29
29
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு இந்திய மத்திய அரசிடம் அனுமதி கோரும் தனித் தீர்மானம் தமிழக சட்டப் பேரவையில் இன்று வெள்ளிக்கிழமை (29) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில், இலங்கையில் நிலவும் நெருக்கடி விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்தீர்மானத்தை கொண்டு வந்தார்.
நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு சிரமங்கள் குறித்து பேரவையில் விளக்கமளித்த ஸ்டாலின், அத்தியாவசிய மருந்துகள், எரிபொருள் மற்றும் உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்தார்.
முதலில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவிகள் செய்வதாக அறிவித்திருந்தேன். பல தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒரு சமூகத்திற்கு மாத்திரமன்றி அனைத்து இலங்கை மக்களுக்கும் உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
தற்போதைய நெருக்கடியின் காரணமாக அனைத்து மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் என அவர்கள் என்னிடம் தெரிவித்தனர், என்றார்.
இதற்கமைய, 80 கோடி ரூபாய் பெறுமதியான 40,000 மெட்ரிக் டன் அரிசி, 137 மருந்து பொருட்கள் (28 கோடி ரூபா) மற்றும் குழந்தைகளுக்காக 500 டன் பால்மா (15 கோடி ரூபா) என்பவற்றை வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது.
இவற்றை தமிழக மாநில அரசினால் நேரடியாக வழங்க முடியாது என்பதால், இலங்கையில் உள்ள இந்தியா தூதரகம் ஊடாக வழங்கிவைக்க மத்திய அரச அனுமதி வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு தனியாக இந்த உதவிகளை வழங்க முடியாது. மத்திய அரசிடம் அனுமதி பெற்று இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மட்டுமே இவற்றை விநியோகிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக பிரதமர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இருந்தும் அவர்களிடமிருந்து பதில் வரவில்லை. எனக் கூறியுள்ளார்.
இத்தாலி நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயருக்குப் பின்னால் தந்தையின் பெயர் சேர்க்கப்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ள நிலையில் இதில் மாற்றம் ஏறு்பட்டுள்ளது.
இது தொடர்பான ஒரு வழக்கை அந்த நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம் விசாரித்து, அங்கு பிறக்கிற குழந்தைகளின் பெயருக்குப் பின்னால் இனி தந்தை, தாய் என இருவரது பெயரையும் சேர்க்குமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இதுவரை தந்தையின் பெயரை மட்டுமே தனது பெயருக்கு பின்னால் குழந்தைகள் கொண்டிருந்தது, பாகுபாடு மற்றும் அடையாளத்துக்கு கேடு விளைவிக்கும் என்று தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தாய், தந்தை இருவரும் ஒப்புக்கொண்டால், யாராவது ஒருவரது பெயரை தங்கள் பெயருக்கு பின்னால் குழந்தைகள் கொண்டிருக்கலாம் எனவும், தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த அரசியல் சாசன நீதிமன்றம் தீர்ப்புக்கு ஏற்ப, இத்தாலி நாடாளுமன்றம் இப்போது ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும். கோர்ட்டு தீர்ப்பை அரசு முழுமையாக ஆதரிப்பதாக, இத்தாலி குடும்ப மந்திரி எலினா பொனெட்டி ‘பேஸ்புக்’ பதிவில் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில், “இந்த முடிவுக்கு நாம் ஒரு பொருளைத்தர வேண்டும். இது அதிகபட்ச முக்கியத்துவம் வாய்ந்தது. அதை செய்து முடிக்க வேண்டும். குழந்தைகளை வளர்த்தெடுப்பதில் தந்தையும், தாயும் சம பங்கு எடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து பெண்கள் கல்வி பயிலும் விவகாரத்தில் பல்வேறு கெடுபிடிகளை விதித்து வருகின்றனர்.
பள்ளிகளில் மாணவிகளுக்கு கடுமையான உடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றாத பள்ளிகள் மற்றும் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. அந்தவகையில் பல்க் மாகாணத்தை சேர்ந்த ஒரு பள்ளியில் பயின்று வந்த மாணவிகள் கடந்த சில நாட்களாக ஹிஜாப் அணியாமலும், ஹிஜாப் அணிந்தும் முகத்தை மூடாமலும் வந்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த பள்ளியை தலிபான்கள் மூடி விட்டதாக மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்து உள்ளது. பள்ளிகளில் கடைப்பிடிக்க வேண்டிய உடை கட்டுப்பாடுகள் சரியாக பின்பற்றப்படுகின்றனவா? என்பதை ஆய்வு செய்ய தலிபான்கள் கண்காணிப்பாளர்களை நியமித்து உள்ளனர்.
இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றாத ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் எந்தவித விளக்கமும் கேட்காமல் பள்ளியில் இருந்து நீக்கப்படுவதாக பள்ளி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.



