2009

2009

வளம் கொழிக்கும் தேசமாக கட்டியெழுப்ப சகலரும் ஒத்துழைக்க முன்வர வேண்டும்

mahinda-rajapaksha.jpg‘எனக்கு முன்னிருந்த தலைவர்களால் யுத்தத்தைக் காரணம் காட்டி நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாமல் போனது. இனிமேல், நான் உட்பட எவரும் யுத்தத்தைக் காரணம் காட்டி நாட்டை அபிவிருத்தி செய்யாமல் இருக்க முடியாது. இதற்காக அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். படைவீரர்களைப் பாராட்டும் விழா நேற்று பாராளுமன்றத்திற்கு முன்னாலுள்ள மைதானத்தில் நடந்தது.

இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஜனாதிபதி, இலட்சக் கணக்கானோர் கலந்துகொண்ட ஜனசமுத்திரத்தின் மத்தியில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது; 30 வருடங்களுக்குப் பின்னர் நாட்டை முழுமையாக மீட்டெடுத்ததன் பின் நடத்தப்படும் முதலாவது தேசிய விழா இது. புலிகள் என்றதும் சிலரின் கால்கள் நடுங்கின. புலிகள் திறமைமிக்கவர்கள், அவர்களுடன் போராடி வெல்ல முடியாது. யுத்தம் செய்ய வேண்டாம் என்றெல்லாம் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களும் இந்த நாட்டிலுள்ள சிலரும் எம்மிடம் கூறினர்.

இந்த நாட்டை ஆட்சி செய்த முன்னாள் தலைவர்களால் கூட புலிகளை தோற்கடிக்க முடியாமல் போய்விட்டது. நாட்டை பிரித்துக் கொடுத்து விடுங்கள் என்று கூட கூறினர். ஆனால் நான் எனது முப்படைத் தளபதிகளை நம்பினேன். இந்நாட்டிலுள்ள தாய்மாரின் புதல்வர்களை நம்பினேன். இந்த நாட்டிலுள்ள அனைவரிடத்திலும் நாட்டுப்பற்று இருக்கிறது. நாட்டின் மீது அன்பும் இருக்கிறது. இவை புதைக்கப்பட்டிருந்தது.

கடற்புலிகளின் தளங்கள் அனைத்தும் கடலுக்குள்ளேயே சமாதியாக்கப்பட்டு விட்டன. எமது பிள்ளைகள் பாடசாலைக்கு சென்ற போது, அங்குள்ள பிள்ளைகள் துப்பாக்கிகளை ஏந்தின. ஆனால் பிரபாகரனின் பிள்ளைகள் பாடசாலை சென்றனர். பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிவிட்டு எமது தாய்மார் பாடசாலை கதவோரம் நின்று காவல் புரிந்தார்கள். ஏன் குண்டு வெடிக்கும் என்ற பயம் அவர்களுக்கு. இனி அந்த குண்டு வெடிக்காது என்பதை எமது தாய்மார்களுக்கு கூறி வைக்க விரும்புகின்றேன்.

தேசியக் கொடியை வடபகுதியில் பறக்க விட புலிகளிடம் அனுமதி பெற வேண்டியிருந்த காலமொன்று இருந்தது. ஆனால் அந்தநிலை இனி இல்லை. எங்கும் தேசியக் கொடி பறக்கும். தலதா மாளிகைக்கு முன் பறக்க விடப்படும் தேசியக் கொடி தான் புதுமாத்தளனிலும் பறக்கும். இப்போது நாம் பெரும் வெற்றிக்களிப்பில் இருக்கிறோம். இந்த வெற்றி கொண்டாட்டமானது வேறு எவரது மனதையும் புண்படுத்தக் கூடியதாக இருக்கக்கூடாது.

இன்று தமிழ், முஸ்லிம் வீடுகளிலும் தேசியக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. அனைவரும் இந்த நாடு பூரண சுதந்திரம் பெற்றுவிட்டதாகவே கருதுகிறார்கள்.

தீவிரவாதத்தை எவ்வாறு தோற்கடித்தோமோ அதே போன்று போதைப் பொருள் பாவனையையும், சட்ட விரோத மதுபான உற்பத்தியையும் ஒழிக்க வேண்டியுள்ளது. இந்தச் சவாலிலும் ஜெயிப்போம் என்றார் ஜனாதிபதி. பொலிஸ் மற்றும் முப்படை வீரர்களையும் பாராட்டும் தேசிய விழா பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்களிப்புடன் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி வவுனியா நிவாரண கிராமம் விஜயம்

manig.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ நேற்று வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்தார். அவருடன் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேக்காவின் மனைவி, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவின் மனைவி, விமானப் படை தளபதியின் மனைவி, பொலிஸ் மா அதிபரின் மனைவி, மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் கஹந்த லியனகே மற்றும் அவரது மனைவி ஆகியோர் சென்றிருந்தனர்.

