2009

2009

பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் தோன்றாமல் டமிஃபுளு உட்கொள்ளக் கூடாது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

16-swine-flu.jpgபன்றிக் காய்ச்சல் தொற்றுவதை தவிர்க்கும் வகையில் வைரஸ் எதிர்ப்பு மருந்தான டமிஃபுளு மாத்திரையை பயன்படுத்துவதற்கு எதிராக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறி தென்படுவதற்கு முன்னதாகவே, இந்த மாத்திரரையை பயன்படுத்தினால், அது வீரியத்துடன் பயந்தரமாட்டாது என்பதே இந்த விடயத்தில் இருக்கின்ற பெரிய அபாயம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகின்றது.

இந்தக் காய்ச்சலுக்காக இந்த மருந்து பயன்படுத்தப்படும் 28 தடவைகளில், 12 தடவைகள் காய்ச்சல் தொற்றுவதை தடுப்பதற்காக முன்கூட்டியே அது பயன்படுத்தப்படுகின்றது என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது.

இதற்குப் பதிலாக பலவீனமான நோய் எதிர்ப்புத் திறனுடன் இருப்பவர்கள் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு, பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால், அதன் பின்னர் தாமதிக்காமல் இந்த மருந்தை உட்கொள்வதே சிறந்தது என்றும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

இடம்பெயர்ந்த முஸ்லிம்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்

260909srilanka.jpgவட மாகாணத்திலிருந்து (1990ம் ஆண்டு) இடம்பெயர்ந்து முகாம்களிலும் மற்றும் ஏனைய இடங்களிலும் வாழ்ந்து வருகின்ற மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சினால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

மீளக்குடியேறவிருக்கும் மன்னார் மூர்வீதி மக்கள் தொடர்பான விபரங்களை மீள்குடியேற்ற அமைச்சிற்கு உடனடியாக சமர்ப்பிக்க வேண்டியிருப்பதால் இவ்விடயம் சம்பந்தமாக மன்னார் மூர்வீதி மக்களுடன் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டு முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்கு சமூக மேம்பாட்டுக்கான அமைப்பு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு இலக்கம், 126/1 ஏர்னோல்ட் ரட்நாயக்கா மாவத்தை, கொழும்பு-10 (டீன்ஸ் றோட் சந்தி) யுனிக் சர்வதேச பாடசாலையில் இதற்கான கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளதால் இந்த கலந்துரையாடலில் அனைத்து மன்னார் மூர்வீதி மக்களம் தவறாது கலந்து கொள்ளுமாறு அமைப்பினர் கேட்டுள்ளனர்.

இதன்போது, மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சால் கோரப்பட்ட விண்ணப்பப் படிவங்களும் வழங்கப்படவுள்ளது. கீழ்வரும் தொலைபேசிகளுடன் தொடர்பு கொண்ட மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென அமைப்பினர் கேட்டுள்ளனர். தொலைபேசி இல: 0774162311, 0773223930, 0714293668, 0777330928

தில்லியில் இலங்கைத் தமிழர் ஆதரவு கருத்தரங்கம்

16-vaiko.jpgஇலங் கையில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீண்டும் தங்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தும் வகையில், இந்தப் பிரச்சினையில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என்று இந்தியத் தலைநகர் புதுடெல்லியில்  வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. அதே நேரத்தில், இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக இலங்கை அரசு மீது குற்றம் சாட்டப்பட்டது.

டெல்லி தமிழ் மாணவர் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்தக் கூட்டத்துக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ தலைமை தாங்கினார். தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன், பத்திரிகையாளர் எம். நடராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.

இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல்கொடுக்க உலக நாடுகள் முன்வரவில்லை என்று குற்றம் சாட்டினார் பழ. நெடுமாறன்.

இலங்கையில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை தங்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினார் மதிமுக பொதுச் செயலர் வைகோ. இந்திய அரசு இலங்கைக்கு மறைமுகமாக ஆயுத உதவிகளைச் செய்ததாகவும் இலங்கையின் மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் ஐ.நா.வின் முயற்சியை முறியடித்ததும் இந்தியாதான் என்று வைகோ குற்றம்சாட்டினார்.

