2009

2009

கருணாநிதிக்கு நிரந்தர ஓய்வு கொடுங்கள்-ஜெ

j-j-j.jpgகருணாநிதியைப் பார்ப்பதற்கு எனக்கு பயமில்லை. அவருக்குத் தான் என்னை நேருக்கு நேர் சந்திக்க பயம். நான் சட்டசபைக்கு வருகிறேன் என்று தெரிந்தாலே என்னைப் பார்க்கப் பயந்து கொண்டு தனக்கு முன்பு ஏராளமான கோப்புகளை அடுக்கி வைத்து முகத்தை மறைத்துக் கொள்வார் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,

இன்று காலை பத்திரிகைகளில் பரபரப்பான செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். அது என்னவென்றால், நேற்று சென்னை விமான நிலையத்தில் நானும், கருணாநிதியும் நேருக்கு நேராக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக் கூடிய சூழ்நிலை உருவானது. இதை எப்படி தவிர்ப்பது என்று காவல் துறை அதிகாரிகள் பதற்றமடைந்தார்கள், கவலை அடைந்தார்கள் என்று பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. ஏன், கருணாநிதியும், நானும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக் கொண்டால் என்ன? அதனால் என்ன ஆகப் போகிறது? நேருக்கு நேராக கருணாநிதியைப் பார்ப்பதற்கு எனக்கொன்றும் பயம் கிடையாது. ஆனால், நேருக்கு நேர் என்னை சந்திப்பதற்கு கருணாநிதி தான் பயப்படுகிறார்.

அதனால்தான் சட்டப்பேரவையில் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் எதிரெதிரே அமரும் வகையில் இருந்த இருக்கையை 15 அடி தொலைவுக்கு மாற்றிவிட்டார். நான் பேரவைக்கு வருகிறேன் என்று தெரிந்தாலே என்னைப் பார்க்கப் பயந்து, தன் முன்பு ஏராளமான கோப்புகளை அடுக்கிவைத்துக் கொள்வார் கருணாநிதி.

கருணாநிதியால் இப்போது கடமையாற்ற முடியவில்லை. முதலமைச்சர் செய்ய வேண்டிய பணிகளை செய்ய முடியவில்லை. ஆகவே, நீங்கள் கருணாநிதிக்கு நிரந்தர ஓய்வு அளிக்க வேண்டும். என்றார் ஜெயலலிதா.

ஈழத் தமிழரின் தன்மானம் காக்கத் தலைநிமிர்ந்த தமிழர் தலைவிக்கு டென்மார்க் தமிழ் மக்களின் வாழ்த்துக்கள்.

denmark_saiva_peravai.jpgஈழத் தமிழர்களுக்கோர் கலங்கரை விளக்காகத் தென்படத் தொடங்கியுள்ள உங்களை உலகத் தமிழ் மக்கள் எல்லோரும் ஓர் தாயுள்ளம் கொண்ட தமிழினத்தின் தலைவியாகவே பார்க்கின்றோம். இவ்வாறு அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு டென்மார்க சைவ தமிழ் பண்பாட்டு பேரவையினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உண்ணாவிரதம் வெற்றி பெற்றிராதுவிட்டால் ஈழத்து திலீபன் கல்லறையருகே இருந்திருப்பேன் – கருணாநிதி

20-karunanithi.jpg இலங்கையில் போர்நிறுத்தத்தை வலியுறுத்தி நான் இருந்த உண்ணாவிரதம் வெற்றிபெற்றிராதுவிட்டால் ஈழத்து திலீபன் கல்லறைக்கு அருகில் தற்போது நானும் இருந்திருப்பேனென தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார்.

யாருக்கும் தெரிவிக்காமல் உண்ணாவிரதம் இருந்ததற்கான காரணத்தை விளக்கி முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கைப் பிரச்சினைக்காக ஏப்ரல் 27 ஆம் திகதி கருணாநிதி திடீரென அண்ணா சமாதியில் உண்ணாவிரதம் இருந்தார். இது தொடர்பில் அவர் எழுதியுள்ள கடிதம்:

தமிழர்களைக் காத்திட எனது உயிர் பயன்பட்டால் என்ன என்றுதான் யாருக்கும் தெரிவிக்காமல் உண்ணாவிரத முடிவை எடுத்தேன். வீட்டில் உள்ளவர்களுக்குக் கூட தெரிவிக்கவில்லை.

