2009

2009

அமைச்சர்கள் தவறிழைக்கும் போது, நாடு எப்படி உருப்படப் போகின்றது?” – ஐ.தே.க. ரங்க பண்டார

unp-ranga.jpgநாட்டு மக்களின் ஜீவனோபாயம் வீழ்ச்சியடைந்து கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டு வருவதாக ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரங்க பண்டார நேற்று எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்தில் 270 மீனவ படகுகள் கடலுக்குச் செல்ல கடற்படையினர் தடை விதித்துள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிப் பத்திரங்களும் அபகரிக்கப்பட்டுள்ளன. இதனால் 8,800 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களது ஒரே ஜீவனோபாய தொழில் இது மட்டுமே. கற்பிட்டிக் கடற்பரப்பில் ஆழ்கடல் சுழியோடிகள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அந்நிய செலாவணியை ஈட்டித் தருவது. இந்தத் தடையுத்தரவால் அந்நிய செலாவணியும் கிடைக்காமல் போகிறதல்லவா?

மீன்பிடிக்கச் செல்வதற்குக் கடல் எல்லை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சிறு தீவுகள் காணப்படும் கடற்பகுதியிலேயே மீன் பிடிக்க முடிகிறது. தமிழ்-சிங்கள சித்திரை புது வருடத்துக்கு சில நாட்களே உள்ளன. இந்த உற்சவ காலத்தில் மக்களின் நிலை பற்றி எவருமே கருத்தில் கொள்வதாகத் தெரியவில்லை.

அரசு புதுமாத்தளன் பகுதியில் 1 கிலோ மீற்றருக்கு புலிகளை மட்டுப்படுத்தி உள்ளதாகக் கூறுகிறது. முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு போன்ற பகுதிகள் அரச கட்டுப்பாட்டில் உள்ளதாக இராணுவ பேச்சாளர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் எல்லோரும் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் கற்பிட்டி கடற்பரப்பில் மீன் பிடிக்க அரசு கடற்தொழிலாளர்களுக்கு ஏன் அனுமதி மறுக்கின்றது என நான் அரசிடம் கேட்கிறேன் . மீனவர்கள் தமது ஜீவனோபாய தொழிலை மேற்கொள்ள அனுமதியளிக்க வேண்டும் என்றே நான் அரசிடம் நான் கோரிக்கை விடுக்கின்றேன்.

இன்று அமைச்சர்கள் பலவிதமான குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். நாட்டு மக்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய இவர்களே தவறிழைக்கும் போது, நாடு எப்படி உருப்படப் போகின்றது?” இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார். 

கட்டார் அமைச்சர் இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு

president_qutr_amb.jpg இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கட்டார் நாட்டின் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைச்சர் காலித் பின் மொஹமட் அல் அஹியாஹ் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

அரச சேவைகள் ஆணைக்குழுவின் விசேட வர்த்தமானி அறிவித்தல் சர்ச்சைக்குரிய இரு விடயங்களை அமுல்படுத்தாதிருக்க அரசு முடிவு

pr-con-02042009.jpgஅரச சேவைகள் ஆணைக் குழுவினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய இரண்டு விடயங்களையும் நடைமுறைப்படுத்தவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடிய அமைச்சரவையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்ட தாக பிரதி நிதி அமைச்சரும், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான கலாநிதி சரத் அமுனுகம நேற்றுத் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 17ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட அரச சேவைகள் ஆணைக்குழு நிறுவனச் சேவையை மீள் பரிசோதனை செய்ததுடன் சில திருத்தங்களையும் கொண்டு வந்துள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பை வழங்கியிருந்தன.

அரச சேவைக்கு உள்வாங்கப்பட்ட ஒருவர் மூன்று வருடங்களில் தனது தகுதிகாண் காலத்தில் வருடத்திற்கு இரண்டு தடவைகள் வீதம் ஆறு தடவைகள் வினைத் திறமைகாண் பரீட்சைக்கு தோற்ற வேண்டும். இப்பரீட்சைகளில் அவர் சித்தியடையாவிடின் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்பதே கொண்டு வரப்பட்ட திருத்தமாகும்.

நிரந்தர நியமனம் பெற்றவரும் தனது பதவி உயர்வுக்காக இவ்வாறான வினைத் திறமைகாண் பரீட்சைகளுக்கு தோற்ற வேண்டும். பரீட்சையில் சித்தியடையாதவர் பதவி ஏற்புகளை பெற மாட்டார். இந்த விடயங்களை தவறுதலாக விளங்கிக் கொண்டும் வீணான கற்பனையை வளர்த்துக் கொண்டும். சிலர் தேர்தலை சாதகமாக்கிக் கொண்டு தேர்தல் சுலோகங்களாக இவற்றை மாற்றி விட்டுள்ளனர்.

