12

12

வீதியில் இரத்த ஆறு போல் ஓடிய 20 லட்சம் லீட்டர் கருந்திராட்சை மதுபானம் !

தென்மேற்கு ஐரோப்பாவில் உள்ள நாடு போர்த்துக்கல். இதன் தலைநகரம் லிஸ்பன். தலைநகரிலிருந்து சுமார் 240 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அனாடியா பகுதி.  இங்குள்ளது சவோ லவுரென்கோ டோ பைர்ரோ பகுதி. சுமார் 2 ஆயிரம் பேர் வசிக்கும் இந்த ஊரில் டெஸ்டிலேரியா லெவிரா எனும் மது உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையில் ரெட் வைன் எனப்படும் கருந்திராட்சைகளில் இருந்து காய்ச்சி வடிகட்டி, பதப்படுத்தப்படும் மது தயாரிக்கப்படுகிறது. இங்கு இவர்கள் தயாரிக்கும் மது, மிக பெரிய அளவிலான பீப்பாய்களில் தேக்கி வைக்கப்படும். இந்நிலையில் அவ்வாறு தேக்கி வைக்கப்பட்ட இரு பீப்பாய்கள் உடைந்ததால், அதிலிருந்த மது சாலைகளெங்கும் ஓடியது. ரத்த ஆறு போல சிவப்பு நிறத்தில் ஓடிய இதனை பலரும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

ஓடிய மதுவின் அளவு சுமார் 20 லட்சம் லிட்டர் (2.2 மில்லியன் லிட்டர்) இருக்கலாம் என்றும் சுமார் 20 லட்சம் மது பாட்டில்களுக்கான கொள்ளளவு இருக்கும் என்றும் அந்நாட்டு பத்திரிக்கைகள் கணிக்கின்றன. இந்த மது ஆறு ஒரு வீட்டின் கீழ் தளத்தின் உள்ளே புகுந்தது. அதிர்ஷ்டவசமாக, தற்போது வரை இதனால் யாருக்கும் எந்தவித ஆரோக்கிய கேடும் ஏற்படவில்லை.  அந்த ஊரில் உள்ள செர்டிமா ஆற்றில் இது கலந்து விடக்கூடும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர். ஆனால், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மது ஆற்றின் ஓட்டத்தை தடுத்து, அதனை அங்குள்ள ஒரு வயல்வெளியில் செல்லுமாறு பாதை அமைத்தனர். இதனால், செர்டிமா நதியில் இது கலப்பது தடுக்கப்பட்டது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கும், அதனால் ஏற்பட்ட நஷ்டத்திற்கும் தாங்களே பொறுப்பேற்பதாகவும், ஊரை சுத்தம் செய்யும் செலவையும் முழுவதும் ஏற்பதாகவும் டெஸ்டிலேரியா லெவிரா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் கண்ட மதுப்பிரியர்கள், வீணாக சாலையில் உயர் ரக மது ஓடுவது குறித்து வேடிக்கையான கருத்துக்களை பரிமாறி கொள்கின்றனர்.

நிரந்தர விசா கோரி நடைபயணம் செய்த இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் – அவுஸ்ரேலிய அரசு வழங்கிய பதில் !

அவுஸ்திரேலியாவில் நிரந்தர விசாவை கோரி பலரட்டிலிருந்து சிட்னியில் பிரதமர் அலுவலகம் வரை நடைபயணத்தை மேற்கொண்ட இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் நெய்ல்  பராவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவுஸ்திரேலியா நிரந்தர விசா வழங்கியுள்ளது.

பிரிட்ஜிங் விசாவினால் சிக்குண்டுள்ள அகதிகளிற்கு அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் நியாயமான பதிலை வழங்கவேண்டும் என கோரி நெய்ல் பரா நடைபயணத்தை மேற்கொண்டிருந்தார்

அவர் அவுஸ்திரேலியாவில் தனது குடும்பத்தவர்களுடன்  பிரிட்ஜிங் விசாவில் வசித்துவருகின்றார்.

பரா தனது நடைபயணத்தை முடிவை நெருங்கிக்கொண்டிருந்தவேளை விசா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது – சட்டத்தரணி கரினா போர்ட் இதனை தெரிவித்துள்ளார்.