கிழக்கின் முழக்கம் – 2009

மக்கள் மத்தியில் புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில் கிழக்கின் முழக்கம் – 2009 மாபெரும் விழா இன்று காலை முதலில் நள்ளிரவு வரை மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நடைபெறுகிறது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இவ்விழா நடைபெறுகிறது. மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்ட இளைஞர், யுவதிகள் பங்குகொள்ளவுள்ள இவ்விழாவில் நீச்சல் போட்டி, ஓட்டப் போட்டிகள், உதைபந்தாட்டம், பீச்போல் மற்றும் தோணி ஓட்டம், அலங்காரப் போட்டி, மெஜிக் காட்சி மற்றும் கலாசார நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெறுவோருக்கு கேடயங்கள், சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

இறுதி நிகழ்வாக இசைக் கச்சேரியும், வாண வேடிக்கைகளும் நடைபெறவுள்ளன. தமிழ், சிங்கள, முஸ்லிம் இளைஞர்கள், யுவதிகள் இன, மத, பேறுபாடுகள் இன்றி ஒரே இடத்தில் சங்கமிக்கும் இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த காலங்களில் நிலவிய போர்ச் சூழல்கள் காரணமாக இனங்களுக்கிடையேயான உறவுகளில் விரிசல், மக்கள் மத்தியில் ஒருவித அவநம்பிக்கை, பயம், உயிர்வாழ்வது பற்றிய எதிர்பார்ப்புக்கள் இல்லாமல் இருந்த நிலை இப்போது மாறியுள்ளது.

இந்நிலையில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து சகோதரத்துவத்துடன் அச்சமின்றி வாழ்வதற்கானதொரு சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் கிழக்கு மாகாண அமைச்சு கிழக்கு முழக்கம் – 2009 விழாவை நடத்துகிறது. எதிர்வரும் ஆண்டுகளில் தொடர்ந்து இவ்விழாவை நடத்த கிழக்கு மாகாண சபை திட்டமிட்டுள்ளது. கிழக்கு மக்களின் வாழ்க்கை முறையை கட்டியெழுப்புவதற்கான சிறந்த வழி அம் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதாகுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவ்விழாவிற்கான ஊடக அனுசரணையை ஸ்ரீ டி.வி. வழங்குகிறது. இத்தாலி ரோம் நகரை மையமாகக் கொண்டு 152 நாடுகளில் ஒலிபரப்புச் சேவைகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஊதியத்துடன் விடுப்பு: தமிழக அரசு அறிவிப்பு

260909tamilnadugovtlogo.jpgஹெச். ஐ.வி. தொற்று அல்லது எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட தமிழக அரசு ஊழியர்களுக்கு 18 மாத கால ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது போன்றதொரு திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் முதல் மாநிலம் தமிழகம்தான் என்று அரசு ஆணை கூறுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அரசு ஊழியர்களின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும், காச நோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு ஏற்கனவே இது போன்று விடுப்பு கொடுக்கப்படுவதாகவும் தமிழக அரசின் சுகாதாரச் செயலர் சுப்புராஜ் BBCதமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தமிழக அரசு ஊழியர்களில் எத்தனை பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற விபரம் அரசிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

. ஜனாதிபதியின் மகனுக்கு ரிக்கற்: முன்னாள் அமைச்சர் வெளியே

மகாராஷ்டிர மாநில சட்ட சபைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் நிதி இணை அமைச்சர் சுனில் தேஷ்முக்குக்கு இடமளிக்கப்படவில்லை இவர் அமராவதித் தொகுதியின் உறுப்பினராக இருந்தவர். அந்தத் தொகுதி ஜனாதிபதி பிரதிபா பட்டேலின் மகன் ராஜேந்திர ஷெகாவத்துக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது.

தனது வழமையான தொகுதி தன்னிடமிருந்து பறிக்கப்பட்டதை ஆட்சேபித்து அதே தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக சுனில் தேஷ்முக் கூறுகின்றார்.

மகாராஷ்டிர மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட்டாகப் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி 174 தொகுதிகளிலும் தேசியவாத காங்கிரஸ் 114 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளன.

திஸ்ஸநாயகத்திற்கு மற்றுமொரு சர்வதேச விருது

Tissanayagam_S_J20 ஆண்டு கால கடூழிய சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகத்திற்கு மற்றுமொரு சர்வதேச ஊடக விருது வழங்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் பாதுகாப்புப் பேரவையினால் திஸ்ஸநாயகம் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

சோமாலியா, டுயுனிசியா, அஸர்பய்ஜான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளது ஊடகவியலாளர்களுக்கு 2009ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஊடக சுதந்திர விருது வழங்கப்பட்டுள்ளது.எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள விருது வழங்கும் வைபவத்தில் ஜே.எஸ். திஸ்ஸநாயகத்திற்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.

கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக தங்களது உயிரைப் பணயமாக வைத்து கருத்துக்களை வெளியிட்ட ஊடகவியலாளர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அச்சமின்றி கருத்துக்களை வெளியிட்ட இந்த ஊடகவியலாளர்களின் அர்ப்பணிப்பு முன்னுதாரணமாக அமைந்துள்ளதென ஊடகவியலாளர் பாதுகாப்புப் பேரவையின் தலைவர் போல் ஸ்டிகர் தெரிவித்துள்ளார்.

அச்சுறுத்தல்கள், சித்திரவதைகள், அடக்குமுறைகள் போன்றவற்றினால் குறித்த ஊடகவியலாளர்களின் கருத்து சுதந்திரத்தை தடுத்து நிறுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு உடந்தையாகச் செயற்பட்ட்டர் என்று குற்றஞ்சாட்டி ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம், 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் இவருக்கு இருபதாண்டு கால கடூழியச் சிறைத்தண்டனை வழங்கி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் வாழும் இலங்கையர் திறைசேரி சொத்துக்களில் முதலீடு ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு சாதகமான பதில் – சியம்பலாபிட்டிய

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களில் சுமார் 202 பேர் இலங்கையில் திறை சேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி சொத்துக்களில் முதலீடு செய்துள்ளனர். இவர்கள் 322 மில்லியன் ரூபா வரையில் முதலீடு செய்வதற்காக பதிவு செய்துள்ளனர் என அரச வருவாய்த்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

திறைசேரி உண்டியல்கள், சொத்துக்களில் முதலீடு செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜனவரி 01ஆம் திகதி புலம் பெயர்ந்தோரிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இத் தொகை முதலீடு செய்வதற்காக பதிவு செய்யப்பட்டுள்ள தாக குறிப்பிட்டார்.

வெளிநாட்டினர் 150 பேரும் இலங்கையர் சுமார் 65,000  பேரும் திறைசேரி உண்டியல்களை பெற்றுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஐ. தே. க. எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல கேட்ட வாய் மொழி மூல விடைக்கான கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு தெரிவித்தார்

அணு ஆயுத பரவல் ஒப்பந்த தடைச் சட்டத்தில் கையெழுத்திடாத நாடுகள் கைச்சாத்திட வேண்டும் – ஐ. நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம்

250909un-council.jpgஅணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் இதுவரை கையெழுத்திடாத நாடுகள் அனைத்தும் கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் வியாழக்கிழமை ஒரு மனதாக நிறைவேறியது. இந்தக் கூட்டத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகளைக் குறி வைத்தே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஆனால் இதில் கையெழுத்திட மாட்டோம் என்று இந்திய அரசு சார்பில் கூறப்பட்டது. பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன.

ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு அணு சக்தியைப் பயன்படுத்த இந்தியாவுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்து கொண் டிருந்தாலும் அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் இந்தியாவைக் கையெழுத்திட வைக்க வேண்டும் என்பதிலும் சர்வதேச அணு விசை ஏஜென்சியின் கண்காணிப்பில் இந்திய அணு நிலையங்களைக் கொண்டு வந்தே தீர வேண்டும் என்பதிலும் அமெரிக்கா உறுதியாக இருப்பதையே இந்த நிகழ்ச்சி காட்டுகிறது.

பாகிஸ்தானையும், இஸ்ரேலையும் அமெரிக்காவால் எந்த அளவுக்கு நிர்ப்பந்தப்படுத்த முடியும் என்று தெரியவில்லை. ஆனால் இந்தியாவுக்கு அணு சக்தி பயன்பாட்டுக்குத் தேவைப்படும் மூலப் பொருள்கள், தொழில்நுட்பம், ஆகியவற்றுக்காக இனி இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டாக வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டதாகவே சர்வதேசப் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

அணு ஆயுதங்களைத் தயாரித்து வைத்துள்ள அனைத்து நாடு ளும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (என்.பி.டி.) கையெழுத்திட்டே தீர வேண்டும். ஒருங்கிணைந்த அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்திலும் (என்.டி.பி.டி.) கையெழுத்திட வேண்டும். உலக நன்மையைக் கருதி இதைச் செய்ய வேண்டும்.

