September

September

வீதியில் இரத்த ஆறு போல் ஓடிய 20 லட்சம் லீட்டர் கருந்திராட்சை மதுபானம் !

தென்மேற்கு ஐரோப்பாவில் உள்ள நாடு போர்த்துக்கல். இதன் தலைநகரம் லிஸ்பன். தலைநகரிலிருந்து சுமார் 240 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அனாடியா பகுதி.  இங்குள்ளது சவோ லவுரென்கோ டோ பைர்ரோ பகுதி. சுமார் 2 ஆயிரம் பேர் வசிக்கும் இந்த ஊரில் டெஸ்டிலேரியா லெவிரா எனும் மது உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையில் ரெட் வைன் எனப்படும் கருந்திராட்சைகளில் இருந்து காய்ச்சி வடிகட்டி, பதப்படுத்தப்படும் மது தயாரிக்கப்படுகிறது. இங்கு இவர்கள் தயாரிக்கும் மது, மிக பெரிய அளவிலான பீப்பாய்களில் தேக்கி வைக்கப்படும். இந்நிலையில் அவ்வாறு தேக்கி வைக்கப்பட்ட இரு பீப்பாய்கள் உடைந்ததால், அதிலிருந்த மது சாலைகளெங்கும் ஓடியது. ரத்த ஆறு போல சிவப்பு நிறத்தில் ஓடிய இதனை பலரும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

ஓடிய மதுவின் அளவு சுமார் 20 லட்சம் லிட்டர் (2.2 மில்லியன் லிட்டர்) இருக்கலாம் என்றும் சுமார் 20 லட்சம் மது பாட்டில்களுக்கான கொள்ளளவு இருக்கும் என்றும் அந்நாட்டு பத்திரிக்கைகள் கணிக்கின்றன. இந்த மது ஆறு ஒரு வீட்டின் கீழ் தளத்தின் உள்ளே புகுந்தது. அதிர்ஷ்டவசமாக, தற்போது வரை இதனால் யாருக்கும் எந்தவித ஆரோக்கிய கேடும் ஏற்படவில்லை.  அந்த ஊரில் உள்ள செர்டிமா ஆற்றில் இது கலந்து விடக்கூடும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர். ஆனால், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மது ஆற்றின் ஓட்டத்தை தடுத்து, அதனை அங்குள்ள ஒரு வயல்வெளியில் செல்லுமாறு பாதை அமைத்தனர். இதனால், செர்டிமா நதியில் இது கலப்பது தடுக்கப்பட்டது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கும், அதனால் ஏற்பட்ட நஷ்டத்திற்கும் தாங்களே பொறுப்பேற்பதாகவும், ஊரை சுத்தம் செய்யும் செலவையும் முழுவதும் ஏற்பதாகவும் டெஸ்டிலேரியா லெவிரா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் கண்ட மதுப்பிரியர்கள், வீணாக சாலையில் உயர் ரக மது ஓடுவது குறித்து வேடிக்கையான கருத்துக்களை பரிமாறி கொள்கின்றனர்.

நிரந்தர விசா கோரி நடைபயணம் செய்த இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் – அவுஸ்ரேலிய அரசு வழங்கிய பதில் !

அவுஸ்திரேலியாவில் நிரந்தர விசாவை கோரி பலரட்டிலிருந்து சிட்னியில் பிரதமர் அலுவலகம் வரை நடைபயணத்தை மேற்கொண்ட இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் நெய்ல்  பராவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவுஸ்திரேலியா நிரந்தர விசா வழங்கியுள்ளது.

பிரிட்ஜிங் விசாவினால் சிக்குண்டுள்ள அகதிகளிற்கு அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் நியாயமான பதிலை வழங்கவேண்டும் என கோரி நெய்ல் பரா நடைபயணத்தை மேற்கொண்டிருந்தார்

அவர் அவுஸ்திரேலியாவில் தனது குடும்பத்தவர்களுடன்  பிரிட்ஜிங் விசாவில் வசித்துவருகின்றார்.

