February

February

“இலங்கையின் நிதி நெருக்கடியை தீர்க்க நாங்கள் தயார்.” – இந்திய அரசாங்கம் அறிவிப்பு !

“இலங்கையின் நிதி நெருக்கடியை தீர்ப்பதற்காக இலங்கையில் முதலீடு செய்ய தயார்.” என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இணையவழி கலந்துரையாடலின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர்இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நிதி நெருக்கடிக்கு தீர்வை காண்பது தொடர்பில் இருநாடுகளிற்கும் மத்தியில் பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் உட்பட ஏனைய அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியா கடன் உதவிகளை வழங்கியது என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதிகோருபவர்களை மௌனமாக்க முயல்கிறதா அரசாங்கம்..? – சரத்வீரசேகர பதில் என்ன.?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதிகோருபவர்களை அரசாங்கம் மௌனமாக்க முயலவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதிகோருபவர்களை அரசாங்கம் மௌனமாக்க முயல்கின்றது என வெளியாகியுள்ள தகவல்களை அவர் நிராகரித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களை அரசாங்கம் இலக்குவைக்கின்றது என எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்ற என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜஹ்ரான் ஹாசிமும் அவரது சகாக்களும் தேவாலயங்களில் குண்டுகளை வெடிக்கவைத்ததால் அப்பாவிகள் கொல்லப்பட்டனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னர் எட்டுசம்பவங்கள் இடம்பெற்றன இந்த சம்பவங்கள் பயங்கரவாதிகளிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அப்போதைய அரசாங்கத்தை தூண்டியிருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை ஆண்டவர்கள் தாக்குதலை தடுக்க தவறியபின்னர் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் நீதிகோருவது வேடிக்கையான விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.

“என்னை நம்பியதால் தான் வடக்கு மக்கள் ஜனாதிபதி தேர்தலில் அதிக வாக்குகளை அளித்தார்கள்.” – பொன்சேகா பெருமிதம் !

இராணுவத்தினர் பொதுமக்களை துன்புறுத்தினார்கள் என்பதை வடபகுதி மக்கள் நம்பவில்லை அதனால்தான் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட எனக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பை விட அதிக வாக்குகளை அளித்தார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

வடபகுதி மக்கள் 2010 இல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளருக்கு அதிக வாக்குகளை வழங்கினார்கள் இது இராணுவத்தினர் பொதுமக்களை துன்புறுத்தினார்கள் என்பதை நம்பவில்லை என்பதை காண்பித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒருவர் இருவர் செய்த குற்றங்களிற்காக முழு பாதுகாப்பு படையினரும் துன்பத்தில் சிக்க முடியாது என தெரிவித்துள்ள சரத்பொன்சேகா உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்காக குரல்கொடுக்கும் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

“இனவழிப்பு தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக விசாரணை நடாத்துங்கள்.” – ஐ.நாவுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் !

இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க கோரி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளனர்.

 

தமது உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் இடையூறுகளுக்கு மத்தியிலும் தொடர்ச்சியாக போராட்டத்தை மேற்கொண்டு வருவதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுவரை போராடிய 112 பெற்றோர்கள் மனஅழுத்தத்தினாலும் நோய்வாய்ப்பட்டதாலும் மரணித்துள்ள நிலையிலும், நீதி கிடைக்க வேண்டும் என எஞ்சியிருப்பவர்கள் தொடர்ந்தும் போராடிவருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

உறவுகளை தேடி போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் இறப்புக் காரணமாக அவர்களின் உறவுகள் காணாமலாக்கப்பட்டமைக்கான சாட்சிகள், ஆதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்றும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த துன்பியல் நிலை தொடர்ந்தால் இறுதியில் சாட்சிகள் இன்மையால் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை முடிவிற்குக் கொண்டுவருவது சிங்கள அரசுக்கு சுலபமாகிவிடும் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட மிருசுவில் படுகொலையாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டமை, திருகோணமலையில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் இருந்து கரன்னகொட விடுவிக்கப்பட்டமையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் இரவோடு இரவாக மத அடையாளங்கள் அழிக்கப்பட்டு விகாரைகள் அமைக்கப்படுவது, பூர்வீக நிலங்களை கையகப்படுத்துதல், போராட்டத்திற்கு முன்னிலை வகிப்பவர்கள் விசாரணைகளுக்கு அளிக்கப்படுவது உள்ளிட்டவற்றையும் அதில சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஹெரோயின் வியாபாரம் – 13வயது சிறுமியும் தாயும் யாழில் கைது !