உண்ணாவிரதம் வெற்றிபெற்றதால் தான் உங்களோடு இருக்கிறேன். இல்லாவிட்டால் விருதுநகர் சங்கரலிங்க கல்லறையின் அருகிலோ ஈழத்து திலீபன் கல்லறைக்கு அருகிலோதான் இருந்திருப்பேன்.

‘பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள்!’ – காசி ஆனந்தன்

kasianandan.jpgஒரு இனத்தின் விடுதலைக்காகப் போராடும் பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள். ஒருவர் இறந்தபிறகு தரும் மரியாதையை, அவர் உயிரோடு இருக்கும்போதே கொடுங்கள், என்றார் கவிஞர் காசி ஆனந்தன்.

திரைப்பட ஒளிப்பதிவாளர் கவியரசு எழுதிய ‘மேலைக் கடலில் ஈழக்காற்று’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா கவிஞர் காசி ஆனந்தன் தலைமையில் சென்னையில் சனிக்கிழமை மாலை நடந்தது.  தலைமை உரையாற்றிய கவிஞர் காசி ஆனந்தன் பேசியதாவது:

ஊடகங்களும், அரசியல்வாதிகளும் இது தேர்தல் காலம் என கூறுகிறார்கள். இல்லை… அது பிழையானது. இது போராட்டக் காலம். தமிழகத்தின் ஒரே தொப்புள் கொடி உறவு ஈழத் தமிழர்களைக் காக்க ஒட்டுமொத்த தமிழகமே எழுச்சியுடன் நிற்கும் காலம்.

உலகில் எந்தப் போராட்டத்துக்கும் இல்லாத சிறப்பு ஈழப் போராட்டத்துக்கு உண்டு. உலகப் புரட்சிகளுக்கெல்லாம் அண்டை நாட்டு வல்லரசுகளின் ஆயுத, அரவணைப்புகள் கிடைத்தன. இன விடுதலை எளிதில் சாத்தியமானது. ஆனால் நமக்கு… நம்மைத் தவிர வேறு யார்?. இன்று உலகெங்கிலும் வாழும் லட்சக்கணக்கான புலம் பெயர் தமிழர்கள், உலகின் கவனத்தை தமிழர்பால் திருப்பியுள்ளனர்.

பிரபாகரன் ஈழம் முழுவதையும் வென்றிருந்தால் கூட, ஐநா சபை சபை பாதுகாப்பு மன்றம் வாய் திறந்திருக்காது. ஆனால் இன்று வாய் திறந்து ஈழப் பிரச்சினையை பேசுகிறது. அந்தச் சாதனையைச் செய்திருப்பவர்கள் புலம் பெயர் தமிழர்களே. செய்ய வைத்திருப்பவர் பிரபாகரன்.

இன்று உலகம் தமிழன் இன விடுதலைப் பற்றி, தமிழ் ஈழம் பற்றி பேசுகிறது… அதுதான் நமது வெற்றி. நான் அடிக்கடி சொல்வதைப் போல, தமிழன் தன் புத்திசாலித்தனத்தால் ஈழம் வெல்லாவிட்டாலும், சிங்களவனின் முட்டாள்தனத்தால் அது கிடைக்கும். பயங்கரவாதி, சகோதரயுத்தம் நடத்தியவர் என்றெல்லாம் இழித்தும் பழித்தும் சிலர் பேசி வருகிறார்கள். பிரபாகரனை அழித்து விட்டுப்பேசலாம் என்கிறது இந்தியா. தாங்கொணாத வேதனையைத் தருகிறது அந்தப் பேச்சு.

பிரபாகரனை பழித்துப் பேசுவோரை வரலாறு மன்னிக்காது… இறந்த பிறகு மாலை மரியாதையுடன் தரப்படும் பட்டங்களால் என்ன பயன்… உயிருடன் இருக்கும் அந்தத் தலைவனை இப்போது பழித்துவிட்டு, அவர் காலத்துக்குப் பின் போற்றிப் பாடும் அதே வழக்கமான தவறை இப்போதும் செய்து விடாதீர்கள். இறந்தபிறகு மரியாதையுடன் புருஷோத்தம மன்னனைப் போல நடத்தப்பட வேண்டும் என்கிறீர்களே… அந்த மரியாதையை அவர் உயிருடன் இருக்கும்போது கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம்.