பரா தனது நடைபயணத்தை முடிவை நெருங்கிக்கொண்டிருந்தவேளை விசா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது – சட்டத்தரணி கரினா போர்ட் இதனை தெரிவித்துள்ளார்.

நான் மகிழ்ச்சியும் நன்றியும் உடையவனுமாக உள்ளேன் என பரா தெரிவித்துள்ளார். நன்றி அவுஸ்திரேலியா இது எனது நாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2012 இல் படகு மூலம் அவுஸ்திரேலியா வந்த பரா தனது மனைவிஇரண்டு பிள்ளைகளுடன் பாதுகாப்பு கோரியிருந்தார்.

நாங்கள் அனைவரும் ஒருநாள் விடுதலையாவோம். என நம்புகின்றோம் நாங்கள் அவுஸ்திரேலியாவிற்கு பங்களிப்பு செய்வோம் என உறுதியளிக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

“கடந்தகால மனித உரிமை மீறல்களை ஒப்புக்கொள்ள வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு இருக்கின்றது.” – ஐ.நா. மனித உரிமைகள் பிரதி ஆணையாளர்

கடந்தகால மனித உரிமை மீறல்களை ஒப்புக்கொள்ள வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு இருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா அல் நஷிப் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகிய நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்தோடு இலங்கையின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாப்பதில் பொறுப்புக்கூறல் அவசியம் என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சுயாதீனமான மற்றும் வெளிப்படையான விசாரணையை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா அல் நஷிப் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அது சர்வதேச உதவியுடனும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளின் முழுமையான பங்களிப்புடனும் இடம்பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

ஜெனீவாவில் உள்ள இலங்கை மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளில் சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கு இணங்க அரசாங்கம் விசாரணைகள் மற்றும் வழக்குகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

உண்மையைத் தேடுவது மட்டும் போதாது என்றும் பொறுப்புக்கூறலுக்கான தெளிவான அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா அல் நஷிப் தெரிவித்துள்ளார்.

அவரது முழுமையான அறிக்கை,

 

ஆழமான அரசியல் மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களைக் கோரி போராட்டம் இடம்பெற்று ஒரு வருடத்திற்குப் பிறகும், நீண்டகால சவால்களை எதிர்கொள்ள எதிர்பார்த்த மாற்றம் இன்னும் நிறைவேறவில்லை. உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் 13வது திருத்தத்தின் கீழ் மாகாண சபைகளை மறுசீரமைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம், அரசியல் பங்கேற்பதற்கான மக்களின் உரிமையையும் வாக்காளர்களின் சுதந்திரமான கருத்துக்களையும் மட்டுப்படுத்தியுள்ளது.

 

பொருளாதார நெருக்கடியானது இலங்கையில் பெரும்பான்மையினரின் உரிமைகளை கணிசமான அளவு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும், அது ஏழைகளையே அதிகம் பாதித்துள்ளது. நாட்டின் வறுமை விகிதம் 2021 இல் 13% இலிருந்து 2022 இல் 25% ஆக இரு மடங்காக உயர்ந்துள்ளதால், மேலும் 2.5 மில்லியன் மக்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர் மற்றும் 37% குடும்பங்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர்.

 

அரசாங்கம் அதன் பொருளாதார மீட்சிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தினால், அது மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாப்பதற்காக பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் அதன் கடமைகளால் வழிநடத்தப்பட வேண்டும். வதேச நிதி நிறுவனங்கள் உட்பட சர்வதேச சமூகம், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் உதவி தொடர்பான கடப்பாடுகளுக்கு இணங்க, இலங்கையின் மீட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும்.