வவுனியா அரசஅதிபர் திருமதி சார்ள்ஸ், ஜனாதிபதியின் பாரியார் உள்ளிட்ட குழுவினரை வரவேற்றார். நேற்றுக் காலை 10.30 மணியளவில் ஹெலிக்கொப்டரில் சென்ற இவர்கள் வவுனியா மணிக் பாம் நிவாரணக் கிராமத்தில் 4 ஆவது வலயப் பகுதிக்குச் சென்றனர்.

ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவின் “சிறிலிய சவிய” வேலைத் திட்டத்தின் கீழ் நிவாரணக் கிராமங்களிலுள்ள குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்கள், உடைகள், பெண்களுக்கான உடைகள், வீட்டுப் பாவனை பொருட்கள், உணவுப் பொருட்கள் போன்றவற்றையும் வழங்கினார்.

அவர்களுடன் வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ், பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லியூகே, நிவாரணக் கிராமங்களுக்குப் பொறுப்பான இராணுவ பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

புலிகளுக்கு எதிரான போரில் 6000 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பலி – கோட்டபாய ராஜபக்ஷ

gotabhaya.jpgஇலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிராக நடந்த இறுதிகட்ட போரில் கடந்த மூன்று வருடங்களில் 6200 க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் பலியானதாகவும், முப்பதினாயிரம் பேர்வரை காயமடைந்ததாகவும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.  இலங்கை அரசாங்க தொலைக்காட்சியில் பாதுகாப்புத்துறை செயலர் கோத்தாபாய ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்த 26 வருட மோதல்களில் மொத்தமாக எண்பதினாயிரம் பேர்வரை கொல்லப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது. அரசாங்கத்தின் ஐடிஎன் தொலைக்காட்சியில் உரையாற்றிய கோத்தாபாய ராஜபக்ஷ அவர்கள், கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இறுதிக்கட்ட போர் நடவடிக்கைகள் ஆரம்பமான பின்னர் 6261 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாகவும், 29,551 பாதுகாப்புப் படையினர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளளார்.

இலங்கையின் மீள்கட்டுமான பணிகளுக்கு ஐ.நா உதவும் – செய்தியாளர் மாநாட்டில் விஜே நம்பியார்

menikfarm_nambiyar.jpgமோதல் பகுதிகளிலிருந்து பெருந் தொகையான சிவிலியன்களை அரசாங்கம் வெளியேற்றியுள்ளமையானது, இலங்கைப் பிரச்சினையில், இரத்தக் களரியைத் தடுக்க ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டைப் பொய்யாக்கியுள்ளதாக ஐ. நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதி விஜே நம்பியார் தெரிவித்தார்.

கடந்த ஒரு வாரகாலமாக கொழும்பில் தங்கியிருக்கும் விஜே நம்பியார் நேற்று (22) கொழும்பில் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருக்கும் மனிக்பாம் நிவாரணக் கிராமங்களுக்குச் சென்ற அவர், இறுதிக் கட்ட மோதல் நடை பெற்ற பாதுகாப்பு வலய பகுதியை விமா னத்திலிருந்தவாறே பார்வையிட்டு விட்டுத் திரும்பினார். ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் விசேட பிரதிநிதியாக இலங்கை வந்த நம்பியார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட அரசியல் தலைவர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள், இராஜதந்திரிகள், மனிதநேய முகவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரையும் சந்தித்தார்.

புலிகளுடனான ஆயுத மோதலை முடிவுக்குக் கொண்டு வந்தமை தொடர்பில் எந்தக் கேள்விக்கும் இடமில்லையெனத் தெரிவித்த விஜய் நம்பியார், இது இலங்கையின் வரலாற்றில் முக்கிய திருப்பமாகுமென்றும் தெரிவித்தார். அதேநேரம், இலங்கையின் மீள்கட்டுமான பணிகளுக்கு ஐ. நா. உதவுமென்று தெரிவித்த அவர், மோதல் இடம்பெற்ற பகுதிகளில் கண்ணி வெடிகளை அகற்றுவதிலும் ஒத்துழைப்புகளை நல்குமென்றும் தெரிவித்தார்.

குடும்ப நலனுக்காக கருணாநிதி ஆட்சியில் பங்கு கேட்கிறாரென கட்சிகள் குற்றச்சாட்டு

karunanithi.jpgதி.மு.க.வின் சுயநலப் போக்கு மத்திய அமைச்சரவையில் தெள்ளத் தெளிவாகி இருக்கிறது. குடும்ப சுயநலத்திற்காக ஆட்சி நடத்துவதற்கு தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி முயல்கிறாரென குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் எஸ். ஷேக் தாவூத் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

கருணாநிதியின் குடும்ப அரசியல் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 அல்லது 5 பேர் மத்திய அமைச்சரவையில் முக்கிய இலாகாக்களை கேட்டு அமைச்சரானால் ஒரு குடும்ப ஆட்சி இந்தியாவில் மீண்டும் மன்னராட்சியைக் கொண்டுவந்தது போல் அமையாதா? படித்தவர்கள் அரசியல் வித்தகர்கள் என்ன நினைக்கிறார்கள்? இது ஜனநாயகக் கேலிக்கூத்து.

