10

10

உக்ரைனுக்கு 100 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஆயுதங்களை பிரித்தானியா !

உக்ரைனுக்கு 100 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஆயுதங்களை பிரித்தானியா வழங்கவுள்ளது என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

ஸ்டார்ஸ்ட்ரீக் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் 800 டேங் எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட கூடுதல் இராணுவ உபகரணங்களை பிரித்தானியா அனுப்பும் என்று பிரதமர் உறுதியளித்தார்.

கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமடோர்ஸ்கில் உள்ள ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட குறைந்தது 50பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலையடுத்து டவுனிங் ஸ்ட்ரீட் ஊடக சந்திப்பில், ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடன் இணைந்து பேசிய பிரித்தானிய பிரதமர், கிராமடோர்ஸ்க் நிலையத்தில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு ரஷ்யா தண்டனையிலிருந்து தப்பாது என்று எச்சரித்தார்.

மேலும், வீடுகளை விட்டு வெளியேறும் அகதிகள் மீது மனசாட்சியின்றி குண்டுவீச்சு உட்பட கட்டவிழ்த்து விடப்பட்ட மிருகத்தனத்தில் பிரித்தானியாவும் ஜேர்மனியும் ஒரேவிதமான திகில் மற்றும் வெறுப்பை பகிர்ந்து கொள்கின்றன என்பதை நான் அறிவேன்.

பொதுமக்களை கண்மூடித்தனமாக தாக்குவது போர்க்குற்றமாகும். மேலும் உக்ரைனில் ரஷ்யாவின் போர்க்குற்றங்கள் கவனிக்கப்படாமல் அல்லது தண்டிக்கப்படாமல் போகாது’ என கூறினார்.

 

லிற்றில் எய்ட் அமைப்பின் முதலீட்டு ஒத்துழைப்போடு யாழ்.பல்கலைகழக பட்டதாரி கலைநீதனின் லிட்டில் சை கிட் வெளியீடு !