 

பொருளாதார நெருக்கடி, சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு மத்தியில் இராணுவ மயமாக்கல் நடவடிக்கை, வடக்கு மற்றும் கிழக்கில் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் பௌத்த பாரம்பரியத்தை பாதுகாத்தல் என்ற போர்வையில் நடைபெறும் விடயங்கள் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கான முயற்சிகளும் தடுக்கப்பட்டுள்ளன. எதிர்ப்பு தெரிவிப்பதற்கான உரிமையை கட்டுப்படுத்தும் இந்த நடவடிக்கைகள் நாட்டில் மேலும் பதற்றத்தையே உருவாக்கும்.

 

கருத்து சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கும், நல்லிணக்கம் மற்றும் சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் சூழலை அரசாங்கம் உறுதி செய்வது இன்றியமையாததாகும். மேலும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், ஊடக ஒளிபரப்பை ஒழுங்குபடுத்தும் சட்டம் குறித்தும் கவலைகள் எழுந்துள்ளன.

 

 

மொராக்கோ நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டியது !

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது. அந்நாட்டின் சுற்றுலா நகரமான மராகெச் (Marrakech) அருகே அட்லஸ் மலையில் பூமிக்கு அடியில் 18.5 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு உண்டான நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. தொடர்ந்து, 19 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் மராகெச் மற்றும் அங்குள்ள மலை கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் மற்றும் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. சீட்டு கட்டு சரிவது போல் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. நள்ளிரவு நேரத்தில் இது நடந்ததால் உறங்கி கொண்டிருந்த பலரால் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேற முடியவில்லை. இதனால் கட்டிட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கி கொண்டனர். மீட்பு படையினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இறந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகிறது. அதே போல் காயம் அடைந்தவர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். கட்டிட இடுபாடுகளில் இருந்து உடல்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை அதிகரித்தவாறு உள்ளது. நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல் இருக்கலாம் என நேற்று மதியம் அறிவிக்கப்பட்டது.

அங்கு தொடர்ந்து மீட்புப்பணிகள் நடந்து வந்த நிலையில் பலி எண்ணிக்கை தற்போது 2000-ஐ தாண்டியுள்ளது என மொராக்கோ உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அதிகபட்சமாக அல்-ஹவுஸ் பிராந்தியத்தில் 1,293 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் டரவ்டான்ட் பகுதியில் 452 பேர் பலியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்க பகுதிகளில் இன்றும் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மேலும் 2,059 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 1,404 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது. நில நடுக்கத்தால் பல மலை கிராமங்கள் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளன. அங்கு வீடுகள், கற்குவியலாக காட்சி அளிக்கின்றன. அங்கு மீட்புப்பணிகள் நடந்து வந்தாலும், தொலை தூரத்தில் உள்ள மலை கிராமங்களுக்கு அதிகமாக மீட்புக்குழுவினர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இதனால் மலை கிராம மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். மராகெச் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல குடியிருப்புகள் இடிந்து விழுந்துள்ளன. பல கட்டிடங்கள், கடுமையான விரிசல்கள் ஏற்பட்டு விழும் நிலையில் உள்ளன. இதையடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இடிந்து விழுந்துள்ள கட்டிட இடிபாடுகளுக்குள் உயிருடன் யாராவது இருக்கிறார்களா என்பதை கண்டறிந்து அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலநடுக்கம் மொராக்கோ நாட்டை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அங்கு 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் பெரும் சேதத்தை சந்தித்துள்ள மொராக்கோவுக்கு பல்வேறு நாட்டினர் உதவிகளை வழங்கி வருகின்றனர். அண்டை நாடான அல்ஜீரியா மனிதாபிமான அடிப்படையில் தனது வான்வெளியில் மொராக்கோவுக்கு செல்லும் விமானங்கள் பயணிக்க அனுமதி அளித்துள்ளது. மொராக்கோவுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 2021ல் அந்நாட்டுடன் தூதரக உறவை துண்டித்த அல்ஜீரியா, தனது வான்வெளியை மொராக்கோ பயன்படுத்த தடைவிதித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளும் உதவிகளை அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளன. வட ஆப்பிரிக்காவில் கடந்த 120 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் மனிதாபினமாச் சட்ட மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறாத நிலைமை நீடிக்கின்றது – ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைகள் மற்றும் மனிதாபினமாச் சட்ட மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறாத நிலைமை நீடிக்கின்றது என்பதை ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளதோடு, முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் பற்றியும் கரிசனைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக சிவில் சமூக பிரதிநிதிகளான, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் மற்றும் மாற்றுக்கொள்கை நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி. பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின், இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய முற்கூட்டிய எழுத்துமூலமான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பற்றிய கருத்து வெளியிடும்போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அம்பிகா சற்குணநாதன் தெரிவிக்கையில்,