நான் மகிழ்ச்சியும் நன்றியும் உடையவனுமாக உள்ளேன் என பரா தெரிவித்துள்ளார். நன்றி அவுஸ்திரேலியா இது எனது நாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2012 இல் படகு மூலம் அவுஸ்திரேலியா வந்த பரா தனது மனைவிஇரண்டு பிள்ளைகளுடன் பாதுகாப்பு கோரியிருந்தார்.

நாங்கள் அனைவரும் ஒருநாள் விடுதலையாவோம். என நம்புகின்றோம் நாங்கள் அவுஸ்திரேலியாவிற்கு பங்களிப்பு செய்வோம் என உறுதியளிக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

“கடந்தகால மனித உரிமை மீறல்களை ஒப்புக்கொள்ள வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு இருக்கின்றது.” – ஐ.நா. மனித உரிமைகள் பிரதி ஆணையாளர்

கடந்தகால மனித உரிமை மீறல்களை ஒப்புக்கொள்ள வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு இருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா அல் நஷிப் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகிய நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்தோடு இலங்கையின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாப்பதில் பொறுப்புக்கூறல் அவசியம் என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சுயாதீனமான மற்றும் வெளிப்படையான விசாரணையை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா அல் நஷிப் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அது சர்வதேச உதவியுடனும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளின் முழுமையான பங்களிப்புடனும் இடம்பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

ஜெனீவாவில் உள்ள இலங்கை மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளில் சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கு இணங்க அரசாங்கம் விசாரணைகள் மற்றும் வழக்குகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

உண்மையைத் தேடுவது மட்டும் போதாது என்றும் பொறுப்புக்கூறலுக்கான தெளிவான அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா அல் நஷிப் தெரிவித்துள்ளார்.

அவரது முழுமையான அறிக்கை,

 

ஆழமான அரசியல் மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களைக் கோரி போராட்டம் இடம்பெற்று ஒரு வருடத்திற்குப் பிறகும், நீண்டகால சவால்களை எதிர்கொள்ள எதிர்பார்த்த மாற்றம் இன்னும் நிறைவேறவில்லை. உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் 13வது திருத்தத்தின் கீழ் மாகாண சபைகளை மறுசீரமைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம், அரசியல் பங்கேற்பதற்கான மக்களின் உரிமையையும் வாக்காளர்களின் சுதந்திரமான கருத்துக்களையும் மட்டுப்படுத்தியுள்ளது.

 

பொருளாதார நெருக்கடியானது இலங்கையில் பெரும்பான்மையினரின் உரிமைகளை கணிசமான அளவு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும், அது ஏழைகளையே அதிகம் பாதித்துள்ளது. நாட்டின் வறுமை விகிதம் 2021 இல் 13% இலிருந்து 2022 இல் 25% ஆக இரு மடங்காக உயர்ந்துள்ளதால், மேலும் 2.5 மில்லியன் மக்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர் மற்றும் 37% குடும்பங்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர்.

 

அரசாங்கம் அதன் பொருளாதார மீட்சிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தினால், அது மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாப்பதற்காக பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் அதன் கடமைகளால் வழிநடத்தப்பட வேண்டும். வதேச நிதி நிறுவனங்கள் உட்பட சர்வதேச சமூகம், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் உதவி தொடர்பான கடப்பாடுகளுக்கு இணங்க, இலங்கையின் மீட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும்.

 

பொருளாதார நெருக்கடி, சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு மத்தியில் இராணுவ மயமாக்கல் நடவடிக்கை, வடக்கு மற்றும் கிழக்கில் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் பௌத்த பாரம்பரியத்தை பாதுகாத்தல் என்ற போர்வையில் நடைபெறும் விடயங்கள் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கான முயற்சிகளும் தடுக்கப்பட்டுள்ளன. எதிர்ப்பு தெரிவிப்பதற்கான உரிமையை கட்டுப்படுத்தும் இந்த நடவடிக்கைகள் நாட்டில் மேலும் பதற்றத்தையே உருவாக்கும்.

 

கருத்து சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கும், நல்லிணக்கம் மற்றும் சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் சூழலை அரசாங்கம் உறுதி செய்வது இன்றியமையாததாகும். மேலும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், ஊடக ஒளிபரப்பை ஒழுங்குபடுத்தும் சட்டம் குறித்தும் கவலைகள் எழுந்துள்ளன.