சீனாவின் சர்ச்சைக்குரிய யுவான் வேங் – 5 ஆய்வுக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதைக் காலந்தாழ்த்துமாறு சீனாவிடம் இலங்கை கோரியுள்ளதை வௌிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் இரு நாட்டு அரசாங்கங்களுக்கிடையிலும் தொடர்ந்தும் கலந்துரையாடுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்தியாவின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.
இந்தியா இந்தக் கப்பலை உளவுப் பார்க்கும் கப்பலாக நோக்கும் அதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இந்தக் கப்பல் வந்தடைந்தால் தமது 02 அணுமின் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களும் ஆபத்தை எதிர்நோக்குமென சுட்டிக்காட்டியுள்ளது.
தமது கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொண்டு தரவுகளை சேகரிப்பதற்கான இயலுமையும் குறித்த கப்பலிடம் உள்ளதாக இந்தியா தெரிவிக்கின்றது.
இந்தக் கப்பலுக்கான எரிபொருள் மற்றும் உணவை மீள் நிரப்பும் நோக்குடன் ஹம்பாந்தோட்டைக்கு வருகைதருவதற்கான வாய்மொழி மூல அனுமதியை ஜூலை மாதம் 12 ஆம் திகதியன்று இலங்கை வௌிவிவகார அமைச்சு, சீனத் தூதரகத்திற்கு வழங்கியதாக கொழும்பு இராஜதந்திர கேந்திர நிலையமொன்றை மேற்கோள்காட்டி இந்தியாவின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை இன்று செய்தி வௌியிட்டிருந்தது.
இந்த வேண்டுகோள் சீனாவின் பலத்தை விடவும் அண்டை நாடான இந்தியாவின் பாதுகாப்பிற்கு மதிப்பளிப்பதாக உள்ளதென ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவிக்கின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்ரனியோ குட்டெரஸ் (António Guterres) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
நாடு தற்போது முகங்கொடுத்துள்ள சவாலை வெற்றிகொள்வதற்கு தேவையான சாதகமான சூழலையும் ஸ்திரத்தன்மையையும் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவம் முக்கியமானதாக அமைந்துள்ளதாக ஐ.நா செயலாளர் நாயகம் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சவால்களை எதிர்கொள்வதற்கான தேசிய திட்டத்தை தயாரிப்பதில் அனைத்து அரசியல் கட்சிகளினதும் இணக்கப்பாட்டை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி மேற்கொள்ளும் முயற்சியை தாம் ஏற்றுக்கொள்வதாக ஐ.நா பொதுச்செயலாளர் அன்ரனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சியின் போது பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிதல், சட்டவாட்சி, அடிப்படை மனித உரிமைக் கோட்பாடுகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடல்களை மேம்படுத்தல் என்பனவற்றின் முக்கியத்துவம் தொடர்பில் ஐ.நா செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையானது, இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் துரித மற்றும் நீண்ட கால தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கத் தயாராகவுள்ளதாக செயலாளர் நாயகம் அன்ரனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.
அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்காகவும் சமாதானத்தை கட்டியெழுப்புதல், நிலையான அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பைத் தொடர்ந்தும் வழங்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய போராளி குழுக்களுக்கு இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், காஸாவில் இஸ்லாமிய ஜிஹாத் இலக்குகள் மீது இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட இந்த கொடிய தாக்குதலில், 5 வயது சிறுமி மற்றும் 23 வயது பெண் உட்பட குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 75 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தீவிரவாதிகள் என்று இஸ்ரேல் தெரிவிக்கின்றது.
மேலும், இஸ்லாமிய ஜிஹாத் அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான தைசீர் அல் ஜபாரி இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இஸ்லாமிய ஜிஹாத்தின் ஆயுதப் பிரிவான குத்ஸ் படைப்பிரிவின் தளபதியாகவும், அதன் இராணுவ சபையின் உறுப்பினராகவும் இருந்தார்.
இந்த வார தொடக்கத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் மற்றொரு மூத்த போராளி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து உடனடி அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்லாமிய ஜிஹாத் போராளிக் குழுவை குறிவைப்பதாக இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.