லிற்றில் எய்ட் அமைப்பின் முதலீட்டு ஒத்துழைப்போடு விஞ்ஞான மற்றும் கணிதத் துறையில் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் லிட்டில் சை கிட் (little sci kit) வெளியிடப்பட்டது. சை போர்ட் அக்கடமியின் தயாரிப்பான இவ்விளையாட்டுடனான கல்வி உரகரணம் வணிக நோக்கத்தைக் கொண்ட தொழில் முயற்சியாக இருந்தாலும் கூட இதன் இலக்கு எமது சமூகத்தில் மாணவர்களை கணித, விஞ்ஞானத்துறையில் ஊக்குவிப்பது ஆகும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட பட்டதாரியும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்படும் மனிதம் அமைப்பின் உருவாக்குனர்களில் ஒருவருமான கலைநீதன் என்பவரால் சை போர்ட் அக்கடமி (scibot academy) உருவாக்கப்பட்டுள்ளது.
No description available.
எங்களுடைய சமூகத்தில் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் இருக்கக் கூடிய மிகப் பெரிய பலவீனம் அனுபவ ரீதியான கற்றலின் போதாமை ஆகும். குறிப்பாக விஞ்ஞான பாடத்தில் மாணவர்கள் போதிய ஈடுபாடு காட்டமைக்கு இது முக்கியமான காரணமாக அமைகின்றது. மனிதம் அமைப்பினர் பாடசாலை மாணவர்களுடன் மேற்கொண்ட உரையாடலில் இந்த விடயத்தை தெட்டத் தெளிவாக உணர முடிந்தது. குறித்த மாணவர்கள் அனுபவ ரீதியாக விஞ்ஞான பாடத்தைக் கற்பதில் காட்டிய ஆர்வமும், சர்வதேச ரீதியில் விஞ்ஞான பாடம் எவ்வாறு மாணவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் கற்பிக்கப்படுகின்றது என்பது தொடர்பான அவதானிப்பும் இந்தக் கிட்ஸை உருவாக்குவதற்குத் தூண்டுதலாக அமைந்தது.
லிட்டில் சை கிட்டின் முதலாவது வெளியீடாக வீட்டில் பயன்படுத்தக்கூடிய இலத்திரனியல் உபகரணங்களுக்குப் பின்னால் இருக்கக்கூடிய அறிவியலை விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் Diy home automation kit எனப்படும் கிட்ஸ் வெளிவந்துள்ளது. இதன் மூலம் 5 இலத்திரனியல் உபகரணங்களின் செயற்பாடுகளை மாணவர்கள் புரிந்துகொள்ள முடியும். இரவில் தானியங்கியாக ஒளிரும் மின்விளக்கு எவ்வாறு இயங்குகிறது, சலவை இயந்திரம், நுண்ணலை அடுப்பு போன்றவற்றில் டைமர்கள் எவ்வாறு வேலை செய்கின்றன, வீட்டில் பொருத்தப்பட்டுள்ள அழைப்பு மணி எவ்வாறு இலகுவாக செய்யலாம், ஆள் நடமாட்டத்தின் போது தானாக ஒளிரும் மின்விளக்குகள், எச்சரிக்கை ஒலி எழுப்புதல் என்பவற்றை எவ்வாறு செய்யலாம், வீட்டினுள் வளர்க்கப்படும் செடிகளில் ஈரத்தன்மை குறையும் போது நீர் பாய்ச்சக் கூடிய கருவிகளின் செயற்பாடுகள் என்பவற்றை விளங்கிக்கொள்ளக் கூடிய வகையில் இந்தக் கிட் அமைக்கப்பட்டுள்ளது. அதனுடன் இணைக்கப்பட்டுள்ள வழிகாட்டி நூலில் இது தொடர்பான விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.
No description available.
இந்தக் கிட்ஸ் மாணவர்களுக்கான இலத்திரனியல் சார்ந்த அடிப்படை அறிவை வழங்கும். எடுத்துக்காட்டாக, பாடத்திட்டத்தில் இலத்திரனியல் கொள்ளளவிகள், ஒளியியல் தடையி, இலத்திரனியல் கூறுகள் போன்றவை பற்றி கற்கிறோம். அவற்றை எங்கு எப்படிப் பயன்படுத்துவது என்பதை இந்தக் கிட்ஸ் மூலம் அறிந்து கொள்ள முடியும். மேலும் இலத்திரனியல் கூறுகளை மாணவர்கள் தொட்டுணர்ந்து அவற்றின் வடிவம், செயற்பாடு, அவற்றை எப்படி இன்னொன்றுடன் இணைப்பது போன்றன தொடர்பிலும் கற்கக் கூடிய வாய்ப்பை இந்தக் கிட்ஸ் வழங்குகின்றது.
லிட்டில் சை கிட் தொடர்ந்தும் மாணவர்களுடைய பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறான பிரயோக ரீதியான கிட்ஸ்களை உருவாக்கவுள்ளது. அதன்படி, அடுத்து மின்காந்தப் புலத்தை அடிப்படையாகக் கொண்ட கிட்ஸ் தயாராகி வருகின்றது.
இந்த கிட்ஸ் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டாலும் இவற்றை விலை கொடுத்து வாங்கக் கூடிய இயலுமையில் பெற்றோர்கள் இருப்பார்களா என்பது கேள்விக்குரிய விடயம். இதற்குத் தீர்வாக பாடசாலைகளின் பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கிட்ஸ்களை வாங்கிப் பாடசாலைகளுக்கு அன்பளிப்பு செய்வதனூடாக அனைத்து மாணவர்களும் இதன் பயனைப் பெற முடியும்.
சை போர்ட் அக்கடமியின் மற்றொரு அங்கமாக விஞ்ஞான அறிவியல் சார்ந்த விடயங்களை உள்ளடக்கி விஞ்ஞானத் தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வகைளில் சை போட் அக்கடமி எனும் செயலி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் விஞ்ஞான விளக்கங்கள், புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், விண்வெளி விஞ்ஞானத் தகவல்கள் எனப் பலவற்றையும் அறிந்துகொள்ள முடியும். விஞ்ஞானத் துறைசார் போட்டிகளும் இந்த செயலி ஊடாக உடனுக்குடன் இற்றைப்படுத்தப்படும். இதுவும் பாடசாலை மாணவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயனுடையதாக அமையும்.

“ஆட்சியைப்பொறுப்பு எடுக்க இங்கு யாரும் தயாராயில்லை.”- நிதியமைச்சர் அலிசப்ரி !