ராஜீவ் காந்தியின் கொலையை நாங்கள் நியாயப்படுத்தவில்லை. ஆனால் இந்தியப் படைகள் ஈழத்தில் நடத்திய கோரத் தாண்டவத்தை நாங்கள் எப்படி மறப்பது? 3000 தமிழ் தாய் – சகோதரிகளையும், 6000க்கும் மேற்பட்ட மக்களையும் கொன்ற இந்திய ராணுவத்தின் கொடூரத்தை எப்படி மறக்க முடியும்?

புலிகளை பயங்கரவாதிகள் என்கிறீர்களே… எப்போதாவது, ஒரு புலி அப்பாவி சிங்களவர்களை கொத்துக் கொத்தாகக் கொன்றதாகக் கூற முடியுமா?. எந்தப் புலி வீரனாவது ஒரு சிங்களப் பெண்ணை கெடுத்ததாக, குறைந்தபட்சம் கேவலமாக நடத்தியதாக நீங்கள் கேள்விப்பட்டதுண்டா… அல்லது இலங்கையின் எந்த ஆட்சியாளராலாவது அப்படி ஒரு புகாரைக் கூற முடியுமா? எந்த அடிப்படையில் இவர்கள் பயங்கரவாதிகள்?  என்றார் காசி ஆனந்தன்.

மாணவி தினுஷ்காவின் படுகொலையைக் கண்டித்து மட்டக்களப்பில் மூன்று நாட்கள் எதிர்ப்பு நடவடிக்கை

thinu.jpgகடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி தினுஷ்காவின் கொலையைக்கண்டித்து பாடசாலை பகிஷ்கரிப்பில் ஈடுபட்டும் வர்த்தக நிலையங்களை மூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுமாறும் பகிரங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  இன்று திங்கட்கிழமை முதல் மூன்று தினங்களுக்குள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுமாறு மட்டக்களப்பு வாழ் நலன் விரும்பிகள் என்ற பெயரில் இந்த பகிரங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

மட்டக்களப்பில் பாடசாலை மாணவியான இந்த சிறுமிக்கு ஏற்பட்டுள்ள இந்த கொடூரமான படுகொலையை அனைவரும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இதனைக் கருத்திற் கொண்டு அனைவரும் ஒன்று திரண்டு இந்த சிறுமியின் படுகொலைக்கான சூத்திரதாரிகளை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கையெடுக்க வேண்டும் எனக்கோரி இன்று முதல் 3 நாட்களுக்கு வர்த்தக நிலையங்களை மூடி பகிரங்கமாக எமது எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம்.

நேற்று சிறுமி வர்ஷா. இன்று தினுஷிகா. நாளை யார்? அதேவேளை இன்று திங்கட்கிழமை அனைத்து பாடசாலை மாணவர்களும் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு படுகொலையினைக் கண்டிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலய பாடசாலை அபிவிருத்திச் சங்கம் இன்று திங்கட்கிழமை முதல் மூன்று நாட்கள் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாது தவிர்த்து இக் காட்டுமிராண்டித்தனமான படுகொலையைக் கண்டிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

வன்னி அகதிகளுக்கு உணவுப் பொதி நிறுத்தம் இனிமேல் அவர்களே சமைக்க வேண்டும் – வவுனியா கச்சேரிக் கூட்டத்தில் தீர்மானம்

fily-ap.jpg
வன்னியிலிருந்து வந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு சமைத்த உணவுப் பொதிகளை வழங்குவதை நிறுத்தி தினமும் அவர்கள் தமக்குரிய உணவை தாமே சமைத்துக் கொள்வதற்கு வசதிகள் செய்யப்படவுள்ளது.

நேற்று வவுனியா கச்சேரியில் நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில் இது தொடர்பாக ஆராயப்பட்டது. தினமும் சமைத்த உணவை வழங்கும் போது சில அசௌகரியங்கள் ஏற்பட்டு வருவதாக அதிகாரிகள் இந்த மாநாட்டில் சுட்டிக்காட்டினார்கள்.

அத்துடன் மக்கள் நீண்ட வரிசையில் நின்று உணவுப் பொதிகளை வாங்குவது, நேரம் பிந்தி வழங்கப்படுவது போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. எத்தனை நாட்களுக்கு சமைத்த உணவை வெளியிடங்களிலிருந்து பெறுவது எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இதேநேரம், உணவை சமைக்கும் போது தற்போதைய கடும் வெயில் காரணமாக தீ விபத்து ஏற்படலாம் எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினார்கள். இவ்விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஒரு குழுவை அரசாங்க அதிபர் நியமித்துள்ளார். இக் குழுவின் அறிக்கை கிடைத்ததும் நலன்புரி நிலையங்களில் உள்ளவர்களே தமக்குரிய உணவை சமைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வவுனியாவில் 78 சடலங்கள் அரச செலவில் அடக்கம்

வன்னிப்பகுதியைச் சேர்ந்த 78 பேரின் சடலங்கள் சனிக்கிழமை இரவு அரச செலவில் வவுனியா பூந்தோட்டம் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டன.