பாலஸ்தீனிய போராளிகள் பல மணிநேரங்களுக்குப் பிறகு ரொக்கெட்டுகளை சரமாரியாகத் தாக்கினர், மத்திய மற்றும் தெற்கு இஸ்ரேலில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்தன.இஸ்லாமிய ஜிஹாத் 100 ரொக்கெட்டுகளை ஏவியது.
இஸ்ரேல் மற்றும் காசாவின் போர்க்குணமிக்க ஹமாஸ் ஆட்சியாளர்கள் கடந்த 15 ஆண்டுகளில் நான்கு போர்கள் மற்றும் பல சிறிய போர்களில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் அளிக்க முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 14 இலங்கையர்கள் இந்தியாவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
திருச்சியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு கும்பலிடம் இருந்து 60 செல்போன்கள் மற்றும் 50 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கேளம்பாக்கம் அருகே தையூரில் உள்ள ஒரு வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) திடீர் சோதனை நடத்திய போதே இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
திருச்சி மத்திய சிறைக்கு அருகில் உள்ள வெளிநாட்டினர் தங்க வைக்கப்பட்டிருந்த சிறப்பு முகாமில் கடந்த ஜூலை 20ஆம் திகதி என்ஐஏ குழுவினர் சோதனை நடத்தினர்.
போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 14 இலங்கையர்களை இந்தக் குழு விசாரித்தது.
சோதனையின் போது, என்ஐஏ குழு 60 செல்போன்கள் மற்றும் 50 சிம் கார்டுகளுடன் ஒரு மடிக் கணினியையும் கைப்பற்றியிருந்தனர்.
முகாமில் உள்ள குறைந்தபட்சம் 14 கைதிகள் பாகிஸ்தானில் இருந்து கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கைதிகள் இந்தியாவிலும் இலங்கையிலும் இயங்கி வருவதாகவும், விடுதலைப் புலிகளின் மறுமலர்ச்சிக்காக செயற்படுவதாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது
யாரும் விரும்பியோ விரும்பாமலோ இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த பெருமை ராஜபக்சக்களுக்குரியது. இந்தப் பெருமையை எவரும் சிங்கள மக்கள் மத்தியில் இருந்து அகற்றிவிட முடியாது. புலிகளின் தமிழ் தேசியம் சிங்கள தேசியமும் ஒன்றையொன்று வளர்த்துக்கொண்டேயிருக்கும். சிங்கள தேசியத்தின் தலைவராக ராஜபக்சாக்கள் இருப்பார்கள். அது வரலாறாகின்போன உண்மை. சிறிலங்கா சுதந்திரக் கட்சி இலங்கையின் வரலாற்றில் இரு பெரும் போராட்டங்களை முற்றிலுமாக அழித்துள்ளது. இது உலக போராட்ட வரலாற்றிலேயே முக்கியமானது. அப்படி இருந்தும் இலங்கை இராணுவம் அரசியலில் தலையீடு செய்யவும் இல்லை. ஆட்சியைக் கைப்பற்றவும் இல்லை. இன்னமும் அரசியல் தலைவர்களுக்கு கட்டுப்பட்டே செயற்படுகின்றது. ராஜபக்சாக்களைக் காப்பாற்றியது கூட இராணுவத் தலைமையே.
