத்தானே காட்டுகிறது?

ஒரு மாதப் போரை வைத்து புலிகளின் பலம், பலவீனத்தைக் கணிக்க முடியாது. 32 ஆண்டுகளுக்கு முன் 5 வீரர்களுடன் தொடங்கப்பட்ட இயக்கத்தில் இன்று 30 ஆயிரம் வீரர்கள் களமாடுகின்றனர். ஒரே ஒரு கைத்துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட இயக்கம் வான்படை, கடற்புலிகள், தரைப்படை என முப்படை கொண்ட ராணுவ இயக்கமாகப் பரிணமித்திருக்கிறது. தோழர் தியாகு அண்மையில் சொன்னதைப் போல், ‘புலிகளின் நிலம் சுருங்கியிருக்கிறது. ஆனால், உலகெங்கும் அது விரிந்திருக்கிறது!’ என்பதுதான் நிதர்சனம்.

இதுவரை 52 ஆயிரம் சிங்கள ராணுவ வீரர்கள் இலங்கை ராணுவத்தைவிட்டுத் தப்பி ஓடியதாகத் தகவல்கள் சொல்கின்றன. விடுதலைக்கான தேதி வேண்டுமானால் தள்ளிப்போகலாமே தவிர, ஒரு விடுதலை இயக்கத்தை அழித்துவிட முடியாது. நிச்சயம் தற்காலிகப் பின்னடைவிலிருந்து புலிகள் மீண்டு எழுவார்கள். ஒரு பாரியத் தாக்குதலை சிங்கள ராணுவத்தின் மீது நிகழ்த்தி வெற்றியடைவார்கள்.

கேள்வி: போர் நிறுத்தத்தை ஆதரிப்பதாகச் சொல்லும் காங்கிரஸ் கட்சி, ஈழப் பிரச்னைக்குத் தீர்வாக ராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை முன்வைக்கிறதே?

ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை ஈழ மக்கள் என்றைக்குமே ஆதரித்தது இல்லை. அந்த ஒப்பந்தம் சிறிய உரிமைகளைக்கூட ஈழ மக்களுக்கு வழங்காது. இலங்கை என்பது இரு தேசங்களின் நாடு என்பதை இலங்கை அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளும் வரை இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடையாது. அதிகாரம் சிங்களவர்களுக்கும் அதிகாரப் பகிர்வு என்னும் பிச்சை தமிழர்களுக்கும் என்பதுதான் அந்த உடன்படிக்கையின் பின் உள்ள உண்மை.

அதிகாரப் பகிர்வைப் பற்றிப் பேசும்போதுகூட 7 சிங்கள மாகாணம், 2 தமிழ் மாகாணம், ஆக மொத்தம் 9 மாகாணங்களுக்கு இடையே அதிகாரப் பகிர்வு செய்யப்படும் என்கிறார்கள். இப்போது நடக்கும் போராட்டம் மாகாணங்களுக்கு இடையேயான போராட்டமா, தேசங்களுக்கு இடையேயான போராட்டமா? ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை ஏன் சுருக்கிச் சிறுமைப்படுத்துகிறீர்கள்?

ராஜீவ் – ஜெயவர்த்தன ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டாலோ, அல்லது இடைக்கால மாகாண சபைகள் அமைக்கப்பட்டாலோ, சாலை போடலாம், பாலம் போடலாம். ஆனால், நாங்கள் வெறுமனே பாலம் கட்ட விரும்பவில்லை, ஈழம் கட்டவே விரும்புகிறோம்.

கேள்வி: ஈழத் தமிழர்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களைச் சேகரித்து அனுப்புமாறு தங்கள் கட்சியினருக்கு காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியுள்ளதே?

நன்றி. ஆனால், உணவு என்பது இன்றைய தேவையே தவிர, லட்சியம் அல்ல. உணவுதான் லட்சியம் என்றால், திலீபன் உண்ணாவிரதம் இருந்து இறந்திருக்க மாட்டான். களத்தில் புலி நஞ்சைச் சாப்பிட்டுச் சாக மாட்டான்.

கேள்வி:  போர் நிறுத்தம் என்பது இரு தரப்பினரும் மேற்கொள்ள வேண்டியது. புலிகளும் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிற கோரிக்கைகள் பற்றி?

புலிகளின் ஆயுதம் என்பது புலிகளைக் காக்க அல்ல, ஈழ மக்களைக் காப்பதற்காகவே’ என்று நடேசன் கூறியுள்ளார். ஆயுதங்கள்தான் தமிழ் மக்களைக் காப்பாற்ற முடியும் என்று நினைத்ததால்தானே இந்திய அரசு புலிகளை அழைத்து ஆயுதம் வழங்கியது? தமிழ் மக்களின் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையில் ஆயுதங்களைக் கீழே போடச் சொல்வது என்ன நியாயம்? இந்தியா கோரிக்கை விடுக்க வேண்டியது இலங்கை அரசிடம்தானே தவிர, புலிகளிடம் அல்ல.

திருகோணமலையில் கடத்திச் செல்லப்பட்ட சிறுமி சடலமாக மீட்பு

tco-child-killed-01.jpgகடந்த இரு தினங்களுக்கு முன் திருகோணமலையில் கடத்திச் செல்லப்பட்ட ஆறு வயது சிறுமியைப் பொலிஸார் சடலமாக மீட்டுள்ளனர்.

சிறுமியைக் கடத்திச் சென்றவர்கள் ஒரு மில்லியன் ரூபாவை அவரது குடும்பத்தினரிடம் கப்பமாகக் கேட்டிருந்த நிலையில் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி: புகைப்படம் lankadeepa.lk

tco-child-killed-01.jpg

பிரிட்டன் உயர்ஸ்தானிகர் வவுனியாவிற்கு விஜயம்

uk.jpgஇலங்கைக் கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர் பீட்டர் பேட்டன் தலைமையிலான குழு ஒன்று நேற்றயதினம் (12.03.2009) வவுனியா செட்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள நலன்புரி முகாமிற்கு விஜயம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அங்கு சென்ற இக்குழு நலன்புரி முகாமில் தங்கியுள்ள மக்களின் நலன் தொடர்பில் கவனம் செலுத்தியதுடன் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ள வசதிகள் குறித்து அரசாங்கத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.