நலன்புரி நிலையத்தில் மரணமானவர்கள், நோய்களுக்குள்ளாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மரணமானவர்கள் மற்றும் அடையாளம் காணப்படாத சடலங்கள், உறவினர்களால் பொறுப்பேற்கப்படாத சடலங்களே இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டன.

பொலித்தீன் உறைகளில் சடலங்கள் பொதிசெய்யப்பட்டு ஒரே குழியில் போடப்பட்டு இவை அடக்கம் செய்யப்பட்டன.

ஏற்கனவே இதுபோன்று நூற்றுக்கும் மேற்பட்ட சடலங்கள் பூந்தோட்டம் மயானத்தில் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டதும் தெரிந்ததே.

பெரியார் தி.க.வினரை விடுதலை செய்யவேண்டும்; தா.பாண்டியன்

koovai.jpgஇந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது : இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுத்து, ஈழத்தில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு இந்திய அரசுதான் காரணம் என்ற கோபம் தமிழகம் முழுவதும் பெருக்கெடுத்து நிற்கிறது. இதன் வெளிப்பாடாகத்தான் கோவைக்கு அருகில் ராணுவ லாரிகளை மக்கள் தடுத்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்கள். இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ந்து கொல்லப்படுவதால் எழுந்த கோபம் தான் இது என்பதை, இந்த நேரத்தில் அரசாங்கங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு மாறாக தொடர்புடையவர்கள் என்று கூறி கைது செய்தல், கடுமையான அடக்குமுறைகள் ஆகியவற்றை கண்டிக்கிறோம். கோவையில் பெரியார் திராவிடர் கழகத்தின் முன்னணித்தலைவரான ராமகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

இராணுவத்தினரிடம் சரணடைந்த 31 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

ltte_.jpg
இராணுவத்தினரிடம் சரணடைந்த 31 இளைஞர்கள், பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, இன்று வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இவர்களில் 22 பேரை, வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறும், 9 பேரை, பல்வேறு இடங்களிலும் உள்ள அவர்களது உறவினர்களிடம் கையளிக்குமாறும் அரச அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு பேரை அம்பேபுஸ்ஸவில் உள்ள சிறுவர் புனர்வாழ்வு நியைத்திற்கு அனுப்பி வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த வாரத்திலும் இவ்வாறு இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் அமைப்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்ட 58 பேர் நீதிமன்ற உத்தரவுக்கமைய அம்பேபுஸ்ஸவில் உள்ள புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

புல்மோடை பகுதியில் மேலதிக நலன்புரி மத்திய நிலையங்கள்

20090424063601srilanka4.jpgமுல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியிலிருந்து தப்பி வரும் பொதுமக்களுக்காக திருகோணமலை புல்மோடைப் பகுதியில் நலன்புரி மத்திய நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

புதுமாத்தளன் பகுதியிலிருந்து படகுகள் மூலம் தப்பி வருகின்றவர்களும் செஞ்சிலுவை சர்வதேசக்குழுவினால் மீட்கப்படுகின்ற மக்களும் புல்மோடை பிரதேசத்துக்கே வருவதால் இங்கு நலன்புரி மத்திய நிலையங்களை அமைக்க கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம நடவடிக்கை எடுத்துள்ளார்.

திருகோணமலை மாவட்டச்செயலகம் ஊடாக இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்டுள்ளதுடன் இதுவரை இப்பிரதேசத்துக்கு வந்துள்ள மக்கள் புல்மோடை சிங்கள வித்தியாலயம் அரபாத் நகர் வித்தியாலயம், மற்றும் புல்மோடை முஸ்லிம் வித்தியாலயம் ஆகிவற்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இப்பாடசாலைகளில் 1123 குடும்பங்களைச் சேர்ந்த 3945 பேர் தங்கியுள்ளனர். இவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் ஏனைய வசதிகளை வழங்க மாவட்டச் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. வருபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதால் மேலதிக நலன்புரி மத்திய நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.