இலங்கை பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க விடயத்தில் முன்னேற்றங்கள் எட்டப்படாதுள்ளமையை உயர்ஸ்தானிகரது அறிக்கை வெளிப்படுத்தியுள்ளதோடு, முக்கியமான சில விடயங்கள் இம்முறை புதிதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அதில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு அமைவாக இலங்கையில் நிகழ்ந்த உரிமை மீறல்கள் பற்றிய சாட்சியங்களை சேகரிக்கின்ற பொறிமுறை பற்றிய விடயம் முக்கியமானதாகின்றது.

அதனடிப்படையில், தற்போதைய நிலையில் இலங்கையில் பத்து தனிநபர்களுடைய மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்கள் பற்றி வெவ்வேறு நாடுகளில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் அவற்றுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பில் குறித்த பொறிமுறையின் பங்களிப்புச் செய்யும் தன்மை பற்றி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஏனைய முகவரகங்கள் இலங்கைக்கு நிதி உள்ளிட்ட செயற்றிட்டங்களை வழங்குகின்றபோது, ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் சர்வதேச சமவாயச் சட்டங்கள் ஆகியவற்றின் நிலைமைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற விடயம் கூறப்பட்டுள்ளது.

மேலும், பொருளாதாரக் குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமைகள் தொடர்பான குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் மீது இலக்கு வைக்கப்பட்ட பயணத்தடைகள், சொத்துக்களை முடக்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளை ஏனைய நாடுகள் முன்னெடுக்குமாறு உயர்ஸ்தானிகர் பரிந்துரைத்துள்ளார்.

இதனைவிடவும், படைக்குறைப்பு மேலும் செய்யப்பட வேண்டும் என்பதும், படைகளுக்கான செலவீனத்தை குறைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஒன்றுகூடும் சுதந்திரம், பேச்சு சுதந்திரத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களை மறுதலிக்கும் வகையில் ஒலி,ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம், புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் ஆகிய நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முற்படுகின்றமையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் உள்ள சிவில் சமூகத்தினர் மீதான அடக்குமுறைகள், அச்சுறுத்தல்கள், காண்காணிப்புச் செய்தல், பயங்கரவாத தடைச்சட்ட பிரிவினரால் விசாரணைகளுக்கு அழைத்தல், பின்தொடர்தல் உள்ளிட்டவை தொடர்ந்து இடம்பெறுகின்றமையும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தமது உறவுகளை தேடும் செயற்பாடுகள் நீடிக்கின்றமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்றார்.

இதேநேரம், கலாநிதி.பாக்கியசோதி சரவணமுத்து தெரிவிக்கையில்,

இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக பொறுப்புக்கூறல் விடயத்திலிருந்து தவிர்ந்து வருகின்றமையை உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளார்.

அதேநேரத்தில் பொருளாதாரக் குற்றங்கள் நீடித்து வருவதோடு, மனித உரிமைகள் மீறப்படுகின்ற செயற்பாடுகள், கருத்துச்சுதந்திரத்திற்கும், ஒன்று கூடும் சுதந்திரத்திற்கும் விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

விசேடமாக, பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது வரையில் நீதிக்காக போராடிவருகின்றமை பற்றியும் அவர்கள் நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருப்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொருளாதார குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல்களுடன் தொடர்புடையவர்கள் மீது நாடுகள் இலக்கு வைக்கப்பட்ட தடைகள், மற்றும் சொத்துக்களை முடக்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் பரிந்துரைத்துள்ளார்.