யாழ்ப்பாணம் நெல்லியடி குடவத்தை பகுதியில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் 13 வயது சிறுமியும் தாயும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருளும் மீட்க்கப்பட்டுள்ளது.

காவலுக்கு ஆட்களை வைத்து வருபவர்களை அடையாளம் கண்டு வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

“கடந்த அரசாங்கமே யுத்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு நாட்டை காட்டி கொடுத்தது.” – அமைச்சர் சரத் வீரசேகர

அண்மையில் ஊடகவியலாளர் சமுதிதவின் வீட்டின் மீதான தாக்குதல் இடம்பெற்றபோது, அங்கு வந்து தாக்குதலை நடத்தியவர்கள் வெள்ளைவானில் வந்திருந்தார்கள் இந்தநிலையில் எதிர்க்கட்சியினர் இது தொடர்பான தங்களுடைய அனுதாபத்தையும் வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் இன்றைய பாராளுமன்ற அமர்வில் கருத்து சுதந்திரம் மீதான அடக்குமுறை மற்றும் ஊடகவியலாளர்களின் மீதான அச்சுறுத்தல் குறித்து  சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.

குறித்த கேள்விக்கு பதிலளித்த பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர,

ஜெனிவா கூட்டத்தொடர் நடைபெறவிருக்கும் நிலையில் எதிர்க்கட்சியினர் அரசாங்கத்திற்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக  தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் பேதிலளித்த அவர்,

ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதன் மூலமாக ஜெனிவா கூட்டத்தொடரை இலக்கு வைத்தே எதிர்க்கட்சி காய் நகர்த்துகின்றது என்பது புலனாகின்றது. கடந்த அரசாங்கமே யுத்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு நாட்டை காட்டி கொடுத்தது. இனிமேலும் இவ்வாறான கருத்துக்களை முன்வைக்க வேண்டாம்.

 

பிள்ளைகள் வெளிநாட்டில் – யாழில் வீட்டில் தனிமையிலிருந்த மூதாட்டி அடித்துப்படுகொலை !

யாழ்ப்பாணத்தில் மூதாட்டி ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;
யாழ்ப்பாணம் நகரை அண்டிய பிரதேசமொன்றின் வீட்டில் தனிமையில் இருந்த மூதாட்டி ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட் டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
மூதாட்டியின் பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், இவர் தனியாக வசித்து வந்துள்ளார். வீட்டில் உதவிக்காக ஒரு நபர் வந்து செல்வார் என அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு அடித்துப் படுகொலை செய்யப்பட்டவர் காணிக்கையம்மா ஜெயசீலி பூபதி (வயது 72) என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. மூதாட்டியின் வீட்டில் பணிபுரியச் சென்ற நபரே அவரை அடித்துக்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கதிரையில் இருந்து செபித்துக் கொண்டிருந்த பொழுது மூதாட்டியின் பின் பக்கமாக வந்தே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொள்ளை நோக்கத்திலேயே இதனைச் செய்திருக்கலாம் என பொலிஸாரால் சந்தேகம் வெளியிடப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

“வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டியது தற்போதைய அரசின் பொறுப்பு.” – மைத்திரிபால சிறிசேன

வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டியது தற்போதைய அரசின் பொறுப்பு என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

யாழ்., வடமராட்சி, உடுப்பிட்டியில்  நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது ஏனைய கட்சிகளை விட ஒரு சிறந்த கட்சி. எமது கட்சியில் சிறியவர், பெரியவர் என்று நாங்கள் பார்ப்பதில்லை. எங்களது சுதந்திரக் கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைப் பெற்றிருக்கின்றது. வரலாற்றில் ஒரு முக்கியமான விடயமாகும். அதற்கு நான் அனைத்து உடுப்பிட்டித் தொகுதி மக்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அத்தோடு எதிர்வரும் காலத்தில் மாகாண சபை, உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின்போதும் எமது கட்சியைப் பலப்படுத்துவதற்கு அதிகளவில் மக்கள் ஆதரவளிக்க வேண்டும். எமக்கு ஆதரவு அளித்தால் நல்ல நிலைக்கு எமது கட்சியை முன்நோக்கிக் கொண்டு செல்வோம்.

