நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு இந்திய மத்திய அரசிடம் அனுமதி கோரும் தனித் தீர்மானம் தமிழக சட்டப் பேரவையில் இன்று வெள்ளிக்கிழமை (29) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில், இலங்கையில் நிலவும் நெருக்கடி விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்தீர்மானத்தை கொண்டு வந்தார்.
நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு சிரமங்கள் குறித்து பேரவையில் விளக்கமளித்த ஸ்டாலின், அத்தியாவசிய மருந்துகள், எரிபொருள் மற்றும் உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்தார்.
முதலில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவிகள் செய்வதாக அறிவித்திருந்தேன். பல தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒரு சமூகத்திற்கு மாத்திரமன்றி அனைத்து இலங்கை மக்களுக்கும் உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
தற்போதைய நெருக்கடியின் காரணமாக அனைத்து மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் என அவர்கள் என்னிடம் தெரிவித்தனர், என்றார்.
இதற்கமைய, 80 கோடி ரூபாய் பெறுமதியான 40,000 மெட்ரிக் டன் அரிசி, 137 மருந்து பொருட்கள் (28 கோடி ரூபா) மற்றும் குழந்தைகளுக்காக 500 டன் பால்மா (15 கோடி ரூபா) என்பவற்றை வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது.
இவற்றை தமிழக மாநில அரசினால் நேரடியாக வழங்க முடியாது என்பதால், இலங்கையில் உள்ள இந்தியா தூதரகம் ஊடாக வழங்கிவைக்க மத்திய அரச அனுமதி வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு தனியாக இந்த உதவிகளை வழங்க முடியாது. மத்திய அரசிடம் அனுமதி பெற்று இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மட்டுமே இவற்றை விநியோகிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக பிரதமர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இருந்தும் அவர்களிடமிருந்து பதில் வரவில்லை. எனக் கூறியுள்ளார்.