ஆகவே, இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தனது பொறுப்புக்கூறலில் இருந்து விலகி நிற்கின்ற தருணத்தில் சர்வதேச ரீதியாக பாரிய பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டிய நிலைமைகள் ஏற்படும்.

குறிப்பாக, ஐ.நா.வின் முகவரகங்கள் தங்களது திட்டங்களை முன்னெடுக்கின்றபோது சர்வதேச தரங்களுக்கு அமைவான விடயங்களை கவனத்தில் கொள்ளுமாறு கோரியிருப்பதும் இங்கு முக்கியமான விடயமாகின்றது.

எனவே, அரசாங்கம், உயர்ஸ்தானிகரின் அறிக்கையை வழமைபோன்று கடந்து செல்லமுடியாது என்பதோடு, அவருடைய கரிசனைக்குரிய விடயங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

“பாரத்” எனப்பெயர் மாற்றிக்கொள்ளும் இந்தியா.? – ஐ.நாவின் நிலைப்பாடு என்ன..?

இந்தியா தனது நாட்டின் பெயரை “இந்தியா” என்பதை “பாரத்” என மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோரின் பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழில் இந்தியா என்பதற்கு பதிலாக “பாரத்” என அச்சிடப்பட்டுள்ளது.

 

எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய அளவில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. என்றாலும், உலகளவில் “இந்தியா” என்பது “பாரத்” என மாற்றப்பட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து விவாதம் தொடங்கியுள்ளது. பாஸ்போர்ட், தூதரகம், மின்அஞ்சல் போன்றவற்றில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஐ.நா. இந்த விவகாரத்தை எவ்வாறு எடுத்துக் கொள்கிறது என்று பார்ப்போம் என்றால், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின் துணை செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறுகையில் ”துருக்கி (Turkey) துருகியே (Turkiye) என கடந்த வருடம் மாற்றப்பட்டது. இதற்கு அந்த அரசிடம் இருந்து முறையாக கோரிக்கை எங்களுக்கு வந்தது.

அதனடிப்படையில் மாற்றப்பட்டது. அதேபோல், எங்களுக்கு கோரிக்கை வந்தால், நாங்கள் அவர்களிடம் இருந்து கோரிக்கை வந்ததாக கருதுவோம்” என்றார்.

இந்திய அரசு சார்பில் முறைப்படியான கோரிக்கை விடுக்கப்பட்டால் ஐ.நா.வில் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என அழைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

“உண்மையைக் கண்டறியும் பொறிமுறைக்காக உண்மையான பின்னணியை தயார் செய்ய வேண்டும்.” – ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் Volker Türk இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச கொள்கைக்கு முரணானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முன்மொழியப்பட்ட உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலமானது சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனத்தின் 19-3 பிரிவு மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்தின் மீது தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் Volker Türk சுட்டிக்காட்டியுள்ளார்.

 

தனிமனித உரிமைகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை போன்றே இதுவும் அமைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஒரு வருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற பாரிய மக்கள் போராட்டங்களை கருத்தில் கொண்டு, வரலாற்று மாற்றத்தின் சவால்களை யதார்த்தமாக்குவதற்கு அர்ப்பணிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

 

யுத்தம் முடிவடைந்து 14 வருடங்கள் கடந்துள்ள போதிலும், அதனால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நீதி, நியாயம், உண்மை என்பன நிறைவேற்றப்படாமல் வேதனையுடன் வாழ்ந்து வருவதாக உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

உண்மையைக் கண்டறியும் பொறிமுறையொன்று அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள நிலையில், அவ்வாறானதொரு பொறிமுறைக்காக உண்மையான பின்னணியை தயார் செய்ய வேண்டும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச ஆதரவுடன் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