நாட்டில் தற்போது மக்கள் அதிகளவு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றார்கள். எரிவாயு, பசளை, அத்தியாவசியப் பொருள் விலையேற்றம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு அவர்கள் முகம்கொடுக்கின்றார்கள். அவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது.

நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வட பகுதியில் பல திட்டங்களை முன்னெடுத்திருந்தேன். காணி விடுவிப்பு மற்றும் வீதி புனரமைப்பு போன்ற பல்வேறுபட்ட அபிவிருத்திகளை எனது ஐந்து வருட ஆட்சியில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் முன்னெடுத்திருந்தேன்” – என்றார்.

“அரசாங்கம் இனி சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைச் சார்ந்திருக்க முடியாது.” – ஹர்ஷ டி சில்வா சாடல் !

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கான காலம் முடிந்துவிட்டதால், அரசாங்கம் இனி சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைச் சார்ந்திருக்க முடியாது. என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடியானது எரிசக்தி நெருக்கடியாக அதிகரித்துள்ளது. அதன் மூலம் நாட்டின் வங்கி முறைமையின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிதி நெருக்கடியானது உரிய நேரத்தில் தீர்க்கப்படாமையால் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்ட சில குழுக்கள் கூறுவது போன்று உள்நாட்டு செயற்பாட்டின் மூலமோ அல்லது வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகை தந்து ஹோட்டல் தங்குவதற்கு பணம் செலவழிப்பதன் மூலமோ இந்த நெருக்கடியை தீர்க்க முடியாது.

தற்போதைய நிலைமை தொடருமானால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு கடன் வழங்க வேண்டாம் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு பொதுமக்கள் உடன்பட்டால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதாக அரசாங்கம் கூறுவது குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது,

உதவி வழங்கும் போது சர்வதேச நாணய நிதியம் எந்தவொரு நாட்டிற்கும் கட்டுப்பாடுகளை விதிக்காது எனவும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் எப்போதாவது அத்தகைய சட்டங்கள் அல்லது ஒழுங்குமுறைகளை விதித்துள்ளதா என்பதை நிரூபிக்குமாறு தற்போதைய நிர்வாகத்திற்கு அவர் சவால் விடுத்துள்ளார்.

பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கான செயல்முறை மற்றும் ஒட்டுமொத்த சீர்திருத்தத் திட்டம் உள்ளிட்ட தொடர்புடைய நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் அந்தந்த அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளுடன் மாத்திரமே சர்வதேச நாணய நிதியம் உடன்படுகிறது.

சாத்தியமான வாடிக்கையாளர்களால் சமர்ப்பிக்கப்படும் திட்ட முன்மொழிவுகளை வங்கிகள் எவ்வாறு ஒப்புக்கொள்கின்றன என்பதைப் போலவே இதுவும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்ற போது, ​​அஜித் நிவாட் கப்ரால் மற்றும் பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆகியோரை விட்டுவிட்டு சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட திட்டமிடப்பட்ட நாளில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசதியாக நாட்டை விட்டு வெளியேறியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உக்ரைனில் இருந்து பிரிந்து சென்ற பகுதிகளின் மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா !

ரஷ்யா-உக்ரைன் இடையிலான மோதல் விவகாரம் ஐரோப்பிய நாடுகளில் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில், கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சி யாளர்கள் வசம் உள்ள மாகாணங்களை தனி நகரங்களாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அங்கீகரித்தார்.
இது அமைதி பேச்சுவார்த்தையை முறியடிக்கும் நடவடிக்கை என்று உக்ரைன் அதிபர்  வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, தெரிவித்துள்ளார்.
புதின் நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  மேலும் உக்ரைனில் இருந்து பிரிந்து சென்ற பகுதிகளில் பொருளாதார தடைகளை அவர் விதித்துள்ளது. புதிய முதலீடு, வர்த்தகம் ஆகியவற்றிக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் பைடன் கையெழுத்திட்டுள்ளார்.
முன்னதாக உக்ரைன் அதிபருடன், அமெரிக்க அதிபர் பேசியதாகவும், அப்போது உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை காக்க அமெரிக்கா உறுதி பூண்டுள்ளதாக பைடன் கூறியுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.