அரகலியாக்களின் போராட்டத்தை தடுக்க கோட்டபாயா ராஜபக்ச கட்டளை வழங்கி இருந்தால் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தி இருந்தால் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கும். ஆட்சியை சிலவேளை தக்க வைத்திருக்க முடியும் ஆனால் அவர்களுக்கு இருக்கும் சிங்கள தேசியத்தின் மீதான பிடி தளர்ந்த்து இருக்கும். தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் தலைமைக்கு ஆபத்து வருகின்ற போது தங்கள் மக்களுக்கு எதிராகவே தங்கள் ஆயதங்களை திருப்பினர். மக்களையே மண்மூட்டையாகப் பாவித்தனர். ஆனால் கோட்டபாய ராஜபக்ச தான் தப்பி ஓடுகின்ற போது கூட அரகலியாக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யவில்லை. வலிந்து படைபலத்தினூடாக ஆட்சியைத் தக்க வைக்கவும் முயற்சிக்கவில்லை. மீண்டும் தேர்தல் மேடைக்கு வரும் நம்பிக்கையோடு தான் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
எண்பதுகளுக்கு பிற்பாடு இலங்கையில் அபிவிருத்திக் கட்டுமானங்கள் ஏற்படுத்தப்பட்டது ராஜபக்சக்களின் காலத்திலேயே. வறுமை ஆறு வீதத்திற்கு குறைக்கப்பட்டு இருந்தது. கொழும்பு நகர்ப்புறம் அழகுபடுத்தப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டது. நாடு பூராவும் குறிப்பாக வடக்கு கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. இன்று வடக்கில் மண் வீடுகள் கொட்டில்கள் இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
விலை வீக்கத்தை குறைக்க வரியைக் கூட்ட வேண்டும் என்பது பொருளியலாளர்களின் ஒரு எடுகோள். பிரித்தானியாவிலும் விலைவீக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால் பிரித்தானிய ஆளும்கட்சியின் தலைமைப் பதவியை வெல்லப் போவவராகக் கருதப்படும் லிஸ் ரஸ்ட் வரியைக் குறைப்பேன் என்று உறுதியாக அறிவித்து பலத்த ஆதரவையும் பெற்றுள்ளார். ஆனால் பிரித்தானியாவுக்கு அந்நியச் செலாவணி கையிருப்பு நெருக்கடி இல்லை. ஆனால் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டபாய ராஜபக்சவும் வரியைக் குறைத்துக் கொண்டார். அவர் வரிக்குறைப்புச் செய்தது கோவிட்டுக்கு முன்னைய காலப்பகுதியில். வரியைக் குறைத்தால் நாட்டில் முதலீடுகள் அதிகரிக்கும் உற்பத்தி அதிகரிக்கும் என்பது அவருடைய கணக்கு. ஆனால் துரதிஸ்ட வசமாக வரிக்குறைப்பைத் தொடர்ந்து கோவிட் பரவியது. நாடு முடக்கப்பட்டது. முதலீடுகள் உற்பத்திகள் அனைத்தும் ஸ்தம்பித்தது. வரிமூலம் திறைசேரிக்கு வரவேண்டிய வருமானம் ஸ்தம்பித்தது. நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சென்றது.
கோவிட் பாரிய நோய்ப் பரம்பல் மிகத் தீவிரமாக பரவி வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. செல்வந்த நாடான அமெரிக்காவிலேயே இன்றைக்கும் நூற்றுக்கணக்காணவர்கள் மரணித்துக்கொண்டு தான் உள்ளனர். அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டிவிட்டது. அயல்நாடான இந்தியாவில் 5 மில்லியன் பேர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. ஆனால் பொருளாதாரத்தை பற்றி எண்ணாமல் உயிர்களைக் காப்பாற்றிட வேண்டும் என்ற அடிப்படையில் மிகக் கடுமையான முடக்கத்தை கொண்டு வந்தபடியால் இலங்கையில் கோவிட் தொற்றினால் மரணித்தவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைக்கப்பட்டது. அதற்காக நாடு பொருளாதார ரீதியாக பெரும் விலையைக் கொடுத்தது. நாட்டின் மொத்த உள்ளுர் உற்பத்தியின் 13 வீதத்தை ஈட்டித் தரும் உல்லாசப் பயணத்துறை ஸ்தம்பித்தது.