“என்னால் இந்த பாவத்தை என் வாழ்நாள் முழுவதும் சுமந்து செல்ல முடியாது.“ – அதிர்வலைகளைஏற்படுத்தியுள்ள சனல் – 4 வீடியோவில் TMVP முன்னாள் ஊடகப்பேச்சாளர் !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சனல் -4 காணொளி தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்றையதினம்(05) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

குறித்த விசாரணைகளை மேற்கொள்ள அதற்கான தெரிவுக்குழுவொன்றை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களின் விபரங்கள் குறித்து சனல் 4 என்ற ஊடகம் காணொளியை ஒன்றை வெளியிட்டிருந்தது.

இந்த சனல் 4 ஊடகத்தின் வெளிப்படுத்தல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நாடாளுமன்ற தெரிவிக்குழு ஒன்றை நிறுவுவது என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேவை ஏற்பட்டால் சர்வதேச ரீதியிலான விசாரணைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பிலான பல அதிர்ச்சித் தகவல்களை பிரித்தானியாவின் சனல் – 4 இல் இன்று வெளியாகியுள்ள முன்னோட்ட காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளவிடயங்கள்.,

“ என்னால் இந்த பாவத்தை என் வாழ்நாள் முழுவதும் சுமந்து செல்ல முடியாது. நான் உண்மையை சொல்ல வேண்டும்.” என பிரித்தானியாவின் சனல் – 4 இல் இன்று வெளியாகியுள்ள முன்னோட்ட காணொளியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (TMVP) ஊடகப் பேச்சாளராக இருந்த ஆசாத் மௌலானா குறிப்பிடுகின்றார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலைத் தாக்குதலில் சாதாரண பொதுமக்களே ஆலயங்களிலும் ஹோட்டல்களிலும் கொன்று குவிக்கப்பட்டனர்.

இவர்கள் கொல்லப்பட்டமை ஆட்சியை கைப்பற்றுவதற்காகவா என்று கேள்வி எழுப்புகிறார் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (TMVP) ஊடகப் பேச்சாளராக இருந்த ஆசாத் மௌலானா.

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அரசியலில் மிகவும் விசுவாசமாக செயற்பட்ட பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனுடன் ஆசாத் மௌலானா அரசியலில் ஈடுபட்டுவந்தவர்.

என்னிடம் ஆபத்தான கைதிகள் உள்ளனர், அவர்கள் கடும்போக்கானவர்கள். அவர்களில் ஒருவரை சந்திக்குமாறு பிள்ளையான் தன்னிடம் தெரிவித்ததாக ஆசாத் மௌலானா குறிப்பிடுகின்றார்.

இதையடுத்து இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தை (NTJ) சேர்ந்த செய்னி மௌலவியை தான் சந்தித்ததாக ஆசாத் மௌலானா கூறுகின்றார். இதையடுத்து இதுவொரு நல்ல சந்தர்ப்பம். நாம் அவர்களை பயன்படுத்துவோம் என பிள்ளையான் எனக்கு கூறினார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிள்ளையான் எனக்கு கூறுகிறார் உளவுத்துறை அதிகாரி சுரேஷ் சாலேக்கும் அந்த அமைப்பினருக்கும் இடையில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யுமாறு .

இதையடுத்து தான் தேசிய தவ்ஹீத் ஜமாத்தை (NTJ) சேர்ந்தவர்களுக்கும் உளவுத்துறை அதிகாரி சுரேஷ் சாலேக்கும் இடையிலான சந்திப்பை கிழக்கில் ஒரு கைவிடப்பட்ட பகுதியில் ஏற்பாடு செய்ததாக ஆசாத் மௌலானா கூறுகிறார்.

இதன்போதே செய்னி மௌலவி தனது சகோதரனான சஹ்ரானை எனக்கு அறிமுகப்படுத்தினார் எனக் கூறுகிறார் ஆசாத் மௌலானா. அதன் பின் நான் உளவுத்துறை அதிகாரியான சுரேஷ் சாலேயை அவருக்கு அறிமுகப்படுத்தினேன்.