ஆகவே ஒரு குடும்ப ஆட்சிமுறை மறுக்கப்பட வேண்டும். ஆனாலும், கருணாநிதி குடும்ப நலன் காரணமாக பிடிவாதமாக தி.மு.க.விற்கு மத்தியில் 9 அமைச்சர்கள் கேட்டு அது மறுக்கப்பட்டு 7 அமைச்சர்கள் காங்கிரசாரால் ஒத்துக்கொள்ளப்பட்டு மீண்டும் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தி அதுவும் மறுக்கப்பட்டு காங்கிரசின் புதிய திட்டப்படி 9 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு மத்திய அமைச்சர் என்ற நிலையை தி. மு.க நிராகரித்துவிட்டதாக நாளேடுகளில் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. வெளியில் இருந்து காங்கிரசுக்கு ஆதரவு என்று கருணாநிதியால் சொல்லப்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. மொத்தத்தில் மழை ஓய்ந்தும் தூவானம் விடாமல் இருக்கிறது.

கருணாநிதி அவர்கள் மத்தியில் காங்கிரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து தமிழகம் திரும்பினால் தமிழகத்திலும் கருணாநிதி தலைமையிலான மந்திரி சபை ஆட்டம் காணுகின்ற சூழல் உருவாகும். தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் தான் தி.மு.க சிறுபான்மை அரசு ஆட்சியில் உடும்புப் பிடியாக ஒட்டிக்கொண்டிருக்கிறது. காங்கிரஸ் ஆதரவு தமிழகத்தில் விலக்கிக்கொள்ளப்பட்டால் தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் காங்கிரசை ஆதரித்து காங்கிரஸ் ஏன் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைக்கக்கூடாது? இது ஒரு நல்ல முன்மாதிரியாக காங்கிரசாருக்கு அமையும்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த அரிய சந்தர்ப்பத்தை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள் என்று தமிழ் மாநில முஸ்லிம் லீக் நம்புகிறது.

யுத்தத்தின் பின்னரான சூழ்நிலையில் எதிர்கால நடவடிக்கை குறித்து ஆராய மு.கா.தீர்மானம்

Hasan Ali M T_SLMC Gen Secயுத்தத்துக்குப் பின்னரான சூழ்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்களை மேற்கொள்வதற்காக கட்சியின் உயர் பீடம் எதிர்வரும் 24 ஆம் திகதி கூடி ஆராயவுள்ளது. இது தொடர்பில் அதன் பொதுச் செயலாளர் ஹசன்அலி கருத்துத் தெரிவிக்கையில்:

தற்போதைய யுத்தத்துக்குப் பின்னரான சூழ்நிலையில் கட்சியின் எதிர்கால நடவடிக்கை குறித்த தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியதன் நிமித்தம் கட்சியின் உயர்பீடம் கூடவுள்ளது. இக் கூட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி கட்சியின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது. இதன்போது பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொள்ளவேண்டியுள்ளது. முக்கியமாக தமிழ்முஸ்லிம் மக்களின் உறவு குறித்து ஆலோசிக்கவுள்ளோம்.

ஜனாதிபதியின் பாராளுமன்ற உரையில் நாட்டில் சிறுபான்மையினர் இல்லையென தெரிவித்துள்ளார். அதனை நாம் வரவேற்கின்றோம். யுத்தம் முடிவடைந்த நிலையில் மக்கள் ஜனநாயக வழியில் சுதந்திரமாக சிந்தித்து முடிவுகளை எடுப்பதற்கு வழிவகுக்க வேண்டும். அதாவது அவர்கள் இயற்கையான தலையீடுகளற்ற முறையில் தமது தெரிவுகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

தெரிவுகள் மூலம் தமிழ், முஸ்லிம் தலைமைகள் இனம்காணப்பட்டு பிரச்சினைக்கான தீர்வுகளை முன்வைக்கும் போது காத்திரமான முடிவேற்பட்டு இதன் மூலம் ஜனாதிபதியின் புகழ் இன்னும் மேலோங்கும். அதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. ஆயுதக் குழுக்களிடமுள்ள ஆயுதங்கள் களையப்படுவதன் மூலம் இந்த ஜனநாயக முறையிலான இயற்கை தீர்வுக்கு சந்தர்ப்பம் கிட்டுமெனத் தெரிவித்தார்.