அத்துடன் தொழிற்சங்க வேலைகளில் ஈடுபடும் ஒருவர் தொழிற்சங்க வேலைகளுக்காக கடமையிலிருந்து விடுவிக்கும் காலம் ஐந்து வருடத்திற்கு மட்டுப்படுத்தப்படுவதாகவே அரச வர்த்தமானி அறிவித்தலிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையும் நடைமுறைப்படுத்துவதில்லை எனவும் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட பிரதி சுகாதார பணிப்பாளர் வரதராஜா பணி இடைநிறுத்தம்

dr-varatharajah.jpgமுல்லைத் தீவு மாவட்ட பிரதி சுகாதாரப் பணிப்பாளர் வரதராஜா தனது பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெயாந்த மக்கள் தொடர்பான தவறான தகவல்களை வழங்கியதனையடுத்தே இவர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார்.  இந்த உத்தரவை சுகாதார அமைச்சு பிறப்பித்துள்ளது.

அண்மைக்காலமாக இவரால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பினனரே இவரைப் பணியிலிருந்து இடை நிறுத்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட பிரதிச் சுகதார சேவைகள் பணிப்பாளர் முல்லைத்தீவில் மோதல்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தொடர்பான தகவல்களை சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கி வந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது

சிரச ஊடகவியலாளர் மீது தாக்குதல்

sirasatv.jpgசிரச தொலைக்காட்சி ஊடகவியலாளர் சுசந்த அபேரத்ன கிரிபத்கொடவில் வைத்து இன்று இனந்தெரியாத ஆயுததாரிகளால் தாக்கப்பட்டுள்ளார். விகாரமகாதேவி மகளீர் வித்தியாலயத்தில் இன்று இடம்பெறும் ஆர்ப்பாட்டமொன்று குறித்த செய்தியைச் சேகரிக்க சென்ற சமயமே இவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக சிரச தொலைக்காட்சியின் செய்திப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

“வணங்கா மண்” இலங்கைக் கடலுக்கு வருமா? கடற்படை உஷார் நிலையில்…

Vanni_Missionபிரிட்டனில் இருந்து உணவு மற்றும் மருந்துப் பொருள்களுடன் “வணங்கா மண்” என்ற கப்பல் வன்னிக்கு வருவதாக வெளிவந்துள்ள தகவலை அடுத்து, கடற் படையினர் உஷார் நிலையில் வைக்கப் பட்டுள்ளனர்.  கடற்படை வட்டாரங்கள் இத்தகவலைத் தெரிவித்தன.

வன்னி மக்களுக்காக லண்டன் வாழ்.புலம்பெயர் தமிழ் மக்கள் வழங்கிய உதவிப் பொருள்களுடன் வணங்கா மண் இந்த மாத ஆரம்பத்தில் வன்னி நோக்கிப் பயணிக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர். பிரித்தானியாவிலிருந்து நிவாரணக் கப்பலொன்று புறப்படவுள்ளமை தொடர்பாக அங்கிருக்கும் இலங்கை உயர்ஸ்தானிகராலயம், பிரித்தானிய அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்றிருப்பதாக கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த காலங்களிலும் விடுதலைப் புலிகள் நிவாரணக் கப்பல்களைக் பயன்படுத்தி ஆயுதங்களைக் கடத்தியிருப்பதால், இந்தக் கப்பல் குறித்தும் தாம் கூடுதல் அக்கறை செலுத்தியிருப்பதாகவும், இந்த விடயத்தில் கவனம் செலுத்துமாறும் உயர்ஸ்தானிகராலயம் பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை லண்டனில் ஏற்பாடு செய்யயப்பட்ட நிகழ்வில் உத்தியோகபூர்வமாக கப்பலில் பொருள்கள் ஏற்றப்பட்டுள்ளன என்று லண்டனைத் தளமாகக் கொண்டியங்கும் “ஏசிரி நவ்” என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கை அரசின் இணக்கத்தை பெற்ற பின் கப்பல் வன்னி நோக்கிப் புறப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.இலங்கை அரசின் இணக்கத்தை நேற்று வரை பெறமுடியவில்லை. அநேகமாக கப்பல் இலங்கைக்குள் செல்வதற்கான அனுமதி கிடைக்கும் என  நம்புகிறோம் என்று ஏற்பாட்டாளர்களில் ஒருவரான அர்ஜுன் எதிர்வீர சிங்கம் தெரிவித்தார்.சர்வதேச ரீதியிலான விண்ணப்பத்தை ஆரம்ப நிகழ்விலேயே விடுத்திருந்தோம் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை குறிப்பிட்ட கப்பல் அனுமதியின்றி இலங்கைக் கடற்பகுதிக்குள் பிரவேசிக்குமானால் அதன் மீது சுடுவோம் என கடற் படை எச்சரித்துள்ளது.