குறித்த சந்திப்பு நிறைவடையும் வரை நான் வெளியில் காத்து நின்றேன். சந்திப்பு நிறைவடைந்து வெளியில் வந்த சுரேஷ் சாலே “ ராஜபக்ஷர்களுக்கு இலங்கையில் ஒரு குழப்பமான நிலை தேவையாக உள்ளது. அதுவே கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க ஒருயொரு வழி” என்று கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற பின்னர் யாரெல்லாம் சந்திப்பில் கலந்துகொண்டார்களோ அவர்களின் முகங்களை நான் அடையாளப்படுத்தி படங்களை வெளியிட்டேன் என்கிறார் ஆசாத் மௌலானா.

முதலாவது படம் சஹ்ரான், அவர் தான் அமைப்பின் தலைவரும் தற்கொலைதாரியுமாவார். இதன் பின்னர் நான் பிள்ளையானுடன் கதைத்தேன். அப்போது அவர் “ நீ வாயை மூடிக்கொண்டு எதுவும் தெரியாதது போல் இரு அது போதும்” என்றார்.

அவர்களது மக்களையே ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற அவர்கள் கொலைசெய்தார்கள். இதுவொரு கசப்பான உண்மை என்கிறார் ஆசாத் மௌலானா.

பிரித்தானிய தொலைக்காட்சி நிலையத்தில் இன்று (05) ஒளிபரப்பப்பட்ட சனல் 4 டிஸ்பாட்ச்கள் ஆவணப்படத்தின் முன்னோட்டத்தில் இந்த கருத்துகளை பதிவு செய்துள்ளார் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (TMVP) ஊடகப் பேச்சாளராக இருந்த ஆசாத் மௌலானா.

இதன் முழுமையான ஆவணப்படம் பிரித்தானிய நேரப்படி இன்று செவ்வாய்க்கிழமை (5) பிற்பகல் 11 : 05 க்கு வெளியாகவுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ ஆலயங்கள், ஹோட்டல்களில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 269 பேர் கொல்லப்பட்டனர்.

தற்போது வெளிநாட்டில் புகலிடம் கோரியிருக்கும் ஆசாத் மௌலானா, ஐ.நா. மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற தூதரக அதிகாரிகளுடன் தகவலை பகிர்ந்துள்ளார்.

இதேவேளை, ஆசாத் மௌலானா புகலிடம் பெறுவதற்காக இந்தக் குற்றச்சாட்டை முன்வைப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்த நிலையில், சுரேஷ் சாலேயும் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த காணொளி

ஹிட்லரின் படைகளால் கொலைசெய்யப்பட்ட இத்தாலிய குடும்பங்களுக்கு 13 மில்லியன் டொலர்  இழப்பீடு !

கடந்த 1943-ம் ஆண்டு ஜெர்மனியின் நாஜிப் படையினர், இத்தாலியை ஆக்கிரமித்தனர். அப்போது அவர்கள்,  இத்தாலி மக்கள் பலரை கொன்று குவித்தனர்.

அந்த சமயத்தில், நாஜிப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் கொல்லப்பட்டதற்காக, இத்தாலி மக்களுக்கு பொது தண்டனை வழங்க நாஜிப் படை முடிவு செய்தது. இத்தாலி மக்களில் 6 பேரை தேர்ந்தெடுத்து அவர்களை பொது இடத்தில் வைத்து நாஜிப் படை தூக்கிலிட்டது. இந்நிகழ்வு நடைபெற்று 80ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், இந்த கொடூர சம்பவத்துக்கு இழப்பீடு வழங்க இத்தாலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கொல்லப்பட்ட 6 பேரின் குடும்பத்தினருக்கு 13 மில்லியன் டொலர்  இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இழப்பீடு அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவரான மெளரோ பெட்ரார்கோ கூறுகையில், “எங்களால் அந்தத் துயரை கடந்து வரமுடியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளில் துக்கம் அனுசரிக்கிறோம்” என்றார்.