களுகங்கையின் நீர்மட்டம் உயர்வு

இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக களுகங்கையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. இதனால் தாழ்ந்த பிரதேசங்களில் நீர்நிரம்பி வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து தாழ்ந்த பிரதேசங்களில் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர். அத்தோடு, மண்சரிவு அபாயமுள்ள இடங்கள் என இனங்காணப்பட்டுள்ள இடங்களை அண்டிய பிரதேசங்களில் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்மழை காரணமாக சில வீதிகளில் மரம் விழுந்து போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. இரத்தினபுரி – பாணந்துறை வீதியில் மரம் ஒன்று சரிந்து விழுந்ததால் பல மணிநேர போக்குவரத்து ஸ்தம்பிதம் ஏற்பட்டது. அத்தோடு வீதிகளில் ஆங்காங்கே சிறு மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

860 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை

teacher.jpg860 பட்டதாரிகளுக்கு நாடளாவிய ரீதியில் ஆசிரிய நியமனங்களை கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் வழங்க அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திசெய்யும் முகமாக இம்மாதத்திலிருந்து ஆசிரிய நியமனங்களை கல்வி அமைச்சு வழங்கவுள்ளது.

இவ்வாறு நியமனம் பெறும் ஆசிரியர்களுக்கான முன் ஆயத்த பயிற்சிக் கற்கைநெறி இம்மாதத்திலிருந்து இடம்பெறுகிறது. இதில் தமிழ்மொழிமூல பட்டதாரிகள் 259 பேர் மட்டக்களப்பு தாளங்குடா கல்வியியல் கல்லூரியிலும், சிங்கள மொழிமூல பட்டதாரிகள் 458 பேர் மகாவலி சியதே கல்விக்கல்லூரியிலும், பண்டுவஸ்நுவர கல்வியியல் கல்லூரியிலும், முஸ்லிம் பட்டதாரிகள் அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரியிலும் பயிற்சிக்காக அனுப்பிவைக்கப்படுகின்றனர். பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு ஏற்ப இந்த ஆசிரிய பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, நியமனம் பெறும் பட்டதாரிகள் ஐந்து வருடங்கள் அதேபாடசாலையில் கடமையாற்றவேண்டும். பட்டதாரிகள் ஆசிரிய சேவையில் தரம் 31 பிரிவுகளுக்குள் உள்வாங்கப்படுவர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக் காய்ச்சலுக்கு இதுவரை 7 பேர் பலி

எலிக் காய்ச்சலால் இரத்தினபுரி மாவட்டத்தில் இதுவரை 7 பேர் மரண மடைந்துள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார அமைச்சர் ரஞ்சித் சொய்சா தெரிவித்தார். சப்ரகமுவ மாகாண சபை கூட்டத் தொடரில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த காலங்களில் சிக்குன்குன்யா, டெங்கு போன்ற காய்ச்சல்களால் பல இழப்புகளைச் சந்தித்த இப் பிரதேசத்தில் இவற்றைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி இப் பகுதியில் அவசர நோய்த் தடுப்பு நிலைமையை பிரகடனப்படுத்தியதன் மூலம் நிலைமை கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டதை நினைவூட்டிய அவர், தற்போது எலிக்காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்த மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

இலங்கைத் தமிழருக்கு அரசியலமைப்பில் சம உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் – ஜெயலலிதா கோரிக்கை

jayalaitha.jpgஇலங்கை அரசியல் அமைப்பில் தமிழர்களுக்கும் சம உரிமை வழங்கும் படி மாற்றம் கொண்டு வர வேண்டும் என ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். விடுதலைப்புலிகள் பெரும்பாலானவர்களை அழித்து விட்டதாக இலங்கை அரசு கூறுகிறது. ஆனால், இது எந்த வகையில் அந்த அரசு அங்கு வாழும் தமிழர்களுக்கு இழைத்த அநீதிகளுக்கு மருந்தாகும் என்பது கேள்விக்குறி. பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது அவசியம். இந்த உண்மையை உணர்ந்துகொண்டு ஜனாதிபதி ராஜபக்ஷ தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க ஆவன செய்ய வேண்டும்.

இலங்கையில் நடந்த போர் கசப்பான அனுபவங்களையே தந்துள்ளது. இந்தப் போரில் வெற்றி பெற்று விட்டோம் என யாரும் பெருமிதம் கொள்ள அவசியம் இல்லை. போர் முடிந்து விட்டதால், அங்கு ஐ.நா., மற்றும் ஐ.சி.ஆர்.சி., போன்ற சர்வதேச அமைப்புகள் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ள இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும். இந்திய அரசும் மறு சீரமைப்பு பணிகளுக்கு உதவ வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின் போது தனி ஈழம் கோரிக்கை வைத்த அவர், இப்போது அது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. பிரபாகரன் குறித்தும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.