19

19

கட்டார் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் பிரான்ஸ் தோல்வி – பிரான்ஸ் முழுவதும் கலவரம் !

கட்டார் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினா வெற்றிபெற்றதை அடுத்து பிரான்ஸ் முழுவதும் கலவரம் வெடித்துள்ளது.

பிரான்ஸ் அணி பெனால்டி முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றிவாய்ப்பை இழந்த நிலையில், பரிஸ், நைஸ் மற்றும் லியான் நகரங்களில் ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் தெருக்களில் குவிந்தனர்.

பரிஸ் நகரில் அமைந்துள்ள பிரபலமான Champs-Elysees பகுதியில் கலகத் தடுப்பு காவல்துறையினருக்கும் கால்பந்து ரசிகர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதனிடையே, லியான் பகுதியில் கலவரம் வெடித்ததை அடுத்து கலகத் தடுப்பு காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தேசியைக் கொடிய போர்த்தியபடி கற்கள், போத்தல்கள் மற்றும் பட்டாசுகளை காவல்துறையினர் மீது கால்பந்து ரசிகர்கள் வீசியுள்ளனர். சில பகுதிகளில் கூட்டத்தை கலைக்க நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலவரத்தில் ஈடுபட்ட பலர் கைதாகியுள்ளனர்.

புதன்கிழமை, மொராக்கோவுக்கு எதிரான உலகக் கோப்பை வெற்றியைத் தொடர்ந்து பிரான்ஸ் முழுவதும் வன்முறை மோதல்கள் வெடித்ததில் 14 வயது சிறுவன் கொல்லப்பட்டார்.

பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவானதைத் தொடர்ந்து பரிஸ் நகர தெருக்களில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

இதேபோன்று, பிரஸ்ஸல்ஸில் ரசிகர்கள் தெருவில் தீ வைத்து, பட்டாசுகளை வீசியதைத் தொடர்ந்து, காவல்துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 495 பேர் பலி – ட்வீட் செய்த ஒஸ்கார் விருது நடிகை கைது !

ஈரானில் ஹிஜாப் விவகாரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தை வெளிநாட்டு சதி என குற்றம் சாட்டிய ஈரான் இரும்புக்கரம் கொண்டு போராட்டத்தை ஒடுக்கியது.

அரசுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 495 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே போராட்டத்தில் கலவரம் செய்ததாக 18, 200 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது கோர்ட்டில் ரகசிய விசாரணை நடத்தி ஈரான் அரசு கடுமையான தண்டனை விதித்து வருகிறது. இதில் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பொது இடத்தில் அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஈரான் அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு சர்வதேச அளவில் கடும் கண்டனம் எழுந்தன. இதற்கிடையே, ஈரானிய நடிகை தரானே அலிதூஸ்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஈரானின் அரசு போராட்டக்காரர்களுக்கு தூக்கு தண்டனை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடியோ பதிவுகளை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், போதுமான ஆதாரங்கள் இல்லாமல் ஈரான் அரசுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் நடிகை தரானே அலிதூஸ்தி வீடியோ வெளியிட்டதாகக் கூறி அவரை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டது. நடிகை தரானே அலிதூஸ்தி ஈரானின் பிரபல நடிகை ஆவார். அவர் நடித்த ‘தி சேல்ஸ்மேன்’ திரைப்படம் ஒஸ்கார் விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.