 

2016-ம் ஆண்டு ஜெர்மனி அரசு, நாஜிப் படையினரால் இத்தாலியில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. நாஜிப் படையினரால் 22,000 இத்தாலிய மக்கள் உயிரிழந்தாதகவும் பல ஆயிரம் இத்தாலி மக்கள் ஜெர்மனியில் அடிமைகளாக பயன்படுத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

நாஜிப் படையினரால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தற்போது இத்தாலி அரசு இழப்பீடு வழங்கி வருகிறது. இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

“இலங்கையில் மத ரீதியான முறுகல்களைத் தோற்றுவித்து இனப்பிரச்சினையைத் தீவிரப்படுத்துவதற்கான முயற்சிகள்.”- ஐ.நாவிடம் தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டு !

தமிழர் வாழ்விடங்களில் பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதன் மூலம் மத ரீதியான முறுகல்களைத் தோற்றுவித்து இனப்பிரச்சினையைத் தீவிரப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ள தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், எனவே இலங்கைக்குத் தொடர்ந்து கால அவகாசம் வழங்குவதை விடுத்து, இம்முறை கூட்டத்தொடரில் வலுவான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி வரையான ஒரு மாதகாலத்துக்கு நடைபெறவுள்ளது.

இந்த அமர்வின் தொடக்க நாளான 11ஆம் திகதியன்று ஏற்கனவே இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பிலான 51/1 தீர்மானத்தின் உள்ளடக்கங்களின் அமுலாக்கத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அதிகாரிகளுக்கும் இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த வியாழக்கிழமை (31) சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக மெய்நிகர் முறைமையில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் சார்பில் இரு அதிகாரிகளும், தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் சார்பில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன், புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் அக்கட்சியின் பேச்சாளர் சுரேன் குருசுவாமி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது அண்மைய காலங்களில் தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் தொடர்பில் ஐ.நா அதிகாரிகளிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக வட, கிழக்கு மாகாணங்களில் படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்கப்படுவதாகக் கூறப்படுகின்ற போதிலும், யதார்த்தபூர்வமாக அதற்குரிய நடவடிக்கைகள் உரியவாறு முன்னெடுக்கப்படவில்லை என்றும், பெருமளவான காணிகள் இன்னமும் படையினர்வசமே இருப்பதாகவும் தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் விசனம் வெளியிட்டனர்.

அதுமாத்திரமன்றி, கடந்த சில மாதங்களாக வட, கிழக்கு மாகாணங்களில் தீவிரம் பெற்றுள்ள தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து ஐ.நா அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.

தமிழ் மக்களின் நீண்டகால வாழ்விடங்களில் பௌத்த விகாரைகளை அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், சில இடங்களில் இச்செயற்பாடுகள் ஜனாதிபதியின் உத்தரவை மீறி மேற்கொள்ளப்படுவதாகவும், மேலும் சில பகுதிகளில் நடைபெறும் சம்பவங்கள் கண்டும் காணாமல் விடப்படுவதாகவும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகளிடம் கூறினர்.

அத்தோடு இவ்வாறான செயற்பாடுகள் மூலம் மத ரீதியான முறுகல்களைத் தோற்றுவித்து இனப்பிரச்சினையைத் தீவிரப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும் தீர்வின்றித் தொடரும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், பயங்கரவாத தடைச்சட்டப் பிரயோகம், கடந்த கால மீறல்கள் தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.

எனவே, எதிர்வரும் 11ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கையில், இத்தகைய செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்ட அவர்கள், இலங்கைக்கு தொடர்ந்து கால அவகாசம் வழங்குவதில் எவ்வித பயனும் இல்லை என்றும், இம்முறை கூட்டத்தொடரில் இலங்கை மீது வலுவான அழுத்தம் பிரயோகிக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.