அணு ஆயுதங்கள் பெருகுவது நல்லதல்ல. உலகின் எந்தப் பகுதியில் அணுகுண்டு வீசப்பட்டாலும் அது மனித குலத்தின் பேரழிவுக்கே இட்டுச் செல்லும்.  இப்போது அணு ஆயுதங்களைத் தயாரித்து கையிருப்பில் வைத்துள்ள நாடுகள் அவற்றைப் படிப்படியாகக் குறைத்துக் கொள்ள முன்வர வேண்டும். அணு குண்டுகளை வெடித்துச் சோதனை நடத்தும் ஆவலைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அணுகுண்டு தயாரிப்புக்குப் பயன்படும் மூலப் பொருள்களைத் தயாரிப்பதையே நிறுத்திவிடவும், உலக நாடுகள் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவேண்டும் என்று இத் தீர்மானம் கோருகிறது. இதற்கு 1887 வது தீர்மானம் என்று பெயர்.

ஐக்கிய நாடுகள் சபை தோன்றிய 1945 லிருந்து பாது காப்பு கவுன்சிலின் அனைத்து நாடுகளும் பங்கேற்கும் உச்சி மாநாடு இன்றோடு இதுவரை 5 முறை தான் கூடியிருக் கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் இந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்குவது இதுவே முதல் முறை. இதிலிருந்தே இந்தத் தீர்மானத்தின் முக்கியத்துவத்தை உணரலாம்.

பான். கி. மூன் புதியதொரு வரலாற்றுக்கு உலக நாடுகளை இட்டுச் செல்லும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் இன்றைக்கு நிறைவேறியிருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் இந்தத் தீர்மானம் நிறைவேறிய பிறகு பாராட்டு தெரிவித்தார்.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ இராணுவக் கூட்டு ஒப்பந்த நாடுகளும் ரஷ்யா தலைமையிலான வார்சா இராணுவக் கூட்டு ஒப்பந்த நாடுகளும் எதிர் எதிர் முகாம்களில் இருந்த போதிலும் கூட அணு ஆயுதச் சண்டை நடை பெறாமல் தவிர்த்துவிட்டோம். இனியும் அப்படி இருக்க முடியும் என்று தோன்றவில்லை.

உலகம் முழுக்க பல பயங்கரவாத குழுக்கள் தோன்றி ஆதிக்கம் பெற்று வருகின்றன. அணு ஆயுதமோ அவற்றைத் தயாரிக்கும் தொழில்நுட்பமும் மூலப் பொருள்களுமோ அவற்றின் கைகளில் கிடைத்தால் அதை விட பெரிய அச் சுறுத்தல் மனித சமூகத்துக்கு இருக்க முடியாது என்பதால் தான் இந்த விஷயத்தில் கண்டிப்பாக இருக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று தீர்மானத்தின் நோக்கம் குறித்து தெரிவிக்கப்பட்டது.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இனி கையெழுத்திடுவதை அமெரிக்கா ஊக்குவிக்கும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நியூயோர்க்கில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

மன்னாரில் நீரோடையிலிருந்து மனித எலும்புக் கூடுகள் மீட்பு

மன்னாரில் இரண்டு மனித எலும்புக்கூடுகள் நேற்று (25) கண்டெடுக்கப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பரிவின் பேச்சாளர் தெரிவித்தார். புளியங்குளம் விடத்தல்தீவு வீதியில் நீரோடை ஒன்றை சுத்திகரித்துக் கொண்டிருந்த ஊழியர்களே இந்த மனித எலும்புக் கூடுகளைக் கண்டெடுத்துள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை ‘பெகோ’ இயந்திரத்தைக் கொண்டு நீரோடையைச் சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களே எலும்புக்கூடுகளை மீட்டதாகவும் அவை பழுதடைந்து உக்கிய நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

எலும்புக் கூடுகளுடன் புலிகள் இயக்க உறுப்பினர்கள் பயன்படுத் இரண்டு, வெடி மருந்துகள், ஆயுதங்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. இதிலிருந்து இந்த எலும்புக்கூடுகள் புலிகள் இயக்க உறுப்பினர்களுடையதாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுவதாகப் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.