அந்நியச் செலாவணி கையிருப்பு இன்மையால் அசேதனப் பசளை இறக்குமதியை திடிரென நிறுத்தியதால் சேதனப்பசளைக்கு மாறும்படி அரசு அறிவித்தது. கோட்டபாயாவின் இந்த முடிவு நீண்ட கால நோக்கில் மிகுந்த நன்மையை ஏற்படுத்துவதாக இருந்த போதும் உடனடியாக நாட்டின் உணவு உற்பத்தியில் மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தியது. அந்நியச் செலவாணியை ஈட்டித்தரும் மற்றுமொரு துறையான பெரும்தோட்டத் துறையிலும் பாரிய வீழ்ச்சியைக் கொடுத்தது. அரசு சேதனப் பசளைப் பாவனையை நிரந்தரமான ஒரு மாற்றமாக அறிவிக்காமல் நெருக்கடியைத் திசை திருப்புவதற்கான ஒரு உபாயமாகவே பயன்படுத்தியது. அதனால் சிறந்த ஒரு கொள்கைத் திட்டம் மக்களால் ஏற்றுக்கொள்ளபடாமல் போனது.
கோட்டபாயாவின் எரிபொருள் கொள்கையும் குறிப்பிடத்தக்கது. 2030இல் இலங்கையை 60 வீதம் இயற்கையூடாக பெறக்கூடிய காற்று, சூரிய ஒளி, மற்றும் நீர் மின்சாரம் மூலம் உற்பத்தி செய்து டிசல் நிலக்கரி மூலமான மின்சார உற்பத்தியை குறைக்கத் திட்டமிடப்பட்டு இருந்தது. நாட்டின் உறுதியான பொருளாதாரக் கொள்கைகளைத் திட்டமிட்டு நடத்தக்கூடிய அரசியல் பலம் ராஜபக்சக்களிடம் மட்டுமே இன்றும் உள்ளது.
ஆடுகள் நனைகிறது என்று ஓநாய்கள் கூடி அழுகின்றது:
முற்றிலும் ஜனநாயக அரசியல் அணுகுமுறை என்பது பாராளுமன்ற ஜனநாயகத்தின் பிறப்பிடமான பிரித்தானியாவிலேயே முழுமையான வெற்றியளிக்கவில்லை. பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. கட்சி ஆதரவாளர்களிடையே மிகச் செல்வாக்குப் பெற்றிருந்த ஜெரிமி கோபின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை முன்வைத்த போதும் ஜனநாயகத்தின் பெயரில் அவர் திட்டமிட்டு ஓரம்கட்டப்பட்டார், அன்ரி செமற்றிசம் என்ற புனையப்பட்ட திரிபுபடுத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருடைய கட்சியின் உறுப்புரிமையே பறிக்க முயற்சிக்கப்பட்டது. அன்ரி செமற்றிசம் என்பது நாசிக்களினால் யுதர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மறுப்பது. ஆனால் பாலஸ்தீனியர்களின் இன்றைய நிலைக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் பேசினால் அதனை அன்ரி செமற்றிசம் ஆக்கி, ஜனநாயக விரோத மூலாம்பூசி, முதலாளித்துவ சக்திகள் முற்போக்கு சக்திகளை அரசியலில் இருந்தே ஓரம்கட்ட முயற்சிக்கின்றனர். இவ்வாறான செயல்களுக்கு முட்டையில் மயிர்பிடுங்கும் தீவிர இடதுசாரிகளும் ஆதரவளிப்பார்கள். இவர்கள் வலதுசாரிகளுடன் சேர்ந்த பிரிக்ஸிற்றையும் ஆதரித்தனர்.
அமெரிக்கா தன்னை ஜனநாயகத்தின் காவலனாகக் காட்டிக்கொண்டு கறுப்பினத்தவர்களை காலால் நெரித்தும் தெருநாய்களைப் போல் சுட்டும் கொல்கின்றனர். தன்னியக்க துப்பாக்கிகளை விளையாட்டுப் பொருட்களாக விற்கும் அமெரிக்காவில் குழந்தைகள் பாடசாலைகளிலேயே சுட்டுக்கொல்லப்படுகின்றனர். அதற்கு அமெரிக்க ஜனநாயகம் இடமளிக்கின்றது. பெண்கள் கருக்கலைப்பு செய்வதை அமெரிக்க ஜனநாயகம் தடுக்கின்றது. அவர்களைக் கொலைகாரர் என்று முத்திரை குத்துகிறது. இந்த ஜனநாயகத்தை ஈராக்கிற்கு, லிபியாவுக்கு, சிரியாவுக்கு ஏற்றுமதி செய்கிறோம் என்று சொல்லி அந்நாடுகளைச் சீரழித்தனர். தற்போது அமெரிக்க ஜனநாயக ஏற்றுமதி இலங்கையில் மையம் கொண்டுள்ளது.