புலிகளின் சார்ள்ஸ் அன்டனி படையின் முக்கிய இரு தலைவர்கள் பலி – பாதுகாப்பு அமைச்சு தகவல்

புலிகளின் சார்ள்ஸ் அன்டனி படைப் பிரிவுத் தலைவர் அமுதாப் மற்றும் அதன் முன்னாள் தலைவர் கோபித் ஆகிய இருவரும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல்களின்போது கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

படையினரின் தாக்குதலில் இவ்விருவரும் கொல்லப்பட்டதை புலிகளின் பிடியிலிருந்து தப்பி நேற்று இராணுவத்தினரிடம் தஞ்சமடைந்த பொதுமக்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். புலிகளிடம் தற்போது எஞ்சியுள்ள கனிஷ்ட மற்றும் நடுத்தர படைப் பிரிவுகளைச் சேர்ந்தோர் புலிகளின் படைப் பலத்தில் நம்பிக்கையிழந்துள்ளதோடு இராணுவத்தினரிடம் சரணடைவதற்கும் தஞ்சம் கோருவதற்கும் திட்டமிட்டு வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

புலிகளின் தலைமைத்துவத்துடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக ஒரு சில மாதங்களுக்கு முன்னர் அமுதாபின் இடத்துக்கு கோபித் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு அடி உயர மாப்பிள்ளையை மணந்த ஐந்து அடி உயர பெண்

marriage.jpgஇரண்டு அடி உயரே ஆன 35 வயது இளைஞர், 5 அடி உயரம் கொண்ட பெண்ணை மணந்துள்ளார்.

இந்த சம்பவம் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பரப்புரத்தில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் நேற்று  நடை பெற்றுள்ளது கேரள மாநிலம் கோழிக்கோடை சேர்ந்தவர் தேவதாஸ். இவர் ஒரு ஓவியர். வயது 35 . இவர் வழக்கமான ஆண்களின் உயரம் கொண்டவரல்ல இரண்டு அடி உயரமே கொண்டவர்.

இந்த இயற்கையின் முரண் காரணமாக திருமணமே நடைபெறாமல் இருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் 30 வயதான சசிகலா என்ற பெண்ணை சந்தித்தார். இவர் பெண்களின் சராசரி உயரமான 5 அடி உயரம் கொண்டவர். உயரத்தில் ஏற்றத்தாழ்வு இருந்தாலும்,  இருவரது மனமும் சமன்பட்டது, காதல் மலர்ந்தது, இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.

தேவதாஸின் குடும்பத்தினர் இந்த காதலுக்கு பச்சைக் கொடி காட்டினர். ஆனால் சசிகலாவின் பெற்றோருக்கு துளியும் இதில் விருப்பம் இல்லை. இருந்தாலும் தங்களது காதலில் உறுதியாக இருந்த தேவதாஸும், சசிகலாவும் கோழிக்கோடு மாவட்டம் பரப்புரத்தில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் வைத்து நேற்று திருமணம் செய்து கொண்டனர்.

ராமர் கோவில் கட்டுவோம்-ராமர் பாலத்தைக் காப்போம்: பாஜக தேர்தல் அறிக்கை

03-advani.jpgபாஜக தலைமையில் ஆட்சி அமைந்தால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும். ராமர் பாலத்தை பாதுகாப்போம், இடிக்க மாட்டோம். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க வகை செய்யும் அரசியல் சட்டம் 370வது பிரிவை ரத்து செய்வோம் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாரதிய ஜனதாக் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று டெல்லியில் வெளியிடப்பட்டது. இதில் ராமர் கோவில் கட்டப்படும் என்பதை முக்கிய வாக்குறுதியாக பாஜக தெரிவித்துள்ளது. இதன் மூலம் தனது இந்துத்வா கொள்கைக்கு பாஜக புத்துயிர் கொடுத்துள்ளது.

மேலும் இன்று ராமர் நவமி என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய தினத்தில் ராமர் கோவில் கட்டப்படும், ராமர் பாலம் பாதுகாக்கப்படும் என பாஜக உறுதியளித்துள்ளது.

இடம்பெயர்ந்தோர் நலன் கருதி இன்று முதல் தொலைபேசி வசதிகள் – அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

badurdeen.jpgவவுனியா விலுள்ள நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோரின் நலன் கருதி இன்று முதல் தொலைபேசி வசதிகள் ஏற்பாடு செய்துகொடுக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

விடுவிக்கப்படாத பிரதேசங்களிலிருந்து வந்த பொதுமக்களுக்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் நிவாரண உதவிகள் மற்றும் வசதிகள் தொடர்பாக நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பணிப்பின் பேரில் மீள்குடியேற்றம், அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் தபால்,  தொலைத் தொடர்புகள் ஆகிய அமைச்சுக்கள் இணைந்து இத்தொலைபேசி இணைப்பு வசதிகளை செய்துகொடுக்கவுள்ளன.

நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்கள் இந்த தொலைபேசியைப் பயன்படுத்தி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள தங்களது உறவினர்களுடன் தொடர்புகொள்ள வசதிகள் செய்துகொடுக்கப்படவுள்ளன. ஒவ்வொரு நிவாரண நிலையங்களுக்கும் 2 தொலைபேசிகள் என்ற அடிப்படையில் வவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள 15 நிவாரண நிலையங்களுக்கும் இன்று முதல் இத்தொலைபேசி இணைப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.