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்வதற்கு தயார் என ஆளும் தரப்பு அறிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள ஆளும் தரப்பின் தற்காலிக அமைச்சரவையில் நிதி அமைச்சராக பதவிவகிக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் நாட்டினை மீட்பதற்கான செயற்பாட்டில் பங்கேற்பதற்கு தயாராக இல்லாத நிலையில், இப்போது நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் கொண்டு வரும் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வெற்றிபெற்று நாடாளுமன்ற பெரும்பான்மையை காண்பிப்பார்களாயின் அவர்களிடத்தில் ஆட்சியை ஒப்படைப்பதற்கு தயாராக உள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அவர்கள் ஆட்சியைப்பொறுப்பு எடுப்பதற்கு தயாராக இல்லையென்றும் நம்பிக்கையில்லாத பிரேரணை மூலமாக அரசியல் இலாபம் அடைவதற்கே முயற்சிக்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்வோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து வெளியேறும் இளைஞர்கள் தொகை சடுதியாக அதிகரிப்பு !

தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக இலங்கையிலிருந்து வேறு நாடுகளுக்கு செல்வதற்கான கடவுச்சீட்டு தயாரிக்கும் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது போன்ற இளைஞர்களின் எண்ணிக்கை சுமார் 40% அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வெளிநாடு செல்வதற்காக சொத்துக்களை விற்று பணம் திரட்டி வருவதால்,அண்மைக் காலமாக நாடு முழுவதும் வீடுகள் மற்றும் வாகனங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

இதேவேளை சட்டவிரோதமான முறையில் தப்பிச் செல்லும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானில் கவிழ்க்கப்பட்டது இம்ரான்கான் அரசு – புதிய பிரதமராகிறார்

பாகிஸ்தான் அரசியலில் அதிரடி திருப்பங்களுடன் நேற்று நள்ளிரவு இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் இம்ரான்கான் அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம் என்று கூறி எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் அரசுக்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வந்தன.

கடந்த 3-ந்திகதி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அன்று, சட்டசபையை நடத்திய துணை சபாநாயகர், தீர்மானத்தை நிராகரிப்பதாக அறிவித்தார். வெளிநாட்டு சக்தி தூண்டுதலால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தார். இதையடுத்து பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவிட்டார்.

இவ்விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு, பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்று அதிரடியாக தீர்ப்பு அளித்தது. மேலும் பாராளுமன்றத்தில் இம்ரான் கான் அரசு, மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஏற்கனவே இம்ரான் கான் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. முக்கிய கூட்டணி கட்சியான முத்தாஹிதா குவாமி இயக்கம் கட்சி தனது ஆதரவை வாபஸ் வாங்கியதால் அரசின் பலம் 164 ஆக குறைந்தது. மேலும் ஆளுங்கட்சியை சேர்ந்த 22 எம்.பி.க்கள் எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்தனர்.

சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு படி நேற்று காலை பாராளுமன்றம் பரபரப்பான சூழலில் கூடியது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள். சபைக்கு வந்திருந்த நிலையில் பிரதமர் இம்ரான் கான் வரவில்லை. இம்ரான் கான் கட்சியான பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப்பை சேர்ந்த 51 எம்.பி.க்கள் பங்கேற்றனர். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது எதிர்கட்சி தலைவர் ‌ஷபாஸ் ஷெரீப், வெளியுறவு மந்திரி ஷாமக் மூத்குரேஷி பேசினார்கள்.

பின்னர் சபையை பகல் 12.30 மணிவரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஆசாத் குவைசர் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்களும், ஆளுங்கட்சி உறுப்பினர்களும் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டதால் சபை மீண்டும் கூடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இப்தார் நோன்பு திறப்புக்காக அவை நடவடிக்கைகளை இரவு 7.30 மணிவரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். நோன்பு திறப்புக்கு பிறகு சபை மீண்டும் கூடியபோது உடனடியாக இரவு 9.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டு இரவு தொழுகைக்கு பிறகு மீண்டும் கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே பிரதமர் இம்ரான் கான் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இரவில் நடந்தது. அதில் இம்ரான் கான் தனது பதவியை ராஜினாமா செய்யமாட்டார் என்று முடிவு எடுக்கப்பட்டது.

அடுத்தடுத்த பரபரப்பான காட்சிகள் அரங்கேறிய நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது சபாநாயகர் ஆசாத் குவைசர், துணை சபாநாயகர் காசிம் சூரி ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம்லீக் (நவாஸ்) கட்சியை சேர்ந்த அயாஸ் சாதிக் அவைக்கு தலைமை தாங்கினார். அவர் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடவடிக்கைகளை தொடங்கினார். நள்ளிரவு 1.30 மணிக்கு இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு நடந்தது.