அமெரிக்க சார்பு ஊடகங்களின் வர்ணிப்பின் படி: இலங்கை மக்களுக்கு ராஜபக்சக்களின் குடும்ப ஆட்சியில் ஜனநாயகம் இல்லையாம். அதனால் ஊழலாம். பொருளாதார நெருக்கடியாம். இலங்கை பொருளாதார நெருக்கடி அமெரிக்க சார்பு ஊடகங்களை கண்கலங்க வைத்தது. மக்கள் வறுமைக்குள் வாடுவதாக, மக்கள் பட்டினிக்குள் தள்ளப்படுவதாக இந்த ஊடகங்கள் முதலைக் கண்ணீர் வடித்தது. இடதுசாரி லிபரல்களையும் நீச்சல்குளத்தோடு வாழும் மனித உரிமைச் சட்டத்தரணிகளையும் கொண்டு வந்து ஐஎம்எப் இலங்கையை காப்பாற்ற வேண்டும் என்று புலம்புகின்றனர். ஆடுகள் நனைகின்றதாம் என்று ஓநாய்கள் கூடி அழுகின்றது. இது தான் சர்வதேசத்தில் இலங்கையின் நிலை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ராணி எலிசபெத் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மகாராணியின் வாழ்த்தை அனுப்பியுள்ளது.
“இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தலைவராக தெரிவுசெய்யப்பட்ட உங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அதிபராக இருக்கும் போது இரு நாடுகளுக்கிடையிலான அன்பான நட்புறவைத் தொடர நான் எதிர்நோக்குகிறேன்.
எதிர்காலத்தில் உங்களுக்கான அனைத்து செயற்பாடுகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என ராணி எலிசபெத் இன் வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெறும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த வீராங்கனை கயந்திகா அபேரத்ன புதிய இலங்கை சாதனையை ஒன்றை படைத்துள்ளார்.
இன்று நடைபெற்ற 800 மீற்றர் ஓட்டப் போட்டியின் முதல் சுற்றில் தனது தனிப்பட்ட சிறந்த நேரத்தை பதிவு செய்து அவர் புதிய இலங்கை சாதனையை படைத்துள்ளார்.
அவர் குறித்த 800 மீற்றர் தூரத்தை நிறைவு செய்ய 2 நிமிடங்கள் 1.20 வினாடிகளை எடுத்துக்கொண்டார்.
கயந்திகா அபேரத்னவின் முந்தைய சிறந்த நேரமாக 2 நிமிடங்கள் 1.40 வினாடிகள் அமைந்திருந்தது.
பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் அவர் இன்று 5வது இடம் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவின் பெப்ரவரி 24 படையெடுப்பிற்குப் பிறகு உக்ரைனிய தானியங்களின் உலகப் பற்றாக்குறை மில்லியன் கணக்கானவர்களை பட்டினி ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.
படையெடுப்பு, உணவு விலைகளை உயர்த்தியது, எனவே உக்ரைனின் துறைமுகங்களைத் தடுப்பதற்கான ஒப்பந்தம் முக்கியமானது. ஒடேசாவில் சுமார் 20 மில்லியன் டன் தானியங்கள் இருப்புகளில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கருங்கடல் வழியாக உக்ரைன் தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்க கடந்த ஜூலை 22ஆம் திகதி, ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
தானியங்களை ஏற்றிச் செல்லும் முதல் கப்பல் உக்ரைன் துறைமுகத்திலிருந்து உலக உணவு நெருக்கடியைத் தணிக்கும் நோக்கில் புறப்பட்டது.
இந்த திட்டத்தில், உக்ரைனிய கப்பல்கள் தானியக் கப்பல்களை துறைமுக நீர் வழியாக உள்ளேயும் வெளியேயும் வழிநடத்துகின்றன.