342 உறுப்பினர்களை கொண்ட பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் ஆட்சியை காப்பாற்ற இம்ரான்கானுக்கு 172 பேரின் ஆதரவு தேவை. அவரது அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு 174 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். இம்ரான் கான் கட்சி உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை. அதே போல அதிருப்தி எம்.பி.க்கள் வாக்களிக்கவில்லை.

இதன்மூலம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றது. இதனால் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் நீக்கப்பட்டார். அவரை பதவியில் இருந்து நீக்கி பாராளுமன்றம் உத்தரவிட்டது.

இம்ரான்கான் அரசு கவிழ்ந்ததையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமர் நாளை தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதற்காக பாராளுமன்றம் நாளை மீண்டும் கூடுகிறது. சபைக்கு தலைமை தாங்கிய பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியை சேர்ந்த அயாஸ் சாதிக் கூறும்போது, ‘புதிய பிரதமருக்கான வேட்புமனுக்கள் இன்று மதியம் 2 மணிக்குள் சமர்ப்பிக்கப்படலாம் என்றும் பிற்பகல் 3 மணிக்குள் ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

நாளை காலை 11 மணிக்கு அமர்வை கூட்டி உள்ளார். அப்போது புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறினார். அதே வேளையில், பாகிஸ்தான் தேசிய சட்டமன்றம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தேசிய சட்டமன்ற கூட்டம் (பாராளுமன்றம்) ஏப்ரல் 11-ந்தேதி காலை 11 மணிக்கு பதிலாக பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ‌ஷபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவரான ‌ஷபாஸ் ஷெரீப்பை பிரதமராக தேர்ந்தெடுத்து எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் அவர் புதிய பிரதமராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகி இருக்கிறது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சகோதரர் ‌ஷபாஸ் ஷெரீப் ஆவார். அவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்- மந்திரியாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“இனவழிப்பிற்கு சர்வதேச நீதி வேண்டும்.”- மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அணி திரளுங்கள் முன்னணியினர் அழைப்பு !

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் .

தமிழ் மக்கள் மீது இடம்பெற்றது ஒரு திட்டமிட்ட இன அழிப்பு அந்த இனவழிப்பிற்கு சர்வதேச நீதி வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்ற நோக்கத்திற்காகவும் மே-18 நினைவேந்தல் நிகழ்வானது உணர்வுபூர்வமாக யுத்தம் நிறைவடைந்த பின்னர் தமிழ் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

அரச பயங்கரவாதத்தால் முன்னெடுக்கப்பட்ட இனஅழிப்புப் போராட்டத்தில் லட்சக்கணக்காண மக்கள் இனப் படுகொலை செய்யப் பட்டதோடு யுத்தம் மௌனவித்த 2009 மே மாதம் முள்ளிவாய்க்கால் வரை 5 லட்சம் மக்கள் வரை சென்றிருந்தார்கள்.

இவ்வாறான நிலையில் தான் மே மாதம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஒவ்வொரு வருடமும் தமிழ் மக்களால் நினைவு கூரப்படுகின்றது என்ன நோக்கத்துக்காக மக்கள் தமது உயிர்களைத் தியாகம் செய்தார்களோ அந்த நோக்கங்களை அடைவதற்காக ஒன்றிணைந்து நினைவுகூரக்கூடிய ஒரு நாளாக காணப்படுகின்றது

எனவே உயிரிழந்த எமது மக்களை உறவுகளை கூட்டாக நினைவுகூர வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது அந்த உறவுகள் கடைசி வரை எந்த இலட்சியத்துக்காக உறுதியாக இருந்தார்களோ அந்த இலட்சியத்திற்காக செயற்பட வேண்டிய கடப்பாடும் எங்களுக்கு காணப்படுகின்றது

எனவே இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வேண்டும் அந்த நீதியானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக பெறப்பட வேண்டும் அத்தோடு இறுதி யுத்தத்தில் உயிர் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமாக இருந்தால் ஒற்றையாட்சியை 13வது திருத்தச்சட்டத்தை நிராகரித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் எனவே எமது எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுத்த முன்வாருங்கள் எனவும் தெரிவித்தார்

கோத்தபாய ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்புவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியினரால் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமது முழுமையான ஆதரவினை வழங்க தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது

கோட்டா அரசாங்கத்துக்கு எதிரான அனைத்து செயற்பாடுகளுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவார்கள் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர். செ.கஜேந்திரன் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – நகர்வுகளை ஆரம்பித்தது சஜித் தரப்பு !