ஏற்றுமதி நகரும் போது ரஷ்யா ஒரு போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்கிறது. துருக்கி – ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் ஆயுதக் கடத்தல் குறித்த ரஷ்ய அச்சத்தைப் போக்க கப்பல்களை ஆய்வு செய்கிறது. கருங்கடல் வழியாக தானியங்கள் மற்றும் உரங்களை ரஷ்ய ஏற்றுமதி செய்வதற்கும் இந்த ஒப்பந்தம் உதவுகிறது.
பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வருவதற்கு 365 நாட்கள் எடுத்து கொள்கிறது. தன்னைத் தானே சுற்றி கொள்வதற்கு 24 மணி நேரம் ஆகிறது. இந்நிலையில் சமீபகாலமாகவே பூமி அதன் சுற்றும் வேகத்தை அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
1960-ம் ஆண்டுக்கு பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு பூமியில் குறுகிய மாதம் பதிவானது. 2020 ஜூலை 19-ந் திகதி மிகவும் குறுகிய நாள் பதிவானது. அன்றைய தினம் வழக்கமான 24 மணி நேர நாளை விட 1.47 மில்லி வினாடிகள் குறைவாக இருந்தது. அதாவது அன்றைய தினம் பூமி வழக்கத்தை காட்டிலும் வேகமாக சுற்றி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதன்பிறகும் பூமியின் சுழற்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஆனால் குறிப்பிடத்தக்க சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை. இந்நிலையில் கடந்த ஜூலை 29-ந் திகதி பூமியானது வழக்கத்துக்கு மாறாக 1.59 மில்லி வினாடிகள் முன்னதாகவே தனது சுழற்சியை நிறைவு செய்துள்ளது. இதன் மூலம் மிக குறுகிய நாள் என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்குக்கு சற்று அதிகம் ஆகும். என்றாலும் 1.59 மில்லி வினாடிகள் கூட பூமியின் சுழற்சியில் மிக முக்கியம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
வரும் நாட்களில் மேலும் குறுகியதாக மாறலாம் என்றும், அதற்கான தொடக்கமாக இது இருக்கலாம் என்றும் இன்ட்ரஸ்டிங் என்ஜினீயரிங் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. பூமி சுழற்சி ஏன் வேகமாகிறது? என்பதற்கான தெளிவான காரணங்கள் இதுவரை அறியப்படவில்லை. பூமியின் மையப்பகுதி அல்லது வெளிப்புற அடுக்குகள், கடல்கள், அலைகளில் ஏற்படும் மாற்றம் இதற்கான காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. காலநிலை மாற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம் என சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பூமியின் சுழலும் வேகம் இவ்வாறு தொடர்ந்து அதிகரித்து வந்தால் அது நெகடிவ் லீப் வினாடிகளுக்கு வழிவகுக்கும். அதாவது பூமி சூரியனை சுற்றி வரும் விகிதத்துக்கும், கடிகாரங்களுக்கும் பொருந்தாமல் போகலாம். இதுபோன்ற லீப் வினாடிகள் ஸ்மார்ட் போன்கள், கம்ப்யூட்டர்கள், தொலை தொடர்பு அமைப்புகளில் குழப்பத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. ஏனெனில் கடிகாரம் 23:59:59-ல் இருந்து 23:59:60 வந்த பின்னர் தான் 00:00:00 என்று அடுத்த நாளுக்கு மாறும். பூமி வேகமாக சுற்றுவதால் லீப் வினாடிகள் ஏற்படும் பட்சத்தில் அது தொலை தொடர்பு புரோகிராம்களில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். இதனை சரிகட்ட ஒருங்கிணைந்த யூனிவர்சல் டைம் (யு.டி.சி) ஏற்கனவே 27 முறை லீப் நொடிகளை மாற்றி அமைத்துள்ளது. இப்பொழுது மீண்டும் அதனை மாற்றி அமைக்க வேண்டிய சூழல் ஏற்படும். அப்போது தான் தொலை தொடர்பு சாதனங்களிலும், உலக அளவிலும் நேரத்தை சரியாக கணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.