20வது திருத்தத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட ஐக்கியமக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் 20வது திருத்தத்தை நீக்குவதற்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை நீக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

இன்றைய சந்திப்பின்போது கட்சி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதற்கான முயற்சிகளை தொடர்வதற்கு தீர்மானித்தது, இதற்காக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ஆதரவை பெற தீர்மானிக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறுவதற்காக எதிர்க்கட்சி தலைவர் விரைவில் அவர்களை சந்திப்பார்- சுயாதீனமாக செயற்பட தீர்மானித்தவர்களையும் சந்திப்பார் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி – மேலும் 19 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு !

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க முடியாமல் இலங்கைமக்கள் இந்தியாவுக்கு ஓட்டம் பிடிக்க ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு வந்த 20 இலங்கை தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (10) அதிகாலை இரண்டு கை குழந்தையுடன் 5 குடும்பத்தை சேர்ந்த மேலும் 19 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தனுஷ்கோடி இலங்கைக்கு அருகே உள்ளதால் இலங்கை தமிழர்கள் இறுதிக்கட்ட போரின் போது அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்குள் வந்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ளனர்.

இதே போல் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக இலங்கை தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வரக்கூடும் என்பதால் சர்வதேச கடல் எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என கடலோர பாதுகாப்பு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப் பட்டிருந்ததது.

இந்நிலையில் நேற்று (9) இரவு ஒரு படகில் திருகோணமலையை சேர்ந்த 10 பேர் இரண்டு கை குழந்தைகளுடன் மன்னாரில் இருந்து புறப்பட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (10) அதிகாலை சுமார் 2 மணி அளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை ஒன்றாம் மணல் திட்டில் வந்து இறங்கி உள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் மெரைன் பொலிஸார் இலங்கைத் தமிழர்களை மீட்டு மண்டபம் மெரைன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல் மன்னாரில் இருந்து நேற்று சனிக்கிழமை (9) இரவு யாழ்பாணம் மற்றும் மன்னாரை சேர்ந்த 9 பேர் ஒரு படகில் மன்னாரில் இருந்து புறப்பட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (10) அதிகாலை தனுஷ்கோடி வந்து இறங்கி பின்னர் அரசு பேருந்து மூலம் தானாக மண்டபம் அகதிகள் முகாமிற்கு சென்றனர்.

இது குறித்து தகவலறிந்த மண்டபம் மெரைன் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை விலை ஏற்றம் மற்றும் மண்ணெய், டீசல், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் தமிழகத்துக்கு அகதிகளாக வந்தாக பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இலங்கை தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின் 19 இலங்கை தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படுவார்கள் என மெரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

‘எங்களுக்கு ஜனாதிபதி கோட்டா வேண்டும்.”- கண்டியில் பேரணி !

எங்களுக்கு ஜனாதிபதி கோட்டா வேண்டும் என தெரிவித்து தங்காலை மற்றும் கண்டியில் பேரணிகள் நடைபெற்று வருகின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் வீதியில் இறங்கி அவருக்கும் அரசாங்கத்திற்கும் ஆதரவை தெரிவித்து போராடி வருகின்றனர்.

இதேவேளை கொட்டும் மழையிலும் இன்று இரண்டாவது நாளாகவும் கோட்டபாய ராஜபக்ஷவுக்கு எதிராக காலிமுகத்திடலில் இளைஞர்கள் போராடிவருகின்றனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உதவும் வகையில் சமூக ஆர்வலர்கள் உணவுகள் மற்றும் குடிநீர், மற்றும் மழைக்கவசம் ஆகியவற்றை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாட்களாக டீசல் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த நபர் மரணம் !

தங்கொடுவ மற்றும் வென்னபுவ ஆகிய பகுதிகளில் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் நின்ற இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதற்கமைய, சுமார் இரண்டு நாட்களாக டீசல் பெறுவதற்காக தங்கொடுவ நகரில் வரிசையில் காத்திருந்த கோனவில பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவர் மயங்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, வென்னபுவ பகுதியில் எரிபொருள் கொள்வனவு செய்ய வரிசையில் நின்ற 51 வயதுடைய மற்றொருவரும் உயிரிழந்துள்ளார்.